சினிமா
இளவரசன்

மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் சினிமா துணை நடிகர் தற்கொலை முயற்சி

Published On 2016-08-25 09:28 GMT   |   Update On 2016-08-25 09:29 GMT
மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் சினிமா துணை நடிகர் இளவரசன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும், டமால் டுமீல், சகுனி, கள்ள பாடம் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்து இருப்பவர் அரசு என்ற இளவரசன். இவருக்கு 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ந் தேதி காதல் கலப்பு திருமணம் நடந்தது. மனைவியும் சிவா என்ற மகனும் உள்ளனர். மனைவி ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கொடுங்கையூர் கண்ணதாசன் நகரில் வசித்து வந்தார்.

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த இளவரசன் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை காப்பாற்றி ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

தகவல் கிடைத்ததும் கொடுங்கையூர் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். அவரது வீட்டில் போலீசார் ஒரு கடிதத்தை கைப்பற்றினார்கள். அதில் இளவரசன் நடிகர் சங்க செயலாளர் விஷாலுக்கு உருக்கமான முறையில் எழுதி இருந்தார். கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

நான் சினிமாவில் துணை நடிகராகவும், பல நாடகங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறேன். 7 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். எனக்கு திரை உலகில் போதுமான சம்பளம் கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டது. எனக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டோம். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். என் குழந்தையையும் என்னிடம் காட்ட மறுக்கிறார்கள். மகனை பார்க்க முடியாத ஏக்கத்தில் மன உளைச்சலுக்கு ஆளானேன்.

இதற்கிடையே என் மனைவியிடம் இருந்து விவாகரத்து நோட்டீஸ் வந்துள்ளது. இதில் எனக்கு விருப்பம் இல்லை. நிதி நிறுவனத்தில் எனது மனைவியுடன் பணியாற்றிய சிலர் அவரது மனதை எனக்கு எதிராக மாற்றிவிட்டார்கள். இனி எந்த நடிகருக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது என்பதே என் ஆசை. உங்களை (விஷால்) சந்தித்து நிலைமையை எடுத்துக்கூறி உதவி கேட்க முயன்றேன். ஆனால் உங்களை என்னால் சந்திக்க முடியவில்லை எனவே கடிதம் எழுதி இருக்கிறேன்.

எனக்கு வேறு வழி இல்லாததால் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தேன். என் மரணத்திற்கு பிறகாவது சினிமாவில் போராடும் எல்லா நடிகர்களும் நல்ல வாழ்க்கை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை.

இவ்வாறு இளவரசன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News