search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2000 Rupee Note"

    • சினிமா தியேட்டர்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படவில்லை.
    • கடைகள், வர்த்தக நிறுவனங்களிலும் இந்த நோட்டுகளை வாங்குவதை நிறுத்திவிட்டனர்.

    சென்னை:

    கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. மக்களிடம் குறைவான அளவே புழக்கத்தில் இருந்த இந்த நோட்டுகள் நாளை மறுநாளுக்கு(செப்டம்பர் 30-ந்தேதி) பிறகு செல்லாது என்று ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவித்தது.

    இதனை தொடர்ந்து வங்கிகள் மூலமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் நடவடிக்கை தொடங்கியது. கிட்டத்தட்ட 5 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டும், பலர் இன்னும் வங்கிகளில் இந்த நோட்டுகளை மாற்றியும், வங்கி கணக்கில் டெபாசிட் செய்தும் வருகின்றனர்.

    இந்த சூழலில் காலக்கெடு முடிவதால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் பஸ்களில் கொடுத்தால் வாங்க வேண்டாம் என்று கண்டக்டர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் பயணிகளிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றால், அதற்கு கண்டக்டர்களே பொறுப்பு என்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்தது. இதேபோல் சினிமா தியேட்டர்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படவில்லை.

    கடைகள், வர்த்தக நிறுவனங்களிலும் இந்த நோட்டுகளை வாங்குவதை நிறுத்திவிட்டனர். இதே போல பெட்ரோல் பங்குகளிலும் இன்று முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.

    தமிழகத்தில் மொத்தம் 5,900 பெட்ரோல் பங்குகள் உள்ளன. இந்த பங்குகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெறப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான காலக்கெடு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில் காலக்கெடு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது.
    • காணிக்கையில் பக்தர்கள் வழங்கிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல்:

    நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் வருகிற 30-ந் தேதியுடன் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நோட்டுகளை கையிருப்பில் வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கி கணக்கில் செலுத்தி மாற்றிக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வாங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் சுமோட்டோ உள்ளிட்ட தனியார் உணவு நிறுவனங்களும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து வருகின்றன.

    கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணத்தையும் உடனடியாக எண்ணி அதில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன்படி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் மொத்தம் ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது.

    ரொக்கப்பணமாக ரூ.5 கோடியே 9 லட்சத்து 13 ஆயிரத்து 830ம், தங்கம் 1419 கிராமும், வெள்ளி 18,185 கிராமும், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 1366-ம் கிடைத்துள்ளன. இது தவிர பட்டு, பரிவட்டம், நவதானியங்கள், வெளிநாட்டு கடிகாரம் உள்ளிட்ட பொருட்களும் காணிக்கையாக கிடைத்தன.

    காணிக்கையில் பக்தர்கள் வழங்கிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். இதே போல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் திருவிழாக்கள் மற்றும் கும்பாபிஷேகத்திற்கு முன்பே உண்டியல்கள் திறந்து எண்ணப்படும். ஆனால் தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை இன்னும் 2 நாட்களில் மாற்றியாக வேண்டும் என்பதால் அங்குள்ள உண்டியல்களையும் திறந்து எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கிராமக் கோவில்கள் மற்றும் சமுதாயத்துக்கு பாத்தியப்படட குலதெய்வக் கோவில்களிலும் உண்டியல்கள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    • வழக்கு விசாரணை மே மாதம் 30-ந்தேதி முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக கடந்த 19-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகள் மூலம் மாற்றியும், டெபாசிட் செய்யப்பட்டும் வருகிறது. இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ரஜ்னீஷ் பாஸ்கர் குப்தா என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இல்லை என்றும், இதுதொடர்பாக மத்திய அரசு தான் முடிவு எடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    1934 ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(2) பிரிவின்படி மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சதிஷ் சந்திரா சர்மா மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மனுவுக்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி, 'இது பொருளாதார கொள்கை சார்ந்த விஷயம். புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்ப பெறுவதாக அறிவித்துள் ளோம் என்று தெரிவித்தது. இந்த வழக்கு விசாரணை மே மாதம் 30-ந்தேதி முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தீர்ப்பு வழங்கப்பட்டது. ரூ.2 ஆயிரம் நோட்டு திரும்ப பெறும் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு எதிரான பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    • நஜீம் தரப்பினர் ரூ 1 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை சூட்கேசில் வைத்துக் கொடுத்தனர்.
    • 90 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருபவர் அணில் குமார்.

    மேற்கு கோதாவரி மாவட்டம் பீமா வரத்தை சேர்ந்த நஜிம், சக்கரபாணி இருவரும் வங்கி மேலாளர் அணில் குமாரை சந்தித்தனர். தாங்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ. 1 கோடி தருகிறோம் பதிலுக்கு 500 ரூபாய் நோட்டுகள் ரூ.90 லட்சம் கொடுத்தால் போதும் என ஆசை வார்த்தை கூறினர்.

    இதையடுத்து அணில் குமார் தனது நண்பர் அணில் என்பவருடன் சேர்ந்து ரூ.90 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை ஒரு பெட்டியில் வைத்து எடுத்துக்கொண்டு பார்வதிபுரம் வந்தனர்.

    அப்போது அங்கு வந்த நஜீம், சக்கரபாணியிடம் ரூ.90 லட்சத்தை கொடுத்தனர். பதிலுக்கு நஜீம் தரப்பினர் ரூ 1 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை சூட்கேசில் வைத்துக் கொடுத்தனர்.

    பின்னர் வீட்டிற்கு வந்து சூட்கேஸை திறந்து பார்த்தபோது ரூபாய் நோட்டின் மேல் பகுதியில் ஒரிஜினல் 2000 ரூபாய் நோட்டுகளும் அடியில் கள்ள நோட்டுகளும் வைத்து ஏமாற்றியது தெரிய வந்தது.

    இதுகுறித்து அணில் குமார் பார்வதிபுரம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து நஜீம் சக்கரபாணி ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 90 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • ரூ.500 நோட்டுகளை கொடுத்தால் இரட்டிப்பாக ரூ.2000 நோட்டுகளை தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
    • காஞ்சிபுரம் அருகே கார் சென்றபோது ஞானப்பிரகாசத்தை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்னை நோக்கி சென்றுவிட்டனர்.

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்தவர் ஞானபிரகாஷ் (வயது 26). இவர் மின்வாரிய ஒப்பந்ததாரராக வேலை செய்து வருகிறார்.

    இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் முகமது ஜமீல் (28). ஐடி கம்பெனி ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் தனித்தனியாக இவர்களின் செல்போனை தொடர்பு கொண்டார்.

    அவர் பெங்களூருவை சேர்ந்த குமார் என்றும் ரூ.500 நோட்டுகளை கொடுத்தால் இரட்டிப்பாக ரூ.2000 நோட்டுகளை தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.

    இதனை உண்மை என நம்பிய இருவரும் தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணம் வீட்டில் இருந்த நகைகள் அடகு வைத்தும் மற்றும் நண்பர்கள் உறவினர்களிடமிருந்து கடனாக பணத்தை பெற்றனர்.

    ஞானபிரகாஷ் தான் வைத்திருந்த ரூ.25 லட்சம் பணத்துடன் கடந்த 4-ந் தேதி வேலூர் சேண்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த குமார் ஞானபிரகாஷிடம் இருந்த பணத்தை வாங்கி பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது காரில் இருந்து போலீஸ் உடையில் இறங்கிய நபர் உட்பட 4 பேர் நாங்கள் அனைவரும் போலீஸ்காரர்கள்.

    உங்களிடம் உள்ளது ஹவாலா பணமா என சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி ஞானபிரகாசை காரில் ஏற்றுக்கொண்டு காஞ்சிபுரத்திற்கு சென்றனர். காஞ்சிபுரம் அருகே கார் சென்றபோது ஞானப்பிரகாசத்தை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்னை நோக்கி சென்றுவிட்டனர்.

    இதேபோல் முகமது ஜமீல் அன்று மாலையே வேலூர் மாங்காய் மண்டி அருகே ரு.15 லட்சத்துடன் காத்திருந்தார். அப்போது காரில் போலீஸ் உடையில் வந்த நபர்கள் முகமது ஜமீனிடமிருந்த பணத்தை பறித்துக் கொண்டு வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறிவிட்டு காரில் சென்றனர்.

    பின்னர் முகமது ஜமீல் வடக்கு போலீஸ் நிலையம் வந்து விசாரித்த போது பணத்தை பறித்துச் சென்றவர்கள் போலி போலீஸ் என தெரியவந்தது.

    இதுகுறித்து ஞானபிரகாஷ் மற்றும் முகமது ஜமீல் ஆகியோர் வடக்கு போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரூ.40 லட்சம் மோசடி செய்தது பெங்களூருவை சேர்ந்த டேனியல், அருண்குமார், அம்ரோஸ், கிருஷ்ணகிரியை சேர்ந்த கண்ணன் என தெரியவந்தது. அவர்களை பெங்களூரில் மடக்கி பிடித்தனர்.

    பிடிபட்டவர்களில் டேனியல் என்பவர் போலீஸ் சீருடையில் வந்து மிரட்டியது தெரிய வந்தது

    போலீசார் 4 பேரையும் நேற்று கைது செய்தனர். விசாரணை நடத்தியதில் பொன்னையை சேர்ந்த ஒருவர் பணம் பறிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டது தெரியவந்தது.

    மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ 2.30 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.

    • 2000 ரூபாய் நோட்டுகளின் பரிவர்த்தனைகள் வங்கிகளில் குறிப்பிடத்தக்க எழுச்சியை காண முடிகிறது.
    • டெல்லி, அகமதாபாத், கோவை ஆகிய நகரங்களில் ரூ.2000 நோட்டுக்கள் அதிகரித்துள்ளதாக ஐ.ஓ.பி. வட்டாரங்கள் தெரிவித்தன.

    சென்னை:

    2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மாதம் அறிவித்தது. கடந்த 23-ந் தேதி முதல் இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணி தொடங்கியது. செப்டம்பர் 30-ந் தேதி வரை இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    தொடக்கத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணி குறைவாகவே இருந்தது. தற்போது அதிக அளவில் டெபாசிட் செய்யப்படுகின்றன. 2000 ரூபாய் நோட்டுகளின் பரிவர்த்தனைகள் வங்கிகளில் குறிப்பிடத்தக்க எழுச்சியை காண முடிகிறது.

    வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிக அளவில் பங்களிப்பு இருந்தாலும் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும் ரூ.2000 நோட்டுக்களை மாற்றி வருகின்றனர்.

    கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 2000 ரூபாய் நோட்டு பரிவர்தனைகள் அதிகரித்துள்ளதாக தனியார் வங்கி ஒன்று தெரிவித்துள்ளது.

    மே 23 முதல் ஜூன் 5 வரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் டெபாசிட் மற்றும் பரிமாற்றம் மூலம் ரூ.1,950 கோடி மதிப்பிலான 97 லட்சம் யூனிட் 2,000 நோட்டுகளை பரிவர்த்தனை செய்துள்ளது.

    இதில் சுமார் 78 லட்சம் பிங்க் நோட்டுகள் ரூ.1,600 கோடிக்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. டெல்லி, அகமதாபாத், கோவை ஆகிய நகரங்களில் ரூ.2000 நோட்டுக்கள் அதிகரித்துள்ளதாக ஐ.ஓ.பி. வட்டாரங்கள் தெரிவித்தன.

    • டெல்லியில் ஒரு இறைச்சிக்கடை வியாபாரி தனது கடை முன்பு வைத்துள்ள ஒரு அறிவிப்பு டுவிட்டரில் பரவி வருகிறது.
    • ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுங்கள், சுத்தமான இறைச்சிக் கடையான சர்தாரில் இருந்து ரூ.2,100-க்கு இறைச்சியை பெற்று செல்லுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை பற்றி ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் டெல்லியில் ஒரு இறைச்சிக்கடை வியாபாரி தனது கடை முன்பு வைத்துள்ள ஒரு அறிவிப்பு டுவிட்டரில் பரவி வருகிறது. அதில், எங்களிடம் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுங்கள், சுத்தமான இறைச்சிக் கடையான சர்தாரில் இருந்து ரூ.2,100-க்கு இறைச்சியை பெற்று செல்லுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதைப்பார்த்த நெட்டிசன்கள், கடையில் விற்பனையை அதிகரிக்க இது புதுமையான வழியாக இருப்பதாக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெயில் தொடர்ந்து கடுமையாக நீடிப்பதால் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீடிக்க வேண்டும்.
    • தூத்துக்குடியில் நேர்மையான கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்டதற்கும் 10 லட்சம். விஷ சாராயத்திற்கும் 10 லட்சம் என்பது என்ன நியாயம்?

    புதுச்சேரி:

    முத்தரையர் நினைவு நாளை முன்னிட்டு புதுவை-கடலூர் சாலை 100 அடி சாலை சந்திப்பில் அவரது உருவப்பட மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்தது.

    இதில் பங்கேற்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்திற்கு மரியாதை செலுத்தி கட்சி கொடியை ஏற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விஷ சாராய விவகாரத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, செஞ்சி மஸ்தான் பதவி விலகி இருக்க வேண்டும். விஷ சாராயத்திற்கு அனைவரும் பதவி விலகி இருக்க வேண்டும். கொடநாடு கொலைக்கு எடப்பாடி பதவி விலகி இருக்க வேண்டும்.

    ஆனால் யாருக்கும் தார்மீக பொறுப்பு என்பது இல்லை. எடப்பாடி ஆட்சியில் கள்ளச்சாராயம் இருந்தது. ஆனால் மக்கள் சாகவில்லை. இப்போது சாராயத்துக்கு பலர் இறந்துள்ளனர். ஆட்சியாளர்களை தேர்வு செய்தது மக்கள். அவர்கள்தான் இனி முடிவு செய்வார்கள்.

    கவர்னரிடம் அ.தி.மு.க.வினர் கடிதம் கொடுக்கின்றனர். அப்படியென்றால் கொடநாடு கொலை விசாரணைக்கும் கடிதம் தரலாமா? தமிழக முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு ஏற்கனவே பலமுறை சென்றுள்ளார். அவர் சென்றதால் என்ன முதலீடு பெற்றார்?

    தொழில் வளர்ச்சி என்பது பசப்பு வார்த்தை. புதுவையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை தொடங்குகின்றனர். இதில் நமது பாட்டனார் பற்றிய வரலாறு வருமா? தமிழ் இருக்கு என சொல்கிறார்கள். எங்கே இருக்கிறது? 12 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வரவில்லை. தமிழ், தமிழ் என கூறுகிறீர்கள். இரு தலைமுறை தாய்மொழியே இல்லாமல் வளர்ந்து விட்டது.

    தமிழ் எங்கு வாழ்கிறது? இதுதான் திராவிட மாடலா? நீண்ட காலமாக சூழ்ச்சி செய்து தமிழனை ஏமாற்றி விட்டார்கள். தமிழ் வாழ்க என மாநகராட்சியில் எழுதினால் போதுமா? கோப்பில் தமிழ் வேண்டாமா? கொஞ்ச நாளைக்கு இந்த கொடுமை போகும். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழைத்தேடி பயணம் செல்கிறார்.

    காலம் கடந்து விட்டது. ஒரு கடைத்தெருவில்கூட தமிழில் பெயர் பலகை இல்லை. ஒரு வானூர்தியில் ஓட்டுநர் தமிழில் அறிவிப்பு வெளியிட்டார் என அனைவரும் கைதட்டினார்கள். தமிழ் உணர்வு அனைவருக்கும் இருக்கு. டாக்டர் ராமதாஸ் 80 வயதிலும் தமிழை தேடி செல்கிறார், அவரை பாராட்டுகிறேன். அடுத்து வருபவர்கள் இதை தொடர வேண்டும்.

    வெயில் தொடர்ந்து கடுமையாக நீடிப்பதால் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீடிக்க வேண்டும். மரணமடைந்த விவசாயிகள், இலங்கை தமிழர்கள் கொலை, பல கொடிய சம்பவங்களுக்கு தமிழக அரசு தொகை கொடுத்ததா?

    தூத்துக்குடியில் நேர்மையான கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்டதற்கும் 10 லட்சம். விஷ சாராயத்திற்கும் 10 லட்சம் என்பது என்ன நியாயம்? காய்ச்சுவதே அவர்கள் என்பதால் பணம் கொடுத்து மறைக்க பார்க்கிறார்கள். இனி மனமுடைந்தால் விஷம் குடிக்க தேவையில்லை. கள்ளசாராயம் குடித்தால் ரூ.10 லட்சம் கிடைக்கும்.

    ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்ப பெறுவது பைத்தியக்காரத்தனம். வேலையில்லா தையல்காரன் யானைக்கு டவுசர் தைத்த கதைதான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு திரும்ப பெறுவது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக அடித்தட்டு மக்களிடம் இருக்க வாய்ப்பில்லை.
    • ஒருவர் ஒரே நேரத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டுகளை அதாவது 20 ஆயிரம் வரை மாற்றிக் கொள்ளலாம்.

    சென்னை:

    2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வருகிற 23-ந் தேதி முதல் வங்கிகளில் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30-ந் தேதி வரை நோட்டுகளை மாற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து வங்கிகளில் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள், தொழில் அதிபர்கள் என 2000 ரூபாய் நோட்டு மாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கும். இதையொட்டி வங்கிகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    வங்கிகளில் செய்யப்பட்டு வரும் சிறப்பு ஏற்பாடு குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வருகிற 23-ந் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் மாற்றப்பட உள்ளது. இதற்காக அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் என்ன செய்ய வேண்டும் வாடிக்கையாளர்களுக்கு எப்படி வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை செய்யப்படுகிறது.

    முன்பு போல கூட்டம் அதிகமாக வர வாய்ப்பு இல்லை. 2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக அடித்தட்டு மக்களிடம் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் வங்கிகளில் மற்ற பணிகள் பாதிக்காத வண்ணம் வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும் 2000 ரூபாய் நோட்டு மாற்றுவதற்கு சிறப்பு கவுண்டர் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

    கூட்டம் அதிகமானால் வரிசையில் நிற்க ஏற்பாடு செய்யப்படுகிறது. காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவர்களுக்கு சாமியானா பந்தல் போட்டு இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்படுகிறது.

    வயதானவர்கள் வரிசையில் நின்று மாற்றாமல் அவர்களுக்கு தனி வசதி உருவாக்கப்பட்டு ரூபாய் நோட்டுகள் மாற்றி கொடுக்கப்படும். ஒருவர் ஒரே நேரத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டுகளை அதாவது 20 ஆயிரம் வரை மாற்றிக் கொள்ளலாம்.

    பணம் மாற்றிக் கொடுப்பதற்கு கூடுதலாக வங்கிகளில் பணம் இருப்பு வைக்க அனைத்து கிளைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டாஸ்மாக் கடைகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க டாஸ்மாக் ஊழியர்கள் மறுத்து வருகிறார்கள்.
    • சமீப காலமாகவே டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகமாக வருவது இல்லை என்று டாஸ்மாக் கடை ஊழியர் கூறியுள்ளார்.

    சென்னை:

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அனைத்து வணிக நிறுவனங்களுமே அந்த நோட்டை வாங்குவதற்கு மறுத்துவிடுகின்றன.

    அந்த வகையில் டாஸ்மாக் கடைகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க டாஸ்மாக் ஊழியர்கள் மறுத்து வருகிறார்கள்.

    இதுதொடர்பாக டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவர் கூறும்போது, 'சமீப காலமாகவே டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகமாக வருவது இல்லை.

    இருப்பினும் தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் மது பிரியர்கள் யாராவது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொண்டுவந்து கொடுத்தால் அதனை வாங்குவது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    • நம் நாடு - இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டில் தவறான வழிகளில் பணம் சம்பாதித்து, பதுக்கி வைத்து, சுக வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஏராளம்.
    • நாட்டு மக்களுக்கும், நாட்டிற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெரும் பயனளிக்கும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற வெளியிட்டிருக்கும் அறிவிப்பானது நாட்டு மக்கள், நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. நம் நாடு - இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டில் தவறான வழிகளில் பணம் சம்பாதித்து, பதுக்கி வைத்து, சுக வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஏராளம்.

    அதாவது ஊழல், லஞ்சம், போதைப்பொருட்கள் கடத்தல், ஹவாலா மோசடி போன்ற குறுக்கு வழியில் பணத்தை சம்பாதித்து வைத்திருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு பாதகமே. அதே சமயம் இந்த அறிவிப்பால் நியாயமாக, நேர்மையாக செயல்படுபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மொத்தத்தில் இந்த அறிவிப்பானது பண ஆசையில் தவறாக, குறுக்கு வழியில் செயல்பட நினைப்பவர்களுக்கு பொருத்தமான ஒன்று. குறிப்பாக சாமானியர்களும், நல்லவர்களும் இந்த அறிவிப்பால் பாதிக்கப்படமாட்டார்கள். நாட்டு மக்களுக்கும், நாட்டிற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெரும் பயனளிக்கும். எனவே ரிசர்வ் வங்கியின் 2,000 ரூபாய் நோட்டு சம்பந்தமான அறிவிப்பை த.மா.கா சார்பில் வரவேற்று, சாதாரணமானவர்கள், நேர்மையானவர்கள், நல்லவர்கள் வாழ்வில் மேம்பட இது போன்ற நல்ல நடவடிக்கைகள் தொடர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது.
    • இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர்.

    சென்னை:

    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று இரவு அதிரடியாக அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதிவரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. அதேசமயம் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகளையும் விதித்தது. இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர்.

    அவ்வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    500 சந்தேகங்கள்

    1000 மர்மங்கள்

    2000 பிழைகள்!

    கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    ×