என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் கொள்ளை"

    • HDFC வங்கி கிளையில் இருந்து ஒரு வேன் பணத்தை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது.
    • ஏடிஎம் வாகனத்தை கடத்தி ரூ.7.11 கோடி கொள்ளையடித்தனர்.

    பெங்களூருவில் பட்டப்பகலில் ஏடிஎம் வாகனத்தை கடத்தி ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூரு சவுத் எண்ட் சர்க்கிள் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப HDFC வங்கி கிளையில் இருந்து ஒரு வேன் பணத்தை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு டொயோட்டா இன்னோவா கார் இவர்களை திடீரென வழிமறித்து நிறுத்தியது.

    இன்னோவாவில் இருந்த 7 பேர் வங்கி ஊழியர்களை அணுகி, தாங்கள் ரிசர்வ் வங்கியை சேர்ந்தவர்கள் எனக்கூறி ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அப்போது அந்த கும்பல் பணத்தை தங்களது காருக்கு வலுக்கட்டாயமாக மாற்றியுள்ளனர். பின்னர் ஊழியர்களை வேறு ஒரு இடத்தில இறக்கிவிட்டு பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

    இதனையடுத்து, காவல்துறையினர் சிறப்பு குழுக்களை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், 60 மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கோவிந்தபுரா காவல்நிலைய காவலர், பணம் நிரப்பும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.5.76 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    • வீட்டில் மாமியார் வள்ளியம்மாளும், மருமகள் அபிதாவும் மட்டும் இருந்தனர்.
    • போலீசாரின் விசாரணையால் அபிதாவின் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

    பூந்தமல்லி:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மணிகண்டன் நகர், காந்தி சாலையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி அபிதா(59), ராஜேந்திரனின் தாய் வள்ளியம்மாள்(88). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு ராஜேந்திரன் வேலை பார்த்த இடத்தில் தங்கி விட்டார்.

    வீட்டில் மாமியார் வள்ளியம்மாளும், மருமகள் அபிதாவும் மட்டும் இருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், அபிதாவையும் மாமியார் வள்ளியம்மாளையும் கட்டிப்போட்டு 11 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டார்.

    இதுகுறித்து குன்றத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அபிதாவே தனது கள்ளக்காதலனை வரவழைத்து இந்த நகை பறிப்பில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து அபிதாவிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது.

    அபிதாவிற்கு குழந்தைகள் இல்லை. இதனால் அவர் அடிக்கடி அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வந்தபோது அங்கு வந்த திருநெல்வேலியை சேர்ந்த 35 வயதுடைய வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    வயது வித்தியாசம் அதிகம் இருந்தாலும் கள்ளக்காதலர்கள் தங்களது நட்பை வளர்த்து அடிக்கடி தனியாக சந்தித்து வந்து உள்ளார். அந்த வாலிபர் அபிதாவிடம் பணம் கேட்கும் போதெல்லாம் தன்னிடம் பணம் இல்லை. ஆனால் வீட்டில் நகைகள் உள்ளது. அதுவும் தனது மாமியாரிடம் உள்ளது என்று கூறி உள்ளார். செலவுக்கு பணம் இல்லாததால் அந்த நகையை திருடி இருவரும் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று திட்டமிட்டனர்.

    அதன்படி சம்பவத்தன்று கணவர் வீட்டில் இல்லாததை அபிதா தனது கள்ளக்காதலனிடம் தெரிவித்தார். திட்டமிட்டபடி அந்த கள்ளக்காதலன் வந்து அபிதாவையும், மாமியார் வள்ளியம்மாளையும் கட்டிப்போட்டு நகையை கொள்ளையடித்து சென்று விட்டார். ஆனால் இதில் கள்ளக்காதலர்களின் திட்டம் சொதப்பியதால் அபிதா சிக்கிக் கொண்டார். முதலில் மாமியார் வள்ளியம்மாளை மட்டும் தாக்கி நகையை பறித்து உள்ளார். பின்னர் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக தன்னையும் கட்டிப்போட்டு விட்டு செல்லுமாறு அபிதா கூறி இருக்கிறார். இதன் பின்னர் அபிதாவையும், வள்ளியம்மாளையும் கட்டிப் போட்டு கள்ளக்காதலன் தப்பி இருக்கிறார்.

    போலீசார் வந்து விசாரணை செய்தபோது மாமியார் வள்ளியம்மாள் உட லில் மட்டும் காயங்கள் இருந்தன. ஆனால் அபிதாவின் உடலில் சிறிய காயங்கள் கூட இல்லை. விசாரணையின்போது அபிதா முன்னுக்குபின் முரணான பதில்களை கூறி உள்ளார். மேலும் வள்ளியம்மாள் அணிந்து இருந்த நகையை மட்டுமே கள்ளக்காதலன் பறித்து சென்று இருந்ததால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது.

    பின்னர் போலீசார் தங்களது பாணியில் விசாரித்தபோது அபிதா கள்ளக்காதலனை வரவழைத்து மாமியாரை கட்டிப்போட்டு நகை பறித்து இருப்பது தெரிய வந்தது.

    ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இதே போல் நகை பறிப்பு சம்பவம் நடந்து உள்ளது. இதனை சமாளித்து போலீசில் புகார் கொடுக்காமல் கள்ளக்காதலனை அபிதா காப்பாற்றி உள்ளார். அதேபோல் தற்போதும் நகை பறித்து போலீசில் சிக்காமல் உல்லாசமாக செலவு செய்யலாம் என்று நினைத்து நகை கொள்ளையில் ஈடுபட்டபோது போலீசாரின் விசாரணையால் அபிதாவின் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

    இதேபோல் கொள்ளை நடந்த நேரத்தில் அப்பகுதியில் அபிதா, கள்ளக்காதலனிடம் நின்று பேசிக் கொண்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சியும் போலீசாருக்கு கிடைத்து உள்ளது. அபிதா போலீசில் சிக்கியது பற்றி அறிந்ததும் தற்போது அவரது கள்ளக்காதலன் தலைமறைவாகி விட்டார். அவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • யமுனாபாய் வீட்டுக்கு திரும்பி சென்றபோது வீட்டில் நகை கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    வண்டலூர்:

    சிங்கப்பெருமாள் கோவில், பாரதியார் தெருவை சேர்ந்தவர் யமுனாபாய். இவரது மகன் ரத்தீஸ். தி.மு.க.பிரமுகரான இவர் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி செயலாளராக உள்ளார். பஸ், லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார். யமுனாபாய் தனியாகவும், ரத்தீஸ் குடும்பத்துடன் தனியாகவும் அருகருகே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

    நேற்று மாலை யமுனாபாய் வீட்டை பூட்டிவிட்டு மகன் வீட்டுக்கு வந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் யமுனாபாயின் வீட்டுக்குகள் பூட்டை உடைத்து புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 140 பவுன் நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அள்ளிசென்று விட்டனர்.

    இன்று காலை யமுனாபாய் வீட்டுக்கு திரும்பி சென்றபோது வீட்டில் நகை கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து மறைமலை நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    யமுனாபாய் வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்லும் நேரத்தை நோட்ட மிட்டு மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.

    • வீட்டில் யாரும் இல்லாததை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர்.
    • கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி அருகே உள்ள பாளேகுளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் வேலம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தெய்வானை. இவர் பாளேகுளி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இருவரும் ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கணவன்-மனைவி இருவரும் காலை பள்ளிக்கு சென்று மாலையில் தான் வீட்டிற்கு வருவார்கள். இவரது வீட்டில் யாரும் இல்லாததை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர்.

    இந்நிலையில் காலை பள்ளிக்கு சென்ற தெய்வானை மீண்டும் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த நாய் மயங்கிய நிலையில் கிடந்துள்ளது.

    பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 55 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் பணம் திருடுபோயி இருந்தது தெரியவந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி கணவனுக்கு போன் செய்து தெய்வானை கத்தி கதறி உள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் நாகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் நாகரசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த ஆசிரியர் வீட்டில் விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய் உதவியுடன் கொள்ளையர்களை தேடினர். ஆனால் நாய் சிறிது தூரம் சென்று நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் வீட்டில் கொள்ளையர்களின் கைரேகை எதுவும் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்தனர்.

    வீட்டில் பகல் நேரங்களில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளையர்கள் நேற்று வீட்டில் பின்புற கேட்டின் வழியாக புகுந்துள்ளனர். அங்கு கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்துள்ளனர். அதில் இருந்த நகை, பணம் ஆகியவையை கொள்ளை அடித்து சென்றனர்.

    ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வீடுகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்புகள் வேண்டுமென போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் சிசிடிவி கேமரா பொருத்தவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    மேலும் பகலில் ஆளில்லாதது நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பணம் நகை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தந்தை வீட்டில் தங்கிவிட்டு கடந்த 21-ந் தேதி காலை மதுரை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு வந்தார்.
    • பாலசுப்பிரமணியன், சசி, ராஜா, நாகார்ஜூன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகிறார்.

    மதுரை:

    மதுரை புதுவிளாங்குடி தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கதிர்வேல். இவருடைய மகன் ஜெயேந்திரன் (வயது 40). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகனுக்கு உடல்நிலை பாதிப்பு உள்ளதால் மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக இங்கு குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

    இவர் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் போடியில் நடந்த திருவிழாவில் கலந்து கொள்ள தனத குடும்பத்தினருடன் கடந்த 17-ந் தேதி சென்றுள்ளார். அங்கு தந்தை வீட்டில் தங்கிவிட்டு கடந்த 21-ந் தேதி காலை மதுரை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அறையில் வைத்திருந்த பையை காணவில்லை. அதில் சமீபத்தில் அவரது சொத்துகளை விற்று வைத்திருந்த ரூ.42 லட்சம் கொள்ளை போனது தெரிய வந்தது. அந்த பணம் அவரது மகனின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து ஜெயேந்திரன், செல்லூரில் உள்ள தன் நண்பர் உபேந்திரனிடம் தெரிவித்தார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து செல்லூர் போலீசில் புகார் அளித்தார். கொள்ளை நடந்த இடம் கூடல்புதூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வருவதால் அங்கு விசாரணை நடத்தப்பட்டது.

    கூடல்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்தார். அதில் ஜெயேந்திரன் வீட்டில் பணம் இருந்ததை அறிந்த சிலர்தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் முடிவு செய்தனர்.

    மேலும் சம்பவ இடத்தில் ஒரு மர்ம கார் சென்றதை கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் போலீசார் கண்டுபிடித்தனர். அந்த கார் பற்றி விசாரித்தபோது ஒருவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், இந்த கொள்ளை சம்பவத்தில் 9 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய முக்கிய நபர்களான மதுரை கே.கே.நகரை சேர்ந்த பிரகாஷ் (35), நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த விவேகானந்த் (34), திருப்பாலையை சேர்ந்த யோகேஷ் (36), பொதும்பை சேர்ந்த சுரேஷ் (49) ஆகிய 4 பேரை நேற்று காலை கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து பல லட்ச ரூபாயை போலீசார் மீட்டனர்.

    மேலும் பாலசுப்பிரமணியன், சசி, ராஜா, நாகார்ஜூன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகிறார்.

    இந்த வழக்கில் பணத்தை பறிகொடுத்தவர் முன்னாள் அமைச்சர் ஒருவரின் பினாமி என்றும், அந்த வீட்டில் பல கோடி ரூபாய் பணம் கொள்ளை போனதாகவும் தகவல் பரவி வருகிறது. ஆனால் போலீசில் பல லட்சம்தான் கொள்ளை போனதாக புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இது தவிர கைது செய்யப்பட்டவரில் சுரேஷ் என்பவர், அந்த முன்னாள் அமைச்சரிடம் ஏற்கனவே டிரைவராக பணிபுரிந்தவர் என்பதும் தெரியவந்தது.

    • மர்ம நபர்கள் பிடிபட்டால் மட்டுமே கொள்ளைபோன நகை மற்றும் பணத்தின் மதிப்பு குறித்த முழு விபரம் தெரியவரும்.
    • போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலபட்டினத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் அப்பகுதியில் நெல்லை- தென்காசி மெயின் ரோட்டில் தனியார் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். மேலும் பள்ளிக்கூட வளாகத்தில் சி.பி.எஸ்.இ. பள்ளி, பி.எட். கல்லூரி ஆகியவற்றையும் நடத்தி வருகிறார்.

    ராஜசேகர், கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த உறவினரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக மனைவி மகேஸ்வரி, மகன் ராஜ்குமார் மற்றும் குடும்பத்தினருடன் அங்கு புறப்பட்டு சென்றார்.

    மீண்டும் நேற்று காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 1 கிலோ 150 கிராம் தங்க நகைகள், ரூ.50 லட்சம் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் நேரடி விசாரணையில் இறங்கி உள்ளார். அவரது உத்தரவின்பேரில் ஆலங்குளம் டி.எஸ்.பி. கிளாட்சன் ஜோஸ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் பால முருகன், ஆடிவேல் உள்ளிட்டோர் தலைமையில் மொத்தம் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்வி நிறுவன வளாகத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் வீட்டில் கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. இதனால் போலீசார் வளாகத்தின் மெயின் கேட்டில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தபோது அதில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் எதுவும் இல்லை.

    வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் காம்பவுண்டை ஒட்டி உள்ள பெரியமரத்தின் வழியாக ஏறி மாடி வழியாக வீட்டுக்குள் நுழைந்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்துள்ளது. அந்த வளாகத்தின் பின்பகுதி தோட்டங்கள், காடுகள் நிறைந்ததாகவே இருக்கிறது என்பதால் மர்ம நபர்கள் அந்த வழியாக தப்பிச்சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதனிடையே கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். அதில் பதிவான ரேகைகளை பழைய குற்றவாளிகளிகளின் ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் பணியிலும் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

    மேலும் நெல்லை-தென்காசி 4 வழிச்சாலையில் கல்வி நிறுவன வளாகத்தை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள வணிக வளாகங்கள், வீடுகள், பெட்ரோல் பங்குகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் கடந்த 2 நாட்களாக சந்தேகப்படும் படியான நபர்களின் நடமாட்டம் எதுவும் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதனிடையே கொள்ளை போன நகைகள் மற்றும் பணத்தின் மதிப்பு மேலும் கூடுதலாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. பள்ளிக்கூடங்கள், கல்லூரியில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால், அவரது வீட்டில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக பணம் இருந்ததாகவும், நகையின் மதிப்பும் 1¼ கிலோவுக்கும் அதிகமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மர்ம நபர்கள் பிடிபட்டால் மட்டுமே கொள்ளைபோன நகை மற்றும் பணத்தின் மதிப்பு குறித்த முழு விபரம் தெரியவரும். இதனிடையே கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் நேற்று இரவு முழுவதும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆலங்குளம் போலீசார் அங்கு விடிய விடிய முகாமிட்டு தடயங்கள் ஏதும் சிக்குகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.

    • பண மாலையை அரியானாவில் இருந்து வாடகைக்கு எடுத்து உள்ளனர்.
    • சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் நூதனமான முறையில் ரூ.14.5 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 1-ந்தேதி அன்று நடைபெற்ற திருமணத்தில் மணமகனுக்கு அணிவிப்பதற்காக 500 ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை அணிவிக்கப்பட்டது. இந்த மாலையை அரியானாவில் இருந்து வாடகைக்கு எடுத்து உள்ளனர். இதைதொடர்ந்து திருமணத்திற்கு பிறகு அதனை உரிமையாளரான ஷாத் இருசக்கர வாகனத்தில் அரியானாவிற்கு எடுத்து சென்று கொண்டு இருந்தார்.

    இதனை அறிந்த மர்மநபர்கள் காரில் வந்து இருசக்கரவாகனத்தின் மீது மோதினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஷாத்தை தாக்கி துப்பாக்கி காட்டி மிரட்டி மாலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஷாத் அளித்த புகாரின் பேரில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • நான்கு மாதங்களுக்கு முன்பு தான் கார் டிரைவரை வேலைக்கு சேர்த்திருப்பது தெரியவந்தது.
    • கடைசியாக முரளி மோகனிடம் கைவரிசை காட்டிய புகாரின்பேரில் சிக்கி கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    தளி:

    கர்நாடக மாநிலம், அத்திப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முரளிமோகன் (வயது41). இவருக்கு சொந்தமான பண்ணை வீடு கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாலிவாரம் கிராமத்தில் உள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி பண்ணையில் வேலை செய்யும் கூலி ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக காரில் ரூ.5 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு வந்தார்.

    பண்ணையில் காரை நிறுத்தி விட்டு, அங்குள்ள தொழிலாளர்களிடம் சிறிது நேரம் பேசியவாறு சம்பளம் கொடுப்பதற்காக காரில் வைத்திருந்த பணத்தை எடுக்க சென்றார்.

    ஆனால், காரில் பணத்தை காணவில்லை. வண்டியை ஓட்டி வந்த டிரைவர் முகமது யூசுப் (49) என்பவரும் மாயமாகி இருந்தார். அவர், பணத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்திருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், நான்கு மாதங்களுக்கு முன்பு தான் கார் டிரைவரை வேலைக்கு சேர்த்திருப்பது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தங்க துரை உத்தரவின்பேரில், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி.ஆனந்தராஜ் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில், தலைமை காவலர்கள் ரஞ்சித்குமார், கண்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இவர்கள், கர்நாடக மாநிலம் மைசூரு சென்று விசாரித்ததில் முகமது யூசுப் குறித்து பகீர் தகவல் வெளியானது. சிவமொக்கா, உடுப்பி, சித்ரரதுர்கா ஆகிய பகுதியில் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மற்றும் செல்போன் எண் மாற்றி கொடுத்து செல்வந்தர்களிடம் வேலைக்கு சேர்ந்து அவர்களின் நன்மதிப்பை பெற்று சில மாதங்களில் சந்தர்ப்பம் பார்த்து மொத்தமாக ஒரு தொகையை கொள்ளையடித்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தது தெரியவந்தது.

    முரளிமோகனிடம் திருடிய பணத்துடன் மும்பைக்கு ஓட்டம் பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை 3 மாதமாக தனிப்படை போலீசார் கண்காணித்து மும்பை வரை சினிமா பாணியில் துரத்தி சென்றனர். ஆனால் அவர் சிக்கவில்லை.

    இந்நிலையில், மைசூருவில் மீண்டும் வேலைக்கு சேர்ந்திருப்பது தெரிய வந்தது. அங்கு, சரக்குவேன் ஓட்டி வந்ததை நோட்டமிட்ட தனிப்படை போலீசார் முகமது யூசுப் (எ)ஷேக் முகமது யூசூப்பை நேற்று கைது செய்து தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    அவரிடமிருந்து முகவரி, செல்போன் எண்கள், போட்டோ அடையாளத்தை மாற்றி வைத்திருந்த 10-க்கும் மேற்பட்ட ஆதார் கார்டு மற்றும் ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்தனர்.

    தொழிலதிபர்கள், செல்வந்தர்களிடம் வேலைக்கு சேரும் ஷேக் முகமதுயூசூப் நேர்மையாகவும், நம்பிக்கையாகவும் நடந்து கொண்டு நற்பெயர் ஏற்படுத்தி கொள்வார். சமயம் பார்த்து வேலை செய்யும் இடத்தில் அதிக பணம் கிடைக்கும்போது சுருட்டிக்கொண்டு மும்பைக்கு ஓட்டம் பிடிப்பதும், அங்கு அழகிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    பணம் செலவானதும், மீண்டும் வந்து ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமத்தில் உள்ள முகவரி, போட்டோ, செல்போன் எண்களை மாற்றி வேறு பகுதியில் செல்வந்தர்களிடம் வேலைக்கு சேர்ந்து கைவரிசை காட்டுவதுமாக இருந்துள்ளார். இவர் மீது கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.

    கடைசியாக முரளி மோகனிடம் கைவரிசை காட்டிய புகாரின்பேரில் சிக்கி கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து, ஷேக் முகமது யூருப்பை தேன் கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். மும்பை வரை தேடிச்சென்று குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்த தனிப்படை போலீசாருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    • ராமச்சந்திரன் அங்கிருந்த கத்தியால் கொள்ளையன் ஒருவரை வெட்டினார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள சஜ்ஜலப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 60). விவசாயி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (56). இவர்கள் உத்தனப்பள்ளி அருகே தொட்டமெட்டரையில் 11 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்கள்.

    மேலும் அங்குள்ள தோட்டத்திலேயே அவர்கள் குடியிருந்து வந்தனர். அவர்களுடன் மருமகன் ராமச்சந்திரன் (40), பேத்தி வர்ஷினி (9) ஆகியோர் குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் வீட்டில் இருந்தனர்.

    அந்த நேரம் காரில் 7 பேர் கொண்ட முகமூடி கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த ராஜா, கோவிந்தம்மாள் உள்ளிட்டோரை கத்தியை காட்டி மிரட்டினார்கள்.

    மேலும் கோவிந்தம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8½ பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

    பின்னர் அவர்கள் அங்கிருந்து செல்ல முயன்றனர். அந்த நேரம் ராமச்சந்திரன் அங்கிருந்த கத்தியால் கொள்ளையன் ஒருவரை வெட்டினார். இதனால் அவனுடன் இருந்த மற்ற கொள்ளையர்கள் ராமச்சந்திரனை தலையில் தாக்கி விட்டு தப்பி ஓடினார்கள்.

    இந்த கொள்ளை குறித்து தகவல் அறிந்ததும் உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொள்ளை குறித்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். விவசாயி ராஜா குடும்பத்துடன் தோட்டத்தில் வீட்டில் இருப்பதை முகமூடி கொள்ளையர்கள் நோட்டமிட்டு கொள்ளையை நடத்தி உள்ளனர்.

    இதுதொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த முகமூடி கொள்ளை கும்பலை பிடிக்க தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. ஆனந்தராஜ் தலைமையில் 4 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    • கடையில் பொருத்தப்பட்டிருந்த 4 சிசிடிவி கேமராக்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
    • இரண்டாவது முறையாக திருட்டு நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பில்லா பாளையம் முனவாசிப்பட்டி செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று இரவு மதுபான கடை ஊழியர்கள் தங்களது வேலையை முடித்துவிட்டு கடையினை பூட்டி சென்றனர்.

    நள்ளிரவு இங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் பின்பக்க சுவற்றில் கடப்பாரையால் துளையிட்டு உள்ளே புகுந்தனர். அங்கு ரூ.28 ஆயிரம் மதிப்பிலான 150-க்கு மேற்பட்ட உயர் ரக மதுபான பாட்டில்கள் மற்றும் ரூ. 6030 பணத்தினை திருடி சென்று விட்டனர்.

    இன்று காலை மதுபான கடைக்கு அரசு குடோனில் இருந்து மது பாட்டில்கள்கள் இறக்க வந்துள்ளனர். அப்போது கடை ஊழியர்கள் கடையை திறந்த போது மதுபான பாட்டில்கள் இல்லாமல் இருப்பதை பார்த்தும், பின் பக்க சுவற்றில் துளையிட்டதை கண்டும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மது பாட்டில்களையும் பணத்தினை திருடி சென்ற மர்ம நபர்கள் தாங்கள் போலீசார் மற்றும் மோப்ப நாயிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது என மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர்.

    கடையில் பொருத்தப்பட்டிருந்த 4 சிசிடிவி கேமராக்களையும் திருடிச் சென்றுள்ளனர்.

    கடந்த 45 நாட்களுக்கு முன்பு இதேபோல் மேலதாளியாம்பட்டி டாஸ்மாக் கடையில் சுவரைத் துளையிட முயன்று முடியாததால் பூட்டை உடைத்து நீண்ட வாளை(பட்டாகத்தி) கடையில் உள்ளே போட்டுவிட்டு மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டாவது முறையாக திருட்டு நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களையும் மர்ம நபர்கள் உடைத்து சென்றுள்ளனர்.
    • விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு உப்போடை பகுதியில் வசிப்பவர் பழனிவேல். விவசாயி. இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

    இந்த நிலையில் பழனிேவல் இரவு நேரத்தில் தனது விவசாய தோட்டத்தில் தங்கி விட்டு காலையில் வீடு திரும்புவது வழக்கம்.

    வழக்கம்போல்  வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பீரோவில் இருந்த ரூ.3½ லட்சம் ரொக்கம், 45 பவுன் நகை, வெள்ளி டம்ளர், குத்து விளக்கு உள்ளிட்ட 1 கிலோ வெள்ளி ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து ஆத்தூர் நகர போலீசில் பழனிவேல் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஆத்தூர் நகர போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் ஆத்தூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களையும் மர்ம நபர்கள் உடைத்து சென்றுள்ளனர். சேலத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒரே இரவில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
    • எம்.புதூர், ஆணையம்பேட்டை, பெரியப்பட்டு ஆகிய இடங்களில் லாரி ஓட்டுநர்களை குறிவைத்து இந்த துணிகர கொள்ளை நடந்துள்ளது.

    விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் ஒரே இரவில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    கடலூர் மாவட்டம் எம்.புதூர், ஆணையம்பேட்டை, பெரியப்பட்டு ஆகிய இடங்களில் லாரி ஓட்டுநர்களை குறிவைத்து இந்த துணிகர கொள்ளை நடந்துள்ளது.

    பைக்கில் கஞ்சா போதையில் வரும் சிறார்கள், லாரி ஓட்டுநர்களை தாக்கி பணம், செல்போன்களை பறித்து செல்வதாக கூறிய ஓட்டுநர்கள், ஜி-பே பாஸ்வேர்டையும் வாங்கி சென்று பணத்தை திருடுவதாக தெரிவித்தனர்.

    ஓட்டுநர்களை தாக்கி பணம், செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×