சினிமா

தவறான வயதில் திருமணம் செய்துவிட்டேன் : அமலாபால் வருத்தம்

Published On 2016-11-23 06:50 GMT   |   Update On 2016-11-23 06:50 GMT
தான் தவறான வயதில் திருமணம் செய்துவிட்டதாக அமலாபால் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
நடிகை அமலா பாலும், இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் திரையுலகத்தினர் அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு நடைபெற்றது. திருமணம் செய்த வேகத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். விவாகரத்து கோரி இருவரும் சென்னையில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் விஜய் மற்றும் திரையுலகம் பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அமலா பால் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘புது வாழ்க்கையை துவங்கியது போன்று உணர்கிறேன். 18 வயதில் நடிக்க வந்த எனக்கு 23 வயதில் திருமணமாகி 24 வயதில் இருவரும் பிரிந்துவிட்டோம். எனக்கு அறிவுரை கூற யாரும் இல்லாததால் தவறுகள் மூலம் பாடம் கற்றுக் கொண்டேன்.

விஜய்யை பிரிந்த பிறகு அழுதேன். ஆனால் அதில் இருந்தும் பாடம் கற்றுக் கொண்டேன். நான் இன்னும் விஜய்யை காதலிக்கிறேன், இனியும் காதலிப்பேன். அவர் எப்பொழுதுமே என் வாழ்வின் மிகவும் ஸ்பெஷலான நபராக இருப்பார்.

விஜய்யை பிரியும் முடிவு தான் என் வாழ்வின் மிகவும் கடினமான முடிவு. யாருமே பிரிவதற்காக திருமணம் செய்வது இல்லை. வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியவில்லை. விஜய்யை திருமணம் செய்ய நான் எடுத்த முடிவில் தவறு இல்லை. நான் தவறான வயதில் திருமணம் செய்து கொண்டேன். 20-களின் துவக்கத்தில் திருமணம் செய்வது நல்லது அல்ல. அதற்காக அது பற்றி நான் குறை கூறவில்லை.

பிரிவிற்கு பிறகு பல இடங்களுக்கு சென்று வந்தேன். ஒவ்வொரு அனுபவமும் புதியதாக இருந்தது. அது தான் என்னை வாழ்க்கை பற்றி புரிய வைத்தது’ என்றார்.

Similar News