சினிமா

‘மேல்நாட்டு மருமகன்’ படத்துக்காக 33 நிமிடத்தில் பாட்டெழுதி தந்த நா.முத்துக்குமார்

Published On 2016-08-23 05:07 GMT   |   Update On 2016-08-23 05:07 GMT
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மேல்நாட்டு மருமகன் படத்துக்காக 33 நிமிடத்தில் ஒரு பாடலை எழுதிக் கொடுத்துள்ளார். அதுகுறித்து கீழே பார்ப்போம்...
சின்னத்திரை நடிகர் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘மேல்நாட்டு மருமகன்’. இந்த படத்தில் பிரான்சில் இருந்து வெள்ளைக்கார பெண் ஆண்ட்ரீயன் என்பவர் நாயகியாக அறிமுகமாகிறார். வி.எஸ்.ராகவன், அஞ்சலி தேவி, அசோக்ராஜ், சாத்தையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை எம்.எஸ்.எஸ். என்பவர் இயக்கியிருக்கிறார். கிஷோர் குமார் இசையமைப்பில் உருவாகும் பாடல்களில் மறைந்த நா.முத்துக்குமாரும் ஒரு பாடலை எழுதியுள்ளார். அவர், 33 நிமிடத்தில் அந்த பாடலை எழுதிக் கொடுத்துள்ளார்.

முதலில் இந்த படத்திற்காக நா.முத்துக்குமாரை பாடல் எழுத இயக்குனர் அணுகும்போது, அவர் நான் அமெரிக்கா போகிறேன், வந்து எழுதுகிறேன். அவசரம் என்றால் வேறு யாரையாவது எழுதித் தரச்சொல்லி வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால், இயக்குனர் எம்.எஸ்.எஸ்., நீங்கள்தான் இந்த பாட்டை எழுதித்தர வேண்டும் என்று நா.முத்துக்குமாரை வற்புறுத்தியுள்ளார். நிலைமையை புரிந்த நா.முத்துக்குமார், தனது காரில் இயக்குனரை அழைத்துச் சென்று 33 நிமிடத்தில் அந்த பாட்டை எழுதிக் கொடுத்துள்ளார்.

இப்படத்தை உதயா கிரியேஷன் என்ற படநிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கிறார். 

Similar News