சினிமா

டான்ஸ் மாஸ்டர் சாண்டி கதாநாயகன் ஆனார்

Published On 2016-10-20 11:10 GMT   |   Update On 2016-10-20 11:10 GMT
டான்ஸ் மாஸ்டர் சாண்டி புதிய படத்தில் கதாநாயகன் ஆகியுள்ளார். அந்த படத்தின் தலைப்பு என்ன? அந்த படம் குறித்த தகவல்களை கீழே பார்ப்போம்.
பலமே இல்லாத ஒரு ஆள் எப்படி தன்னைவிட பலசாலிகளை தனது புத்திசாலித்தனத்தால் எப்படி வீழ்த்துகிறான் என்பதை மையக்கருவாக வைத்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் ‘பலசாலி’ என்ற படம் உருவாகி வருகிறது. இப்படம் ‘சூதுகவ்வும்’ பாணியிலான ‘பிளாக் ஹியூமர்’ என்ற வகையில் நகைச்சுவை படமாக உருவாகிறது.

இந்த கதைக்கு நாகேஷ் மாதிரியான ஒருவரை இயக்குனர் ஆறு மாதங்களுக்கு மேல் தேடி அலைந்திருக்கிறார். கடைசியாக நடன மாஸ்டர் சாண்டியை இப்படத்தின் கதைக்கு பொருத்தமானவராக இருப்பார் என்று அவரை ஹீரோவாக ஒப்பந்தம் செய்துள்ளார். சாண்டி நடனம் ஆடினாலும் அதில் ஒரு நகைச்சுவை இருக்கும். அந்த அணுகுமுறையே இந்த படத்தில் சாண்டியை ஹீரோவாக ஆக்கியுள்ளது.

இப்படத்தின் கதாநாயகியாக ‘சண்டிக்குதிரை’ படத்தின் கதாநாயகியாக நடித்த மானஸா நடிக்கிறார். ஆனந்த்ராஜ் ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடிக்கிறார். மேலும் சாம்ஸ், லொள்ளுசபா சுவாமிநாதன், மனோபாலா, லொள்ளுசபா மனோகர், தினா, நிரோஷா, ஆதித்யா டிவி லோகேஷ், நிஷாந்த் என பல காமெடியன்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தை சிவகார்த்திக் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘ரீங்காரம்’, ‘கடலை போட பொண்ணு வேணும்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர். இரண்டு படங்களுமே ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. ஹரீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பர்மா படத்திற்கு இசையமைத்த சுதர்சன் இசையமைக்கிறார். வைஷாலி பிக்சர்ஸ் சார்பாக கோவையைச் சேர்ந்த வெங்கட் தயாரிக்கிறார்.

முழுக்க முழுக்க சென்னையில் உருவாகும் ‘பலசாலி’ படம் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் வகையில் நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Similar News