என் மலர்
நீங்கள் தேடியது "நேதன்யாகு"
- காசாவில் பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இரக்கமற்ற வகையில் இன்னும் தொடர்கின்றன.
- மோடியின் உரையைப் புறக்கணிக்க இஸ்ரேல் எதிர்க்கட்சி முடிவெடுத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் அழைப்பை ஏற்று, நாளை (பிப்ரவரி 25) முதல் 26 வரை இரண்டு நாள் பயணமாக இஸ்ரேலுக்கு செல்லவுள்ளார்.
இந்நிலையில் மோடி அரசு பாலஸ்தீன மக்களைக் கைவிட்டுவிட்டதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
காங்கிரஸ் எம்.பி மற்றும் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், "ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் வெளியேற்றி கட்டாய இடம்பெயர்வு செய்வது தீவிரமடைந்துள்ளது. இது உலகளவில் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
காசாவில் பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இரக்கமற்ற வகையில் இன்னும் தொடர்கின்றன.
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை திட்டமிட்டுள்ளன.
ஆயினும்கூட, பிரதமர் நாளை இஸ்ரேலுக்குச் செல்கிறார். இதில் அதானி தொடர்பும் உள்ளது. அங்கு, கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அவரது உற்ற நண்பர் நேதன்யாகுவை சந்திக்க உள்ளார்.
இஸ்ரேலில் நீதித்துறையின் சுதந்திரத்தை நேதன்யாகு எவ்வாறு அழித்து வருகிறார் என்பதை எதிர்த்து இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடியின் உரையைப் புறக்கணிக்க இஸ்ரேல் எதிர்க்கட்சி முடிவெடுத்துள்ளது.
பாலஸ்தீனியர்களின் நலன் குறித்து மோடி அரசாங்கம் இழிவான வகையில் பாசாங்குத்தனமான அறிக்கைகளை வெளியிடுகிறது.
உண்மை என்னவென்றால், மோடி அரசாங்கம் அவர்களைக் கைவிட்டுவிட்டது. நவம்பர் 18, 1988 அன்று பாலஸ்தீனத்தை அங்கீகரித்த ஆரம்பகால நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை மோடி அரசு மறந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.
காசாவின் மேற்கு கரையை முழுவதும் ஆக்கிரமிக்க அண்மையில் இஸ்ரேல் அமைச்சகம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
- இரண்டு உலகத் தலைவர்களுக்கு இடையிலான சக்திவாய்ந்த கூட்டணி
- இது பிரதமர் மோடியின் இரண்டாவது இஸ்ரேல் பயணம் ஆகும்.
பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் அழைப்பை ஏற்று, பிப்ரவரி 25 முதல் 26 வரை இரண்டு நாள் பயணமாக இஸ்ரேலுக்கு செல்லவுள்ளார்.
இந்நிலையில் இந்த பயணம் குறித்து இரு தலைவர்களும் எக்ஸ் தளத்தில் இன்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
பிரதமர் மோடியின் வருகையை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணம் என்றும், இந்தியா-இஸ்ரேல் உறவை இரண்டு உலகத் தலைவர்களுக்கு இடையிலான சக்திவாய்ந்த கூட்டணி என்றும் நேதன்யாகு தனது பதிவில் வர்ணித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது பதிவில், " நன்றி, நண்பர், பிரதமர் நேதன்யாகு. இந்தியா-இஸ்ரேல் இடையிலான பிணைப்பு, நம்பிக்கை, புத்தாக்கம் மற்றும் அமைதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
இந்த நீண்டகால நட்பை இந்தியா மிகவும் மதிக்கிறது. வரவிருக்கும் சந்திப்பின் போது நமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த விவாதங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஜெருசலேமில் உங்களைப் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இது பிரதமர் மோடியின் இரண்டாவது இஸ்ரேல் பயணம் ஆகும். இதற்கு முன்பு ஜூலை 2017-ல் அவர் இஸ்ரேலுக்குச் சென்றார். இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர் மோடியே ஆவார்.
உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் மறைந்த பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் உடைய வெளியான கோப்புகளில், பிரதமர் மோடியின் 2017 இஸ்ரேல் பயணம் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்று அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்தார்.
- முந்தைய அமெரிக்க நிர்வாகம் ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தம் மிகவும் முட்டாள்தனமான ஒப்பந்தம்
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஓமனில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்று அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்தார்.
இந்நிலையில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் மீது அமெரிக்கா ராணுவத் தாக்குதலை நடத்தும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிரம்ப் கூறியதாவது, "ஒப்பந்தம் செய்துகொள்வதில் ஈரான் ஆர்வம் காட்டி வருகிறது. பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமையும் என்று நம்புகிறோம். அதே நேரத்தில், இப்பகுதியில் அமெரிக்கப் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
ஈரான் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை என்றால் தாக்குதல் நடத்தப்படும். அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் குறித்து ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும். முந்தைய அமெரிக்க நிர்வாகம் ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தம் மிகவும் முட்டாள்தனமான ஒப்பந்தம்" என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்க ராணுவம் போர் விமானங்கள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்கா- ஈரான் இடையே போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- மத்திய கிழக்கு, மேற்கு ஆசிய பிராந்தியங்களில் பதற்றம் நிலவி வருகிறது.
ஈரானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணமாக அங்கு போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தை ஈரான் அரசு கடுமையாக முடக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் போராட்டக்காரர்களுக்கும், ஈரான் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்பட்டால் அவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்க தாக்குதல் நடத்தும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் போர் நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதி மற்றும் மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, ஈரான் அதிபர் பெசாஸ்கியான் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஸ்திரதன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை இந்த பிராந்தியங்களில் டிப்ளமேட்டிக் மூலமாக உறுதிப்படுத்துவது, இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தாங்கள் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார்
ஈரானைச் சுற்றியும் ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் நிலவும் பதற்றங்களை கூடிய விரைவில் தணிப்பதற்கு ஆதரவாக ரஷியாவும் ஈரானும் தொடர்ந்து ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்து வருவதாகவும், மேலும், எழும் பிரச்சினைகளை அரசியல் மற்றும் ராஜதந்திர வழிகள் மூலமாக மட்டுமே தீர்ப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் புதின் மற்றும் பெசாஸ்கியான் தங்கள் உறுதிபாட்டை வெளிப்படுத்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது.
- ஈரானின் அணுசக்தி உற்பத்தி திறன் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன.
- இஸ்ரேல்-காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தை விரைவாக அடைய முயற்சி நடந்து வருகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஜனாதிபதி டிரம்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சந்தித்து பேசினார். அப்போது இஸ்ரேல்-காசா போர், ஈரானின் அணுசக்தி உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட டிரம்ப் கூறுகையில், ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி உற்பத்தி நிலையங்களை குறிவைத்து கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
இதனால் ஈரானின் அணுசக்தி உற்பத்தி திறன் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால் தற்போது ஈரான் அணுசக்தி திறன்களை கட்டமைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு அணுசக்தி திட்டத்தை ஈரான் மீண்டும் தொடங்கினால் அதனை முற்றிலும் அழித்து சின்னாபின்னமாக்கப்படும். பின்னர் இதுவரை இந்தியா-பாகிஸ்தான் உள்பட 8 போர்களை தான் நிறுத்தி இருப்பதாகவும், ஆனால் அதற்கேற்ற பலன் கிடைக்கவில்லை எனவும் டிரம்ப் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ஏற்கனவே 70-க்கும் மேற்பட்ட முறை அவர் இதுபோல் கூறியது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது தலையீட்டால் ரஷியா-உக்ரைன் போரும் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் தனது வீட்டை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷிய அதிபர் புதினே தன்னிடம் கூறியதாகவும் டிரம்ப் பேசினார்.
இதனை தொடர்ந்து இஸ்ரேல்-காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தை விரைவாக அடைய முயற்சி நடந்து வருகிறது. அதற்கு ஹமாஸ் அமைப்பினர் தங்களது ஆயுதங்களை முற்றிலும் கைவிட வேண்டும்.
மேலும் இந்த போரின்போது வேறு யாராவது பிரதமராக இருந்திருந்தால் இஸ்ரேல் என்ற நாடே அழிந்திருக்கும் என பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்தார்.
- கடினமான காலகட்டத்தை கடந்து செல்லும் யூத சமூகத்தினருடன் நாம் கைகோர்க்க வேண்டும்.
- பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான ஆஸ்திரேலியாவின் முடிவை பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதாக நேதன்யாகு கண்டித்திருந்தார்.
ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கடற்கரையில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய இருவரும் தந்தை - மகன் என்றும் அவர்கள் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாலஸ்தீனத்தை ஆஸ்திரேலியா அங்கீகரித்தது சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த யூத எதிர்ப்பு பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு காரணியாக இருந்தது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றம்சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் நிராகரித்துள்ளார்.
தேசிய ஊடகங்களுக்கு அல்பனீஸ் அளித்த பேட்டியில், அந்த அங்கீகாரத்திற்கும் போண்டி படுகொலைக்கும் ஏதேனும் தொடர்பு இருப்பதாக அவர் நம்புகிறாரா என்று செய்தியாளர் கேட்டபோது, அல்பானீஸ், "இல்லை, நான் அதை சந்தேகிறேன். உலகின் பெரும்பகுதியினர் இரு நாடு தீர்வை மத்திய கிழக்கில் முன்னோக்கிச் செல்லும் வழியாக ஏற்றுக்கொள்கிறார்கள்" என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இது தேசிய ஒற்றுமைக்கான தருணம். நாம் ஒன்றுபட வேண்டும். அசாதாரணமான மற்றும் கடினமான காலகட்டத்தை கடந்து செல்லும் யூத சமூகத்தினருடன் நாம் கைகோர்க்க வேண்டும்.
இந்த கடினமான நேரத்தில் ஆஸ்திரேலியர்கள் யூத சமூகத்துடன் நிற்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்துவதே எனது வேலை" என்று கூறினார்.
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான ஆஸ்திரேலியாவின் முடிவை பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதாக நேதன்யாகு முன்னதாக கண்டித்திருந்தார்.
- ராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட்ட இஸ்ரேல் அதற்கு 'ஆபரேஷன் ரைசிங் லயன்' (Operation Rising Lion) என்று பெயரிட்டது.
- "ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3" என இந்த நடவடிக்கைக்கு பெயரிட்ட ஈரான் FATTAH உட்பட தங்கள் அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது சரமாரியாக பாய்ச்சியது
கடந்த 2023 அக்டோபர் முதல் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 70,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை மற்ற அரபு நாடுகள் வேடிக்கை பார்த்த நிலையில் ஈரான் அதற்கு எதிராக செயல்பட்டு வந்தது.
இந்த சூழலில்தான் கடந்த ஜூன் 13 ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் நேரடி தாக்குதலை நடத்தியது. இது மத்திய கிழக்கில் போருக்கு வித்திட்டது.
சுமார் 12 நாட்கள் நீடித்த இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர், மேலும் பல கட்டமைப்புகள் சேதமடைந்தன.
போர்.. ஆமாம் போர்!
ஈரானின் அணுசக்தித் திட்டத்தை இஸ்ரேல், தனது இருப்புக்கே நேரடி அச்சுறுத்தலாகக் கருதுகிறது. இதனை சீர்குலைக்க இஸ்ரேல் மீது சைபர் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் அது போதாது என்று முடிவெடுத்தது. எனவே ஈரான் மீது ராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட்ட இஸ்ரேல் அதற்கு 'ஆபரேஷன் ரைசிங் லயன்' (Operation Rising Lion) என்று பெயரிட்டது.
சரியாக ஜூன் 13 அன்று ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்களையும் ராணுவ வசதிகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. 200-க்கும் மேற்பட்ட விமானங்கள், டிரோன்களைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் பல போதும்மக்களும், ஈரான் புரட்சி படை தளபதி உசைன் சலாமி மற்றும் அணு விஞ்ஞானி பெரேதூன் அப்பாஸி உள்ளிட்ட பல முக்கிய புள்ளிகள் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து மத்திய கிழக்கில் வேறெந்த நாட்டையும் விட வலுவான ராணுவ கட்டமைப்பை கொண்ட ஈரான், இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை தொடங்கியது.
"ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3" என இந்த நடவடிக்கைக்கு பெயரிட்ட ஈரான் FATTAH உட்பட தங்கள் அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது சரமாரியாக பாய்ச்சியது. இதனால் போர் மூண்டது. இதில் இஸ்ரேலுக்கு உதவியாக அமெரிக்கா களமிறங்கியது.
இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் வீசியது. மேலும் ஈரான், காத்ர், இமாத், கெய்பர் ஷேகன், பட்டா-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆயுத உதவி செய்து வந்தது. ஏவுகணைகளை இடைமறித்து அளிக்கும் THAAD (Terminal High Altitude Area Defense) சிஸ்டம் என்ற மேம்படுத்தப்பட்ட ஏவுகணை எதிர்ப்பு திட்டத்தை இஸ்ரேலில் குவித்தது.

இதற்கிடையே இஸ்ரேலும் ஈரானும் இணைந்து தன்னை குறிவைப்பதை உணர்ந்த ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி தலைமறைவானார்.
ரகசியான நிலத்தடி மறைவிடத்தில் அவர் தஞ்சமடைந்தார். தான் ஒரு வேலை மரணித்தால் தனது உச்ச தலைவர் பொறுப்புக்கு 3 பேரின் பெயர்களை அவர் முன்மொழித்ததாகவும் தகவல் உள்ளது.

இஸ்ரேல் மீது மழையாக பொழிந்த ஈரான் ஏவுகணைகளை THAAD அமைப்பு இடைமறித்த அதே வேலையில், பாதுகாப்பு வழங்குவது மட்டுமின்றி டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா நேரடியாக போரில் குதித்தது.
நிலத்தடியில் உள்ள ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீது அமெரிக்காவில் இருந்து ராணுவ விமானங்களை அனுப்பி 'பங்கர் பஸ்டர்' என்ற நிலத்தடி இலக்குகளை தாக்கும் சக்திவாய்ந்த குண்டுகளைவீச செய்தார் டிரம்ப்.
இதில் ஈரானின் அணுசக்தி தளங்கள் மூன்றும் முற்றிலும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் அறிவித்தார். ஆனால் ஈரான் இதுநாள் வரை இதை மறுத்து வருகிறது.
ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது, ஆனால் அவற்றை முழுமையாக அழிக்கவில்லை என்று சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) தலைவர் க்ரோஸி கூறியதே இதற்கு சான்று.
உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக இஸ்ரேல் அறிவித்தது.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்தன. இதனால் இந்தியா, சீனா உட்பட ஆசிய நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டது.

ஈரான் மீதான தாக்குதலுக்கு சீனா, ரஷியா, வட கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதேநேரம் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ஆதரவளித்தன.
அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியதுடன், இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியபோது, கத்தார் போன்ற நாடுகளின் சமரச முயற்சியுடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடந்தன.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்ததால், கச்சா எண்ணெய் விலைகள் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தன.
ஜூன் 23 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அறிவித்தார்.

இருப்பினும், ஆரம்பத்தில் போர் நிறுத்த மீறல்கள் இருந்தன. ஜூன் 25 அன்று இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவித்தன. எனவே 12 நாட்கள் மோதலுக்கு பிறகு இந்த போரானது முடிவுக்கு வந்தது.
12 நாள் மோதலில் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் தோராயமாக 1,190 பேர் வரை ஈரானில் பலியாகினர். அவர்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் சரிசமமாக அடங்குவர்.
ஈரான் தாக்குதலால் இஸ்ரேலில் உயிரிழப்புகள் மிக குறைவு என்றபோதும் இஸ்ரேலில் பல உள்கட்டமைப்புகள் கடும் சேதத்தை சந்தித்தன. குறிப்பாக இஸ்ரேலின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமான வெய்ஸ்மேன் அறிவியல் நிறுவனம் அழிக்கப்பட்டது.
போர் நிறுத்தத்தை தொடர்ந்து வார்த்தை மோதல்கள் தொடர்ந்தன. அயத்துல்லா காமேனியை இஸ்ரேல் தாக்க தயாராக இருந்ததாவதும், அவரை அசிங்கமான மரணத்திலிருந்து தான் காப்பாற்றியதாகவும் அமெரிக்க அதிபர் அதிபர் டிரம்ப் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டார்.

அதேநேரம், போர் நிறுத்தத்திற்கு பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அயத்துல்லா காமேனி, அமெரிக்காவின் செல்ல நாய் இஸ்ரேல், வேரிலிருந்து அழிக்கப்பட வேண்டிய புற்றுநோய் என்றும் அது ஈரானை தாக்கி பெரிய தவறுசெய்துவிட்டதாகவும் அதன் விளைவை அது அனுபவிக்கும் என்றும் எச்சரித்தார். மேலும் எங்களை தொட நினைத்த அமெரிக்காவுக்கு பாடம் புகட்டியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
மொத்தத்தில் மத்திய கிழக்கு தொடங்கி மூன்றாம் உலகப் போராக உருவாக வாய்ப்புகள் அதிகம் கொண்ட இந்த மோதல் முடிவடைத்திருந்தாலும், இந்த அமைதி தாற்காலிகமே என புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
- காசாவில் பாதுகாப்பை வழங்க சர்வதேச நிலைப்படுத்தல் படையை அங்கீகரித்தல்.
- டிரம்பால் மேற்பார்வையிடப்படும் அமைதி வாரியம் என்ற இடைக்கால அதிகாரத்தை அங்கீகரித்தல்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு பல்வேறு அம்சங்கள் அடங்கிய திட்டத்தை அறிவித்தார். இதை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
காசாவின் திட்டத்தில் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது முதற்கட்ட கோரிக்கையாகும். இதை இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்L உயிரோடு இருந்த 20 இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.
இந்த நிலையில் காசாவின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால திட்டத்திற்கான டொனால்டு டிரம்பின் திட்டத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பான ஐ.நா, தீர்மானத்தை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஏற்றுக் கொண்ட நிலையில், ஹமாஸ் நிராகரித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் பாதுகாப்பை வழங்க சர்வதேச நிலைப்படுத்தல் படையை அங்கீகரித்தல், டொனால்டு டிரம்பால் மேற்பார்வையிடப்படும் அமைதி வாரியம் என்ற இடைக்கால அதிகாரத்தை அங்கீகரித்தல் மற்றும் ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசிற்கான சாத்தியமான எதிர்கால பாதையை திட்டமிடல் ஆகியவற்றை உள்ளடக்கிய தீர்மானத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு சபை ஒப்பதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக நேதன்யாகு கருத்து தெரிவிக்கையில் "டிரம்பின் திட்டம் அமைதி மற்றும் செழிப்புக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் அது காசாவை முழுமையாக ராணுவ மயமாக்குதல், ஆயுதக் குறைப்பு மற்றும் தீவிரமயமாக்கலை வலியுறுத்துகிறது" என்றார்.
அரசு சாரா ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை நிரந்தரமாக நீக்குதலை சர்வதேச நிலைப்படுத்தல் படை உறுதிப்படுத்தும். இது சர்வதேச சட்டத்திற்கு இணங்க தனது ஆணையை நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பயன்படுத்த படைக்கு அதிகாரம் அளிக்கிறது. ஐ.நா. மொழியில் இது ராணுவ சக்தியைப் பயன்படுத்துவதாகும். இந்த தீர்மானம் பாலஸ்தீன மக்களின் அரசியல் மற்றும் மனிதாபிமான கோரிக்கைகள் மற்றும் உரிமைகளின் அளவைப் பூர்த்தி செய்யவில்லை.
எந்தவொரு சர்வதேசப் படையும் ஐ.நா.வின் மேற்பார்வையின் கீழ் இருக்க வேண்டும் என்றும், போர் நிறுத்தத்தை கண்காணிக்க காசாவின் எல்லைகளில் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும் என்றும், பாலஸ்தீன அமைப்புகளுடன் (institutions) பிரத்தியேகமாக செயல்பட வேண்டும் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன ஆணையம் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளது. உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஐ.நா. மற்ற அரசு நாடுகளுடன் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், ஜோர்டான், துருக்கி இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
- இஸ்ரேலிடம் இருந்து இதுவரை 315 பாலஸ்தீனர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 69,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் நேற்று தொலைபேசியில் உரையாடினர். ரஷியா உக்ரைனுடன் போரில் ஈடுபட்டு வரும் சூழலில் காசாவில் நடந்த போர் நிறுத்தம் குறித்து நேதன்யாகுவிடம் புதின் பேசியுள்ளார்.
நேதன்யாகுவுடனான தொலைபேசி உரையாடலில் மத்திய கிழக்கு அரசியல் குறித்து புதின் விவாதித்ததாக ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் சிரியாவில் உள்ள அரசியல் நிலைமை குறித்தும் இருவரும் விவாதித்ததாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் அக்டோபர் 10 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதன் படி, ஹமாஸ் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும் என்றும், இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கும் என்றும் முடிவு எட்டப்பட்டது.
அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்த ஒப்பந்தம் அக்டோபர் 10 ஆம் தேதி அமலுக்கு வந்ததிலிருந்து, ஹமாஸ் 25 பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளது. இஸ்ரேலிடம் இருந்து இதுவரை 315 பாலஸ்தீனர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் அவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், இஸ்ரேல் ஒருதலைப்பட்ச தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த அக்டோபர் 23 முதல், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 69,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
- ஆட்சியில் இருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளில் லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் நேதன்யாகு மீது நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகிறது.
- ஜனாதிபதி அலுவலகம், "யாராவது மன்னிப்பு பெற விரும்பினால், அவர்கள் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
ஊழல் வழக்கில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.
ஆட்சியில் இருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளில் லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் நேதன்யாகு மீது நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகிறது.
குறிப்பாக அவரும் அவரது மனைவி சாராவும் கோடீஸ்வரர்களிடமிருந்து நகைகள் உள்ளிட்ட 260,000 டாலர்கள் மதிப்புள்ள ஆடம்பரப் பொருட்களை வாங்கியது, தனக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட ஊடகங்கள் மீது ஆதிக்கம் செலுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும்.
இந்நிலையில் நேதன்யாகு மீதான வழக்கை கைவிடும்படி டிரம்ப், இஸ்ரேல் ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இஸ்ரேலிய நீதித்துறையின் சுதந்திரத்தை மதித்து, நேதன்யாகுவுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும், நேதன்யாகுவுக்கு எதிரான நடவடிக்கை அரசியல் ரீதியாக நியாயப்படுத்த முடியாதது என்றும் டிரம்ப் கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.
டொனால்டு டிரம்பின் பெரும் ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நேதன்யாகு கூறினார். இருப்பினும் இந்த கடிதத்திற்கு பதிலளித்த இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம், "யாராவது மன்னிப்பு பெற விரும்பினால், அவர்கள் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தன் மீதான ஊழல் வழக்கில் சாட்சியமளிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற நேதன்யாகு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவரது கோரிக்கையை ஏற்க முடியாது என்று ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- 8-வது போருக்கு நாங்கள் தீர்வு காண நெருங்கிவிட்டோம்.
- அதை எனக்குக் கொடுக்காததற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள்
இந்தியா- பாகிஸ்தான் போர் உள்பட 7 போர்களை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
அவருக்கு சில நாடுகளும் ஆதரவு தெரிவித்து பரிந்துரைத்தன. ஆனால் அவருக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே டிரம்ப்பின் முயற்சியால் இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்தநிலையில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்க உள்ள நிலையில் அதுகுறித்து டிரம்ப்பிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
இதற்கு பதிலளித்த டிரம்ப்,"நாங்கள் 7 போர்களை தீர்த்து வைத்தோம். 8-வது போருக்கு நாங்கள் தீர்வு காண நெருங்கிவிட்டோம்.
வரலாற்றில் யாரும் இவ்வளவு போர்களை தீர்த்து வைத்ததாக நான் நினைக்கவில்லை. ஆனால் ஒருவேளை அவர்கள் (நோபல் குழு) அதை எனக்குக் கொடுக்காததற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள்" என்றார்.
இதற்கிடையே வெள்ளை மாளிகை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் டிரம்ப்பின் படத்தை "அமைதித் தலைவர்" என்ற தலைப்பில் பகிர்ந்து உள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் அலுவலகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டொனால்டு டிரம்புக்கு நோபல் பரிசு கொடுங்கள்.அவர் அதற்கு முழு தகுதி படைத்தவர்" என்று தெரிவித்துள்ளது.
இன்று மாலை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ள நிலையில் நேதன்யாகுவின் கருத்து வந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க அதிகாரபூர்வமாக பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- "இது பிரதமர் நேதன்யாகுவின் வலுவான தலைமையின் பிரதிபலிப்பாகும்" என்று மோடி குறிப்பிட்டார்.
- டிரம்ப்-ஐ புகழ பிரதமர் ஆர்வம் காட்டுவது ஆச்சரியமல்ல.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் காசா அமைதி திட்டத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஏற்றுள்ள நிலையில் முதற்கட்ட போர் நிறுத்தம் அமலுக்கு வர உள்ளது.
இந்நிலையில் அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை பாராட்டி பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், "இது பிரதமர் நேதன்யாகுவின் வலுவான தலைமையின் பிரதிபலிப்பாகும்" என்று மோடி குறிப்பிட்டார்.
இந்நிலையில் இதை விமர்சித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில்," காசா தொடர்பான புதிய முன்னேற்றங்களை பிரதமர் வரவேற்று அதிபர் டிரம்பைப் பாராட்டியுள்ளார். அவ்வாறு செய்ய பிரதமர் ஆர்வம் காட்டுவது ஆச்சரியமல்ல.
ஆனால், கடந்த இருபது மாதங்களாக காசாவில் இனப்படுகொலையை கட்டவிழ்த்துவிட்ட இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகுவுக்கு மோடி அளித்துள்ள தகுதியற்ற பாராட்டு அதிர்ச்சியளிப்பதும் வெட்கக்கேடானதும் ஆகும். மேலும் தார்மீக ரீதியாக கொடூரமான ஒரு விஷயம்.
1988 நவம்பரில் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட, இப்போது 150க்கும் மேற்பட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, சுதந்திரமான, இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசின் எதிர்காலம் குறித்தும் மோடி முழுமையான மௌனம் காத்து வருகிறார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்ந்து விரிவடைவது குறித்தும் மோடி எதுவும் கூறவில்லை" என்று தெரிவித்துள்ளார்.






