சினிமா

பாலமுரளிகிருஷ்ணா இழப்பை ஈடு செய்ய முடியாது: ஜெயலலிதா இரங்கல்

Published On 2016-11-23 04:59 GMT   |   Update On 2016-11-23 05:16 GMT
பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் என்ன குறிப்பிட்டிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...

முதல் - அமைச்சர் ஜெயலலிதா வெளியிட் டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

பிரபல கர்நாடக இசை விற்பன்னரும், திரைப்பட பின்னணி பாடகருமான டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா நேற்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் 75-வது பிறந்த நாள் விழா மற்றும் செவாலியே விருது பெற்றதற்கான பாராட்டு விழா 2005-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்றபோது அந்த விழாவில் நான் கலந்து கொண்டு அவரை வாழ்த்திப்பேசியதும், அப்போது எனக்காக ‘‘ஜெய ஜெய லலிதே’’ என்ற ராகத்தை அவர் அர்ப்பணித்ததும், அதே விழாவில் தமிழ்நாடு அரசின் சார்பில் ‘கந்தர்வ கான சாம்ராட்’ என்ற பட்டத்தை நான் வழங்கியதும் இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளது.

இசைத்துறையில் அளப்பரிய பணி ஆற்றிய டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்று விட்டார் என்பது கர்நாடக இசைக் கலைஞர்களுக்கும், இசைத்துறையினருக்கும், திரைப்படத்துறையினருக்கும், ரசிகப் பெருமக்களுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கும் மிகப்பெரிய இழப்பு. இந்த இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. அவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.

டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இசை கலைஞர்களுக்கும், ரசிகப் பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துகொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News