சினிமா

சம்பளம் அதிகம் என்பதால் நானும் ரஜினியும் சேர்ந்து நடிக்கவில்லை: கமல்ஹாசன்

Published On 2016-04-05 08:31 GMT   |   Update On 2016-04-05 08:31 GMT
நானும், ரஜினியும் இணைந்து நடிக்க சம்மதம் சொல்லி எங்களுக்கு சம்பளம் கொடுத்தால் பிறகு படம் எடுக்க பணம் இருக்காது என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கமல் ஹாசனுக்கு, சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் திரைப்பட ஆவண காப்பாளர் ஹென்றி லாங்லாய்ஸ் பெயரில் கொடுக்கப்படும் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த விருதை பெற நான் தகுதியானவனா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த விருது எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருக்கிறது. எனது படங்களில் பிரெஞ்சு சினிமாவின் தாக்கம் அதிகம் இருக்கும். இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்தது ஆச்சரியம் அல்ல. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் மணிரத்னத்துடன் மீண்டும் எப்போது இணைவேன் என்று கேட்கிறார்கள். இப்போது நானும் அவரும் பிசியாக இருக்கிறோம். காலம் வரும் போது கண்டிப்பாக இணைவோம்.

நானும், ரஜினியும் ஒரு காரணத்துக்காக சேர்ந்து நடிக்க முடியவில்லை. நானும், ரஜினியும் இணைந்து நடிக்க சம்மதம் சொல்லி எங்களுக்கு சம்பளம் கொடுத்தால் பிறகு படம் எடுக்க பணம் இருக்காது. நாங்கள் இருவரும் தனித்தனியாக நடிக்கத் தொடங்கியதே இந்த காரணத்துக்காகத்தான்.

மருதநாயகம் படம் பற்றி எல்லோரும் ஆர்வமாக கேட்கிறார்கள். அமெரிக்காவில் கூட நிறைய பேர் இது பற்றி கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.

இத்தனை காலம் பொறுமையாக இருந்து விட்டேன். இன்னும் சிறிது காலம் நான் பொறுமையாக இருப்பது பெரிய விஷயம் அல்ல.

அடுத்த படத்தில் நான் என் மகள் சுருதியுடன் நடிக்கிறேன். இது இருவரும் ஒன்றாக நடிக்கும் முதல் படம். இந்த படம் திரில்லர் மற்றும் காமெடி படமாக இருக்கும்”

இவ்வாறு கமல்ஹாசன் கூறினர்.

Similar News