சினிமா

அம்மாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதே என்னுடைய வாழ்நாள் கனவு : ரம்யா கிருஷ்ணன்

Published On 2016-12-18 11:16 GMT   |   Update On 2016-12-18 11:16 GMT
அம்மாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதே என்னுடைய வாழ்நாள் கனவு என்று ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
கடந்த வருடம் பிரம்மாண்டமாக உருவாகி வெளிவந்த ‘பாகுபலி’ படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனை நாம் யாராலும் மறக்க முடியாது. தமிழ் சினிமாவின் பெருமையை வெளிமாநிலத்திலும் நிலைநாட்டிய பெருமை ரம்யா கிருஷ்ணனையே சாரும். அந்தளவுக்கு ‘பாகுபலி’ படத்தில் அவருடைய நடிப்பு அனைவரையும் ஈர்த்தது.

இந்நிலையில், தற்போது ரம்யா கிருஷ்ணனின் முகத்தை மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடலோடு பொருத்தி, போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமானால் எப்படியிருக்கும் என்ற யூகத்தோடு அந்த போஸ்டர் வெளிவந்தது. இவரை மட்டுமில்லாது, அஜித், விஜய், சிம்பு, மாதவன் உள்ளிட்டவர்களின் முகத்தையும் பிரபலங்களின் உடலோடு பொருத்தி போஸ்டர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஆனால், இவற்றில் ரம்யா கிருஷ்ணன் அப்படியே அச்சு அசலாக ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருந்தார். எனவே, அவரிடம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமானால் அதில் நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு அவர் கூறும்போது, நிறைய பேர் என்னிடம் பலமுறை உங்களுடைய கனவு கதாபாத்திரம் எது? என்று கேட்டுள்ளார்கள். அப்போதெல்லாம் நான் எந்த பதிலும் கூறவில்லை.

இப்பொழுது நான் கூறுகிறேன், என்னுடைய வாழ்நாள் கனவு கதாபாத்திரம் ஜெயலலிதா அம்மாதான். அவர்களுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது ரொம்பவும் சிரமமான ஒன்றுதான். நல்ல தயாரிப்பாளர்கள், நல்ல திரைக்கதையோடு இயக்குனர்கள் என்னை அணுகினால், அம்மாவின் கதாபாத்திரத்தில் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

Similar News