சினிமா

ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அஜித் வர காலதாமதம் ஆனது ஏன்?

Published On 2016-12-08 11:29 GMT   |   Update On 2016-12-08 11:29 GMT
ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அஜித் காலதாமதம் ஆனது ஏன்? என்பது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
அஜித் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்புக்காக பல்கேரியாவில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 5-ந் தேதி ஜெயலலிதா காலமானார் என்ற செய்தி கேட்டதும் அதிர்ச்சியடைந்த அஜித், உடனடியாக அங்கிருந்து சென்னை புறப்பட தயாராகினார்.

பல்கேரியாவில் வெர்னா என்ற இடத்தில் இருந்து அவர் விமான நிலையம் அமைந்திருக்கும் ருமேனியாவின் தலைநகரான புகாரெஸ்ட்டுக்கு வருவதற்கு 5.30 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியிருந்துள்ளது. அங்கிருந்து விமானத்தில் ஒன்றை மணி நேரம் பயணம் செய்து ஏதென்ஸ் நகரை வந்தடைந்துள்ளார்.

ஏதென்சில் இருந்து விமானம் மூலம் அடுத்த 4.30 மணி நேரத்தில் அபுதாபிக்கு வந்தடைந்து, அங்கிருந்து 5 மணி நேரம் பயணம் செய்து சென்னைக்கு வந்தடைந்துள்ளார். கிட்டத்தட்ட பல்கேரியாவில் இருந்து 16.30 மணி நேரம் பயணம் செய்து நேற்று அதிகாலை 4 மணிக்கு சென்னை வந்தடைந்துள்ளார்.

மறைந்த ஜெயலலிதாவின் முகத்தை அஜித்தால் நேரில் பார்க்கமுடியாவிட்டாலும், அவரது உடல் புதைக்கப்பட்டுள்ள சென்னை மெரீனா கடற்கரைக்கு தனது மனைவியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், எழுத்தாளரும், நடிகருமான சோ காலமான செய்தி கேட்டு நேரடியாக அவரது உடல் வைக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று, அவருக்கும் அஞ்சலி செலுத்தி விட்டு உடனடியாக பல்கேரியா புறப்பட்டு சென்றார்.

Similar News