என் மலர்
உலகம்
- அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார்.
- அவருக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மாஸ்கோ:
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். இதையடுத்து, இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரும் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒரு ஆயுதமேந்திய நபர் அவரை படுகொலை செய்ய முயன்றபோது அவரது தைரியத்திற்காக அவரைப் பாராட்டினார், மேலும் மாஸ்கோ குடியரசுக் கட்சியுடன் உரையாடத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
ஜூலை 14 அன்று பென்சில்வேனியாவில் நடந்த கொலை முயற்சியின் போது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒரு உண்மையான மனிதனைப் போலவே செயல்பட்டார்.
என் கருத்துப்படி, அவர் மிகவும் சரியாக, தைரியமாக, ஓர் உண்மையான மனிதனைப் போல நடந்துகொண்டார். நீங்கள் தேர்தலில் வென்றதற்கு வாழ்த்து தெரிவிக்க இந்த வாய்ப்பை நான் பயன்படுத்துகிறேன்.
எதிர்கால டிரம்ப் நிர்வாகம் விரும்பினால் தொடர்பைத் தொடர தயாராக உள்ளேன் என தெரிவித்தார்.
- வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது.
- ஷேக் ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
டாக்கா:
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதையடுத்து வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. ஷேக் ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கதேசத்தில் செயல்பட்டு வரும் மனித உரிமை ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 5 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் கமால் உதின் அகமது மற்றும் 5 பேர் தங்களது ராஜினாமா கடிதங்களை அந்நாட்டு அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட 3 மாதங்கள் கழித்து தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
2022-ம் ஆண்டு தேசிய மனித உரிமை ஆணையத்தை அந்நாட்டு முன்னாள் அதிபர் அப்துல் ஹமித் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
- மின்சார நிறுத்தத்தால் ஏராளமான தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
அபுஜா:
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சமீப காலமாக மின் உற்பத்தி குறைந்து வருகிறது. அதன்படி மின் உற்பத்தி 4 ஆயிரம் மெகா வாட்டாக குறைந்தது.
அபுஜா, லாகோஸ் மற்றும் கனோ ஆகிய நகரங்களில் மின்சாரம் தடைபட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். ஏராளமான தொழிற்சாலைகளும் இந்த மின் நிறுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்த ஆண்டில் இது 10-வது நாடுதழுவிய மின் நிறுத்தம் ஆகும்.
இதுகுறித்து மின்சாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பவர் கிரிட் செயலிழந்ததால் போதுமான மின் உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை மறு சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
- சுனிதா வில்லியம்சின் உடல் எடை குறைந்ததாக வெளியான தகவலை நாசா மறுத்துள்ளது.
- சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட அனைவரும் நலமுடன் உள்ளனர் என தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:
நாசா திட்டத்தில் கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர். விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இருவரும் பல மாதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவ்ரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்சின் உடல் எடை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது என்றும், மன அழுத்தத்தில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் இந்த தகவலை நாசா மறுத்துள்ளது.
இந்நிலையில், நாசா அமைப்பின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள அனைத்து விண்வெளி வீரர்களுக்கும் வழக்கமாக மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட அனைவரும் நலமுடன் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
- சவுதி அரேபியாவில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல காட்சி அளிக்கிறது.
- அரபி கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே இந்த பனிபொழிவிற்கு காரணம்
சவுதி அரேபியாவின் அல்-ஜாவ்ஃப் பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல இருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சவுதி அரேபிய பாலைவனத்தில் முதல் முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
அரபி கடலில் இருந்து உருவாகி ஓமன் வரை நீண்டு இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே இந்த பனிபொழிவிற்கு காரணம் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளித்த பாலைவனத்தில் தற்போது பனிப்பொழிவும் நிகழ்ந்துள்ளது.
- இந்திய தூதரக அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கனடா கூறியது.
- விண்ணப்பதாரர்களுக்கு வாழ்க்கைச் சான்றிதழ் வழங்க திட்டமிடப்பட்ட தூதரக முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒட்டாவா:
கனடாவில் வசித்த காலிஸ்தான் அமைப்பு தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் இவ்விவகாரத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கனடா கூறியது. இதற்கிடையே கனடாவின் பிரம்ப்டன் நகரில் இந்து கோவிலுக்குள் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகுந்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த நிலையில் கனடாவில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த தூதரக முகாம்களை பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்துள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கு வாழ்க்கைச் சான்றிதழ் வழங்க திட்டமிடப்பட்ட தூதரக முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து இந்திய தூதரகம் கூறும்போது,
"சமூக முகாம் அமைப்பாளர்களுக்கு பாதுகாப்பு ஏஜென்சிகள் தங்களது குறைந்தபட்ச பாதுகாப்பை வழங்க முடியாததால் திட்டமிடப்பட்ட சில தூதரக முகாம்களை ரத்து செய்ய துணைத் தூதரகம் முடிவு செய்துள்ளது. உள்ளூர் இணை அமைப்பாளர்களின் முழு ஒத்துழைப்புடன் எங்கள் துணைத் தூதரகங்களால் ஏற்பாடு செய்யப்படும் வழக்கமான தூதரகப் பணிகளுக்கு இதுபோன்ற இடையூறுகள் அனுமதிக்கப்படுவதைப் பார்ப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்திய குடிமக்கள் உள்பட விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பில் நாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
- விமானத்தில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மெசா காவல் துறை தெரிவித்துள்ளது.
- விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் சிறிய ரக விமானம் கீழே விழுந்து வாகனத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
அரிசோனா விமான நிலையத்தில் ஹோண்டா HA-420 ரக ஜெட் விமானம் நேற்று மாலை 4.40 மணியவில் புறப்பட முயன்றபோது விமான நிலையத்தின் சுற்றுப்புற வேலி மீது மோதி, அருகில் இருந்த வாகனங்கள் மீதும் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
விமானம் விழுந்த வேகத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதில், 12 வயது சிறுவன் உள்பட 5 பேர் தீயில் கருகி உயிரழிந்தனர்.
இதில், விமானத்தில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மெசா காவல் துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில், அரிசோனாவைச் சேர்ந்த ஸ்பென்சர் லிண்டால், 43, ரஸ்டின் ராண்டால், 48, ட்ரூ கிம்பால், 44 மற்றும் கிரஹாம் கிம்பால், 12 என அடையாளம் காணப்பட்டனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஐந்தாவது நபர் உயிர் தப்பியதாகவும், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிய வாகனத்தின் ஓட்டுனரும் உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
- அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
- பாலஸ்தீன போரை நீங்கள் நிறுத்துவீர்கள் என்று எனக்கு தெரியும்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்து, உடனே வாக்குகளை எண்ணும் பணிகளும் துவங்கின. அமெரிக்காவில் அதிபர் பதவியை பெற வேட்பாளர் குறைந்தபட்சம் 270 எலக்டோரல் வாக்குகளை பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.
அந்த வகையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து முன்னணியில் இருந்து வந்த குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 295 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை வென்றுள்ளார். வெற்றி பெற்றதை அடுத்து அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
டொனால்டு டிரம்ப் இரண்டவாது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூன் 2 ஆம் தேதி எடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் வாக்கு சேகரிப்பின் அங்கமாக டொனால்டு டிரம்ப் யு.எஃப்.சி. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, யு.எஃப்.சி. வீரர் கபீப் நூர்மகோமெடோவை சந்தித்து பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வீடியோவின் படி முதலில் பேசிய கபீப், "டொனால்டு டிரம்ப்-இடம் பாலஸ்தீன போரை நீங்கள் நிறுத்துவீர்கள் என்று எனக்கு தெரியும்," என்றார். இதற்கு பதில் அளித்த டொனால்டு டிரம்ப், "நாம் நிறுத்துவோம். நான் போரை நிறுத்துவேன்," என்று தெரிவித்தார்.
தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம் விரைந்து நடக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், டிரம்ப் கொடுத்த வாக்குறுதி தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் கொடூர தாக்குதலை நடத்தியது. இதில் இஸ்ரேலை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் விடாமல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் காரணமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தெரிகிறது.
- கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த டோனியை டிரம்ப் கோல்ப் விளையாட அழைத்தார்.
- டிரம்புடன் இணைந்து டோனி சிறிது நேரம் கோல்ப் விளையாடினார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்ற நிலையில், டோனி- டிரம்ப் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. டோனி கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த போது டோனியை கோல்ப் விளையாட வருமாறு முன்னாள் அதிபர் டிரம்ப் அழைத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று பெட்மின்ஸ்டர் பகுதியில் உள்ள டிரம்ப் நேஷனல் கோல்ப் கிளப்புக்கு டோனி சென்றார்.
அப்போது டிரம்புடன் இணைந்து டோனி சிறிது நேரம் கோல்ப் விளையாடினார். அப்போது இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படத்தை தற்போது மீண்டும் டோனியின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
மேலும் டோனியின் ஜெர்சி எண்-7 உடன் டிரம்பின் வெற்றியை இணைத்து மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், தேர்தல் நடைபெற்ற நாள் 6-11-2024. 6+1+1+2+2+4= 16, 1+6=7. இந்த காரணத்திற்காக தல என பதிவிட்டுள்ளார்.
- தேர்தலில் டிரம்புக்காக எலான் மஸ்க் சுமார் ரூ.1,000 கோடியை செலவிட்டார்.
- எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் 13 சதவீதம் உயர்ந்து 286.10 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது.
அதிபர் தேர்தலில் டிரம்புக்கு உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்தார். எக்ஸ் வலைதளத்தில் டிரம்புக்கு ஆதரவாக தினமும் கருத்துக்களை பதிவிட்டார். மேலும் டிரம்ப் பிரசாரத்துக்காக நன்கொடையை வாரி வழங்கினார். இதற்கிடையே தேர்தலில் டிரம்புக்காக எலான் மஸ்க் சுமார் ரூ.1,000 கோடியை செலவிட்டார்.
இந்த நிலையில் டிரம்பின் வெற்றிக்கு பிறகு எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு உயர்ந்தது. அவரது சொத்து மதிப்பு 20.5 பில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.1.68 லட்சம் கோடி) அதிகரித்து 285.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன்மூலம் சொத்து மதிப்பு 7.73 சதவீதம் உயர்ந்துள்ளது.
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் 13 சதவீதம் உயர்ந்து 286.10 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது. இதேபோல் அவரது மற்ற நிறுவன பங்குகளின் விலையும் கணிசமான அளவுக்கு உயர்ந்தன. டிரம்ப் தனது பிரசாரத்தின்போது, தான் அதிபராக வெற்றி பெற்றால் எலான் மஸ்க்குக்கு மந்திரி பதவி அல்லது ஆலோசகர் பதவி வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தேர்தலின் முடிவு நாம் விரும்பியது, போராடியது, எதற்காக வாக்களித்தோம் என்பதற்கானது அல்ல.
- அமைதியான முறையில் அதிகார மாற்றத்தில் ஈடுபடுவோம் என்றும் நான் ட்ரம்பிடம் கூறினேன்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் இந்திய நேரப்படி நேற்று உரையாற்ற இருந்தார். ஆனால் தோல்வியை நோக்கி சென்றதால் உரையாற்றவில்லை.
இந்த நிலையில் இன்று அதிகாலை கமலா ஹாரிஸ் உரையாற்றினார். அப்போது கமலா ஹாரிஸ் கூறியதாவது:-
* ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் சம நீதிக்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிட மாட்டோம்
* நமது சுதந்திரத்திற்காக போராடுவது கடின உழைப்பை எடுக்கும். ஆனால் நான் எப்போதும் சொல்வதுபோல் நாங்கள் கடின உழைப்பை விரும்புகிறோம். நம் நாட்டிற்கான போராட்டம் எப்போதும் மதிப்புக்குரியது
* சில நேரங்களில் போராட்டத்தில் வெற்றி கிடைக்க சிறிது நேரம் எடுக்கும். ஆனால் நாம் வெற்றிபெற மாட்டோம் என்று அர்த்தமல்ல. முக்கிய விஷயம் என்னவென்றால், ஒருபோதும் கைவிடாதீர்கள்.
* இந்த தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டாலும் பிரசாரத்திற்கு தூண்டிய போராட்டத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ளமாட்டேன்.
* அனைத்து மக்களின் சுதந்திரம், வாய்ப்பு, நியாயம் மற்றும் கண்ணியத்திற்கான போராட்டம் தொடரும்.
* இன்று முன்னதாக, நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புடன் பேசினேன், அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன்
* டிரம்ப் மற்றும் அவரது குழுவின் மாற்றத்திற்கு நாங்கள் உதவுவோம் என்றும் அமைதியான முறையில் அதிகார மாற்றத்தில் ஈடுபடுவோம் என்றும் நான் ட்ரம்பிடம் கூறினேன்
* தேர்தலில் போட்டியிட்டது பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
* இந்தத் தேர்தலின் முடிவு நாம் விரும்பியது, போராடியது, எதற்காக வாக்களித்தோம் என்பதற்கானது அல்ல.
* முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்
* நாம் போராடும் வரை அமெரிக்காவின் வாக்குறுதி வெளிச்சம் எப்போதும் பிரகாசமாக எரியும்.
இவ்வாறு கமலா ஹாரிஸ் தனது உரையின்போது தெரிவித்தார்.
- நாங்கள் சண்டையை தொடங்கப் போவதில்லை. சண்டையை நிறுத்த போகிறோம்- டிரம்ப்.
- உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவார் என எதிர்பார்ப்பு.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டொனால்டு டிரம்ப் நிர்வாகம் வெளியுறவுக் கொள்கையில் எவ்வாறு செயல்பட இருக்கிறது என்பதை உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
தற்போது உக்ரைன்- ரஷியா இடையேயும், இஸ்ரேல்- காசா, இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையேயும் சண்டை நடைபெற்று வருகிறது. நேற்றைய வெற்றி உரையில் நாங்கள் சண்டையை தொடங்கப் போவதில்லை. சண்டையை நிறுத்த போகிறோம் எனத் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனால் உக்ரைன்- ரஷியா இடையிலான சண்டை முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்வோம். ஆனால் எங்களுடைய நிலைமைகள் (conditions) மாற்றப்படவில்லை. ரஷியா தங்கள் நாட்டின் நலனில் உறுதியாக நிலைத்துகிறது. உக்ரைன் மோதலில் தங்களுடைய இலக்கை அடையும் வகையில் செயல்படுவோம் எனத் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் உக்ரைனுக்கு எதிராக போர் தொடரும் என்பதை ரஷியா மறைமுகமாக தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்க மிகப்பெரிய அளவில் ஆயுதங்கள் வழங்கி வருகிறது. டொனால்டு டிரம்ப் அதிபர் ஆனதும் இது தொடருமா? என்பது வைத்துதான் உக்ரைன்- ரஷியா போர் அடுத்த கட்டத்திற்கு செல்லும்.






