ஆன்மிகம்
கோவை புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றப்பட்ட போது எடுத்த படம்.

கோவை புனித அந்தோணியார் ஆலய திருவிழா

Published On 2019-06-10 03:48 GMT   |   Update On 2019-06-10 03:48 GMT
கோவை புலியகுளத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை புலியகுளத்தில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு கோவை மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வந்து பிரார்த்தனை செய்கின்றனர். இந்த ஆலயத்தின் தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டு ஆடம்பர தேர்பவனி வருகிற 16-ந் தேதி நடக்கிறது.

இதையொட்டி நேற்று காலையில் புனித அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமை யில் காலை சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

பின்னர் அந்தோணியார் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் மந்திரித்தார். இதையடுத்து கொடி ஆலயத்தை சுற்றிலும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது பொதுமக்கள் கொடிமீது பூக்களை தூவி வழிபட்டனர்.

பின்னர் ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆலய பங்கு குரு ராயப்பன் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மாலை 5.30 மணிக்கு போத்தனூர் பங்கு குரு ஜோசப் டேவிட் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 12-ந் தேதி வரை நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் திருப்பலி நடைபெறுகிறது. வருகிற 15-ந் தேதி காலை 8 மணிக்கு புதுநன்மை நிகழ்ச்சி கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடக்கிறது.

16-ந் தேதி காலை 8 மணிக்கு ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. அதைத்தொடர்ந்து மறை மாவட்ட பொருளாளர் ஜோ பிரான்சிஸ் தலைமையில் திருப்பலி நடைபெறும். அன்று மாலை ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.
Tags:    

Similar News