சினிமா

சினிமாவில் நடிக்க என் மகனுக்கு எந்த உதவியும் செய்யவில்லை: நடிகர் தம்பிராமையா

Published On 2016-10-01 11:37 GMT   |   Update On 2016-10-01 11:37 GMT
சினிமாவில் நடிக்க என் மகனுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என நடிகர் தம்பி ராமையா தெரிவித்திருக்கிறார்.
‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படம் மூலம் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இன்பசேகரன் இயக்கும் இந்த படத்தை சிவரமேஷ் குமார் தயாரிக்க, ரேஷ்மா ரத்தோர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் தனது மகன் நடிப்பது குறித்து நடிகர் தம்பி ராமையா கூறுகையில் “நான் இசை அமைப்பாளர் ஆகும் ஆசையில் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை என்னை நடிகர் ஆக்கிவிட்டது.

எனவே, என்மகனை பெரிய இசை அமைப்பாளர் ஆக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவனுக்கு நடிப்பின் மீது ஆசை. நான் அதை பெரிதாக விரும்பவும் இல்லை, தடுக்கவும் இல்லை. அவனாகவே நடிப்பு நடனம், சண்டை கற்று பட வாய்ப்பு தேடி அலைந்தான். இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதில் கதாநாயகனாக நடிக்கிறான்.

நான் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஆகின்றன. இது வரை யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டதில்லை. என் திறமையை மதித்து வந்தவர்களுக்கு அதை பயன்படுத்தி இருக்கிறேன். என் மகனுக்கு நான் ஒரு விசிட்டிங்கார்டு அவ்வளவு தான். அவனுக்காக யாரிடமும் வாய்ப்பு கேட்டு நிற்க மாட்டேன். இதை என் மகனிடமே சொல்லிவிட்டேன். அவன் தனது சொந்த காலில் நிற்கிறான்.

இது இசை தொடர்பான கதை. எனவே, இமானிடம் இந்த படத்துக்கு இசை அமைக்கும்படி கேட்டுக்கொண்டேன். அவர் சிறப்பாக இசை அமைத்திருக்கிறார். இது மட்டும் தான் என் மகனுக்காக இந்த படத்தில் நான் செய்தது. மற்றபடி சூட்டிங் பார்க்கக் கூட போனது இல்லை.

நல்ல கதை. இளைஞர்கள் நன்றாக உழைத்திருக்கிறார்கள். என் மகனை நம்பி தயாரிப்பாளர் பலகோடி ரூபாயை செலவு செய்திருக்கிறார். இந்த படம் நல்ல படியாக ஜெயிக்க வேண்டும். இதற்கு மக்கள் மனது வைத்து ஆதரிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Similar News