என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹர்மன்பிரீத் கவுர்"

    • பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம்.
    • 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

    கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

    பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கிய ரோகித் சர்மா மற்றும் ஹர்மன்பிரீத் கவுருக்கு பதம் ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் டென்னிஸ் ஜாம்பவான் விஜய் அமிர்தராஜுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் மற்றும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கோல்கீப்பர் சவிதா புனியா ஆகியோரும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    விளையாட்டுத் துறையில் தங்கள் சாதனைகளுக்காக பல்தேவ் சிங், பகவான் தாஸ் ரைக்வார் மற்றும் கே. பஜனிவேல் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • பெண்கள் பிரிமீயர் லீக் டி20 தொடர் மும்பை புறநகரான நவி மும்பையில் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

    மும்பை:

    டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 1,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் தான்.

    நான்காவது பெண்கள் பிரிமீயர் லீக் டி20 தொடர் மும்பை புறநகரான நவி மும்பையில் நடந்து வருகிறது.

    இதில் நேற்றிரவு நடந்த 6-வது லீக்கில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் ஜெயன்ட்சை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த குஜராத் அணி 192 ரன்களைக் குவித்தது.

    193 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 37 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தாலும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நிலைத்து நின்று கைகொடுத்தார். தனது 10-வது அரைசதத்தைப் பூர்த்தி செய்த அவர் அதன் பிறகு இரண்டு முறை கண்டம் தப்பி அணியை வெற்றிகரமாக கரைசேர்த்தார்.

    இந்நிலையில், பெண்கள் பிரிமீயர் லீக் தொடரில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுர் பெற்றார்.

    இந்தப் பட்டியலில் மும்பை அணி வீராங்கனையும், இங்கிலாந்து ஆல் ரவுண்டருமான நாட் ஸ்கீவர்-பிரண்ட் முதலிடத்தில் உள்ளார். அவர் 1,101 ரன்களுடன் உள்ளார். ஹர்மன்ப்ரீத் 1,016 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    • பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் மும்பையில் நாளை தொடங்குகிறது.
    • இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

    புதுடெல்லி:

    பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கி 17-ம் தேதி வரை நவி மும்பையிலும், ஜனவரி 19-ம் தேதி முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை வதோதராவிலும் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான ஜுலான் கோஸ்வாமி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

    ஹர்மன்பிரீத் கவுர், இந்திய பெண்கள் கிரிக்கெட்டுக்கும், டபிள்யூ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் செய்துள்ள சாதனைகள் மகத்தானது.

    முதல் முறையாக இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்தார்.

    அவரது தலைமையில் மும்பை அணி 2 முறை மகுடம் சூடியுள்ளது.

    ஒரு கேப்டனாக அவரது சாதனையை யாராலும் நெருங்க முடியாது. மேலும் பல பட்டங்களை அவர் வென்று தருவார்.

    ஹர்மன்பிரீத் கவுரால் இன்னும் 4-5 ஆண்டுகள் விளையாட முடியுமென நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • பந்துவீச்சில் தீப்தி சர்மா தரவரிசைக்கான 735 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.
    • பேட்டிங்கில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 2 இடங்கள் முன்னேறியுள்ளார்.

    துபாய்:

    ஐ.சி.சி. சிறந்த வீராங்கனைகள், அணிகளுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது.

    இதில் பெண்களுக்கான டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்டிங் வரிசையில் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் 2 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தில் உள்ளார்.

    இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக அரை சதம் கடந்தார்.

    இந்தப் பட்டியலில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா 3-வது இடத்தை தக்கவைத்துள்ளார். ஆஸ்திரேலியா வீராங்கனை பெத் மூனி முதல் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹெய்லே மேத்யூஸ் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஷபாலி வர்மா 6வது இடத்தில் உள்ளார்.

    பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீராங்கனை சுதர்லேண்டு 736 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார். இந்தியாவின் தீப்தி சர்மா ஒரு புள்ளி குறைந்து 2வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

    • டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 175 ரன்கள் எடுத்தது.

    திருவனந்தபுரம்:

    இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 4-0 என கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் அவுட்டாகினர். 77 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இந்திய அணி தத்தளித்தது.

    கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்தார். அவர் 43 பந்தில் 68 ரன்கள் குவித்தார். அமன்ஜோத் கவுர் 21 ரன்கள் எடுத்தார்.

    கடைசி கட்டத்தில் அருந்ததி ரெட்டி அதிரடியில் மிரட்டி 11 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்.

    இலங்கை சார்பில் சமாரி கவிஷா திஹாரி, ராஷ்மிகா, சமாரி அட்டபட்டு ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

    • இந்தியாவின் ஷபாலி வர்மா 79 ரன்கள் குவித்தார்.
    • இந்திய அணி டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது.

    திருவனந்தபுரம்:

    இந்தியா, இலங்கை மகளிர் அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 13.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு இது 77வது வெற்றியாக அமைந்தது. இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார் ஹர்மன்பிரீத்.

    ஏற்கனவே, ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் 76 வெற்றிகள் பெற்று முன்னிலையில் இருந்தார். தற்போது அந்த சாதனையை ஹர்மன்பிரீத் கவுர் முறியடித்துள்ளார்.

    • உலகக் கோப்பையை வென்ற நாள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாகும்.
    • எனக்கு எல்லாமே கிரிக்கெட் தான். அதனை தவிர்த்து வேறு எதுவும் தெரியாது.

    சமீபத்தில் நடந்த 13-வது பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நவிமும்பையில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. உலகக் கோப்பையை முதல்முறையாக உச்சி முகர்ந்த இந்திய அணியை பிரதமர், ஜனாதிபதி நேரில் பாராட்டி உற்சாகப்படுத்தினர். வீராங்கனைகளுக்கு கோடிக்கணக்கில் பரிசு மழை கொட்டியது.

    உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய பெண்கள் அணியின் கேப்டனான 36 வயது ஹர்மன்பிரீத் கவுர் நேற்று முதல்முறையாக தமிழகம் வந்தார். சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது. சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன், தலைவர் மரிய ஜான்சன் ஆகியோர் ஹர்மன்பிரீத் கவுருக்கு நினைவுப்பரிசு வழங்கினர்.

    விழாவில் தொகுப்பாளர் மற்றும் மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து ஹர்மன்பிரீத் கவுர் பேசுகையில் கூறியதாவது:-

    உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. உலகக் கோப்பையை வென்ற நாள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாகும். கிரிக்கெட்டுக்காகவே நான் பிறந்து இருப்பதாக நினைக்கிறேன். எனக்கு எல்லாமே கிரிக்கெட் தான். அதனை தவிர்த்து வேறு எதுவும் தெரியாது. இந்த வெற்றி பெண்கள் கிரிக்கெட்டுக்கு உத்வேகம் அளிக்கும்.

    நிறைய இளம் வீராங்கனைகள் கிரிக்கெட்டை நோக்கி படையெடுக்க ஊக்கமளிக்கும். அது மட்டுமின்றி இந்த வெற்றி பெண்கள் கிரிக்கெட்டில் நிறைய நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்த தொடங்கி இருக்கிறது. ஒரு வீராங்கனையாக நிறைய போட்டிகளில் விளையாட வாய்ப்பு வேண்டும் என்று கேட்டோம். அது தற்போது நடந்து இருக்கிறது. அதிகமான போட்டிகள் நடக்கும் போது வீராங்கனைகள் மட்டுமின்றி அணியும் வலிமை அடையும்.

    சமூக வலைதள நெருக்கடியை எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள். அணி சரியாக ஆடாத போது பலவாறு விமர்சனங்கள் வரும். ஆனால் உலகக் கோப்பையை வென்ற பிறகு கூட சில வீராங்கனைகள் விமர்சனங்களை சந்தித்து இருக்கிறார்கள். ஆனால் விமர்சனம் என்பது விளையாட்டில் மட்டுமல்ல ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அங்கமாகி விட்டது. அதனை நீங்கள் எப்படி எடுத்து கொள்கிறீர்கள் என்பதில் தான் எல்லாம் உள்ளது. என்னை பொறுத்தமட்டில் அது ஒரு சாதாரண பிரச்சினை தான்.

    2022-ம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் நாங்கள் லீக் சுற்றோடு வெளியேறினோம். அது எங்கள் இதயத்தை நொறுக்கியது. அப்போதைய கேப்டன் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி உள்ளிட்டோர் மிகுந்த வேதனை அடைந்தனர். அப்போது நான், மந்தனா உள்ளிட்ட வீராங்கனைகள் இந்த மூத்த வீராங்கனைகளுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம். அதனால்தான் உலகக் கோப்பையை வென்றதும், அவர்களது கையில் கொடுத்து கவுரவித்தோம்.

    உலக சாம்பியன் ஆன பிறகு நான் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றேன். அப்போது நடிகர் ரஜினிகாந்த் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வாழ்த்து தெரிவித்தார். சிறுவயதில் டெலிவிஷனில் பார்த்து மகிழ்ந்த நபர் போனில் அழைத்து பேசியது உற்சாகமாக இருந்தது. இறுதிப்போட்டியை நேரில் பார்க்க வரவேண்டும் என்று விரும்பினேன். அப்போது சிங்கப்பூரில் படப்பிடிப்பு இருந்ததால் வர இயலவில்லை. ஆனால் எனது ஒட்டுமொத்த குடும்பமும் போட்டியை பார்க்க வந்து இருந்தது. நமது அணி வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டனர் என்று அவர் என்னிடம் கூறினார்.

    சென்னை எனக்கு மிகவும் பிடித்தமான இடமாகும். இங்கு வரும்போதெல்லாம் மக்கள் அன்பை பொழிகிறார்கள். இங்குள்ள உணவும் எனக்கு பிடிக்கும். சொந்த ஊரை விட்டு வெளியில் செல்லும்போதெல்லாம் தோசையை விரும்பி சாப்பிடுவேன்.

    நாங்கள் கோப்பையை வெல்ல தலைமை பயிற்சியாளர் அமோல் முஜூம்தாரும் முக்கிய காரணம். அவர் எங்களுக்கு எல்லா வகையிலும் பக்கபலமாக இருந்தார். 'நீங்கள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள். மற்ற பிரச்சினைகளை எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன்' என்பார். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை வந்த கவுருக்கு பிரமாண்ட மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • கவுர், பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

    13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 52 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி கோப்பையை வென்றது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றிக்கு பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், நடிகர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

    அந்த வகையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதனால் சென்னை வந்த அவருக்கு மேளதாளங்கள் முழங்க, பிரமாண்ட மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மாணவிகள் இந்திய வீராங்கனைகளின் ஜெர்சியை அணிந்து வந்து ஹர்மன்பிரீத் கவுரிடம் கோப்பையை பெற்றுக்கொண்டனர். அதாவது மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியினர் கோப்பையை வென்று கொண்டாடியதை போன்று அவர்கள் நடித்து காட்டினர்.

    இதனை தொடர்ந்து அவர் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கவுரிடம் மாணவர் ஒருவர் தோனி, விராட் கோலி இவர்களில் யார் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் என கேள்வி எழுப்பினார். அதற்கு தோனி என கவுர் பதிலளித்தார். இதனால் அரங்கமே அதிர்ந்தது.

    அதனை தொடர்ந்து தோனி, ஸ்மிருதி மந்தனா இவர்களில் யார் என கேள்வி எழுப்ப மந்தனா என பதிலளித்தார். இதனால் அதிர்ந்த அரங்கம் அமைதியானது. அதனை தொடர்ந்து மந்தனாவா மிதாலி ராஜா என கேள்வி எழுப்ப மீண்டும் ஸ்மிருதி என பதிலளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • மகளிர் உலக கோப்பையை முதல் முறையாக இந்திய அணி கைப்பற்றியது.
    • ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

    சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் முறையாக ஒருநாள் உலக கோப்பையை கைப்பற்றி வராலாறு படைத்தது.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணிக்கு நாடு முழுவதும் பாரட்டுக்கள் குவிந்தன. இந்திய அணியில் விளையாடிய வீராங்கனைகளுக்கு அந்த அந்த மாநில அரசுகள் பரிசுத்தொகை வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணியை வழிநடத்திய ஹர்மன்பிரீத் கவுர் சென்னைக்கு வருகை தந்துள்ளார். அவர் பிரபல கல்வி நிறுவனங்களின் அழைப்பை ஏற்று இன்று சென்னைக்கு வந்துள்ளார்.

    அவருக்கு மேலதாளங்கள் முழுங்க பிரம்மாண்ட வரவேற்று வழங்கப்பட்டது. மேலும் ஜூனியர் கிரிக்கெட் வீராங்கனைகள் அவரை நடனமாடியும் வரவேற்றனர். இது தொடர்பான புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 318 ரன்கள் குவித்தது.

    லண்டன்:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கின்றன.

    இந்நிலையில், இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய மகளிர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர்.

    முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் பிரதிகா ராவல் 26 ரன்னில் அவுட்டானார். 45 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா வெளியேறினார்.

    ஹர்லின் தியோல் உடன் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் இணைந்தார். நிதானமாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த நிலையில் ஹர்லின் தியோல் 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கேப்டனுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணைந்து அதிரடியை வெளிப்படுத்தினார். ஜெமிமா 45 பந்தில் அரை சதம் கடந்து ஆட்டமிழந்தார்.

    பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் சதமடித்து அசத்தினார். அவர் 82 பந்துகளில் 102 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    இறுதியில், இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 318 ரன்கள் குவித்தது. ரிச்சா கோஷ் 38 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

    • மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது.
    • இதில் டெல்லியை வீழ்த்திய மும்பை 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    மும்பை:

    மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், கோப்பை வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் கூறியதாவது:

    நாங்கள் கணக்கிட்டு ரிஸ்க் எடுத்தோம். அது எங்களுக்கு உதவியது. 150 (149) என்பது ஒரு நல்ல ஸ்கோர் அல்ல, ஆனால் அது போன்ற போட்டிகளில் அழுத்தமான ஆட்டங்களில், அது எப்போதும் 180 ரன்கள்தான். மேலும் எங்கள் பந்து வீச்சாளர்களுக்குத்தான் பெருமை.

    பவர்பிளேயில் எங்களுக்கு திருப்புமுனைகளைத் தர முடியும் என்ற நம்பிக்கை பந்து வீச்சாளர்களுக்கு இருந்தது. இஸ்மாயில் மற்றும் சீவர் பிரண்ட் எங்களுக்கு அந்த வாய்ப்பை உருவாக்கி ஆட்டத்தை அமைத்துக் கொடுத்தார்கள்.

    இன்று அணியில் அனைவரும் பந்து வீசிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவருக்கும் விஷயங்களை மிகவும் தெளிவுபடுத்தினோம், அவர்களின் பாத்திரங்களை தெளிவுபடுத்த ஒருவருக்கொருவர் சந்திப்புகளை நடத்தினோம்.

    வெற்றிக்கான திறவுகோல் விஷயங்களை எளிமையாக வைத்திருப்பதும், சரியான விஷயங்களை மீண்டும் மீண்டும் செய்வதும் ஆகும். நாங்கள் விஷயங்களை எளிமையாக வைத்திருக்க விரும்பினோம், ஒரு அணியாக, நாங்கள் அதைச் செய்தோம்.

    நான் பேட் செய்ய உள்ளே சென்றபோது அது எளிதானது அல்ல. நான் அங்கேயே இருந்து ஸ்ட்ரைக் செய்துகொண்டே இருந்தால் நாட் சீவர் பிரண்ட் அங்கே இருந்தால் நான் ரிஸ்க் எடுக்கத் தேவையில்லை என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அவரை ஆதரிக்க விரும்பினேன் என தெரிவித்தார்.

    • ஜூனியர் உலகக் கோப்பை போட்டியை பார்த்த பிறகு அவர்களை போல நாமும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை பெற்றுள்ளோம்.
    • ஏலத்திற்கு முன்பாக எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம் (பாகிஸ்தானுக்கு எதிரான மோதல்) நடக்கிறது.

    மும்பை:

    முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டி அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதற்கான ஏலம் வருகிற 13-ந்தேதி மும்பையில் நடக்கிறது. வீராங்கனைகள் ஏலம் முதல்முறையாக நடப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு முந்தைய நாள் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது.

    இதனால் கவனச்சிதறல் ஏற்படுமா என்பது குறித்து இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடம் கேட்கப்பட்ட போது அவர் கூறியதாவது:-

    ஏலத்திற்கு முன்பாக எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம் (பாகிஸ்தானுக்கு எதிரான மோதல்) நடக்கிறது. எங்களது கவனம் எல்லாம் அந்த போட்டி மீதே இருக்கும். மற்ற எல்லாவற்றையும் விட உலகக் கோப்பை தொடரே மிகவும் முக்கியமானது. ஒரு வீராங்கனையாக எது நமக்கு முக்கியமானது, கவனச்சிதறல் இல்லாமல் எப்படி அதன் மீது தொடர்ந்து கவனம் செலுத்துவது என்பது தெரியும்.

    நாங்கள் எல்லோரும் ஓரளவு முதிர்ச்சியானவர்கள். எது முக்கியம் என்பதை அறிவோம். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியை பார்த்த பிறகு அவர்களை போல (இந்திய ஜூனியர்) நாமும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை பெற்றுள்ளோம்.

    பெண்கள் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக நாங்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கிறோம். அது விரைவில் நடக்கப்போகிறது. அடுத்த 2-3 மாதங்கள் பெண்கள் கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். பெண்கள் பிக்பாஷ் (ஆஸ்திரேலியா) மற்றும் தி ஹன்ட்ரட் (இங்கிலாந்து) ஆகிய போட்டிகள் அவர்களது நாட்டில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கிறது என்பதை பார்த்து இருக்கிறோம்.

    இதே போல் நமது நாட்டிலும் நடக்கும் என்று நம்புகிறேன். இந்த போட்டியின் மூலம் இந்திய இளம் வீராங்கனைகளுக்கு சர்வதேச நட்சத்திரங்களுடன் இணைந்து விளையாடும் அனுபவம் கிடைக்கும். நமது நாட்டில் பெண்கள் கிரிக்கெட்டின் மேம்பாட்டுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.

    இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.

    ×