சினிமா

சரோஜா இரண்டாம் பாகத்தை நான் இயக்கவில்லை: வெங்கட் பிரபு விளக்கம்

Published On 2016-08-04 07:03 GMT   |   Update On 2016-08-04 07:03 GMT
‘சரோஜா’ படத்தின் இரண்டாம் பாகத்தை நான் இயக்கவில்லை என்று வெங்கட் பிரபு விளக்கம் அளித்தள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
வெங்கட் பிரபு தற்போது ‘சென்னை 600 028’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போது, வெங்கட் பிரபு இயக்கிய மற்றொரு படமான ‘சரோஜா’ படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்கப்போவதாகவும் அந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தது.

இந்த செய்திக்கு தற்போது வெங்கட் பிரபு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் தற்போது ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறேன்.

என்னுடைய வருங்கால படங்களை விரைவில் நான் ரசிகர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கும் தருவாயில், இப்படி ஒரு வதந்தி பரவி கொண்டிருக்கிறது.

‘சரோஜா - 2’ படத்தை பற்றி நான் சிறிதளவுகூட யோசித்தது இல்லை. தற்போது என்னுடைய முழு கவனமும் ’சென்னை 600028 - பாகம் 2’ மீதுதான் இருக்கிறது. எப்படி 2007 ஆம் ஆண்டு ‘சென்னை 600028’  தமிழக  ரசிகர்கள் மத்தியில் ஒரு அற்புதத்தை ஏற்படுத்தியதோ, அதேபோல் 2016 ஆம் ஆண்டு அதன் இரண்டாம் பாகமும் ஒரு அற்புதத்தை நிகழ்த்தும் என்று கூறியுள்ளார்.

Similar News