என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்க மாட்டார் எனத் தெரிகிறது.
    • கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார். இவருடைய பயிற்சி காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. அவருடைய பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்படாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. விருப்பம் இருந்தால் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

    ராகுல் டிராவிட்டிற்கு மீண்டும் விண்ணப்பிக்க விருப்பம் இல்லை எனத் தெரிகிறது. இதனால் பெங்களூரு கிரிக்கெட் அகாடமியில் தலைமை பயிற்சியாளராக இருக்கும் விவிஎஸ் லட்சுமண் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அவரும் விருப்பம் இல்லை எனக் கூறியதாக தெரிகிறது.

    இதனால் பிசிசிஐ வெளிநாட்டு பயிற்சியாளரை விரும்புகிறது எனத் தகவல் வெளியானது. ரிக்கி பாண்டிங், பிளமிங் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என தகவல் உலா வருகின்றன.

    இதற்கிடையே கவுதம் கம்பீரை பிசிசிஐ சார்பில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியானது. இதனால் கவுதம் கம்பீர் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் பதவி மீது ஆர்வம் உள்ளதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஹர்பஜன் சிங் கூறியதாவது:-

    இந்தியின் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான வாய்ப்பு கிடைத்தால், அதில் ஆர்வம் உள்ளது. வீரர்களுக்கு டெக்னிக்கல் திறனை சொல்லிக் கொடுப்பதைவிட அணி மேலாண்மை திறன் குறித்து பயிற்சி அளிப்பததான் முக்கியம்.

    விண்ணப்பம் செய்வேனா என்பது எனக்குத் தெரியாது. இந்திய அணியின் பயிற்சி, நபரின் (வீரர்) மேலாண்மை திறன் பற்றியது. அவர்களுக்கு எப்படி டிரைவ் ஆட வேண்டும், புல் ஷாட் ஆட வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிப்பது அல்ல.

    இது அவர்களுக்கு தெளிவாகத் தெரியும். அவர்களுக்கு உங்களால் சில வழிகாட்டுதல்களை கொடுக்க முடியும். கிரிக்கெட் எனக்கு ஏராளம் கொடுத்துள்ளது. வாய்ப்பு கிடைத்தால் அதை மகிழ்ச்சியுடன் செய்வேன்.

    ஜூலை 1-ந்தேதியில் இருந்து 2027 டிசம்பர் 31-ந்தேி வரை அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் ஆகும்.

    • இவருக்கான ஏல தொகை கிடுகிடுவென உயர்ந்தது.
    • அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்று சாதனை.

    இந்தியாவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் போன்று இலங்கையில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர் இலங்கை பிரீமியர் லீக் (எல்பிஎல்) என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு இலங்கை பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று (மே 21) நடைபெறுகிறது.

    இந்த ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணி வீரரும், ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரருமான மதீஷா பதிரனா அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

     


    2024 எல்.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் மதீஷா பதிரனா 50 ஆயிரம் டாலர்கள் எனும் ஆரம்ப விலையில் பட்டியலிடப்பட்டார். இவரை வாங்குவதற்கு பல அணிகள் போட்டியிட்டன. இதன் காரணமாக இவருக்கான ஏல தொகை கிடுகிடுவென உயர்ந்தது.

    ஒரு கட்டத்தில் கொலம்போ ஸ்டிரைக்கர்ஸ் அணி மதீஷா பதிரனாவை 1 லட்சத்து 20 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 99 லட்சத்து 96 ஆயிரத்து 900 விலைக்கு தனது அணியில் எடுத்தது. அந்த வகையில், எல்.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை மதீஷா பதிரனா படைத்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானில் ஏழ்மையில் இருக்கும் குடிமக்களை இழிவுபடுத்துவதாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
    • 5 ஆண்டுகள் கேப்டனாக இருந்தும் பாபர் அசாமுக்கு எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை.

    பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் அசம் கான் ஒரு பஸ் பயணத்தின் போது சக வீரர்களுடன் 'உணர்ச்சியற்ற' வீடியோவை உருவாக்கினார்.

    அந்த வீடியோவில் அவர் பணத்தால் வியர்வையைத் துடைப்பதைக் காணலாம். அவரது நகைச்சுவையின் ஒரு பகுதியாக, கிரிக்கெட் வீரரும் தனது கேப்டன் பாபர் ஆசாமுக்கு பதிலளிக்கும் போது அதையே செய்வதைப் பற்றி தற்பெருமை செய்வது போல் காட்டினார்.

    பாகிஸ்தான் கேப்டன் அசம் கான் தனது முகத்தை கரன்சி நோட்டுகளால் துடைக்கும் வீடியோவைப் பகிர்ந்ததை அடுத்து ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பாபர் ஆசாமை விமர்சித்து பேசி வருகின்றனர்.

    சர்ச்சைக்குரிய வீடியோ, பாகிஸ்தானில் ஏழ்மையில் இருக்கும் குடிமக்களை இழிவுபடுத்துவதாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    இந்த நடவடிக்கை அவரது அருகாமையில் இருந்த சக ஊழியர்களிடமிருந்து அதிக சிரிப்பலை ஏற்படுத்தியிருந்தாலும், இது சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பரவலான சீற்றத்தை ஈர்த்தது. ஒரு குறிப்பிட்ட சமூக ஊடகப் பயனர், ஆசம் கானின் 'உணர்ச்சியற்ற' செயல் தற்போது வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள 'ஏழை பாகிஸ்தானிய' குடிமக்களை இலக்காகக் கொண்டது என்று கூறினார்.

    இன்னும் சிலர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உண்மையில் உணர்ச்சியற்ற முட்டாள்கள். பாகிஸ்தானில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் இறக்கின்றனர். இவர்கள் இங்கிலாந்தில் அமர்ந்து ஏழை பாகிஸ்தானியர்களை கேலி செய்து பணத்தால் வியர்வையை துடைக்கிறார்கள். 5 ஆண்டுகள் கேப்டனாக இருந்தும் பாபர் அசாமுக்கு எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை. என்று பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது.
    • பெங்களூரு அணி டோனிக்கு கை குலுக்காமல் சென்றது சமூக வலைதளங்களில் சர்சையை கிளப்பியது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது.

    பெங்களூரு அணி டோனிக்கு  கை குலுக்காமல் சென்றது சமூக வலைதளங்களில் சர்சையை கிளப்பியது.

    இந்தப் போட்டிதான் டோனியின் கடைசி ஐ.பி.எல் என்ற கருத்து பரவி வருகிறது. இந்த நிலையில் டோனி தனது எதிர்காலம் குறித்து எங்களிடம் எதுவும் பேசவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் நேற்று தெரிவித்தார். அவர் முடிவு எடுக்க நாங்கள் நேரம் கொடுப்போம் என்று கூறிய நிலையில்

    டோனி கால் தசை நார் வலிக்கு  அறுவை சிகிச்சை லண்டனில் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிகிச்சையை முடித்துவிட்டு அவரது எதிர்கால திட்டங்களை குறித்து யோசிக்க போகிறார். இந்த சிகிச்சையில் இருந்து குணமாக 5- 6 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

    • இரு அணியிலும் ‘சரவெடி’ பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நிற்பதால் ரன் மழைக்கு பஞ்சம் இருக்காது.
    • இவ்விரு அணிகளும் ஒட்டுமொத்தத்தில் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    அகமதாபாத்:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று நேற்று முன்தினம் முடிந்தது. லீக் சுற்று முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

    நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகள் 5 முதல் 10 இடங்களை பெற்று லீக் சுற்றுடன் நடையை கட்டின. இந்த போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.

    இந்த நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 2-வது இடம் பெற்ற ஐதராபாத் சன் ரைசர்சை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உண்டு. தோல்வி காணும் அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

    2 முறை சாம்பியனான (2012, 2014) கொல்கத்தா அணி லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 தோல்வி, 2 முடிவில்லை என்று 20 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்ததுடன் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றை எட்டியது. அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து இருப்பது இது 8-வது முறையாகும்.

    கொல்கத்தா அணியின் கடைசி இரு லீக் ஆட்டங்கள் (குஜராத் மற்றும் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம்) மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது. அதற்கு முந்தைய 4 ஆட்டங்களில் அந்த அணி வரிசையாக வெற்றி கண்டு இருந்தது.

    கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் சுனில் நரின் (1 சதம், 3 அரைசதம் உள்பட 461 ரன்) அதிரடியில் அசத்துகிறார். அவருக்கு பக்கபலமாக இருந்த புயல் வேக ஆட்டக்காரர் பில் சால்ட் (4 அரைசதம் உள்பட 435 ரன்) உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகுவதற்காக இங்கிலாந்து திரும்பி விட்டார். இது பலத்த பின்னடைவாகும். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங்கிடம் இருந்து எதிர்பார்த்த வேகம் இன்னும் வெளிப்படவில்லை. பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா வலு சேர்க்கிறார்கள். சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சிலும் கலக்குகிறார்கள்.

    முன்னாள் சாம்பியனான (2016) ஐதராபாத் அணி லீக்கில் 14 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 17 புள்ளிகள் பெற்று ராஜஸ்தானுடன் சமநிலை வகித்தாலும், ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் 2-வது இடத்தை தனதாக்கி 7-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்குள் கால் பதித்தது.

    ஐதராபாத் அணி அதிரடியில் பொளந்து கட்டுகிறது. நடப்பு தொடரில் 6 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கும் அந்த அணி பஞ்சாப்புக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 215 ரன் இலக்கை 5 பந்துகள் மீதம் வைத்து விரட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் களம் இறங்குகிறது.

    அந்த அணியின் பேட்டிங் முதுகெலும்பாக தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் (1 சதம், 4 அரைதம் உள்பட 533 ரன்), அபிஷேக் ஷர்மா (3 அரைசதத்துடன் 467 ரன்) விளங்குகிறார்கள். இவர்கள் இருவரும் நிலைத்து விட்டால் எதிரணியின் பாடு திண்டாட்டம் தான். மிடில் வரிசையில் ஹென்ரிச் கிளாசென், நிதிஷ்குமார் ரெட்டி, ராகுல் திரிபாதி கைகொடுக்கிறார்கள். பந்து வீச்சில் டி.நடராஜன், கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட் சிறந்த நிலையில் உள்ளனர்.

    இந்த சீசனில் இவ்விரு அணிகளும் ஏற்கனவே ஒரு முறை சந்தித்து உள்ளன. அந்த ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் வென்று இருக்கும் கொல்கத்தா அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேற தீவிரம் காட்டும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து 3-வது முறையாக இறுதிப்போட்டியை எட்ட ஐதராபாத் அணி வரிந்து கட்டும். எனவே இந்த மோதலில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணியிலும் 'சரவெடி' பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நிற்பதால் ரன் மழைக்கு பஞ்சம் இருக்காது.

    இவ்விரு அணிகளும் ஒட்டுமொத்தத்தில் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 17 முறை கொல்கத்தாவும், 9 தடவை ஐதராபாத்தும் வென்று இருக்கின்றன.

    அகமதாபாத்தில் கடைசியாக நடக்க இருந்த குஜராத்-கொல்கத்தா இடையிலான ஆட்டம் மழை காரணமாக 'டாஸ்' கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. இருப்பினும் இந்த ஆட்டத்துக்கு மழை ஆபத்து இருக்காது என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    போட்டிக்காக இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    கொல்கத்தா: சுனில் நரின், ரமனுல்லா குர்பாஸ், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ராணா அல்லது ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், அனுகுல் ராய் அல்லது வைபவ் அரோரா, ஹர்ஷித் ரானா, வருண் சக்ரவர்த்தி.

    ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், ஷபாஸ் அகமது, அப்துல் சமத், சன்விர் சிங், கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், நடராஜன் அல்லது விஜயகாந்த் வியாஸ்காந்த்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • அவர் இந்திய அணியின் கதவுகளை சாதாரணமாக தட்டவில்லை. கிட்டத்தட்ட உடைத்து திறந்துள்ளார்.
    • இந்த ஐபிஎல் முழுவதும் அவருடைய பேட்டிங் போல மற்ற இளம் வீரர்கள் பேட்டிங் செய்ததாக எனக்குத் தெரியவில்லை.

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

    இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக அதிரடியாக விளையாடி வரும் அபிஷேக் ஷர்மா இந்திய அணியின் தேர்வுக்குழு கதவையும் கிட்டத்தட்ட உடைத்துள்ளதாகவும் ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அவர் இந்திய அணியின் கதவுகளை சாதாரணமாக தட்டவில்லை. கிட்டத்தட்ட உடைத்து திறந்துள்ளார். இந்த ஐபிஎல் முழுவதும் அவருடைய பேட்டிங் போல மற்ற இளம் வீரர்கள் பேட்டிங் செய்ததாக எனக்குத் தெரியவில்லை.

    அந்தளவுக்கு பேட்டிங்கில் அதிரடி காட்டும் அவர் இன்னும் பந்து வீசவில்லை. அவர் நல்ல ஆல் ரவுண்டர். பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் அவர் சதத்தை தவற விட்டதற்காக மகிழ்ச்சியுடன் இல்லை. ஆனால் அவர் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இன்னிங்ஸை விளையாடினார். ரஞ்சிக் கோப்பையில் என்னுடைய தலைமையில் தான் அவர் பஞ்சாப் அணியில் அறிமுகமானார்.

    அந்த வகையில் இந்தளவுக்கு வளர்ந்து அவர் சிறப்பாக செயல்படுவதை பார்ப்பது எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் தற்போது இந்திய அணியில் விளையாடுவதற்கான கதவை சுற்றியுள்ளார். ஒருநாள் அவர் இந்திய அணிக்குள் நுழைந்து விடுவார்.

    இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.

    அதே போல அபிஷேக் சர்மா விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று ஜாம்பவான் யுவராஜ் சிங்கும் சமீபத்தில் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 708 ரன்களை குவித்துள்ளார்.
    • ஏனெனில் கடந்த 2016-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் எப்படி செயல்பட்டாரோ அதே ஃபார்மை இந்த ஐபிஎல் சீசனிலும் தொடர்ந்து வருகிறார்.

    17-வது சீசன் ஐபிஎல் தொடரானது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றிற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முன்னேறியுள்ளது. அதன்பைன் தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கொல்கொத்தா மற்றும் ஐதராபாத் அணிகளும், எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதி முடிவின் போது புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது, அதன்பின் அடுத்தடுத்து தொடர்ச்சியான வெற்றிகளை குவித்து பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

    குறிப்பாக அணியின் மற்ற வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், முன்னாள் கேப்டன் விராட் கோலி தொடர்ச்சியாக தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 708 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியையும் தன்வசம் வைத்துள்ளார்.

    இந்நிலையில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் தனது சொந்த சாதனையை முறியடித்து விராட் கோலி புதிய சாதனை நிகழ்த்துவார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி தனது இரண்டாவது சிறந்த ஐபிஎல் சீசனைக் கொண்டாடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஏனெனில் கடந்த 2016-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் எப்படி செயல்பட்டாரோ அதே ஃபார்மை இந்த ஐபிஎல் சீசனிலும் தொடர்ந்து வருகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, இது அவர் இந்த விளையாட்டின் மீது வைத்துள்ள ஆர்வம், அர்பணிப்பு மற்றும் காதலை இது வெளிக்காட்டுகிறது.

    இவ்வாறு ஹைடன் கூறினார்.

    முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய கோலி, 973 ரன்களைக் குவித்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • ஆர்சிபி தனது பணத்தை சாக்கடையில் வீணடித்ததாக ஒருவர் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது.
    • முதல் பந்தில் டோனி சிக்சர் அடித்த பிறகு, அப்படியே கைகளை கூப்பி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன்.

    ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு 4-வது அணியாக தகுதி பெற வேண்டிய நிலையில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் பேட்டிங் செய்த சிஎஸ்கே வெற்றி பெற 219 ரன்கள் இலக்காக இருந்தாலும், 201 ரன்கள் எடுத்தாலே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லலாம் என்ற நிலையில் விளையாடினர்.

    கடைசி ஓவரில் சென்னை வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டபோது முதல் பந்தை டோனி சிக்சருக்கு பறக்கவிட்டார். இந்த பந்து ஸ்டேடியத்தை தாண்டி வெளியே சென்றதால், புதிய பந்து வழங்கப்பட்டது. அது பவுலிங்கிற்கு நன்றாக கைகொடுத்தால், அடுத்த பாலில் டோனி ஆட்டமிழந்தார். கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டபோது, ரவிந்திர ஜடேஜாவால் 1 ரன் கூட எடுக்க முடியவில்லை.

    அத்துடன் சென்னை அணியின் பிளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் ஆர்சிபிக்காக கடைசி ஓவரை வீசிய யஷ் தயாள ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். முதல் பந்தை டோனி சிக்சர் அடித்த பின்னர், அவர் பொறுமையாக மீதமுள்ள 5 பந்துகளையும் வீசிய விதம் பாராட்டை பெற்றது.

    இதே யஷ் தயாள் தான், கடந்த முறை குஜராத் அணிக்காக விளையாடியபோது ஒரே ஓவரில் 5 சிக்சர்களை கொடுத்து அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தார். பின்னர் அவர் குஜராத் அணியால் விடுவிக்கப்பட்ட நிலையில் அவரை ரூ. 5 கோடி கொடுத்து ஆர்சிபி 2024 சீசனுக்காக வாங்கியது.

    இந்நிலையில் தனது மகனின் மோசமான ஆட்டத்திற்காக முன்பு கேலி செய்தவர்கள், சென்னை அணியுடனான வெற்றிக்கு பின்னர் பாராட்டு தெரிவிப்பதாக, ஆர்சிபி பவுலர் யஷ் தயாளின் தந்தை நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    யஷ் தயாள் குறித்து அவரது தந்தை கூறியதாவது-

    ஆர்சிபி யஷ் தயாளை ரூ.5 கோடிக்கு வாங்கியபோது, ஆர்சிபி தனது பணத்தை சாக்கடையில் வீணடித்ததாக ஒருவர் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது. எல்லோரும் அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் இன்று எனக்கு நிறைய நல்ல செய்திகளும் அழைப்புகளும் வருகின்றன.

    முதல் பந்தில் டோனி சிக்சர் அடித்த பிறகு, அப்படியே கைகளை கூப்பி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன். கடவுளே, இன்று என் குழந்தைக்கு ஆதரவளிக்கவும், இது மீண்டும் நடக்கக்கூடாது என்று பிரார்த்தித்தேன்.

    முதல் பந்திற்குப் பிறகு எனது மகன் பொறுமையைக் கடைப்பிடித்த விதம் எனக்குப் பிடித்திருந்தது. முன்பு கேலி செய்தவர்கள் இன்று என் மகனை பாராட்டுகிறார்கள்.

    என்று அவர் கூறினார்.

    • உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2024 போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது.
    • உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தீப்தி ஜீவன்ஜி 400 மீட்டர் டி20 பிரிவில் கலந்து கொண்டார்.

    உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2024 போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தீப்தி ஜீவன்ஜி இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்து அசத்தியுள்ளார். தீப்தி ஜீவன்ஜி பெண்களுக்கான 400 மீட்டர் டி20 பிரிவு பந்தயத்தில் 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.

    இவரை தொடர்ந்து, துருக்கியின் அய்செல் ஒன்டர் 55.19 வினாடிகளுடன் இரண்டாவது இடத்தையும், ஈக்வடாரின் லிசான்ஷெலா அங்குலோ 56.68 வினாடிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

    முன்னதாக, இதற்காக தகுதி சுற்றின்போது தீப்தி ஜீவன்ஜி பெண்கள் 400 மீட்டர் டி20 ஹீட் பைனலுக்கு தகுதி பெற்றதன் மூலம் ஒரு புதிய ஆசிய சாதனையை 56.18 வினாடிகளில் எட்டி, 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸுக்கு தகுதி பெற்றார்.

    தீப்தி ஜீவன்ஜி, கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியிலும் பெண்களுக்கான 400 மீ டி20 போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சமீபத்தில் ஆர்சிபி-யின் செயல்பாடுகளை பார்க்கும் போது நிச்சயம் அவர்களுக்கான வெற்றி வாய்ப்பு தான் அதிகமாக உள்ளது.
    • ராஜஸ்தான் அணியானது அடுத்தடுத்து நான்கு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது.

    17-வது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. லீக் சுற்றின் முடிவின் அடிப்படையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

    இந்நிலையில் எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி வெற்றி பெறும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    என்னைப் பொறுத்தவரை எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளது என நம்புகிறேன். ஏனெனில் சமீபத்தில் அவர்களின் செயல்பாடுகளை பார்க்கும் போது நிச்சயம் ஆர்சிபி அணிக்கான வெற்றி வாய்ப்பு தான் அதிகமாக உள்ளது. அதேசமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது அடுத்தடுத்து நான்கு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது.

    மேலும் அவர்களுக்கு இருந்த கடைசி போட்டியும் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இதனால் ஆர்சிபி அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏனெனில் ஆர்சிபி அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கு தங்கள் பணி என்ன என்பது நன்றாக தெரியும். அவர்களும் அதனை சிறப்பாக செய்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு தான் வெற்றிக்கான வாய்ப்பு அதிகம்.

    இவ்வாறு ராயுடு கூறினார்.

    • நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே அணி வெளியேறியது.
    • இதனை தொடர்ந்து டோனி தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் 18-ந் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.

    இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி விடை பெற்றார். அவர் விமான நிலையத்தில் அதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார். அங்கு அவர் பைக்கில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • உலகத் தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் இருக்கும் வீரர் தனது ஜோடியை தேர்வு செய்ய முடியும்.
    • போபண்ணா முதல் 10 இடத்திற்குள் இருப்பதால் தனது ஜோடியை அவரால் தேர்ந்தெடுக்க முடியும்.

    இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா. ரோகன் போபண்ணா ஆண்கள் இரட்டையர் பிரிவில் உலகத் தலைவரிசையில் 4-வது இடத்தில் உள்ளார்.

    44-வது வயதான இவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். உலகக்கோப்பை மற்றும் டென்னிஸ் விதிப்படி தரவரிசை 10-க்குள் இருக்கும் வீரர் தன்னுடன் விளையாடும் வீரரை தேர்வு செய்யலாம்.

    அதன்படி இந்திய டென்னிஸ் வீரர்களான என். ஸ்ரீராம் பாலாஜி அல்லது யூகி பாம்ரி ஆகியோரில் ஒருவரை போபண்ணா தனது ஜோடியாக தேர்வு செய்யலாம் எனத் தெரிகிறது.

    இரண்டு பேர்களில் ஒருவரை தேர்வு செய்து அகில இந்திய டென்னிஸ் சங்கத்திடம் தெரிவிப்பார். அவர்கள் ஆலோசனை செய்து போபண்ணா பரிந்துரை செய்யும் நபரை தேர்வு செய்யலாம் எனத் தெரிகிறது.

    தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் டென்னிஸ் தொடர்களில் இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

    பாலாஜி காக்லியாரி சேலஞ்சர் போட்டியில் ஜெர்மன் பார்ட்னருடன் இணைந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

    பாம்ரி முனிச்சில் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் பார்ட்னருடன் இணைந்து பதக்கம் வென்றார். மற்றொரு போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார்.

    பாரிஸ் ஒலிம்பிக்கில் 32 ஜோடிகள் கலந்து கொள்ளும். ஒரு நாடு அதிகபட்சமாக இரண்டு ஜோடியை அனுப்ப முடியும்.

    பிரெஞ்ச் ஓபன் முடிவடைந்த பிறகு, ஜூன் 10-ந்தேதி தரவரிசை முடிவு செய்யப்படும். கடந்த 2012-ம் ஆண்டு ஜோடி சேர்ந்த விளையாடுவதில் சர்ச்சை ஏற்பட்டது. மகேஷ் பூபதி, போபண்ணா ஆகியோர் லியாண்டர் பயேஸ் உடன் இணைந்து விளையாட மறுத்துவிட்டனர். இதனால் விஷ்னு வர்தன் சேர்ந்து விளையாடினார்.

    2018-ல் நடைபெற்ற ஆசிய போட்டியில் சரியான ஜோடியை தரவில்லை என லியாண்டர் பயேஸ், ஆசிய போட்டியில் இருந்து வெளியேறினார். 

    ×