சினிமா

ரூபாய் நோட்டு மாற்றம்: தமிழ் திரை உலகுக்கு ரூ.1,250 கோடி இழப்பு

Published On 2016-12-03 06:16 GMT   |   Update On 2016-12-03 06:16 GMT
ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த அறிவிப்பால் தமிழ்த்திரையுலகம் கடும் இழப்பை சந்தித்துள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு நாடு முழுவதும் மக்களிடம் பணப்புழக்கத்தை குறைத்துள்ளது.புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அச்சடித்து கொடுக்கப்பட்டதும் போதுமான அளவுக்கு இல்லை. இதனால் பணப்பரிவர்த்தனை முடங்கி உள்ளது.

மக்கள் கைகளில் பணப்புழக்கம் இல்லாததால் அனைத்துத் துறைகளிலும் கடும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரூபாய் நோட்டு விவகாரம் தமிழ்த்திரை உலகிலும் கடும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. கையில் சில்லரை பணம் குறைந்து போனதால் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருபவர்கள் எண்ணிக்கை 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது தியேட்டர்களின் வருவாயில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து புதிய படங்கள் வெளியிடப்படுவது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரிய பட்ஜெட்டில் தயாரான படங்களின் ரிலீஸ் பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே சினிமா தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தினசரி சம்பளம் கொடுக்க முடியாத நிலை நீடிக்கிறது. இது படப்பிடிப்புகளை முடக்கிப் போட்டுள்ளது.

இதன் காரணமாக திரை உலகில் நிலவும் பணப்பரிவர்த்தனை முடங்கி உள்ளது. இது ரூ.1,250 கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பணப்பரிவர்த்தனை சகஜ நிலைக்கு வர இன்னும் 3 மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் தமிழ்த்திரை உலகம் மேலும் சில ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை எதிர்கொள்ள நேரிடும் என அஞ்சப்படுகிறது.

Similar News