சினிமா
தமிழ் இசையமைப்பாளரை பாராட்டிய அனுராக்
பிரபல பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப், தமிழ் படங்களுக்கு இசையமைத்து வரும் ரான் ஈத்தன் யோகன் இசையமைப்பாளரை பாராட்டியுள்ளார்.
சமீபகாலமாக திரில்லர் வகை படங்கள் அதிகரித்துள்ளன. இந்த வகை படங்களுக்கு இசை மிகவும் முக்கியம். அந்த வகையில் மாயா, நரகாசூரன், இறவாக்காலம், கேம் ஓவர், ஒப்பம் என்று வரிசையாக திரில்லர் படங்களின் பின்னணி இசைக்கு நல்ல பெயர் கிடைத்தது.
இந்த படங்களின் இசையமைப்பாளர் ரான் ஈத்தன் யோகன் திரில்லர் படங்களுக்கு இசையமைப்பதில் உள்ள சவால்கள் குறித்து தான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் இசைக் குடும்பத்தில் இருந்து வந்தவன். தாத்தா சேவியர், அப்பா ராஜன் இருவரும் முன்னணி இசையமைப்பாளர்களிடம் இசைக்குழுவில் வயலின், கிடார் வாசித்தவர்கள். லண்டனில் கல்லூரி படிப்பு. முதல் படமான மாயாவுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து திரில்லர் படங்களே அதிகம் வருகின்றன. ஒரு குறிப்பிட்ட படங்களுக்குள் சிக்க விரும்பவில்லை. எல்லா வகை படங்களும் இசையமைக்க விரும்புகிறேன்.
மாயா படப்பிடிப்பில் நயன்தாராவை சந்தித்தேன். அவர் என் இசையை கேட்டு வியந்தார். இப்போது கேம் ஓவர் படத்தை இந்தியில் அனுராக் காஷ்யப் வெளியிடுகிறார். அவர் படத்தை பார்த்துவிட்டு என் இசை உள்பட படத்தின் அனைத்து தொழில் நுட்பங்களையும் பாராட்டினார். ஹாலிவுட் படம் அளவுக்கு இருக்கிறது என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.