சினிமா

திலீப் - காவ்யா மாதவன் திடீர் திருமணம்

Published On 2016-11-25 09:26 GMT   |   Update On 2016-11-25 09:26 GMT
நடிகர் திலீப் - நடிகை காவ்யா மாதவன் இருவரும் இன்று காலை திடீரென கொச்சியில் திருமணம் செய்து கொண்டனர். அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் திலீப். புகழின் உச்சியில் இருந்த போது சக நடிகை மஞ்சு வாரியரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒரு மகள் உள்ளார்.

பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விவாகரத்து பெற்றனர். இவர்களின் மகள் திலீப்புடன் உள்ளார்.

திலீப் - மஞ்சு வாரியர் பிரிவுக்கு நடிகை காவ்யா மாதவனே காரணம் என கூறப்பட்டது. ஆனால் இதனை இருவரும் மறுத்தனர்.

காவ்யா மாதவன் கடந்த 2010-ல் தொழில் அதிபர் நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடிந்து வெளிநாடு சென்ற காவ்யா மாதவன் சில நாட்களிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து கேரளா வந்தார்.

தனித்தனியாக வாழ்ந்து வந்த திலீப் - காவ்யா மாதவன் இருவரும் நெருங்கி பழகினர். தற்போது அவர்கள் 2 பேரும் புதிய படம் ஒன்றில் சேர்ந்து நடித்து வருகிறார்கள். இதில் அவர்களுக்கு இடையே நெருக்கம் அதிகரித்தது. இதனால் விரைவில் அவர்கள் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இதுபற்றி திலீப் கூறும்போது எனது மகளின் முடிவை பொறுத்தே நான் மறுமணம் செய்வேன் என்றார்.

இந்தநிலையில் இன்று திடீரென திலீப் - காவ்யா மாதவன் இருவரும் கொச்சியில் திருமணம் செய்து கொண்டனர். இன்று காலை நடந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர்கள் மம்முட்டி, ஜெயராம், நடிகைகள் மீரா ஜாஸ்மின், மேனகா, சிப்பி, ஜோமோள் உள்பட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நடிகர் மோகன்லாலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற வந்து கொண்டிருப்பதாக கூறப்பட்டது.

இந்த திடீர் திருமணம் மூலம் திலீப் - காவ்யா மாதவன் பற்றி இதுவரை வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக மலையாள திரையுலகினர் தெரிவித்தனர்.

Similar News