என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜவுளி"

    • திருப்பூர் பின்னலாடைகளில் 35 சதவீதம் வரை வரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    • இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 26.8 சதவீதம் பங்களித்தது

    இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.இது பின்னலாடைத்துறை உள்பட இந்தியாவின் பல்வேறு துறை ஏற்றுமதி வர்த்தகம் நெருக்கடியை சந்தித்துள்ளது. குறிப்பாக திருப்பூரில் மட்டும் ஆண்டுக்கு ரூ.12,000 கோடி பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு ரூ.45,000 கோடிக்குப் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு திருப்பூரில் இருந்து அதிக அளவில் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளில் 30 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை வரை அமெரிக்காவுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    இந்தநிலையில் 50 சதவீத வரி விதிப்பு திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள்-ஏற்றுமதியாளர்களை கவலையடைய வைத்துள்ளது. இந்த வரி தமிழ்நாட்டின் ஜவுளி மற்றும் ஆடைத்துறையை கடுமையாகப் பாதிக்கும். எனவே ஏற்றுமதியாளர்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 8 பில்லியன் டாலர்கள், அதாவது 26.8 சதவீதம் பங்களித்தது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம். சுப்பிரமணியன் கூறுகையில், திருப்பூரில் இருந்து கிட்டத்தட்ட 60 சதவீதம் பின்னலாடை ஏற்றுமதி செய்யப்படுகிறது. வருகிறது. கடந்த ஆண்டு எங்கள் ஏற்றுமதி ரூ.45,000 கோடி மதிப்புடையதாக இருந்தது. அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் ரூ.12,000 கோடி மதிப்புள்ள வணிகம் பாதிக்கும் அபாயம் உள்ளது. மத்திய அரசு அமெரிக்காவுடன் தலையிட்டு ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்றார்.

    சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜா சண்முகம் கூறுகையில், வரி விதிப்பால் கடந்த 10 நாட்களில் அமெரிக்காவுக்கு ரூ.4,000 கோடி மதிப்புள்ள ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக, இந்திய ஏற்றுமதியாளர்களும் அமெரிக்க இறக்குமதியாளர்களும் அடிப்படை வரியை 10 சதவீதம் பகிர்ந்து வருகின்றனர். ஆட்குறைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இப்போதைக்கு எதுவும் கூற முடியாது . திருப்பூரில் உள்ள சில அலகுகள் மூடப்பட்டுள்ளது. சரக்கு அனுப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வேலை இழப்புகள் எதுவும் இல்லை.

    2030 ம் ஆண்டுக்குள் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் ரூ.1லட்சம் கோடியை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆனால் தற்போதைய வரி விதிப்பால் அடுத்த 5 ஆண்டுகளில் இலக்கை அடைவதை கடினமாக்குகிறது என்றார்.

    இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பினரின் (சிட்டி) கூற்றுப்படி, இந்தியா 2025ம் நிதியாண்டில் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஜவுளி மற்றும் ஆடைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் வளர்ச்சி குறைந்துள்ளது. ஜூன் 2025ல், அமெரிக்காவிற்கான ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 3.3 சதவீதம் மட்டுமே வளர்ந்தது. இது இந்தியாவின் முந்தைய ஆண்டை விட மிகவும் குறைவாகவும், வியட்நாம் மற்றும் வங்காளதேசத்தை விட மிகவும் பின்தங்கியதாகவும் உள்ளது.

    இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பினரின் தரவுகளின்படி, இந்தியா வியட்நாமிடம் சந்தைப்பங்கை இழந்து வருகிறது. ஜனவரி மற்றும் ஜூன் 2025க்கு இடையில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 5.36 பில்லியன் டாலராக இருந்தது. அதே நேரத்தில் வியட்நாமின் ஏற்றுமதி 18.5 சதவீதம் அதிகரித்து 8.54 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் மாதாந்திர ஏற்றுமதி ஜனவரியில் 860 மில்லியன் டாலரில் இருந்து ஜூன் மாதத்தில் 770 மில்லியன் டாலராக குறைந்தது.

    ஏற்றுமதியாளர்களின் துயரங்களை அதிகரிக்கும் வகையில் 50 சதவீதம் வரியுடன் இணைந்து, அமெரிக்காவில் இந்திய ஜவுளிகள் மீதான மொத்த வரிகள் 59-64 சதவீதமாக உயரக்கூடும் என்று உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. ஜவுளி உற்பத்தியில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை உள்ளூரில் விற்பனையாவதால் இந்தியா அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியும் என்று அதன் நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா கூறினார்.

    இருப்பினும் கூடுதல் 25 சதவீதம் வரி தற்காலிகமானது என்று ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவரும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கவுரவ தலைவருமான ஏ. சக்திவேல் தெரிவித்துள்ளார். மேலும் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் சந்தைகளை பன்முகப்படுத்த இந்தியா முயற்சித்து வருகிறது. இங்கிலாந்துடன் ஏற்கனவே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது, மேலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மற்றொரு ஒப்பந்தம் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தங்கள் கிட்டத்தட்ட 50 சதவீத இழப்புகளை ஈடுசெய்ய உதவும் என்று ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவுடனான பிரச்சினைகளுக்கு முன்கூட்டியே தீர்வு காண்பது மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளனர்.

    இந்த பிரச்சினை தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்தித்து விவாதிக்க உள்ளனர்.

    பருத்தி வரி தள்ளுபடி

    இதற்கிடையில் ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை பருத்தி மீதான 11 சதவீதம் இறக்குமதி வரியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் பருத்தி விலை கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் வரையிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தி செலவு குறைந்து பங்களாதேஷ் ,வியட்நாம், இலங்கை போன்ற போட்டி நாடுகளுடன் விலை நிர்ணயம் செய்வதில் சிறப்பான நிலையை அடைய முடியும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் செப்டம்பர் 30 வரையிலும் என்பது குறுகிய கால அளவாக உள்ளதால் அதனை நீட்டிப்பு செய்து அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செயற்கை நூலிழை ஆடைகளை பொறுத்தவரை, திருப்பூரில் 10 முதல் 20 சதவீதம் வரை செயல்படுத்தி வருகிறோம். தற்பொழுது பருத்தி விலை குறைய வாய்ப்பிருப்பதால் பருத்தி ஆடைகளுக்கான ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும் . இதன் மூலம் போட்டிநாடுகளுடன் போட்டியிட்டு வர்த்தகத்தை அதிகரிக்க உதவும். இந்த விலை குறைப்பின் மூலம் அதிகப்படியான ஆர்டர்களை எங்களால் பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.

    • தொழில் நிலையை பாதுகாக்கும் வகையில் புதிய கொள்கைகள்
    • பல்வேறு காரணங்களால், வெளிநாட்டு வர்த்தக கொள்கை மறுசீரமைப்பு

    திருப்பூர்,நவ.21-

    இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது ஜெர்மனி. இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் 4 சதவீதம் ஆடைகள் ஜெர்மனிக்கு செல்வது குறிப்பிடத்தக்கது. ஜவுளி இறக்குமதி செய்யும் பெரிய நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது ஜெர்மனி.

    ஜெர்மனியில் ஜவுளி வர்த்தகர்களும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏற்றுமதி வர்த்தகர்களும் சந்தித்து வர்த்தக வாய்ப்புகளை பறிமாறிக்கொள்ள ஏதுவாக அடிக்கடி வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சந்திப்பு நிகழ்ச்சிகளும், கண்காட்சிகளும் இந்தாண்டு எழுச்சியுடன் நடத்தப்படுகிறது.

    ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) சார்பில் வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 27, 28ந் தேதிகளில் ஜெர்மனியில் உள்ள பெர்லினில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா - ஜெர்மனி இடையே ஜவுளித்தொழில் வர்த்தகம் சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வர்த்தக அபாரமாக வளர்ச்சி பெற்றுள்ளது.கடந்த 2019 ம் ஆண்டில் 3.09 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்தது. கடந்த 2021ம் ஆண்டில் 3.34 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து ஏ.இ.பி.சி., அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்ததை மேம்படுத்தும் வகையில் ஏ.இ.பி.சி., ஊக்கமளித்து வருகிறது. ஜவுளி ஏற்றுமதியில் முக்கிய நாடாக இருக்கும் ஜெர்மனியுடன் வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் பங்கேற்பதன் வாயிலாக புதிய ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க முடியும். வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0421 2232634 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்தநிலையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிநாட்டு வர்த்தக கொள்கை உருவாக்கப்படுகிறது.

    எதிர்பாராத வகையில் ஏற்படும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வர்த்தக நாடுகளில் உருவாகும் அசாதாரண சூழல், பஞ்சு -நூல் உற்பத்தியில் மாறுபாடு, பணமதிப்பில் உருவாகும் ஏற்றத்தாழ்வு போன்ற நேரத்தில் தொழிலை பாதுகாக்கும் வகையில் தேவையான திருத்தம் செய்யப்படுகிறது.

    கடந்த 2015ல் உருவாக்கிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை 2022 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன்பின் தற்போதைய தொழில் நிலையை பாதுகாக்கும் வகையில் புதிய கொள்கைகள் உருவாக்கப்படுமென தொழில்துறையினர் எதிர்பார்த்தனர்.புதிய அம்சங்களுடன் புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை உருவாக்கப்படும் என தொழில்துறையினர் பெரிதும் எதிர்பார்த்தனர். வெளிநாட்டு வர்த்தகம் 'டாலர்' பணமதிப்பின் அடிப்படையில் நடக்கிறது.

    இந்நடைமுறையை மாற்றம் செய்து இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்ய வழிவகை செய்வது குறித்தும், தொழில்துறை அமைச்சரகம் தீவிரமாக ஆராய்ந்து வந்தது. விரிவாக ஆலோசனை நடத்திய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரகம் வெளிநாட்டு வர்த்தக கொள்கை புதுப்பிக்கும் முடிவை 6 மாதம் ஒத்திவைத்துள்ளது.

    இதுகுறித்து ஏற்றுமதி வர்த்தகர்கள் கூறுகையில், உக்ரைன் போர் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக பல்வேறு நாடுகளில் இயல்பான வர்த்தகம் நடைபெறுவதில்லை. இயல்பு நிலை திரும்ப மேலும் சில நாட்களாகும்.

    ஆஸ்திரேலியா, பிரிட்டன் நாடுகளுடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கும் முயற்சியும், இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன்காரணமாகவே வெளிநாட்டு வர்த்தக கொள்கை மறுசீரமைப்பு மார்ச் 31 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றனர்.

    இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல் கூறுகையில், பல்வேறு காரணங்களால், வெளிநாட்டு வர்த்தக கொள்கை மறுசீரமைப்பு 6 மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதற்கு முன்னதாக இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் (2023 ஏப்ரல்) இருந்து புதிய திருத்தங்களுடன் வெளிநாட்டு வர்த்தக கொள்கை உருவாக்கப்பட வாய்ப்புள்ளது என்றார்.

    • சீனாவில் இருந்து சேலம் வந்த மகுடஞ்சாவடியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    • கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜவுளி வியாபாரியை கண்காணிப்பதற்காக மகுடஞ்சாவடியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.

    மகுடஞ்சாவடி:

    சீனாவில் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் நமது நாட்டிலும் அந்த வகை தொற்று பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவைக்கு விமானத்தில் வந்த சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்த ஜவுளி வியாபாரிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    அவருக்கு இருப்பது புதிய வகை கொரோனாவா? என்பது குறித்து கண்டறிய சளிமாதிரிகள் மரபணு சோதனைக்காக சென்னையில் உள்ள மாநில சுகாதார ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த ஜவுளி வியாபாரி, மகுடஞ்சாவடியில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் நோய் தொற்று அறிகுறி இல்லை. எனினும் அவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

    மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவக்குழுவினர் கொரோனா பாதித்த ஜவுளி வியாபாரியை காலை மற்றும் மாலை இருவேளையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுதவிர, அந்த நபரின் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நோய் தொற்று அறிகுறியுடன் யாரேனும் வசிக்கிறார்களா? என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    எனவே, அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மகுடஞ்சாவடி பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து மகுடஞ்சாவடி பகுதியில் கண்கா ணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது. சுகாதார, மருத்துவ துறை யினர் மகுடஞ்சாவடியில் முகாமிட்டுள்ளனர்.

    • இரணியல் போலீசார் 4 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை
    • ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள பேயன்குழி அடுத்த கல்லுவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் தங்கசுவாமி (வயது 53). இவர் பேயன்குழி சந்திப்பில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 8 மாதங்களுக்கு முன்பு பேயன்குழியைச் சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து ரூ.2900-க்கு ஜவுளிகள் வாங்கியதாக தெரிகிறது. பின்னர் ரூ.200 கொடுத்து விட்டு மீதமுள்ள பணத்தை மறுநாள் ஏ.டி.எம்.மில் எடுத்து தருவதாக கூறிச் சென்றுள்ளனர். ஆனால் கடந்த 8 மாதங்களாக கடனை திருப்பிக் கொடுக்காமல் அலைக்கழித்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று காலை தங்கசுவாமி கடனை திருப்பி கேட்க பேயன்குழி சென்றுள்ளார். அப்போது மோகன்ராஜ் மகன் நிகேஷ், அவரது நண்பர்கள் 3 பேர்கள் என 4 பேர் சேர்ந்து தங்கசுவாமியை தடுத்து நிறுத்தி அவதூறாக பேசி கம்பு மற்றும் கல்லால் தாக்கி உள்ளனர். மேலும் அவரது செல்போனை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் தங்கசுவாமிக்கு கை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயமும், கல்லால் தாக்கியதில் மேல் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.

    தங்கசுவாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தங்கசுவாமி இரணியல் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நிகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் என 4 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடனை திருப்பி கேட்ட ஜவுளிக்கடை உரிமையாளரை 4 பேர் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு
    • நாகர்கோவில் நகரில் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    நாகர்கோவில், நவ.11-

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படு கிறது. இதையடுத்து புத்தா டைகள் எடுப்பதற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராள மான பொதுமக்கள் நாகர்கோவிலில் உள்ள கடை வீதிகளில் குவிந்திருந்தனர்.

    இதனால் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் கூட்டம் இன்று காலை முதலே அலைமோதியது. மீனாட்சிபுரம் கலெக்டர் அலுவலகம், வடசேரி, செட்டிகுளம் உள்பட நாகர்கோவில் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளிலும் இன்று கூட்டம் நிரம்பி வழிந்தது. பொதுமக்கள் குடும்பத் தோடு வந்து புத்தாடைகளை எடுத்து மகிழ்ந்தனர். நாகர்கோவில் நகரில் கூட்டம் அலைமோதியதை யடுத்து நாகர்கோவில் நகரில் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    வடசேரி, வேப்பமூடு, செட்டிகுளம் பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடு பட்டனர். ஜவுளி கடைகளில் மட்டுமின்றி பட்டாசு கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. தீபாவளி பண்டிகையை யொட்டி விற்பனைக்கு வந்திருந்த விதவிதமான பட்டாசுகளை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர். பேக்கரிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலை யங்களிலும் கூட்டம் அதிக மாக இருந்தது. இதையடுத்து கடை வீதிகளிலும் பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலை பயன்ப டுத்தி கொள்ளையர்கள் கை வரிசை காட்டக்கூடும் என்ப தால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கு மாறு போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தினார்கள்.

    கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம், குழித்துறை, பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும் இன்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசார் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    ஆங்காங்கே வாகன சோதனையும் நடத்தப் பட்டது. ஹெல்மெட் அணி யாமல் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். வடசேரி பஸ் நிலையத்தில் இன்று காலையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தீபாவளி பண்டிகையை யொட்டி வெளியூர்களி லிருந்து சொந்த ஊருக்கு பஸ்களில் வந்த பொது மக்கள் அதிகமானோர் அதிகாலையில் பஸ்களை விட்டு இறங்கி சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

    இதனால் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. இதேபோல் வெளியூர்களில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், பெங்களூர் எக்ஸ்பிரஸ் உட்பட அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    • தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
    • ஜவுளி சந்தையில் இன்று சில்லரை வியாபாரம் 35 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், வெளிமாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ஜவுளி ரகங்களை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.

    சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    பின்னர் படிப்படியாக அதிலிருந்து மீண்டு வந்தபோது நூல் விலை உயர்வு காரணமாக கடந்த சில வாரங்களாக ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடந்து வந்தது.

    இந்நிலையில் தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி கடந்த வாரம் ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. அதேபோல் இந்த வாரமும் ஜவுளி சந்தையில் சில்லரை, மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

    பள்ளிகள் கோடை விடுமுறை தொடர்ந்து நேற்று திறக்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளி சீருடைகள் வாங்க பெற்றோர்கள் திரண்டனர். ஜவுளி சந்தையில் பள்ளி சீருடை களுக்கு கிராக்கி நிலவுகிறது.

    இதேப்போல் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்த நாட்களில் வருவதால் ஜவுளி சந்தையில் இன்று சில்லரை வியாபாரம் 35 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்ததால் மொத்த விற்பனை 25 சதவீதம் நடந்ததாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    • ஜவுளி கடையில் குடும்பத்துடன் வந்து தங்களுக்கு பிடித்த துணிகளை தேர்வு செய்தனர்.
    • வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றன.

    சேலம்:

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தித்திக்கும் தீபாவளி பண்டிகையை புத்தாடை அணிந்தும், இனிப்பு சாப்பிட்டும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இன்னும் 2 நாட்களே உள்ளதால் மக்கள் ஜவுளி, இனிப்பு, பட்டாசுகள் வாங்க சேலம் நகர கடை வீதிகளில் குவிந்துள்ளனர்.

    குறிப்பாக சேலம் சின்னக் கடை வீதி, பெரிய கடை வீதி, அக்ரஹாரம் 4 ரோடு, புதிய பஸ் நிலையம் உள்பட மாநகரின் பல பகுதிகளில் இன்று காலை முதலே அதிக அளவில் மக்கள் திரண்டு இருந்தனர்.

    தீபாவளியை ஒட்டி ஜவுளி கடைகளில் புத்தம் புது டிசைன்களில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏராளமான ஜவுளிகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. ஜவுளி கடையில் குடும்பத்துடன் வந்து தங்களுக்கு பிடித்த துணி களை தேர்வு செய்தனர்.

    மேலும் சேலம் கடை வீதி மற்றும் புதிய பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள நகை கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. இதேபோல், பண்டிகைக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க செவ்வாய்ப்பேட்டை, கடை வீதியிலும் அதிக அளவில் குவிந்து இருந்தனர்.

    சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் கார் மற்றும் பஸ்களில் பொதுமக்கள் வந்திருந்ததால் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் சேலம் 4 ரோடு கடைவீதி உள்பட பல பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றன.போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தி வருகின்றனர். மேலும் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு உள்ளனர். 10 இடங்களில் கோபுரம் அமைத்தும் ஒளிப்பெருக்கி மூலம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இது ஒரு புறம் இருக்க மறுபுறம் சேலம் மாவட்டத்தில் சேலம், ஆத்தூர், வாழப்பாடி மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர் உள்பட பல பகுதிகளில் பட்டாசு கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    குழந்தைகளுக்கு, கம்பி மத்தாப்பூ, தரைசக்கரம் உள்ளிட்டவை வாங்க பெற்றோர்கள் அதிக அளவில் திரளுகின்றனர். அதுபோல் வாலிபர்கள், பெரிய பட்டாசுகளை வாங்குகின்றனர்.குறிப்பாக வானில் வெடித்து சிதறும் வர்ண ஜாலம் பட்டாசுகள் அதிக அளவில் வாங்குகின்றனர். இதே போல மளிகை கடைகள், நகை கடைகளிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    • தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் கடைகளில் மக்கள் கூட்டம் அலைேமாதி வருகிறது.
    • ஒரே இடத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான கடைகளில், மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனை நடக்கிறது.

    திருப்பூர் :

    தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் திருப்பூர் குமரன் ரோடு, பழைய பஸ் நிலையம், காதர் பேட்டை உட்பட திருப்பூரின் பிரதான ரோடுகளில் தற்காலிக துணிக்கடை, பலகார கடைகள், நடைபாதை கடை, பர்னிச்சர் உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் அலைேமாதி வருகிறது.இதுபோன்ற சூழல்களை பயன்படுத்தி, கூட்ட நெரிசலில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் திருடர்கள் கைவரிசை காட்ட முயற்சி செய்வர். இதை தடுக்க போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.மக்கள் கூடும் இடங்களில், வழிப்பறி திருடர்கள், ஜேப்படி ஆசாமிகளை பிடிக்க தனிப்படை போலீசார் 'மப்டி'யில் ரோந்து சென்று வருகின்றனர்.

    தீபாவளியையொட்டி, என்னதான் போலீசார் பாதுகாப்பு அளித்தாலும் கூட்டத்தை பயன்படுத்தி, கடை உரிமையாளரை திசை திருப்பி பொருட்களை திருடிச் செல்வது, வாங்கிய பொருளுக்கு பணத்தை கொடுக்காமல் கொடுத்தேன் என்றும், சில்லறை வாங்குவது போன்று நடித்தும் நூதன மோசடியில் ஈடுபடும் கும்பல் மாநகருக்குள் வலம் வருகிறது.வியாபாரிகள் உஷாராக இருந்து பொருட்கள், பணம் போன்றவற்றை இழக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும். இதேபோல், பொதுமக்களும், விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.சந்தேகப்படும் நபர்கள் இருந்தால், உடனே அருகே உள்ள போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.குறு, சிறு பனியன் நிறுவனங்களும் திருப்பூரில் ஏராளமாக உள்ளன. காதர்பேட்டையில் ஆண்களுக்கான பர்முடாஸ், இரவு நேர பேன்ட், டி-சர்ட், குளிர்கால ஸ்வெட்டர், பெண்களுக்கான வீட்டு உபயோக ஆடைகள், உள்ளாடைகள், பனியன் ஆடை, உள்ளாடைகள், ஆயத்த ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் என ஏ-டு இசட் ரகங்கள் ஆண்டு முழுவதும் விற்கப்படுகிறது.ஒரே இடத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான கடைகளில், மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனை நடக்கிறது. வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது.கொரோனா தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள் ஏராளம். ஊரடங்கு முழுமையாக நீங்கிய பின் வர உள்ள இந்த தீபாவளியையொட்டி காதர்பேட்டையில் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது.

    இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்,ஆண்டு முழுவதும் காதர் பேட்டையில் குழந்தைகள் ஆடைகள், டி-சர்ட், பேன்ட், பர்முடாஸ் விற்பனை நடக்கும். பெங்களூருவில் இருந்து வரும் சில்லரை வியாபாரிகள் வாங்கி சென்றனர். ஆந்திரா, தெலுங்கானா வியாபாரிகளும் வாங்கி சென்றனர். தற்போது பல மாவட்டங்களிலும், நெடுஞ்சாலை ரோடுகளிலும் ஆண்டு முழுவதும் கடை அமைக்கும் வியாபாரிகளும் வாங்கி செல்கின்றனர்.'ஆன்லைன்' வர்த்தகம் வந்த பிறகு காதர்பேட்டையில் வியாபாரம் மந்தமாகிவிட்டது. பொதுமக்கள், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து தேவையான ஆடையை வாங்கிவிடுகின்றனர். இதனால் மொத்த வியாபாரமும் பாதிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக கடை அமைப்போர் மொத்தமாக ஆடைகளை வாங்கி செல்கின்றனர்.திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் சில்லரை விற்பனை கடைகள் அமைவதால், எங்களுக்கு மொத்த விற்பனை நடக்கிறது. கொரோனா தொற்றால், வெளிமாநிலங்களில் இருந்து வரும் விற்பனை கிடைப்பதில்லை. ஜனவரி மாதத்திற்கு பிறகு வியாபாரம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.வரும் 21, 22, 23 ந் தேதி ஆகிய 3 நாட்களில் வியாபாரம் சூடுபிடிக்கும். அதற்காக பெண்கள், குழந்தைகளுக்கான புதுரக ஆடைகளுடன் கடை அமைத்துள்ளோம் என்றார்.

    தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் திருப்பூர் மாவட்டம் திருப்பூர், பல்லடம் ,தாராபுரம், காங்கயம், உடுமலை உள்பட பல்வேறு ஊர்களில் கடை வீதிகளில் உள்ள ஜவுளி, நகை, மளிகை, பட்டாசு, இனிப்பு கடை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்க ஜவுளி, நகை, மளிகை கடைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் குவிகின்றனர். இதனால் கடைவீதிகள் அனைத்தும் களை கட்டியுள்ளன.

    • பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது.
    • பஸ் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையானது கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. காரணம்பேட்டை பகுதியில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன இதனால் காரணம்பேட்டை நால் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்டு. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு அப்போது இருந்த தமிழக அரசு புதிதாக பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு கடந்த 2014 -15ம் ஆண்டில், ரூபாய் 1.78 கோடி செலவில், புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு முதல்வர் ஜெயலலிதா வீடியோ காணொளி காட்சி மூலம் 16.6.2015ல் திறந்து வைத்தார்.

    இதையடுத்துஅந்த வளாகத்தில் இரண்டு சக்கர வாகனநிறுத்தம், வணிக வளாகம்,சுகாதார வளாகம் ஆகியவை சுமார் ரூ.1 கோடியில் கட்டப்பட்டது ஆனால் இந்த புதிய பஸ் நிலையம் இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை .காரணம்பேட்டை நால்ரோட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருப்பதாலும், ஊருக்கு ஒதுக்குப்புற பகுதியில் இருப்பதாலும் இந்த பஸ் நிலையத்தை பொதுமக்கள் பயன்படுத்தவில்லை, போக்குவரத்து துறையினர் அரசு பஸ்கள் உள்ளே சென்று வர, உத்தரவிட்டும்,பயணிகள் யாரும் இல்லாததால் அரசு பஸ்கள் தொடரந்து அங்கு செல்வதில்லை தனியார் பஸ்கள் கோவையில் ஓய்வு எடுத்துவிட்டு புறப்பட்ட அரைமணிநேரத்தில் காரணம்பேட்டை வந்துவிடுவதால் அவர்களும் இந்த பஸ் நிலையதித்திற்குள் செல்லாமல் காரணம்பேட்டை நால்ரோட்டில் பயணிகளை இறக்கிவிட்டு சென்றுவிடுகின்றனர்.

    இதனால் இந்த பஸ் நிலையம் கடந்த 8 ஆண்டுகளாக காட்சிப்பொருளாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து கடந்த 2020ல் கோடாங்கிபாளையம் ஊராட்சிமன்றத்தின் முயற்சியால், இந்த பஸ் நிலையம் காய்கறி சந்தையாக்கப்பட்டது. பஸ் நிலையம் காய்கறி சந்தை அமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டதும், ஏராளமான விவசாயிகள்,வந்து காய்கறி கடைகள் அமைத்தனர்*.தனால் கோடங்கிபாளையம், இச்சிபட்டி, பருவாய்,கரடிவாவி,சுக்கம்பாளையம், செம்மிபாளையம், காடாம்பாடி,காங்கேயம்பாளையம் மற்றும் சூலூர் விமானப்படைதள குடியிருப்பு பகுதி உள்ளடக்கிய சுமார் 25 ஆயிரம் மக்கள் காய்கறிகள் வாங்கி பயன் அடைந்தனர்.

    எனவே காரணம் பேட்டையில் பயன்படாமல் உள்ள பஸ் நிலையத்தை, விவசாயிகள், பொதுமக்கள், பயன்பெறும் வகையில் காய்கறி சந்தையாக மாற்ற வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து காரணம்பேட்டையைச் சேர்ந்த பழனிசாமி என்ற விவசாயி கூறியதாவது:- காரணம் பேட்டை பஸ்நிலையம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதால், பொதுமக்கள் செல்வதற்கு தயங்குகின்றனர்.மேலும் பஸ் நிலையம் திறக்கப்பட்ட புதிதில் டவுன் பஸ்கள் மட்டுமே வந்து சென்றன. வெளியூர் பஸ்கள் காரணம் பேட்டையில் உள்ள நால்ரோடு பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி சென்றனர். இதனாலும் பஸ் நிலையம் பயன்படாமல் போனது. இதன் பிறகு சிங்காநல்லூர் பஸ் நிலையம் துவக்கப்பட்டதால், மதுரை, திருச்சி, உள்ளிட்ட பஸ்கள் சிங்காநல்லூர் பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டன. வெளியூரிலிருந்து வந்து ஓய்வெடுத்த பின் மதுரை திருச்சிக்கு புறப்படும் பஸ்கள், சிங்காநல்லூரில் இருந்து புறப்பட்ட அரைமணி நேரத்தில் காரணம்பேட்டைக்கு பஸ் வந்துவிடுகிறது. இதனால், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் ஓய்வெடுக்கவோ, டீ சாப்பிடவோ, விரும்புவதில்லை மேலும் தற்பொழுது வாகனப் போக்குவரத்து அதிகரித்ததால், போக்குவரத்து நெரிசலால் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய வேண்டிய நிலை ஓட்டுனர்களுக்கு உள்ளது. இதனாலும் காரணம்பேட்டை பஸ் நிலையத்திற்குள் பஸ் வருவதில்லை, இந்த நிலையில் கடந்த "கொரோனா" காலத்தில், பஸ் நிலையத்தை காய்கறி சந்தையாக மாற்றினார்கள். இதனால் அருகே உள்ள கிராமங்களிலிருந்து காய்கறிகள், பழங்களைக் கொண்டுவந்து விவசாயிகள் விற்பனை செய்தனர். சுற்றுப்புறத்தை சேர்ந்த, கோடங்கிபாளையம், கரடிவாவி, பருவாய், இச்சிப்பட்டி, செம்மிபாளையம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் காய்கறிகளை வாங்கி பயனடைந்தனர். விவசாயிகளுக்கும் போக்குவரத்து அலைச்சல் இன்றி விளை பொருட்களை விற்பனை செய்ய வழி கிடைத்ததால், மகிழ்ச்சி அடைந்தனர். பொதுமக்களுக்கும் புத்தம் புதிய காய்கறிகள் விலை மலிவாக கிடைத்ததால் அவர்களும் பயன் அடைந்தனர்.

    எனவே பயன்பாடு இல்லாமல் இருக்கும் காரணம்பேட்டை பஸ் நிலையத்தை, விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காய்கறி சந்தை ஆக மாற்ற வேண்டும். மேலும் இதே பஸ்நிலையத்தில் கால்நடை சந்தையும் செயல்பட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    காரணம்பேட்டை பஸ் நிலையத்தை விசைத்தறி ஜவுளி சந்தையாக மாற்ற வேண்டுமென விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், திருப்பூர்,கோவை மாவட்டங்களில் சுமார் 2லட்சம் விசைத்தறிகள்,20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கிவருகின்றன. இந்த நிலையில், பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் ஜவுளி சந்தை அமைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.ஜவுளி சந்தை அமைப்பதற்கான இடத்தை விசைத்தறியாளர்கள் தங்களது பங்களிப்பு மூலம் வாங்க வேண்டும். ஆனால் இப்போதுள்ள தொழில் நிலையில், இடத்தை வாங்குவது விசைத்தறியாளர்களால் முடியாது. இதுதவிர வீட்டு மனை இடங்கள் விலை உயர்ந்துள்ளதால், விசைத்தறியாளர்கள் இடத்தை வாங்குவது சிரமமான காரியம்.

    ஜவுளி சந்தை உருவாக்க அரசே இடத்தை வழங்கி உதவ வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கும் காரணம்பேட்டை பஸ் நிலையத்தை, ஜவுளிச்சந்தையாக மாற்ற வேண்டும்.காரணம்பேட்டை வளர்ந்து வரும் பகுதி என்பதால், அங்கு ஜவுளிச்சந்தை அமைந்தால்,விசைத்தறி தொழிலும் வளர்ச்சி பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி.பழனிச்சாமி கூறியதாவது:-பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. ஊராட்சி நிர்வாகம் தரப்பில், சுகாதார வளாகம், வாகன நிறுத்துமிடம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து துறை இணைந்து, பஸ் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், விரைவில்,பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தேசிய ஆயத்த ஆடை கண்காட்சி வருகிற ஆகஸ்டு 19-ந்தேதி துவங்கி 21ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • ஜவுளி சார்ந்த துணை பொருட்களை 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் காட்சிப்படுத்துகின்றனர்.

    திருப்பூர் :

    இந்திய பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வாய்ப்புகளை பெற்றுத்தர இந்தியா நிட்பேர் அசோசியேஷன் மற்றும் ஏ.இ.பி.சி., இணைந்து திருப்பூரில் ஆண்டுதோறும் ஐ.கே.எப்., கண்காட்சியை நடத்தி வருகின்றன.

    முதல்முறையாக உள்நாட்டு சந்தைக்காக ஆடை தயாரிக்கும் நிறுவனங்களுக்காக தேசிய ஆடை வர்த்தக கண்காட்சி அவிநாசி பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் ஆகஸ்டு 19-ந்தேதி தொடங்க உள்ளது.இதுகுறித்து இந்தியா நிட்பேர் அசோசியேஷன் தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    தேசிய ஆயத்த ஆடை கண்காட்சி வருகிற ஆகஸ்டு 19-ந்தேதி துவங்கி 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆடை உற்பத்தியாளர்கள், அனைத்துவகை ஆயத்த ஆடை ரகங்கள், துணி, நூல், நார், காதி, பட்டு, ஜவுளி சார்ந்த துணை பொருட்களை 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் காட்சிப்படுத்துகின்றனர்.

    தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப், மேற்குவங்கம், மகாராஷ்டிரா,டெல்லி என நாடு முழுவதும் உள்ள ஆடை வர்த்தகர்கள் கண்காட்சியை பார்வையிட்டு வர்த்தக விசாரணை நடத்த உள்ளனர்.வணிக முகவர்கள், சில்லரை மற்றும் மொத்த விற்பனையாளர்கள் கண்காட்சியை பார்வையிடலாம்.

    கண்காட்சியில் அரங்குகள் அமைப்பதன்மூலம் ஆடை உற்பத்தி துறையினர் தங்கள் வர்த்தகத்தை பெருக்கி கொள்ள முடியும். 98941 24744 என்கிற எண்ணில் தொடர்புகொண்டு அரங்குகளை புக்கிங் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
    • சில்லரை வியாபாரம் 30 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், வெளிமாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ஜவுளி ரகங்களை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.

    கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் நூல் விலை உயர்வு காரணமாக கடந்த சில வாரங்களாக ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடந்து வந்தது. இந்நிலையில் தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி கடந்த வாரம் ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

    அதேபோல் இந்த வாரமும் ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்ப ட்டுள்ளன. இதனால் பள்ளி சீருடைகள் வாங்க பெற்றோர்கள் திரண்டனர். ஜவுளி சந்தையில் பள்ளி சீருடைகளுக்கு கிராக்கி நிலவுகிறது.

    இதேப்போல லஞ்ச் டவல், பனியன் ஜட்டிகள் விற்பனையும் சிறப்பாக இருந்தது. இன்று சில்லரை விற்பனை 30 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதேநேரம் மொத்த வியாபாரம் சுமாராகவே நடந்தது.

    இப்போதும் ஆந்திரா, கர்நாடகா மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்து ஜவுளி ரகங்களை அள்ளி செல்வார்கள். ஆனால் இன்று ஆந்திரா, கர்நாடகா வியாபாரிகள் வரவில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 10 சதவீதம் அளவு கூட நடைபெறவில்லை. ஒரு சில கேரளா வியாபாரிகள் மட்டும் வந்திருந்தனர். ஆனி மாதம் தொடங்கி விட்டதால் அதிக அளவு முகூர்த்தம் இல்லை. இதனால் ஜவுளி வியாபாரம் சுமாராகவே நடந்தது.

    ×