சினிமா

ரஜினி - யுவன் இணையும் ஒரே மேடை

Published On 2016-12-29 09:48 GMT   |   Update On 2016-12-29 09:48 GMT
ரஜினியும், யுவன் சங்கர் ராஜாவும் ஒரே மேடையில் இணையப்போகிறார்கள். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
ராம் இயக்கத்தில் யுவன் இசையமைத்துள்ள படம் ‘தரமணி’. இப்படத்தில் வசந்த் ரவி - ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர், டிரைலர் ஏற்கெனவே வெளியானதைத் தொடர்ந்து பாடல்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஏனென்றால், இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதியிருந்தார்.

ராம்-யுவன்-நா.முத்துக்குமார் ஆகியோர் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. இவர்கள் கூட்டணியில் ‘தங்கமீன்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடல் தேசிய விருது பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் ரஜினி வெளியிடப் போவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்த செய்தி இப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது. யுவன்-ரஜினி-ராம் இணைந்து ஒரே மேடையில் இந்த பாடல்களை வெளியிடப்போவதாக தெரிகிறது.

‘தரமணி’ படத்தின் பாடல்களை ஏற்கெனவே ஒரு மேடையில் நா.முத்துக்குமார் புகழ்ந்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News