என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சப்தம் திரைப்படம் நேற்று (பிப்ரவரி 28) ரிலீசாக இருந்தது.
    • கடன் பிரச்சனையால் சப்தம் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

    2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். இயக்குனர் அறிவழகனுக்கு 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதற்கடுத்து நகுல் நடிப்பில் வெளிவந்த 'வல்லினம்' மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த 'பார்டர்', 'குற்றம் 23' திரைப்படத்தை அறிவழகன் இயக்கினார்.

    'ஈரம்' படத்திற்கு பிறகு ஆதி- அறிவழகன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவான சப்தம் திரைப்படம் இன்று வெளியானது.

    சப்தம் திரைப்படம் நேற்று (பிப்ரவரி 28) ரிலீசாக இருந்த நிலையில், கடன் பிரச்சனையால் அப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில், சப்தம் படம் இன்று ரிலீசானது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இந்த வார தொடக்கத்தில் கேரள மாநிலம் கண்ணூரில் அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரியாக இருந்தது.
    • மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 38 டிகிரி வெயில் அடித்தது.

    புதுடெல்லி:

    கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயில் வறுத்தெடுக்க தொடங்கி உள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் இயல்பை விட வெயில் அதிகமாக இருந்ததாக அகில இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    1901-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே போன்று வெயில் கொளுத்தியது. 124 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தான் பிப்ரவரியில் வெப்பநிலை அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது. இந்த மாதத்தில் சராசரியாக 22.04 டிகிரி வெயில் பதிவானது. இது இயல்பை விட 1.34 டிகிரி வெயில் அதிகமாகும். கொங்கன் மற்றும் கர்நாடக கடலோர பகுதி மற்றும் கேரளாவில் சில பகுதிகளில் அதிக வெப்பம் பதிவானது.

    இங்கு இயல்பை விட 4-ல் இருந்து 8 டிகிரி வரை அதிக வெயில் இருந்தது. இந்த வார தொடக்கத்தில் கேரள மாநிலம் கண்ணூரில் அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரியாக இருந்தது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 38 டிகிரி வெயில் அடித்தது.

    இந்த ஆண்டை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வடகிழக்கு மாநிலங்கள், வட மாநிலங்கள், தென் மேற்கு இந்திய பகுதிகளில் கடந்த ஆண்டுகளை விட வெப்ப அலை அதிகமாக வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இயல்பை விட அதிக வெயில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மார்ச் மாத இறுதியில் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் கோதுமை உள்ளிட்ட பயிர்கள் அறுவடை நடைபெறும். இந்த ஆண்டு வெயில் அதிகரிக்கும் என்பதால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

    ஏற்கனவே கோதுமை உற்பத்தி கடந்த 3 ஆண்டுகளாக குறைந்து வருவதால் அதன் விலை மேலும் அதிகரிப்பதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.

    • கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரர் கோவிலுக்கு சென்று திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
    • விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர்.

    தமிழக கர்நாடக எல்லையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிந்தனர்.

    ஈரோடு மாவட்டம் தாளவாடியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் விபத்தில் உயிரிழந்தனர். கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரர் கோவிலுக்கு சென்று திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர். 5 பேரும் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகபட்சமாக 07.02.2025 அன்று 3,56,300 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
    • Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்றுகொள்ளலாம்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில்பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம்செய்துள்ளனர். அதிகபட்சமாக 07.02.2025 அன்று 3,56,300 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    2025, பிப்ரவரி மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 14,80,150 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 936 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 6,046 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப்பயன்படுத்தி 37,56,385 பயணிகள் (Online QR 1,52,615; Paper QR 18,34,474; Static QR 2,68,084; Whatsapp - 6,14,516; Paytm 4,18,839; PhonePe – 3,40,151; ONDC – 1,27,706),சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 34,22,286 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர்குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), Whatsapp, Paytm App,PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20%கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்றுகொள்ளலாம்.

    மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்புநல்கி வரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • பெண்கள் தொடர்பாக அயோக்கியர்கள் கூட பேசத் தயங்கும் வார்த்தைகளை சீமான் கூச்சமின்றி பேசியிருக்கிறார்.
    • சீமானை ஆதரிக்கும் பிள்ளைகளை அவரின் பிடியிலிருந்து விடுவிப்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது.

    நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடபழனி விடுதியில் இருந்து தனது வழக்கறிஞர்களுடன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜாரானார்.

    இதனிடையே, பாலியல் புகார் குறித்து சீமான் கொச்சையாக தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், சீமானின் இத்தகைய பேச்சுக்கு மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி சுதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "தான் ஒரு மோசமான அரசியல்வாதி மட்டுமல்ல அநாகரீகமான மனிதர் என மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் சீமான். பெண்கள் தொடர்பாக பொதுவெளியில், அயோக்கியர்கள் கூட பேசத் தயங்கும் வார்த்தைகளை கூச்சமின்றி பேசியிருக்கிறார்.

    முதலில் இந்த வழக்கு அரசியல்ரீதியான வழக்கு என்ற வாதமே பொய். சீமான் மீது ஒரு நடிகை புகார் தருகிறார்; நீண்ட நாட்களாக வழக்கு நிலுவையில் இருக்கிறது. வழக்கை ரத்து செய்யுங்கள் என சீமானேதான் நீதிமன்றம் சென்றார்.

    விசாரணை முடிவில், புகாரில் முகாந்திரம் இருப்பதை அறிந்து 12 வாரத்திற்குள் விசாரிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் இப்போது நீதிபதிக்கும் உள்நோக்கம் கற்பித்துக் கொண்டிருக்கிறார் சீமான்.

    சாமானிய மக்களுக்கான கடைசி நம்பிக்கையாக இப்போது வரை நீதிமன்றங்களும், நீதிபதிகளும்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உள்நோக்கம் கற்பிப்பது மூலம் எதை சாதிக்க விரும்புகிறார் சீமான்?.

    நீதிமன்ற அவமதிப்பெல்லாம் வராது என்ற உத்தரவாதம் எதுவும், எங்கிருந்தாவது கிடைத்ததா?

    எல்லாவற்றிற்கும் மேல், வயசுக்கு வந்த பெண்ணையா கற்பழித்தேன் என பெண்களை சுற்றி உட்கார வைத்துக் கொண்டு எள்ளலான உடல் மொழியில் பேசியது. பெண்களுக்கு எதிரான வன்முறையை இயல்பான ஒன்றாகப் பார்க்கும், இயல்பான ஒன்றாக மாற்றும் வக்கிர புத்தி அதில் ஒன்றுமில்லை.

    பெண்களைச் சுற்றி உட்கார வைத்துக் கொண்டு பேசியதன் மூலம், சமூகத்திற்கு என்ன சொல்ல நினைக்கிறார் சீமான்?.

    50%க்கு மேல் பெண்கள் வசிக்கும் ஒரு மாநிலத்தில் உட்கார்ந்து கொண்டு, பெண்மையைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார் சீமான். தமிழ்ச்சமூகத்தில் இடம் கொடுக்கப்படாமல் அவர் விரட்டப்பட வேண்டும்.

    பெரியார் தொடர்பில் ஆதாரமின்றி அவதூறாக சீமான் பேசிய போது, அவர் எங்கள் Theme Partner என்று சொன்ன தமிழிசை சௌந்தரராஜன் இப்போது என்ன சொல்லப் போகிறார்?. Theme Partnerன் கருத்தை ஆதரிக்கிறாரா?

    அவர் பேசிய பேச்சுகள், எந்த நாகரீக சமூகத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. நாம் தமிழர் கட்சியில் இருக்கும் பெண்கள், அந்தக் கட்சியை ஆதரிக்கும் பெண்கள் இனியும் இந்த வக்கிரவாதிக்கு ஆதரவு கொடுப்பதா என சிந்திக்கட்டும்.

    சீமானை ஆதரிக்கும் தம்பிகளின் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை சீமான் பிடியிலிருந்து விடுவிப்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது" என்று பதிவிட்டுள்ளார். 

    • நாட்டு சர்க்கரை ரேஷன் கடையில் விற்க வேண்டும்.
    • 30,000 காவிரி பல்பொருள் அங்காடிகளை நிர்வகிக்க ஒரு லட்சம் புதிய பணியாளர்கள் நியமனம்.

    சென்னை:

    பா.ம.க. சார்பில் 18-வது ஆண்டாக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். அதில்,

    * வேளாண்துறையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வேண்டும்.

    * நாட்டு சர்க்கரை ரேஷன் கடையில் விற்க வேண்டும்.

    * பயிர்க்காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.30,000 கோடி செலவிடப்படும்.

    * வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.22,500 கோடி ஒதுக்கப்படும்.

    * ரூ.12,500 கோடி உழவர்கள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.

    * 30,000 காவிரி பல்பொருள் அங்காடிகளை நிர்வகிக்க ஒரு லட்சம் புதிய பணியாளர்கள் நியமனம்.

    * பருப்பு, எண்ணெய் வித்து உற்பத்தியை பெருக்க சிறப்புத் திட்டம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    • வெடிகுண்டு மிரட்டலையடுத்து டெல்லி காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
    • தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    டெல்லியில் உள்ள தமிழ்நாடு பொதிகை அரசு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து டெல்லி காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    டெல்லி காவல் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கடந்த 2024-ம் ஆண்டில் ஜப்பானில் மொத்தம் 7,20,988 குழந்தைகளே பிறந்ததாக அரசு தெரிவித்துள்ளது.
    • குழந்தை பிறப்பை அதிகரிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் பலன் தரவில்லை.

    ஜப்பானில் மக்கள் தொகை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இதையடுத்து குழந்தை பிறப்பை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் அந்த நாட்டில் தொடர்ந்து 9-வது ஆண்டாக மக்கள் தொகை சரிவை சந்தித்துள்ளது.

    கடந்த 2024-ம் ஆண்டில் ஜப்பானில் மொத்தம் 7,20,988 குழந்தைகளே பிறந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இதனால் குழந்தை பிறப்பை அதிகரிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் பலன் தரவில்லை என்று ஜப்பான் அரசின் செய்தித் தொடர்பாளர் யோஷிமசா ஹயாஷி தெரிவித்தார். அங்கு திருமண வாழ்க்கை நடைமுறையை இளைஞர்கள் விரும்பாததே குழந்தை பிறப்பு குறைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

    • சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன
    • இந்தியாவுக்கு 'தேசிய மொழி' என எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தி திணிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவு இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

    அவரது பதிவில், "மற்ற மாநிலங்களைச் சேர்ந்த என் அன்பான சகோதரிகளே, சகோதரர்களே,

    இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கிவிட்டிருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? போஜ்புரி, மைதிலி, அவதி, பிரஜ், பண்டேலி, கர்வாலி, குமாவோனி, மகாஹி, மார்வாரி, மால்வி, சத்திஸ்கர், சந்தாலி, அங்கிகா, ஹோ, காரியா, கோர்தா, கூர்மாலி, குருக், முண்டாரி மற்றும் இன்னும் பல இப்போது உயிர்வாழ்வதற்காக மூச்சுத் திணறுகின்றன.

    ஒற்றைக்கல் (monolithic) இந்தி அடையாளத்திற்கான அழுத்தம் பண்டைய தாய்மொழிகளைக் கொல்கிறது. உ.பி. மற்றும் பீகார் ஒருபோதும் வெறும் "இந்தி இதயப்பகுதிகள்" அல்ல. அவற்றின் உண்மையான மொழிகள் இப்போது கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்கள்.

    இது எங்கே முடிகிறது என்பது நமக்குத் தெரியும் என்பதால் தமிழ்நாடு எதிர்க்கிறது. தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது! சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன" என்று பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு குறித்து பேசிய மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், "சிலர் தங்களது அரசியல் ஆசைகளை நிறைவேற்ற அரசியல் கருத்துக்களை கூறுகிறார்கள். இந்தியாவின் தேசிய மொழியான இந்தி, நிச்சயமாக முழு நாட்டையும் ஒற்றுமையின் நூலில் இணைக்கும்" என்று தெரிவித்தார்.

    இந்தியாவுக்கு 'தேசிய மொழி' என எதுவும் இல்லை எனும் நிலையில், மத்திய அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

    • தொண்டர்கள் ஒவ்வொருவரும் நீண்ட வரிசையில் நின்று பரிசுப் பொருட்கள் வழங்கி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
    • பல்வேறு பரிசுப்பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார்கள்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார்.

    இதையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினுக்கும் குடும்பத்தார் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அவர்களது முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.

    அப்போது மகன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் மற்றும் பேரக்குழந்தைகள் உடன் இருந்து வாழ்த்து தெரிவித்தனர். அங்கு வந்திருந்த மூத்த அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். அதன் பிறகு கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி வணங்கினார்.



    அப்போது தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி., முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சிவசங்கர், ஜெகத்ரட்சகன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மு.பெ.சாமிநாதன், கணேசன், ஆவடி நாசர், வாரிய தலைவர் ப.ரங்கநாதன், எம்.எல்.ஏ.க்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், விருகம்பாக்கம் ஏ.எம்.வி.பிரபாகரராஜா, தமிழச்சி தங்கபாண்டின், புழல் நாராயணன், சேப்பாக்கம் மதன்மோகன், சென்னை மேயர் பிரியா, படப்பை மனோகரன், கலாநிதி வீராசாமி, கலைஞரின் உதவியாளர் நித்யா, பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு. ரஞ்சன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி கருணாநிதியின் நினைவிடத்தில் உதயசூரியன் வடிவில் வண்ண வண்ண பூக்கள் அலங்காரத்துடன் மக்கள் முதலமைச்சரின் மனித நேய நாள் என்று வாசகம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

    இதன் பிறகு பெரியார் திடலுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.



    பெரியார் திடலில் உள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    பின்னர் அங்கிருந்து கோபாலபுரம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார். தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். அங்கிருந்து சி.ஐ.டி. காலனி இல்லத்துக்கு சென்று கருணாநிதி படத்திற்கு மலர் தூவி வணங்கினார். அங்கு ராஜாத்தி அம்மாளை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது கனிமொழி உடன் இருந்தார்.

    அதன் பிறகு 10 மணியளவில் அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு மேளதாளம் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சிமுருகன், துறைமுகம் காஜா உள்ளிட்ட நிர்வாகிகள் வாசலில் நின்று வரவேற்றனர்.

    அதன் பிறகு சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு ஏற்பாட்டில் பிரமாண்ட 'கேக்' கொண்டு வரப்பட்டது. அப்போது தலைமை கழக முன்னணி நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது நிர்வாகிகள் மத்தியில் 'கேக்' வெட்டினார்.

    அதை பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு வழங்கினார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உடன் இருந்தனர்.

    அதன் பிறகு கலைஞர் அரங்கம் சென்றார். அங்கு கூடி இருந்த தொண்டர்கள் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்ததும் விண்ணதிர பிறந்தநாள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.

    அப்போது அங்கு வந்திருந்த அமைச்சர்கள், தொண்டர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி வாசித்தார். அதை அனைவரும் திரும்ப வாசித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    * தமிழ்நாட்டின் நலன்களையும் எதிர்காலத்தையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம்.

    * தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம்.

    * தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். இதுதான் ஒரே இலக்கு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். தொண்டர்கள் ஒவ்வொருவரும் நீண்ட வரிசையில் நின்று பரிசுப் பொருட்கள் வழங்கி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    மாலைகள், புத்தகங்கள், வீரவாள்கள், பழங்கள், பூக்கூடைகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார்கள்.

    • பிரதமர் மோடி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    • நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், 

    மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கங்களும், அன்பான வாழ்த்துகளும். நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதேபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    அரசியலமைப்பை பாதுகாக்கவும் ஜனநாயக கொள்கையை நிலைநிறுத்தவும் ஒன்றாக போராடுவோம். நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • ஸ்கைப் செயலி 50 மில்லியன் பயனாளர்களை எட்டி சாதனை புடைத்திருந்தது.
    • ஸ்கைப் செயலியின் சேவை மே 5-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் வீடியோ, ஆடியோ அழைப்புகள் மேற்கொள்வதற்காக 2003-ம் ஆண்டு ஸ்கைப் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது.

    20 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக செயல்பட்டு வந்த ஸ்கைப் செயலி 50 மில்லியன் பயனாளர்களை எட்டி சாதனை படைத்திருந்தது.

    இந்நிலையில், ஸ்கைப் செயலியின் சேவை மே 5-ம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

    ஸ்கைப் செயலுக்கு பதிலாக மைக்ரோசாப்ட் டீம் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே ஸ்கைப் பயனாளர்கள் தங்கள் விவரங்களை Microsoft Teams-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ×