சினிமா

எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை - சமீரா ரெட்டி

Published On 2019-04-29 14:02 GMT   |   Update On 2019-04-29 14:02 GMT
எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை என்று நடிகை சமீரா ரெட்டி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். #SameeraReddy
சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் சமீரா ரெட்டி. அஜித்தின் அசல், விஷாலின் வெடி, மாதவனின் வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்திவிட்டார். அவருக்கு நான்கு வயதில் ஹன்ஸ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சமீரா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:-

நான் திருமணமாகி இரண்டு மாதங்களில் கர்ப்பமாகிவிட்டேன். பிரசவம் முடிந்த பிறகு மீண்டும் நடிக்க வருவது என்று திட்டமிட்டேன். ஆனால் எல்லாம் நேர் எதிராகிவிடட்டது. கர்ப்ப காலம் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.



நான் முதல் முறை கர்ப்பமாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சினையால் 4 முதல் 5 மாதங்கள் படுக்கையில் இருந்தேன். அதனால் உடல் எடை ஏற தொடங்கியது. படங்கள், விருது விழாக்கள் என்று பிசியாக இருந்த எனக்கு படுத்த படுக்கையாக இருந்தது கஷ்டமாக இருந்தது.

பிரசவம் ஆன பிறகு 102 கிலோ ஆகிவிட்டேன். 32 கிலோ கூடுதல் எடையில் எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. நான் வெளியே சென்றபோது என்னை பார்த்தவர்கள், சமீரா ரெட்டியா இது, என்ன ஆச்சு என்று வியந்தனர்.

இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்தேன். தற்போது நான் மீண்டும் கர்ப்பமாக உள்ளேன். இந்த பிரசவத்தின்போதும் உடல் எடை போடும் என்று தெரியும். எப்பொழுதுமே கவர்ச்சியாக இருக்க முடியாது. அதற்கும் ஒரு முடிவு உண்டு’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News