என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- வரவிருக்கும் காலங்களில் திராவிட மாடல் அரசு கலைக்காக இன்னும் பல சாதனைகளை புரியும்.
- கலை நிகழ்ச்சிகள் ஜன.15-18 வரை 20 இடங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 வரை நடைபெறும்
'சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை' முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று (ஜன. 14) மாலை தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்கவிழாவில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பறை இசைத்து விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள், மேயர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
"சென்னை சங்கமம் என்பது தமிழ் சங்கமமாக, ஒட்டுமொத்த கலைஞர்களின் சங்கமமாக, வெற்றி சங்கமமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழ் கலை, பண்பாட்டு துறை இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. கலைஞர்கள் தங்கள் திறமைகளை மிக எழுச்சியுடன் பறைசாற்றியுள்ளனர். அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது சல்யூட். வரவிருக்கும் காலங்களில் திராவிட மாடல் அரசு கலைக்காக இன்னும் பல சாதனைகளை புரிய இருக்கிறது; புரியும். அதற்காக நான் இந்த இடத்தில் உறுதி அளிக்கிறேன். கலையை வளர்ப்போம், தமிழ்நாடு வெல்லும்." என தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 1,500 கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் சென்னையில் ஜன.15-18 வரை 20 இடங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 வரை நடைபெற உள்ளன.
- ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
- மின்னணுக் கழிவுகள் உள்ளிட்டவற்றை எரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டது.
போகிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களிடமிருந்து 154.17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்களைப் பெற்று அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
போகிப் பண்டிகையை முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12.01.2020 முதல் 14.012026 ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர் (Tyre) ரப்பர் ட்யூப் (Rubber Tube), நெகிழி (Plastic), காகிதக் கழிவுகள், அட்டைப் பெட்டிகள், மரக்கழிவுகள், உலோகக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள் உள்ளிட்டவற்றை எரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டது.
மேலும், இதுகுறித்து பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களில் உள்ள ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12.01.2026 முதல் 14.012026 வரை 154.17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு பெறப்பட்ட பொருட்கள் மாநகராட்சியின் வள மீட்பு மையங்களில் (RRC) பிரித்தெடுக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. மேலும் பயன்படுத்த இயலாத பொருட்கள் எரியூட்டி சாம்பலாக்கும் எரியூட்டும் ஆலைக்கு (Incinerator Plant அனுப்பப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டப்படும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது.
- ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க திமுக அரசு முன்வர வேண்டும்
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 7 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று ஆசிரியர் கண்ணன் என்பவர் (ஜனவரி 13) விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் கண்ணனின் உயிரிழப்புக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில,
"பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடத்தி வந்த போராட்டத்தின் போது நஞ்சு குடித்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் மருத்துவம் பயனளிக்காமல் இன்று மாலை உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பகுதிநேர ஆசிரியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பணி நிலைப்புக் கோரிக்கையை வலியுறுத்தி 13 ஆண்டுகளாக போராடி வரும் அவர்கள், கடந்த 8ஆம் தேதி முதல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற திமுக அரசு மறுப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு எதிராக அடக்குமுறையையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது.
சென்னையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் வானகரத்தில் உள்ள திருமண அரங்கத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அடக்குமுறைகளைக் கண்டித்தும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் கண்ணன் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மருத்துவம் பயனளிக்காமல் இன்று மாலை காலமானார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், அதை நிறைவேற்றவில்லை. கடந்த ஐந்தாண்டுகளாக அவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கூட , அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு பதிலாக அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே ஆசிரியர் கண்ணன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆசிரியர் கண்ணன் உயிரிழப்புக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
இனியாவது திமுக அரசு மனசாட்சிக்கு அஞ்சி பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க திமுக அரசு முன்வர வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- இன்னசென்ட் திவ்யா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஆணையர்/சுற்றுலா மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றம்
- தமிழ்நாடு வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் விசாகன், தொழில்நுட்பக் கல்வி இயக்குனராக மாற்றம்
தமிழ்நாட்டில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள உத்தரவில், தொழில்நுட்ப கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஆணையர்/சுற்றுலா மேலாண்மை இயக்குனராகவும்,
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனராக இருந்த கிறிஸ்துராஜ், தமிழ்நாடு மாநில வாணிப கழக மேலாண்மை இயக்குனராகவும், தமிழ்நாடு வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் விசாகன், தொழில்நுட்பக் கல்வி இயக்குனராகவும், சிறப்பு திட்ட செயலாக்க துறை கூடுதல் செயலாளர் உமா மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் செயலாளர் ஆகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் செயலாளர் ரத்னா வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை கூடுதல் செயலாளர் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

- காய்கறி மார்க்கெட் வருகிற 17-ந் தேதி இயங்காது.
- பழம் மற்றும் பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் வழக்கம் போல செயல்படும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வருகிற 17-ந் தேதி (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி ராஜசேகர் கூறும்போது, விவசாய தொழிலாளர்கள் மற்றும் மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து வரும் ஊழியர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல உள்ளனர்.
இதனால் காய்கறி மார்க்கெட் வருகிற 17-ந் தேதி இயங்காது. அதேநேரம் பழம் மற்றும் பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் வழக்கம் போல செயல்படும் என்றார்.
- சென்னையில் இருந்து மட்டும் சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர்.
- அரசு சார்பில் சுமார் 25,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கடந்த 6 நாட்களில் மட்டும் சொந்த ஊர்களுக்கு ஆம்னி பேருந்துகளில் 3.35 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 9ம் தேதிகளில் இருந்து இன்று மாலை வரை 3,35,150 பயணிகள் ஆம்னி பேருந்துகளில் சென்னையில் இருந்து வெளியூர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, அரசு போக்குவரத்துக் கழக சிறப்புப் பேருந்துகள் மூலம் இதுவரை சுமார் 7 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
ரயில், அரசு பேருந்து மற்றும் ஆம்னி பேருந்துகள் என அனைத்தையும் சேர்த்தால், சென்னையில் இருந்து மட்டும் சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர்.
பொங்கல் முடிந்து ஊர் திரும்புவதற்காக (ஜனவரி 16 - 19) அரசு சார்பில் சுமார் 25,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
- சிந்தாந்தரீதியில் அதிமுகவிற்கும் எங்களுக்குள் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
- சீமானை ஏன் குறைத்து எடைப்போடுகிறீர்கள்?
டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,.
திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் போட்டி என விஜய் கூறுகிறாரே என்ற கேள்விக்கு,
தமிழ்நாட்டில் நான்கு பிரதான கட்சிகள் இருக்கின்றன. திமுக தலைமையிலான கூட்டணி இருக்கிறது, அதிமுக தலைமையிலான என்.டி.ஏ உள்ளது; தமிழக வெற்றிக்கழகம் இருக்கிறது; சீமானின் நாம் தமிழர் உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க திமுகவிற்கு எதிரான வாக்குகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் கூட்டணியை பொறுத்தவரை அனுபவம் உள்ளது; பிரதமரின் ஆசிர்வாதம் உள்ளது. ஜன.23 அன்று பிரதமரின் தேர்தல் பரப்புரை சென்னை அருகில் தொடங்க உள்ளது. அதனால் எங்களுக்கு பெரும் நம்பிக்கை உள்ளது.
தலைவர்களை தாண்டி அண்ணாமலையின் எண்ணம் என்ன, விஜய் கூட்டணிக்குள் வருவது குறித்து என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை,
நான் எதுவும் நினைக்கவில்லை. அதற்கான முடிவை தலைவர்கள் எடுப்பார்கள். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு கட்சியின் இலக்கு என்ன என்பதை பார்க்கவேண்டும். சீமானைப் பொறுத்தவரை திராவிட கட்சிகள் வேண்டாம். விஜய் திமுக வேண்டாம் என்றும் நினைத்தால், யார் வேண்டும் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். எங்களுக்குள் கொள்கை முரண்பாடு இருந்தாலும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அதிமுக-பாஜக கூட்டணி சேர்ந்துள்ளது. சிந்தாந்தரீதியில் எங்களுக்குள் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
விஜய் வந்தால் உங்கள் கூட்டணி பலம் வாய்ந்ததாகும் என தலைமையிடம் கூறுவீர்களா?
நான் தலைமையிடம் எதுவும் கூறுவதில்லை. முரண்பாடு இருப்பவர்களை அழைத்து ஒரே இடத்தில் வைத்துக் கொள்வதும் பிரச்சனைதான். எல்லாவற்றையும் ஒன்றாக குழப்பினால் கூட்டணிக்குள் கெமிஸ்ட்ரி இருக்காது. விஜய்யின் அரசியல் விஜய்க்கு, எங்களின் அரசியல் எங்களுக்கு.
நான் விஜய்யை சாதாரணமாக எடைபோடவில்லை. முதல் நாளிலிருந்து இதைக்கூறுகிறேன். அவர் ஒரு மாஸ் ஸ்டார். செங்கோட்டையன் உட்பட நிறைய தலைவர்கள் கட்சியில் இணைந்துள்ளனர். எல்லா இடங்களிலும் கிளைக்கழங்களை நிறுவிவருகின்றனர். தொண்டர்கள் களப்பணியில் உள்ளனர். அதுபோலத்தான் சீமானும். சீமானை ஏன் குறைத்து எடைப்போடுகிறீர்கள்? நாடாளுமன்ற தேர்தலில் 8.5 சதவீதம் ஓட்டு வாங்கியுள்ளார். சீமான் இந்த தேர்தலில் எவ்வளவு வாக்குவாங்குவார், வெற்றிப்பெறுவார் என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். யாரையும் லேசாக எடைப்போடக்கூடாது. எங்கள் கூட்டணி வலிமையாக உள்ளது.
சீமானின் கட்சி வலிமையானதா?
யாரையும் உதாசீனப்படுத்தக்கூடாது என்பது என்னுடைய கருத்து. எல்லோருமே தலைவர்கள். எல்லோரும் வாக்குகளை பெறுகிறார்கள். நாடாளுமன்றத்தில் ஒரு கட்சி இத்தனை சதவீதம் வாக்கு வாங்கியுள்ளது என்றால், அதனை தட்டி தூசிபோல் பேசக்கூடாது. அவர்களுக்கும் வாக்குவங்கி, வேறுபட்ட எண்ணங்கள் உள்ளன. மக்கள் மனதிலும் ஓட்டம் உள்ளது. இன்று நான்குமுனை போட்டி உள்ளது. அடுத்த அறுபது நாட்களில் 2 முனை போட்டியாக மாறும்.
பாமக, தேமுதிக குறித்து பேசாதது ஏன்?
பாமக எங்கள் கூட்டணியில் உள்ளது. தேமுதிக தனியாக போவதாக கூறுகிறார். மருத்துவர் ராமதாஸ் நல்லமுடிவை எடுப்பார். அதுபோல பிரேமலதா விஜயகாந்தும் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன்." என தெரிவித்தார்.
- அனைத்து தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- கிராமப்புற வாழ்க்கையின் இதயமாக உள்ள கால்நடைகளின் புனிதத்தைக் கொண்டாடுகிறோம்.
உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் திருநாளில், உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அறுவடைத் திருநாளை நாம் கொண்டாடும் வேளையில், நமது பண்ணைகளை நிலைப்படுத்தவும், நம் குடும்பங்களை வளர்த்தெடுக்கவும், நமது எதிர்காலத்தை வடிவமைக்கவும் ஏராளமான ஆசீர்வாதங்களை வழங்கும் பூமித் தாய் மற்றும் சூரிய கடவுளுக்கு நமது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திறமையும், பக்தியும், விடாமுயற்சியும் நிலத்தை வளமாக்கி, வாழ்வை நிலைநிறுத்தும் நமது விவசாய சமூகத்தை இந்நாளில் வணங்குகிறோம்.
இத்துடன், மாட்டுப் பொங்கலில் பங்கெடுத்து, பண்டிகை உணர்வில் கலந்து, விவசாயம் மற்றும் கிராமப்புற வாழ்க்கையின் இதயமாக உள்ள கால்நடைகளின் புனிதத்தைக் கொண்டாடுகிறோம்.
பழங்கால பாரம்பரியங்களில் வேரூன்றி, தலைமுறை தலைமுறையாக முன்னெடுக்கப்படும் பொங்கல் பண்டிகை, நமது பாரதிய ஆன்மிகம் மற்றும் கலாசார பாரம்பரியத்தின் பெருமைமிக்க கொண்டாட்டமாகும். இது எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது.
காணும் பொங்கல் நன்னாளில் மகிழ்ச்சியுடன் ஒன்றுகூடி பண்டிகை உணர்வுடன் ஒன்றுபட்டு, ஒரே ஒருமைப்பாட்டின் பல்வேறு விதத்தை பிரதிபலிக்கிறோம் - அதுவே ஒரே பாரதம் உன்னத பாரதம்!
இந்த பொங்கல் ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, புதுப்பிக்கப்பட்ட செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை நிரப்பி, ஒற்றுமை, அமைதி மற்றும் முன்னேற்றத்தின் உணர்வை வலுப்படுத்தி, 2047-ஆம் ஆண்டுக்குள் நம்மை ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி வழிநடத்தட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த 9-ந்தேதி முதல் நேற்று நள்ளிரவு வரை, மொத்தம் 15 ஆயிரத்து 762 பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன.
- இதுவரை 2 லட்சத்து 73ஆயிரத்து 152 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை:
தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்களின் பயண வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நேற்று நள்ளிரவு 24 மணி நேர நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 2,238 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. மொத்தம் 4,390 பஸ்கள் இயக்கப்பட்டு, 2 லட்சத்து 1940 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 9-ந்தேதி முதல் நேற்று நள்ளிரவு வரை, மொத்தம் 15 ஆயிரத்து 762 பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன. இதில் மொத்தம், 6 லட்சத்து 90ஆயிரத்து 720 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், இதுவரை 2 லட்சத்து 73ஆயிரத்து 152 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பொங்கல் திருநாள் பயண காலத்தில், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே, கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் ஆர். மோகன் தெரிவித்து உள்ளார்.
- 100 நாள் வேலைத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கிறது.
- தமிழக முதலமைச்சர் மேற்கொண்ட தொடர் அழுத்தம் மற்றும் போராட்டத்தின் விளைவாக குறைவான தொகை தற்போது பெறப்பட்டுள்ளது.
வத்தலகுண்டு:
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே உள்ள மருதாநதி அணையில் இருந்து விவசாய பாசனம் மற்றும் குடிநீருக்காக, அய்யம்பாளையம், சித்தரேவு, தேவரப்பன்பட்டி, சேவுகம்பட்டி, கோம்பைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு 17-ம் தேதி வரை 5 நாட்களுக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆட்சியில் பங்கு கேட்பது தொடர்பாக நான் ஏற்கனவே எனது விளக்கத்தை முழுமையாகக் கூறிவிட்டேன். இதுபோன்ற கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கே உள்ளது. அவர்தான் இதுகுறித்து இறுதி முடிவை அறிவிப்பார். 100 நாள் வேலைத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கிறது. மத்திய அரசு வழங்க வேண்டிய சுமார் 4,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. தமிழக முதலமைச்சர் மேற்கொண்ட தொடர் அழுத்தம் மற்றும் போராட்டத்தின் விளைவாக குறைவான தொகை தற்போது பெறப்பட்டுள்ளது. ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட 100 நாள் வேலை திட்டத்தில் 'மகாத்மா காந்தி' என்ற பெயரை மத்திய அரசு நீக்கியிருப்பது கண்டனத்திற்குரியது.
ஆண்டு முழுவதும் விவசாய வேலைகள் இல்லாத சூழலில், ஏழை மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் இத்திட்டத்தில் 240 நாட்கள் கூட வேலை வழங்கப்படுவதில்லை. கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்த இத்திட்டம் முறையாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.
அமைச்சர்கள் மீது தொடரப்பட்டுள்ள சொத்துக் குவிப்பு வழக்குகள் குறித்து கேள்விக்கு, நாங்கள் அடிமட்டத்திலிருந்து வந்தவர்கள். 15 முதல் 20 முறை சிறைச்சாலைக்குச் சென்று போராடிப் பக்குவப்பட்டுத்தான் ஒன்றியச் செயலாளர், எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் நிலைக்கு உயர்ந்துள்ளோம். பதவிக் காலத்தில் நாங்கள் சேர்த்ததாகச் சொல்லப்படும் சொத்துக்களை அவர்களே எடுத்துக்கொள்ளட்டும். இதுபோன்ற வழக்குகளால் எங்களது தேர்தல் பணி மற்றும் மக்கள் பணியில் எந்தச் சுணக்கமும் பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார்.
- எடப்பாடி பழனிசாமி தங்கள் கூட்டணியில் புதிய கட்சி இணையும் என்று கூறுகிறார்.
- காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அரசுக்கு வந்த வருமானத்தை விட தற்போது பா.ஜ.க. ஆட்சி காலத்தில் அதிக அளவு வந்துள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சீமான் எதுக்கு வேண்டும் என்றாலும் பொங்கல் வைப்பார். திராவிடம் இணைந்தது தான் தமிழ்நாடு. அதனால் திராவிட பொங்கல் கொண்டாடி வருகிறோம். மகாராஷ்டிராவில் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனக்கு ஒரு ஆபத்து என்று வந்தவுடன் தமிழர்கள் மீது தாக்குதல் என்று சொல்லிவிடுவார். அண்ணாமலை பேசிய இந்தி அங்கேயும் புரியவில்லை, இங்கேயும் புரியவில்லை.
எங்களுக்கு யாராலும் நெருக்கடி கொடுக்க முடியாது. அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தவும் முடியாது. அவர்கள் கூட்டணி போகப்போக தேய்ந்து கொண்டே போகுமே தவிர, பலப்படுத்த எப்போதுமே முடியாது.
எடப்பாடி பழனிசாமி தங்கள் கூட்டணியில் புதிய கட்சி இணையும் என்று கூறுகிறார். நிறைய கட்சிகள் உருவாகி வருகிறது. லெட்டர் பேட் கட்சிகள், அந்த கட்சிகள் எல்லாம் வரும் என்று கூறி இருப்பார். ஜனநாயகனுக்கு பலரும் குரல் கொடுத்து இருக்கக்கூடிய நிலையில் அது குறித்து சம்பந்தப்பட்ட நடிகர் விஜய் குரல் கொடுக்காததை வைத்து அவருடைய தைரியத்தை தெரிந்து கொள்ளலாம்.
1965-ம் ஆண்டு நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் பராசக்தி. அன்றைய நிகழ்வுகள் இன்று எதிர்ப்பு போராட்டம். இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் மாணவர் பட்டாளம் துணிந்து எழுந்து நடத்திய போராட்டம். அப்போதுள்ள காங்கிரஸ் கட்சி வேறு, தற்போதுள்ள காங்கிரஸ் கட்சி வேறு.
காங்கிரஸ், தி.மு.க.வினருக்குள் ஆட்சியில் பங்கு தொடர்பாக தற்போது எழுந்துள்ள விமர்சனத்தால் கூட்டணிக்குள் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது. அவரவர்கள் அவர்களது விருப்ப கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அரசுக்கு வந்த வருமானத்தை விட தற்போது பா.ஜ.க. ஆட்சி காலத்தில் அதிக அளவு வந்துள்ளது. அதில் சிறு துளியை மட்டுமே தந்துள்ளனர். நிச்சயமாக அதிகமாக தொகையை அவர்கள் தரவில்லை. மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும்போது கிடைத்த நிதி தற்போது எங்களுக்கு கிடைக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தான் தமிழ்நாட்டிற்கு சாலை, கத்திப்பாரா மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கிடைத்தது.
அமித்ஷா, மோடி அடுத்தடுத்து தமிழகம் வருகை தந்தாலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவர்களுக்கு ஏமாற்றத்தத்தை தான் ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த ஆண்டு அன்புமணி பங்கேற்ற நிலையில் தற்போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அன்புமணி பங்கேற்கவில்லை.
- பொங்கல் விழாவில் ஒயிலாட்டம், சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன டாக்டர் ராமதாஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
கடந்த ஆண்டு அன்புமணி பங்கேற்ற நிலையில் தற்போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அன்புமணி இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்கவில்லை.
டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொங்கல் விழாவில் அவரது மனைவி சரஸ்வதி அம்மையார், மகள் ஸ்ரீகாந்தி, பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, டாக்டர் ராமதாசின் பேரன் முகுந்தன் மற்றும் நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர், மாவட்ட செயலாளர்கள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். இந்த பொங்கல் விழாவில் ஒயிலாட்டம், சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.






