சினிமா

விஜய் சேதுபதியை பார்த்து பயந்த ரித்திகா சிங்

Published On 2016-06-13 09:49 GMT   |   Update On 2016-06-13 09:49 GMT
படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதியை பார்த்து ரித்திகா சிங் பயந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பரவி வருகிறது. அவர் எதற்காக பயந்தார்? என்பது குறித்து பார்ப்போம்.
‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமான குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங், தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘காக்காமுட்டை’ இயக்குனர் மணிகண்டன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தது குறித்து ரித்திகா சிங் கூறும்போது,

படப்பிடிப்பில் விஜய் சேதுபதி முதலில் என்னிடம் பேசாமல் மிகவும் அமைதியாகவே இருந்தார். பிறகு, அவர் பேசும்போது முகத்தை மிகவும் சீரியசாக வைத்துக் கொண்டே பேசுவார். மொழி தெரியாததால் அவர் ரொம்பவும் சீரியசான மனிதராக இருப்பார் என்று பயந்தேன். ஆனால், சில நாட்களுக்கு பிறகு அவர் பேசுவது எனக்கு புரிய ஆரம்பித்தபோதுதான், விஜய் சேதுபதியின் முகம் சீரியசாக இருந்தாலும், அவர் பேசுவது எல்லாமே நகைச்சுவையாக இருந்தது. இப்போது நான் தமிழ் கற்றுக் கொண்டதும் என்னிடம் நெருங்கி பேச ஆரம்பித்து விட்டார்.

தமிழ் கற்றுக்கொள்வதற்காக எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்துள்ளார். சப் டைட்டில் இல்லாத தமிழ் படங்களை பார்க்க சொல்லியிருக்கிறார். அப்போதுதான் தமிழை சீக்கிரமாக கற்றுக் கொள்ள முடியும் என்று அறிவுரை கூறியிருக்கிறார். அவரின் அறிவுரையை ஏற்று தற்போது தமிழை வேகமாக கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம் விஜய்சேதுபதி என்றுதான் சொல்லவேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, விஜய் சேதுபதி படத்திற்கு பிறகு நான் மீண்டும் நேரடி தமிழ் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறேன். அந்த படத்தில் நான் முதலில் நடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தின் கதாபாத்திரத்தை போன்று வலுவான கதாபாத்திரம். இறுதிச்சுற்று கதாபாத்திரம் எனக்கு தமிழில் நல்ல பெயரையும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தது. அதேபோல், இந்த புதிய படத்தின் கதாபாத்திரமும் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று நம்புகிறேன். அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக காத்திருக்கிறேன் என்று பெருமிதத்துடன் கூறினார். மேலும், ரித்திகா சிங் நடிக்கப்போகும் அந்த புதிய படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் பற்றிய விவரங்களை தெரிவிக்க அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

Similar News