சினிமா
கதை திருட்டா? - பார்த்திபன் கருத்துக்கு அயோக்யா பட இயக்குனர் பதில்
விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோக்யா திரைப்படத்தின் கதை பற்றி கூறிய பார்த்திபன் கருத்து அப்படத்தின் இயக்குனர் பதில் அளித்துள்ளார்.
விஷால், ராசி கண்ணா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் அயோக்யா. இப்படத்தில் பார்த்திபன் வில்லனாக நடித்து இருந்தார்.
அயோக்யா படத்தின் கதை தனது உள்ளே வெளியே படத்தின் சாயல் தான் என்று பார்த்திபன் பதிவிட பரபரப்பானது. தனது படத்தை திருடி தெலுங்கில் படமாக்கி அதை தமிழில் எடுக்கும்போது தன்னையே வில்லனாக்கியது அயோக்கியத்தனம் என்று கூறி இருந்தார்.
அடுத்த பதிவுகளில் தான் படத்தின் விளம்பரத்துக்காகவே இப்படி செய்ததாகவும் விஷாலுக்கும் தனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார். இருந்தாலும் பார்த்திபனின் கருத்து சர்ச்சையானது.
இதுகுறித்து அயோக்யா படத்தின் இயக்குனர் வெங்கட் மோகனிடம் கேட்டோம். ‘அவரது பதிவை நானும் பார்த்தேன். அது அவரது கருத்து. உள்ளே வெளியேயின் கதை சாயல் இதில் இருந்து இருக்கலாம். நான் கதை எழுதவில்லை. தெலுங்கில் கதையை எழுதிய வக்கந்தம் வம்சியிடம் தான் கேட்கவேண்டும். நான் அந்த கதையில் கிளைமாக்சை மாற்றி இருக்கிறேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
முன்னணி கதாநாயகன் ஒருவர் இப்படி ஒரு நெகட்டிவ் கிளைமாக்சில் நடித்ததற்காக விஷாலுக்கு தான் எல்லா பாராட்டுகளும் சேரும்’.
இவ்வாறு அவர் கூறினார்.