சினிமா

உலக சாதனைக்காக பத்து மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம்

Published On 2016-10-23 11:42 GMT   |   Update On 2016-10-23 11:42 GMT
உலக சாதனைக்காக 10 மணி நேரத்தில் ஒரு முழு நீள படத்தை எடுத்து முடித்துள்ளனர். அது என்ன படம்? என்பதை கீழே பார்ப்போம்..
தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் ஏதாவது புதுமையான விஷயங்களோடு புதிய இயக்குனர்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கிறார்கள். எவ்வளவோ சாதனைகளை சந்தித்துவிட்ட தமிழ் சினிமாவில் தற்போது மேலும், ஒரு புதிய சாதனை ஒன்று நடைபெற்றுள்ளது.

இயக்குனர் எம்.எஸ்.செல்வா பத்தே மணி நேரத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பையும் நடத்தி சாதனை புரிந்திருக்கிறார். அந்த படத்திற்கு ‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு மாலை 5 மணிக்கெல்லாம் முடிவடைந்திருக்கிறது.

கிட்டத்தட்ட இரண்டு மாத கடின உழைப்பினாலும், திட்டமிடலாலும் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.செல்வா தலைமையிலான படக்குழு. இதற்கு முன்பு 24 மணி நேரத்தில் பல இயக்குனர்கள் சேர்ந்து எடுத்த ‘சுயம்வரம்’ படம் தமிழில் குறைந்த நேரத்தில் எடுக்கப்பட்ட படமாக சாதனைப் பட்டியலில் நீடிக்கிறது. அதனை முறியடிப்பதோடு லிம்கா சாதனைப் பட்டியலிலும் இடம்பெறும் உத்வேகத்துடனும் இந்த படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்திற்காக மொத்தம் ஆறு கேமரா செட்டப், ஏற்கெனவே பயிற்சி தரப்பட்ட கலைஞர்கள் ஆகியவற்றை பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். குறைந்த நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் மூன்று பாடல்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் டாக்டர். பி.சரவணன், அனுகிருஷ்ணன், சிங்கம்புலி, குமரேசன், இயக்குனர் எம்.எஸ்.செல்வா, கிரேன் மனோகர்,
நெல்லை சிவா, சுப்புராஜ், போண்டா மணி ஆகியோர் நடித்துள்ளனர். ஜெயக்குமார் தங்கவேலு என்பவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ராஜா இசையமைத்துள்ளார். 

Similar News