சினிமா

என்னை விமர்சிப்பது பற்றி கவலைப்பட மாட்டேன்: சுருதிஹாசன்

Published On 2016-10-15 04:06 GMT   |   Update On 2016-10-15 04:06 GMT
“விமர்சனங்கள் பற்றி கவலைப்பட மாட்டேன். என் தந்தை கமல்ஹாசனைப்போல் மன உறுதியுடன் இருக்கிறேன்” என்று நடிகை சுருதிஹாசன் கூறியுள்ளார்.
நடிகை சுருதிஹாசன் இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:-

“தெலுங்கில் நான் நடித்துள்ள பிரேமம் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் வெளிவருவதற்கு முன்னால் நான் நடித்துள்ள கதாபாத்திரம் பற்றி இணையதளங்களில் விமர்சனங்கள் வந்தன. அவதூறான கருத்துக்களை பதிவு செய்து இருந்தார்கள். வேலையில்லாமல் வெட்டியாய் இருப்பவர்கள் இதுமாதிரியான காரியங்களை செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

எனவே அதுபற்றி நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கதையின் மீதும் எனது காதாபாத்திரம் மீதும் நம்பிக்கை இருந்தது. எப்படி நடிக்க வேண்டுமோ அப்படி நடித்தேன். படம் திரைக்கு வந்த பிறகு எனது நடிப்பை பாராட்டுகிறார்கள். நான் கமல்ஹாசனின் மகள். அவரைப்போலவே உறுதியாக இருக்கிறேன். விமர்சனங்களும் அவதூறுகளும் எனக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

என்னப்பற்றி கிசுகிசுக்களும் வதந்திகளும் அவ்வப்போது பரவி வருகின்றன. அதுபற்றியும் வருத்தப்பட மாட்டேன். நான் தமிழ், தெலுங்கு, இந்தியில் அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்துக் கொண்டு இருக்கிறேன். நடிகர்-நடிகைகளுக்கு மொழி பேதங்கள் கிடையாது. மொழி வித்தியாசம் பார்க்காத ஒரே துறை சினிமாதான்.

தமிழ், தெலுங்கு பட உலகில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவிட்டேன். இந்தி பட உலகிலும் தனி இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அதற்காக போராடுகிறேன். எனது ஆசை நிச்சயம் நிறைவேறும்.”

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

Similar News