என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டது.
    • தனக்கு நோபல் பரிசு தர மாட்டார்கள் என்று டிரம்ப் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார்.

    அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயரை சமீபத்தில் பாகிஸ்தான் பரிந்துரைத்தது. ஆனால் பல போர்களை நிறுத்த முயற்சி மேற்கொண்டாலும் தனக்கு நோபல் பரிசு தர மாட்டார்கள் என்று டிரம்ப் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார்.

    இதனையடுத்து, அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான கார்ட்டர், நோபல் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் டிரம்பின் பெயரை பரிந்துரை செய்தார்.

    இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயரை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரிந்துரை செய்துள்ளார்.

    நேற்று இரவு வெள்ளை மாளிகையில் நடந்த இரவு விருந்தின் போது, நோபல் பரிசுக் குழுவிற்கு அனுப்பிய நியமனக் கடிதத்தின் நகலை டிரம்மிடம் நெதன்யாகு வழங்கினார்.

    அப்போது டிரம்பிடம் பேசிய நெதன்யாகு, "நீங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு பிராந்தியத்திலும் அமைதியை ஏற்படுத்தி வருகிறீர்கள். நான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு உங்களை பரிந்துரைத்து நோபல் பரிசுக் குழுவிற்கு அனுப்பிய கடிதத்தை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன். இதற்கு நீங்கள் மிகவும் தகுதியானவர், நீங்கள் அதைப் பெற வேண்டும்" என்று தெரிவித்தார்.

    2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று நோபல் குழு தெரிவித்துள்ளது.

     

    • அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
    • 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டார்.

    ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    ஜப்பான், தென்கொரியா, மியான்மர், லாவோஸ், தென்னாப்பிரிக்கா, கஜகஸ்தான், மலேசியா, துனிசியா, இந்தோனேசியா, போஸ்னியா, வங்கதேசம், செர்பியா, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய 14 கூடுதல் நாடுகளுக்கு டிரம்ப் அதிக வரிகளை விதித்தார்.

    குறிப்பாக ஜப்பான், தென்கொரியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அந்நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

    புதிய வரிவிதிப்பு குறித்து 14 நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் நகல்களை டிரம்ப் வெளியிட்டார். அதில், நாங்கள் உயர்த்திய வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்கள் தங்கள் சொந்த இறக்குமதி வரிகளை உயர்த்தினால், அமெரிக்க அரசு இன்னும் வரிகளை உயர்த்தும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

    அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக ஏற்கனவே டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும் வரும் 9-ம் தேதி வரை வரி விதிப்பை நிறுத்திவைப்பதாக அவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சீல் வைக்கப்பட்ட ஆவணங்களில் டிரம்பின் பெயர் இருப்பதாக மஸ்க் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
    • ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முன்னாள் நண்பரும், இந்நாள் எதிரியுமான எலான் மஸ்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் பாலியல் குற்ற வழக்கத்தை மீண்டும் கிளறியுள்ளார்.

    பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனின் சீல் வைக்கப்பட்ட ஆவணங்களில் டிரம்பின் பெயர் இருப்பதாக மஸ்க் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

    "அதிகாரப்பூர்வ ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறுமிகள் பாலியல் குற்றவாளி (Pedophile) கைது எண்ணிக்கை: 0 0 0 0" என்று எக்ஸ் பதிவில் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக, "எப்ஸ்டீன் ஆவணங்களில் டிரம்ப் இருக்கிறார். அதனால்தான் அவை பொதுவில் வெளியிடப்படவில்லை" என்று மஸ்க் ஜூன் மாதம் பதிவிட்டிருந்தார். பின்னர், அந்தப் பதிவை நீக்கி, "நான் எல்லை மீறிவிட்டேன்" என்று கூறியிருந்தார்.

    எப்ஸ்டீன் மற்றும் டிரம்ப் 1990-களில் நண்பர்களாகவும் அண்டை வீட்டாராகவும் இருந்ததாலும், ஒரே விருந்துகளில் கலந்துகொண்டதாலும், டிரம்பின் பெயர் எப்ஸ்டீன் ஆவணங்களில் உள்ளதா என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்துள்ளன.

    யார் இந்த எப்ஸ்டீன்?

    ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு நிதியாளர். பெரும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டித் தரும் பணியில் ஈடுபட்டு, பல பணக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ஆனால், அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.

    2000-களின் முற்பகுதியிலிருந்து, எப்ஸ்டீன் மீது இளம் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    அவருக்குச் சொந்தமான 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' என்ற கரீபியன் தீவில், பல முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை அழைத்து வந்து, அங்கு பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவாகின.

    2008-ல் எப்ஸ்டீனுக்கு மிகக் குறுகிய காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2019-ல் மேலும் கடுமையான பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.

    ஆனால், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க் சிறையில் மர்மமான முறையில் இறந்துபோனார். அவரது மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது இன்று வரை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.

    'எப்ஸ்டீன் கோப்புகள்'

    ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், அவருடைய தொலைபேசி அழைப்பு பதிவுகள், விமானப் பயணப் பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், அவருடன் தொடர்பு கொண்ட பிரபலங்களின் பட்டியல் ஆகியவை 'எப்ஸ்டீன் கோப்புகள்' என அழைக்கப்படுகின்றன.

    இந்த கோப்புகளில் பல உயர்மட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபல கலைஞர்கள் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக நீண்டகாலமாகவே சந்தேகங்கள் நிலவி வருகின்றன. இந்த கோப்புகள் வெளியானால், பலரின் இமேஜ் அடியோடு சரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சில மாதங்களில் பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களில் பெய்துள்ளது.
    • டெக்சாசில் உள்ள குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மத்திய கெர் கவுண்டியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் தென்-மத்திய டெக்சாசில் உள்ள குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அதாவது சில மாதங்கள் பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களில் பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இந்த திடீர் வெள்ளத்தில் வீடுகள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பலர் வீடுகளின் மேற்கூரையில் தஞ்சம் அடைந்தனர்.

    இந்நிலையில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. இதில் 28 குழந்தைகளும் அடக்கம்.

    மேலும் 41 பேர் மாயமானதாக கூறப்படுவதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ கடக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    • அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்
    • அமெரிக்காவில் தற்போது இரு கட்சி முறை நடைமுறையில் உள்ளது.

    டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு அவரது வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார்.

    இதனால் டிரம்புக்கு நெருங்கிய நண்பராகவும், அவரது நிர்வாகத்தில் அரசு செலவுகளை குறைக்கும் டாஸ் துறைக்கும் தலைமை வகித்தார். ஆனால் BIG BEAUTIGUL என்ற புதிய மசோதாவைக் கடுமையாக எதிர்த்த எலான் மஸ்க், டிரம்ப் அரசு வழங்கிய பதவியில் இருந்து விலகி டிரம்புக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வந்தார்.

    இந்நிலையில், அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார். புதிய கட்சி அறிவிப்பால் அமெரிக்க அதிபர் டிரம்ப்- எலான் மஸ்க் இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது.

    இந்நிலையில், எலான் மஸ்க்கின் புதிய கட்சி குறித்து பேசிய டிரம்ப், "இது அபத்தமானது என்று நான் நினைக்கிறேன். குடியரசுக் கட்சியுடன் நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம். ஜனநாயகக் கட்சியினர் தங்கள் வழியைத் தவறவிட்டுவிட்டனர். ஆனால் அது எப்போதும் இரு கட்சி முறையாகவே இருந்து வருகிறது, மேலும் மூன்றாம் கட்சியைத் தொடங்குவது குழப்பத்தையே அதிகரிக்கிறது என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார். 

    • அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார் எலான் மஸ்க்.
    • புதிய கட்சி அறிவிப்பால் அமெரிக்க அதிபர் டிரம்ப்- எலான் மஸ்க் இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது.

    டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.

    இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு அவரது வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார்.

    இதனால் டிரம்புக்கு நெருங்கிய நண்பராகவும், அவரது நிர்வாகத்தில் அரசு செலவுகளை குறைக்கும் டாஸ் துறைக்கும் தலைமை வகித்தார்.

    ஆனால் BIG BEAUTIGUL என்ற புதிய மசோதாவைக் கடுமையாக எதிர்த்த எலான் மஸ்க், டிரம்ப் அரசு வழங்கிய பதவியில் இருந்து விலகி டிரம்புக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வந்தார்.

    இந்த நிலையில், அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்தார்.

    மக்களுக்கு சுதந்திரத்தை மீண்டும் வழங்க இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும், 2 கட்சிகள் மட்டுமே ஆளமுடியும் என்ற ஜனநாயக விரோதப்போக்கை முறியடிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

    புதிய கட்சி அறிவிப்பால் அமெரிக்க அதிபர் டிரம்ப்- எலான் மஸ்க் இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது.

    எலான் மஸ்க் அமெரிக்கா கட்சியை தொடங்கிய நிலையில், அதன் பொருளாளராக வைபவ் தனேஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    எலான் மஸ்க்கின் `டெஸ்லா' நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக செயல்பட்டவர் வைபவ் தனேஜா.

    இந்திய வம்சாவளி என்பதால், கட்சியின் முக்கிய பொறுப்பில் வெளிநாட்டவர் ஒருவரை நியமிப்பதா? என எலான் மஸ்க் மீது விமர்சனம் எழுந்துள்ளது.

    • தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
    • இச்சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அமெரிக்காவின் இண்டியானா போலீஸ் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அங்கு அதிகாலையில் சில சிறுவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 சிறுவர்கள் பலியானார்கள். 5 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • சில நாடுகளுக்கு இது 70 சதவீதம் வரை இருக்கலாம் என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.
    • ஒருமித்த கருத்தை எட்ட முடியாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    சுமார் 12 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

    ஏர் ஃபோர்ஸ் ஒன் விமான பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "கட்டணங்கள் தொடர்பான சில கடிதங்களில் நான் கையெழுத்திட்டுள்ளேன்.

    அவை திங்கட்கிழமை 12 நாடுகளுக்கு அனுப்பப்படும். கடிதத்தைப் பெறும் ஒவ்வொரு நாடும் அதன் ஏற்றுமதிக்கு வெவ்வேறு வரிகளைப் பெறும். கடிதங்களைப் பெறும் நாடுகளின் பெயர்கள் திங்கட்கிழமை மட்டுமே வெளியிடப்படும்" என்று கூறினார்.

    இந்த புதிய வரிகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரக்கூடும் என்றும், சில நாடுகளுக்கு இது 70 சதவீதம் வரை இருக்கலாம் என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டினார். இந்த 12 நாடுகளில் இந்தியாவும் இருக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    மறுபுறம், அமெரிக்காவுடன் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் சென்ற உயர்மட்ட இந்தியக் குழு பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்டு திரும்பியுள்ளது.

    அமெரிக்கா கோரும் விவசாயம் மற்றும் பால் பொருட்களுக்கான சந்தை அணுகல் குறித்து ஒருமித்த கருத்தை எட்ட முடியாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக ஏற்கனவே டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும் வரும் 9-ம் தேதி வரை வரி விதிப்பை நிறுத்திவைப்பதாக அவர் அறிவித்திருந்தார்.

    எனவே ஜூலை 9 ஆம் தேதிக்குள் வரி விலக்கு பெற இரு நாடுகளுக்கும் இடையே கடைசி நிமிட அரசியல் ஒப்பந்தம் எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

    ஆனால் எந்த காலக்கெடுவின் கீழும் எந்த வர்த்தக ஒப்பந்தங்களும் இருக்காது என்று இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெளிவுபடுத்தியுள்ளார்.   

    • பெண்ணிற்கு வந்த RIP மெசேஜ்-ஐ மற்றொரு பெண் பார்த்து வெடிகுண்டு மிரட்டல் என நினைத்துள்ளார்.
    • விமான பணிப்பெண் மூலம் விமானிக்கு தகவல் பறக்க, விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அருகில் இருந்த பெண்ணின் செல்போனில் RIP மெசேஜ் இருந்ததை பார்த்து, விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இருக்கலாம் என பெண் ஒருவர் சொல்ல, விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

    மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான போர்ட்டோ ரிக்கோவில் உள்ள சான் ஜுயானில் இருந்து அமெரிக்காவின் தல்லாஸ் நகருக்கு 193 பயணிகளுடன், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

    அப்போது இரு பெண்கள் அருகருகே இருந்துள்ளனர். ஒரு பெண்ணின் செல்போனை மற்றொரு பெண் நைசாக எட்டிப்பார்த்துள்ளார். அப்போது போனில் "RIP" என மெசேஜ் வந்துள்ளது.

    உடனடியாக அந்த பெண் விமான பணிப்பெண்ணை அழைத்து, வெடிகுண்டு மிரட்டலுக்கான மெசேஜ் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    உடனடியாக விமான பிணப்பெண், விமானிக்கு தகவலை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விமானத்தை இஸ்லா வெர்டேவுக்கு திருப்பி அவசரமாக தரையிறக்கியுள்ளார்.

    பின்னர் விசாரணையின்போதுதான் RIP என்பதை பார்த்து தவறாக தகவல் தெரிவித்துள்ளது தெரியவந்தது.

    சமூக வலைத்தளத்தில் அந்த பெண்ணுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. பொய் குற்றச்சாட்டு உருவாக்கிய அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • பெல்ஜியம் குடியுரிமை கொண்டவர் நேஹல் மோடி.
    • இவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டிருந்தது இன்டர்போல்.

    பஞ்சாப் நேஷனல் வங்கி பண மோசடியில் குற்றம் சாட்டப்பட்டவர் நிரவ் மோடி. வைர தொழில் அதிபரான இவர், வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இவர் சகோதரர் நேஹல் மோடி. இவர் சாட்சிகளை அழித்தல் உள்ளிட்ட உதவியை சகோதரருக்கு செய்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

    பெல்ஜியம் குடியுரிமை பெற்ற இவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் இன்டர்போலிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இரு அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று இன்டர்போல் நேஹல் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது.

    இந்த நிலையில் நேஹல் மோடியை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அவரை இந்தியா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
    • மீட்புப் பணியில் 400 அவசரகால பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மத்திய கெர் கவுண்டியில் திடீரென்று பலத்த மழை பெய்தது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழையால் தென்-மத்திய டெக்சாசில் உள்ள குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    அப்பகுதியில் 25 செ.மீ. மழை பெய்தது. சில மாதங்கள் பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களில் பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குவாடலூப் நதி நீர்மட்டம் 2 மணி நேரத்தில் பல அடி உயர்ந்தது.

    இதனால் ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இந்த திடீர் வெள்ளத்தில் வீடுகள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பலர் வீடுகளின் மேற்கூரையில் தஞ்சம் அடைந்தனர்.

    இந்த நிலையில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 24 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் நடந்த கோடைக்கால முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு இருந்தனர். அவர்களில் 23 சிறுமிகள் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மீட்புப் பணியில் 400 அவசரகால பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    9 மீட்புக் குழுக்கள், 14 ஹெலிகாப்டர்கள் மற்றும் 12 டிரோன்கள், படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எந்த வானிலை முன்னறிவிப்புமின்றி திடீரென கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

    • இருவரும் ஒருவரையொருவர் கழுத்தைப் பிடித்து சண்டையிடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
    • தனது கட்சிக்காரர் மத நம்பிக்கைகளின்படி தியானம் செய்வது எவன்ஸ்க்கு பிடிக்கவில்லை.

    அமெரிக்க விமானத்தில் சக பயணி ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஜூன் 30 அன்று பிலடெல்பியாவிலிருந்து மியாமிக்கு ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஷான் சர்மா (21), தனக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த கீனு எவன்ஸைத் தாக்கினார். இருவரும் ஒருவரையொருவர் கழுத்தைப் பிடித்து சண்டையிடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    இஷான் சர்மாவின் நடத்தை விசித்திரமானது என்றும் தன்னை மிரட்டியதாகவும் கீனு எவன்ஸ் போலீசாரிடம் தெரிவித்தார்.

    சர்மா தன்னை மிரட்டுவதை நிறுத்தாதபோது தான் உதவிக்கான பொத்தானை அழுத்தியதாகவும், அதன் பிறகு சர்மா தன்னை தாக்கி தொண்டையைப் பிடித்ததாகவும் எவன்ஸ் விளக்கினார். தற்காப்புக்காக தான் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது என்று அவர் கூறினார்.

    விமானம் மியாமியில் தரையிறங்கியவுடன் இஷான் சர்மாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது தாக்குதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இருப்பினும்,  நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, சர்மாவின் வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் தனது மத நம்பிக்கைகளின்படி தியானம் செய்வது எவன்ஸ்க்கு பிடிக்கவில்லை என்றும், அதனால்தான் சண்டை வெடித்ததாகவும் கூறினார். இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. 

    ×