சினிமா
இந்தி டைரக்டரை காதலிக்கிறேன்: நடிகை சுவேதா பாசு பேட்டி
இந்தி டைரக்டரை காதலிக்கிறேன் என்று விபசார வழக்கில் சிக்கிய நடிகை சுவேதா பாசு கூறியுள்ளார். அதை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம்.
ரா ரா, சந்தமாமா ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சுவேதா பாசு. தெலுங்கு-இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். சுவேதா பாசுவை 2 வருடங்களுக்கு முன்னால் விபசார வழக்கில் போலீசார் கைது செய்தனர். ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பெண்களை வைத்து சிலர் விபசாரம் செய்வதாக தகவல் வந்ததன் பேரில் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தி சுவேதா பாசுவை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அவரை பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார். 2 மாதங்கள் காப்பகத்திலேயே இருந்த அவர், பின்னர் விடுதலை செய்யப்பட்டார். சுவேதா பாசு கைதானது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு அளிப்பதற்கு டைரக்டர்கள் பலர் முன் வந்தனர். இந்தி டைரக்டர் அனுராக் காஷ்யப்பிடம் உதவியாளராக அவர் சேர்ந்தார்.
புதிய படங்களுக்கான கதை விவாதங்களிலும் ஈடுபட்டார். அப்போது அந்த அலுவலகத்துக்கு வந்த இளம் இயக்குனர் ரோகித் மிட்டலுடன் சுவேதா பாசுவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின. இதற்கு பதில் சொல்லாமல் இருந்த சுவேதா பாசு தற்போது காதலிப்பதை ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“நானும் ரோகித் மிட்டலும் காதலிப்பது உண்மைதான். நாங்கள் இரண்டு வருடங்களாக காதலித்து வருகிறோம். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது நட்பு ஏற்பட்டு பிறகு காதல் வயப்பட்டோம். இருவரும் சந்தோஷமாக இந்த காதலை அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம். திருமணம் செய்து கொள்வது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.”
இவ்வாறு சுவேதா பாசு கூறினார்.