சினிமா

விவேக்கின் கிரீன் கலாம் அமைதிப் பேரணிக்கு திரண்ட மாணவர்கள் கூட்டம்

Published On 2016-07-24 06:07 GMT   |   Update On 2016-07-24 06:07 GMT
விவேக்கின் கிரீன் கலாம் அமைதி பேரணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டனர். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
முன்னாள் ஜனாதிபதியும், பிரபல விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மறைந்து வரும் 27-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. அவரது நினைவுநாளை முன்னிட்டு சென்னையில் இன்று நடிகர் விவேக்கின் ‘கிரீன் கலாம்’ அமைப்பு சார்பில் மரக்கன்று நடும் விழா மற்றும் அமைதி பேரணி நடத்த நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இன்று விவேக் முன்னிலையில் சுமார் 5000 மாணவர்கள் பங்கேற்ற அமைதிப் பேரணி சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள கண்ணகி சிலை முதல் காந்தி சிலை வரை நடைபெற்றது. பேரணி முடிவடைந்ததும் ராணி மேரி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட பொதுமேடையில் விவேக் மற்றும் இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த அனைவரும் சிறப்புரையாற்றியானர்கள்.

பின்னர் நடிகர் விவேக் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, கடந்த 2010-ம் ஆண்டு முதல் ‘கிரீன் கலாம்’ அமைப்பின் மூலமாக மரக்கன்றுகள் நட்டு வருகிறார். டாக்டர் அப்துல்கலாம் அய்யா என்னை அழைத்து முதலில் 10 லட்சம் மரக்கன்றுகளை நடக் கூறினார். 10 லட்சமாவது மரக்கன்றை அப்துல்கலாம் அய்யாவே கடலூரில் நட்டு சிறப்பித்தார். அதன்பிறகு, அப்துல் கலாம் அய்யா அவர்கள் என்னிடம் ஒரு கோடி மரக்கன்று நடவேண்டும் என்று அன்புக் கட்டளை பிறப்பித்தார்.

ஒரு கோடி இலக்கை மனதில் கொண்டு, இதுவரை 24 லட்சத்து 75 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளேன். ஒரு கோடி மரக்கன்று இலக்கே எனது லட்சியம். அதற்கு ‘கிரீன் கலாம்’ அமைப்பு முழு அர்ப்பணிப்போடு செயல்படும். இதுவரை நடப்பட்ட மரக்கன்றுகளின் பெரும்பாலானவை பள்ளி, கல்லூரி வளாகங்களிலேயே நடப்பட்டுள்ளது. அதை அந்தந்த பள்ளி, கல்லூரி மாணவர்களே தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். நான் இதுவரை தென் மாவட்டங்களில்தான் நிறைய மரங்களை நட்டுள்ளேன். சென்னையில் இதுவரை எதுவும் செய்யவில்லை. அதற்காகத்தான், இப்படியொரு பேரணியை ஏற்பாடு செய்தேன்.

இனி நடவுள்ள மரக்கன்றுகளை பொதுமக்கள் நடமாடும் இடங்களிலும், ஊர்ப்புறங்களிலும் நட ஆசையாக உள்ளது. அதற்காக பொதுமக்கள், தொழிலதிபர்களின் ஆதரவை நான் வேண்டுகிறேன். நடிகர்கள் ஏதாவது பொது விழாக்களில் கலந்துகொண்டால், அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குகிறார்கள்.

ஆனால், எனக்கு எந்த பணமும் வேண்டாம். அதற்கு பதிலாக மரக்கன்றுகளை கொடுங்கள். அதேபோல், 25 ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நடுவதற்கு ஏதாவது விழா எடுத்தால், நான் எதுவும் எதிர்பார்க்காமல் வந்து அந்த விழாவை சிறப்பித்து தருகிறேன். தற்போது இந்த பேரணியில் கலந்துகொண்ட 5000 மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கவுள்ளோம்.

இவ்வாறு நடிகர் விவேக் பேசினார்.

Similar News