சினிமா

எஸ்-3 படம் இந்திய நாட்டுக்கு பெருமை சேர்க்கும்: இயக்குனர் ஹரி

Published On 2017-01-02 06:08 GMT   |   Update On 2017-01-02 06:29 GMT
இந்த படம் இந்திய நாட்டுக்கு பெருமை சேர்க்கக்கூடிய, சமூக பொறுப்புடன் உருவாக்கப்பட்டு உள்ளது என்று இயக்குனர் ஹரி கூறியுள்ளார்.
திரைப்பட இயக்குனர் ஹரி தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிங்கம் படத்தின் 3-வது பாகம் “எஸ்-3“ என்ற பெயரில் படமாக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ள இந்த படத்தில் சிங்கம் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் நடித்து உள்ளனர்.

புதிதாக சுருதிஹாசன், சூரி, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க ஆந்திர மாநிலத்தை சுற்றி நடக்கக்கூடிய கதையை வைத்து படம் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் இந்தி சினிமாவில் இருந்து புதிய வில்லன்கள் நடித்துள்ளனர். படத்தின் சில காட்சிகள் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் எடுக்கப்பட்டு உள்ளன.

“எஸ்-3“ படம் வருகிற 26-ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. இந்த படத்தில் 7 விமான நிலையங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன. மேலும் 8 வகையான விமானங்களை இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளோம். இந்த படம் இந்திய நாட்டுக்கு பெருமை சேர்க்கக்கூடிய, சமூக பொறுப்புடன் உருவாக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் எதிர்பார்ப்பை “எஸ்-3“ கண்டிப்பாக பூர்த்தி செய்யும்.அடுத்து நடிகர் விக்ரமுடன் சாமி படத்தின் 2-ம் பாகத்தை தயாரிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News