சினிமா

கிசுகிசுக்களுக்காக வருந்தினால் தூக்கம் வராது: அனுஷ்கா

Published On 2016-09-30 02:55 GMT   |   Update On 2016-09-30 02:55 GMT
“கிசுகிசுக்களுக்காக வருத்தப்பட்டால் தூக்கம் வராது” என்று நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:-

“சினிமாவில் நடிக்க வந்த புதிதில் என்னைப்பற்றி வரும் கிசுகிசுக்களை பார்த்து கவலைப்பட்டு இருக்கிறேன். இதனால் குடும்பத்தினர் மத்தியிலும் கஷ்டம் இருந்தது. ஆனால் இப்போது பக்குவப்பட்டு விட்டேன். பிரபலமானவர்கள் இதையெல்லாம் சந்தித்துதான் ஆக வேண்டும் என்று சமாதானம் சொல்லிக்கொள்கிறேன். உலகம் என்னைப் பற்றி என்ன பேசுகிறது. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டே வாழ்க்கையை ஓட்டினால் நிம்மதி இருக்காது.

அவதூறுகளுக்கு கவலைப்பட்டால் அழுது கொண்டேதான் இருக்க வேண்டும். சினிமாவில் கிசுகிசுக்கள் என்பது சாதாரணம். சொந்த வாழ்க்கையில் அவை தாக்கத்தை ஏற்படுத்துவதும் சகஜம்தான். எனக்கும் அவை வலியை கொடுத்து இருக்கின்றன. ஆனால் அது கொஞ்ச நேரம்தான் இருக்கும். அதன் பிறகு சாதாரணமாகி விடுவேன்.

கவலைப்பட்டுக்கொண்டு இருந்தால் தூக்கம் வராது. நம் மீது எந்த தவறும் இல்லாதபோது ஏன் வருத்தப்படவேண்டும்? இந்த உணர்வு எனக்குள் வந்த பிறகுதான் நன்றாக தூக்கம் வருகிறது. தமிழ், தெலுங்கு படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். எனக்கு நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைகின்றன. கதாபாத்திரங்களும் நடிப்புத்திறமையை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது. எல்லா படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன.”

இவ்வாறு அனுஷ்கா கூறினார். 

Similar News