search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெர்மனியில் பிப்ரவரி மாதம் நடக்கிறது.ஜவுளி-ஏற்றுமதி வர்த்தகர்கள் நிகழ்ச்சி
    X

    கோப்புபடம்

    ஜெர்மனியில் பிப்ரவரி மாதம் நடக்கிறது.ஜவுளி-ஏற்றுமதி வர்த்தகர்கள் நிகழ்ச்சி

    • தொழில் நிலையை பாதுகாக்கும் வகையில் புதிய கொள்கைகள்
    • பல்வேறு காரணங்களால், வெளிநாட்டு வர்த்தக கொள்கை மறுசீரமைப்பு

    திருப்பூர்,நவ.21-

    இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது ஜெர்மனி. இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் 4 சதவீதம் ஆடைகள் ஜெர்மனிக்கு செல்வது குறிப்பிடத்தக்கது. ஜவுளி இறக்குமதி செய்யும் பெரிய நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது ஜெர்மனி.

    ஜெர்மனியில் ஜவுளி வர்த்தகர்களும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏற்றுமதி வர்த்தகர்களும் சந்தித்து வர்த்தக வாய்ப்புகளை பறிமாறிக்கொள்ள ஏதுவாக அடிக்கடி வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சந்திப்பு நிகழ்ச்சிகளும், கண்காட்சிகளும் இந்தாண்டு எழுச்சியுடன் நடத்தப்படுகிறது.

    ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) சார்பில் வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 27, 28ந் தேதிகளில் ஜெர்மனியில் உள்ள பெர்லினில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா - ஜெர்மனி இடையே ஜவுளித்தொழில் வர்த்தகம் சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வர்த்தக அபாரமாக வளர்ச்சி பெற்றுள்ளது.கடந்த 2019 ம் ஆண்டில் 3.09 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்தது. கடந்த 2021ம் ஆண்டில் 3.34 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து ஏ.இ.பி.சி., அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்ததை மேம்படுத்தும் வகையில் ஏ.இ.பி.சி., ஊக்கமளித்து வருகிறது. ஜவுளி ஏற்றுமதியில் முக்கிய நாடாக இருக்கும் ஜெர்மனியுடன் வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் பங்கேற்பதன் வாயிலாக புதிய ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க முடியும். வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0421 2232634 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்தநிலையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிநாட்டு வர்த்தக கொள்கை உருவாக்கப்படுகிறது.

    எதிர்பாராத வகையில் ஏற்படும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வர்த்தக நாடுகளில் உருவாகும் அசாதாரண சூழல், பஞ்சு -நூல் உற்பத்தியில் மாறுபாடு, பணமதிப்பில் உருவாகும் ஏற்றத்தாழ்வு போன்ற நேரத்தில் தொழிலை பாதுகாக்கும் வகையில் தேவையான திருத்தம் செய்யப்படுகிறது.

    கடந்த 2015ல் உருவாக்கிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை 2022 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன்பின் தற்போதைய தொழில் நிலையை பாதுகாக்கும் வகையில் புதிய கொள்கைகள் உருவாக்கப்படுமென தொழில்துறையினர் எதிர்பார்த்தனர்.புதிய அம்சங்களுடன் புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை உருவாக்கப்படும் என தொழில்துறையினர் பெரிதும் எதிர்பார்த்தனர். வெளிநாட்டு வர்த்தகம் 'டாலர்' பணமதிப்பின் அடிப்படையில் நடக்கிறது.

    இந்நடைமுறையை மாற்றம் செய்து இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்ய வழிவகை செய்வது குறித்தும், தொழில்துறை அமைச்சரகம் தீவிரமாக ஆராய்ந்து வந்தது. விரிவாக ஆலோசனை நடத்திய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரகம் வெளிநாட்டு வர்த்தக கொள்கை புதுப்பிக்கும் முடிவை 6 மாதம் ஒத்திவைத்துள்ளது.

    இதுகுறித்து ஏற்றுமதி வர்த்தகர்கள் கூறுகையில், உக்ரைன் போர் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக பல்வேறு நாடுகளில் இயல்பான வர்த்தகம் நடைபெறுவதில்லை. இயல்பு நிலை திரும்ப மேலும் சில நாட்களாகும்.

    ஆஸ்திரேலியா, பிரிட்டன் நாடுகளுடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கும் முயற்சியும், இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன்காரணமாகவே வெளிநாட்டு வர்த்தக கொள்கை மறுசீரமைப்பு மார்ச் 31 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றனர்.

    இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல் கூறுகையில், பல்வேறு காரணங்களால், வெளிநாட்டு வர்த்தக கொள்கை மறுசீரமைப்பு 6 மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதற்கு முன்னதாக இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் (2023 ஏப்ரல்) இருந்து புதிய திருத்தங்களுடன் வெளிநாட்டு வர்த்தக கொள்கை உருவாக்கப்பட வாய்ப்புள்ளது என்றார்.

    Next Story
    ×