ரூ.2000 நோட்டு தருவதாக வரவழைத்து போலீஸ் உடையில் ரூ.40 லட்சம் பறித்த 4 பேர் ஜெயிலில் அடைப்பு

ரூ.500 நோட்டுகளை கொடுத்தால் இரட்டிப்பாக ரூ.2000 நோட்டுகளை தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.காஞ்சிபுரம் அருகே கார் சென்றபோது ஞானப்பிரகாசத்தை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்னை நோக்கி சென்றுவிட்டனர்.
ரூ.2000 நோட்டு தருவதாக வரவழைத்து போலீஸ் உடையில் ரூ.40 லட்சம் பறித்த 4 பேர் ஜெயிலில் அடைப்பு
Published on

வேலூர்:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்தவர் ஞானபிரகாஷ் (வயது 26). இவர் மின்வாரிய ஒப்பந்ததாரராக வேலை செய்து வருகிறார்.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் முகமது ஜமீல் (28). ஐடி கம்பெனி ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் தனித்தனியாக இவர்களின் செல்போனை தொடர்பு கொண்டார்.

அவர் பெங்களூருவை சேர்ந்த குமார் என்றும் ரூ.500 நோட்டுகளை கொடுத்தால் இரட்டிப்பாக ரூ.2000 நோட்டுகளை தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.

இதனை உண்மை என நம்பிய இருவரும் தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணம் வீட்டில் இருந்த நகைகள் அடகு வைத்தும் மற்றும் நண்பர்கள் உறவினர்களிடமிருந்து கடனாக பணத்தை பெற்றனர்.

ஞானபிரகாஷ் தான் வைத்திருந்த ரூ.25 லட்சம் பணத்துடன் கடந்த 4-ந் தேதி வேலூர் சேண்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த குமார் ஞானபிரகாஷிடம் இருந்த பணத்தை வாங்கி பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது காரில் இருந்து போலீஸ் உடையில் இறங்கிய நபர் உட்பட 4 பேர் நாங்கள் அனைவரும் போலீஸ்காரர்கள்.

உங்களிடம் உள்ளது ஹவாலா பணமா என சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி ஞானபிரகாசை காரில் ஏற்றுக்கொண்டு காஞ்சிபுரத்திற்கு சென்றனர். காஞ்சிபுரம் அருகே கார் சென்றபோது ஞானப்பிரகாசத்தை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்னை நோக்கி சென்றுவிட்டனர்.

இதேபோல் முகமது ஜமீல் அன்று மாலையே வேலூர் மாங்காய் மண்டி அருகே ரு.15 லட்சத்துடன் காத்திருந்தார். அப்போது காரில் போலீஸ் உடையில் வந்த நபர்கள் முகமது ஜமீனிடமிருந்த பணத்தை பறித்துக் கொண்டு வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறிவிட்டு காரில் சென்றனர்.

பின்னர் முகமது ஜமீல் வடக்கு போலீஸ் நிலையம் வந்து விசாரித்த போது பணத்தை பறித்துச் சென்றவர்கள் போலி போலீஸ் என தெரியவந்தது.

இதுகுறித்து ஞானபிரகாஷ் மற்றும் முகமது ஜமீல் ஆகியோர் வடக்கு போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரூ.40 லட்சம் மோசடி செய்தது பெங்களூருவை சேர்ந்த டேனியல், அருண்குமார், அம்ரோஸ், கிருஷ்ணகிரியை சேர்ந்த கண்ணன் என தெரியவந்தது. அவர்களை பெங்களூரில் மடக்கி பிடித்தனர்.

பிடிபட்டவர்களில் டேனியல் என்பவர் போலீஸ் சீருடையில் வந்து மிரட்டியது தெரிய வந்தது

போலீசார் 4 பேரையும் நேற்று கைது செய்தனர். விசாரணை நடத்தியதில் பொன்னையை சேர்ந்த ஒருவர் பணம் பறிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டது தெரியவந்தது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ 2.30 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com