

நெல்லை:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோல்டன் நகரை சேர்ந்தவர் ஞானசுந்தர் (வயது 35). இவர் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் வீடு இருக்கும் நிலையில், சுந்தர் தனது குடும்பத்தினருடன் வி.கே.புரத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இதனால் கோல்டன் நகரில் உள்ள வீடு பூட்டிக்கிடந்தது. அவ்வப்போது அவர் தனது வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை ஞானசுந்தர் கோல்டன் நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.3 ஆயிரம் பணம், குத்துவிளக்கு உள்ளிட்ட பித்தளை பொருட்கள் திருட்டு போயிருந்தது.
வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டியிருப்பதை அறிந்த ஞானசுந்தர், கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். போலீஸ்காரர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.