என் மலர்tooltip icon

    2025 - ஒரு பார்வை

    • திரை பிரபலங்களின் விவாகரத்து இந்தாண்டு இணையத்தில் பேசுபொருளனது
    • ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவு எடுத்தனர்.

    இந்த 2025 ஆம் ஆண்டில் திரையுலக பிரபலங்களின் திருமணங்கள் மட்டுமல்ல, சில ஜோடிகள் தங்கள் வாழ்க்கைத் துணையை பிரிந்து சென்றதும் சமூக ஊடகங்களில் மற்றும் செய்தித்தாள்களில் கவனம் பெற்றது. இவைகள் ரசிகர்களிடம் பேசுபொருளாகின.

    அவ்வகையில் இந்தாண்டு விவாகரத்து பெற்ற திரை பிரபலங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்

    1. ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி

    தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளித்தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.

    இதனிடையே ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்தாண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டனர்.

    இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையின்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் நீதிபதி முன் தெரிவித்தார். இதையடுத்து ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகிய இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.

    2. மீரா வாசுதேவன்

    பிரபல மலையாள நடிகை மீரா வாசுதேவன் மூன்றாவது முறையாக விவாகரத்து செய்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுது.

    மோகன்லாலின் தன்மந்த்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக மீரா உயர்ந்தார். தமிழில் உன்னை சரணடைந்தேன், அடங்க மறு, ஜெர்ரி, அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.

    இவர் 2005இல் பிரபல ஒளிப்பதிவாளர் மகனை மீரா வாசுதேவன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2010 இல் அவரை விவாகரத்து செய்தார்.

    தொடர்ந்து மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அவருடன் அரிஹரா என்ற மகனை பெற்றார். ஆனால் அந்த உறவும் நீடிக்காமல் அவரை விவாகரத்து செய்த மீரா, 2024 ஏப்ரலில் ஒளிப்பதிவாளர் விபின் புதியங்கத்தை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இந்தாண்டு தனது மூன்றாவது கணவர் விபினையும் மீரா வாசுதேவன் விவாகரத்து செய்தார் .

    3. ஜெசிகா ஆல்பா

    பிரபல ஹாலிவுட் நடிகையான ஜெசிகா ஆல்பா இந்தாண்டு தனது கணவர் கேஷ் வாரனை விவாகரத்து செய்தார். 17 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இந்த தம்பதியின் விவாகரத்து பெரும் பேசுபொருளானது. 

     

     4. ஜெனிபர் லோபஸ் - பென் அப்லெக்

    பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபசும், பிரபல நடிகரான பென் அப்லெக்கும் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஹாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக அவர்கள் வலம் வந்தனர்

    ஜெனிபர் லோபசுக்கு பென் அப்லெக் 4-வது கணவர் ஆவார். இதற்கு முன்பு லோபஸ் நடிகர் ஓஜானி நோவா, நடனக் கலைஞர் கிறிஸ் ஜட் பாடகர் மார்க் ஆண்டனி ஆகியோரை மணந்திருந்தார்.

    • புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும்.
    • தமிழ்நாட்டில் பாரம்பரியமும், தரமான பொருட்களின் தயாரிப்பு என்பது அதிகளவில் உள்ளது.

    சர்வதேச அளவில் உண்மையான பொருட்களை அங்கீகரித்து சந்தைப்படுத்த புவிசார் குறியீடு முறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் 1999-ம் ஆண்டு இதற்கான சட்டம் இயற்றப்பட்டது. 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவில் பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு புவிசார் குறியீடு (GI) வழங்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது வரை, 658 பொருட்கள், இலட்சினைக்களுக்கு GI வழங்கப்பட்டுள்ளது.

    புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளின் பூர்வீகத்தையும், அதன் சிறப்புத் தன்மையையும் உலகறியச் செய்து, அதைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான அங்கீகாரமாகும்.

    புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும். புவிசார் குறியீடானது வேளாண் பொருள்கள், உணவுப் பொருள்கள், கைவினை பொருள்கள் உற்பத்தி சார்ந்த பொருள்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்றால், அப்பொருள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தோன்றிருக்க வேண்டும். அதற்கான வரலாற்று சான்றும் இருக்க வேண்டும். அப்பொருள்களுக்கும் அப்பகுதிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ள தொடர்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் . புவிசார் குறியீடு பெரும் பொருட்களுக்கான உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள், அத்தொழிலை பாரம்பரியமாக செய்து வருபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கான பொருளாதார தேவையும் இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

     

    பண்ருட்டி பலாப்பழம் - கும்பகோண வெற்றிலை

    தமிழ்நாட்டில் பாரம்பரியமும், தரமான பொருட்களின் தயாரிப்பு என்பது அதிகளவில் உள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் ஒரு சிறப்பான உற்பத்தி, கைவினை அல்லது விவசாயப் பொருட்கள் இருக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகும் மொத்தம் 69 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு இருந்தது. சமீபத்தில், தமிழ்நாட்டின் மொத்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 74-ஐ எட்டியுள்ளது.

    இந்த ஆண்டில் புவிசார் குறியீடு பெற்ற சில முக்கிய பொருட்கள்: பண்ருட்டி பலாப்பழம், கும்பகோண வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை, செட்டிகுளம் சின்ன வெங்காயம், ராமநாதபுரம் சித்திரைகார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வற்றல் மிளகாய், உறையூர் பருத்தி சேலைகள், தூயமல்லி அரிசி போன்ற பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு (GI Tag) வழங்கப்பட்டுள்ளது.

    புவிசார் குறியீடு - மாவட்டம்

    ஈத்தாமொழி நெட்டைத் தேங்காய் - கன்னியாகுமாரி

    நீலகிரி டீ - நீலகிரி

    விருப்பாச்சி வாழை - திண்டுக்கல்

    சிறுமலை மலை வாழைப்பழம் - திண்டுக்கல்

    ஈரோடு மஞ்சள் -ஈரோடு

    மதுரை மல்லி - மதுரை

    கொடைக்கானல் மலை பூண்டு - திண்டுக்கல்

    கன்னியாகுமரி கிராம்பு - கன்னியாகுமரி

    ராமநாதபுரம் குண்டு மிளகாய் - ராமநாதபுரம்

    வேலூர் முள் கத்திரிக்காய் - வேலூர்

    ஆத்தூர் வெற்றிலை - தூத்துக்குடி

    கம்பம் பன்னீர் திராட்சை - தேனி

    சோழவந்தான் வெற்றிலை - மதுரை

    மட்டி வாழைப்பழம் - கன்னியாகுமரி

    மதுரை மரிக்கொழுந்து - மதுரை

    கும்பகோணம் வெற்றிலை - தஞ்சாவூர்

    பண்ருட்டி பலாப்பழம் - பண்ருட்டி

    பண்ரூட்டி முந்திரி - பண்ருட்டி

    புளியங்குடி எலுமிச்சை - தென்காசி

    சம்பா மிளங்காய் வந்தல் - விருதுநகர்

    சிட்டிகுளம் சின்ன வெங்காயம் - பெரம்பலூர்

    சித்திரை கார் அரிசி - ராமநாதபுரம்

    ஸ்ரீவில்லுபுத்தூர் பால்கோவா - விருதுநகர்

    கோவில்பட்டி கடலை மிட்டாய் - தூத்துக்குடி

    பழனி பஞ்சாமிர்தம் - திண்டுக்கல்

    மணப்பாறை முறுக்கு - திருச்சி

    ஊட்டி வர்க்கி - நீலகிரி

    உடன்குடி பனங்கருப்பட்டி - தூத்துக்குடி

    சேலம் ஜவ்வரிசி - சேலம்

    மார்த்தாண்டம் தேன் - கன்னியாகுமரி

    சேலம் சுங்குடி - சேலம்

    காஞ்சிபுரம் பட்டு - காஞ்சிபுரம்

    பவானி ஜமக்காளம் - ஈரோடு

    மதுரை சுங்குடி - மதுரை

    தஞ்சாவூர் ஓவியம் - தஞ்சாவூர்

    தஞ்சாவூர் கலைத்தட்டு - தஞ்சாவூர்

    சுவாமிமலை வெண்கலக் சின்னங்கள் - தஞ்சாவூர்

    நாகர்கோவில் கோவில் நகைகள் - கன்னியாகுமரி

    ஆரணி பட்டு - திருவண்ணாமலை

    கோவை கோரா பருத்தி - கோயம்புத்தூர்

    சேலம் பட்டு - சேலம்

    தஞ்சை தலையாட்டி பொம்மை - தஞ்சாவூர்

    தோடா பூந்தையல் - நீலகிரி

    பத்தமடைப் பாய் - திருநெல்வேலி

    நாச்சியார்கோவில் குத்துவிளக்கு - தஞ்சாவூர்

    செட்டிநாடு கொட்டான் - சிவகங்கை

    தஞ்சாவூர் வீணை - தஞ்சாவூர்

    கண்டாங்கி சேலை - சிவகங்கை

    தஞ்சாவூர் நெட்டி சேலை - தஞ்சாவூர்

    மாமல்லபுரம் கல் சிற்பங்கள் - செங்கல்பட்டு

    அரும்பாவூர் மரச்சிற்பம் - பெரம்பலூர்

    திருபுவனம் பட்டுப் புடவை - தஞ்சாவூர்

    தஞ்சாவூர் கலைத்தட்டு லோகோ - தஞ்சாவூர்

    சுவாமிமலை வெண்கலச் சின்னம் லோகோ - தஞ்சாவூர்

    நாகர்கோவில் கோவில் நகை லோகோ - கன்னியாகுமரி

    கருப்பூர் கலம்காரி ஓவியங்கள் - அரியலூர்

    கள்ளக்குறிச்சி மரச் சிற்பம் - கள்ளக்குறிச்சி

    நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் - தஞ்சாவூர்

    திண்டுக்கல் பூட்டு - திண்டுக்கல்

    மைலாடி கல் சிற்பம் - கன்னியாகுமரி

    மானாமதுரை மண்பாண்டம் - சிவகங்கை

    தைக்கால் பிரம்பு கைவினைப் பொருட்கள் - மயிலாடுதுறை

    ஜடேரி நாமக்கட்டி - திருவண்ணாமலை

    நெகமம் காட்டன் சேலை - கோயம்புத்தூர்

    செடிபுட்டா சேலை - திருநெல்வேலி

    விளாச்சேரி களிமண் பொம்மை - மதுரை

    தோவாளை மாணிக்க மாலை - கன்னியாகுமரி

    கோயம்புத்தூர் வெட் கிரைண்டர் - கோயம்புத்தூர்

    கிழக்கிந்திய தோல் பொருட்கள் - திருச்சி

    உறையூர் பருத்தி சேலை - திருச்சி

    கவிந்தபாடி நாட்டு சர்க்கரை - ஈரோடு

    நாமக்கல் மாக்கல் பாத்திரங்கள் - நாமக்கல்

    பாரம்பரிய தூயமல்லி அரிசி - தஞ்சாவூர்

    அம்பாசமுத்திரம் சொப்பு சாமான் - திருநெல்வேலி

    • பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளார்.
    • குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஆணவக் கொலை!

    சாதியின் பெயரால் நடைபெறும் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை என்று பலரால் வலியுறுத்தப்படுகிறது. அது எப்போ வலியுறுத்தப்படுகிறது என்று கேட்டால் ஒரு ஆணவக் கொலை நடைபெற்ற பின்னர்.. அதன்பின் தனிச்சட்டம் குறித்த எந்த வலியுறுத்தலும் இல்லை.

    இது இன்றைக்கோ, நேற்றைக்கோ கிடையாது. பல ஆண்டுகளாக தொடரும் அவலம். ஆணவக் கொலையால் ஒரு உயிர் பறிக்கப்பட்ட பிறகே பலரும் இதுகுறித்து பேசுகிறார்கள்... ஆனால் இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களின் நிலை பரிதாபத்துக்குரியது.

    தமிழ்நாட்டில் 2017 முதல் 2025 வரை சுமார் 65 ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளதாக தனியார் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 7 ஆணவக் கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டில் ஆணவ கொலை என்றதும் தர்மபுரி இளவரசன், சேலம் கோகுல்ராஜ், உடுமலை சங்கர் என பல பேரை சொல்லும் இந்த பட்டியலில் தற்போது கவின் கொலை வழக்கும் நினைவு கூறப்படுகிறது. அது குறித்து பார்ப்போம்..

     

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (27), சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளார்.

    இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி கவின் தனது உடல்நிலை சரியில்லாத தாத்தாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக திருநெல்வேலி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள ஒரு தனியார் சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அந்த மருத்துவமனையில்தான் கவின் காதலித்த பெண் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு வந்த அப்பெண்ணின் சகோதரர் சுர்ஜித், கவினிடம் பேசுவதாகக் கூறி அவரைத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்ற பிறகு, சுர்ஜித் அரிவாளால் கவினைத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். கொலை நடந்த உடனேயே சுர்ஜித் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

    கவின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்தக் கொலையில் அப்பெண்ணின் பெற்றோருக்கும் தொடர்பு இருப்பதாக கவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அப்பெண்ணின் பெற்றோர் இருவரும் காவல் துறையில் உதவி ஆய்வாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.

     

    எதிர்ப்புகள் வலுத்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கு மாநில காவல்துறையிடமிருந்து சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

    சுர்ஜித்தின் தந்தை சரவணன் மற்றும் அவரது உறவினர் ஜெயபாலன் ஆகியோரும் இந்தக் கொலையில் உடந்தையாக இருந்ததாகக் கைது செய்யப்பட்டனர். சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    வழக்கு விரைவாக விசாரிக்கப்பட்டு, 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதனிடையே, கவின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் இடைக்கால நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. தற்போதைய நிலை இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிசிஐடி போலீசாரால் நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகளின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், ஆணவக் கொலைகளுக்கு எதிரான கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    அந்த கோரிக்கை அடுத்த ஆண்டாவது நிறைவேறுமா? என்பது பல ஆயிரம் கேள்விகளை உண்டாக்கியுள்ளது. காலம் தான் பதில் சொல்லும். 

    • ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
    • ஏப்ரல் 22-ம் தேதி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    ஸ்ரீநகர்:

    அது ஒரு பரபரப்பான ரெயில் நிலையம். ரெயில் எப்போது புறப்படும் என அதில் உட்கார்ந்திருக்கும் பயணிகளும், சீக்கிரம் ரெயிலைப் பிடிக்க வேண்டுமே என ஓடி வரும் பயணிகளுமாக அந்த ரெயில் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.

    எஸ் 4 கோச்சில் அமர்ந்திருந்த கேசவனை வழியனுப்ப வந்திருந்தார் சுதர்சன். வண்டி புறப்பட 20 நிமிடங்கள் இருந்ததால் இருவரும் அங்கிருந்த கேண்டீனில் டீ குடிக்கச் சென்றனர். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த அவர்கள் நாட்டு நடப்புகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பத்திரிகை விற்கும் கடையில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் என்ற செய்தியைக் கண்டு வருத்தப்பட்டனர்.

    யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த பிரச்சனை தீரமாட்டேங்குதே என அங்கலாய்த்தார் கேசவன்.

    அப்போது, மத்திய அரசு ஜம்மு காஷ்மீரில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அப்பகுதி மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது. ஆனாலும் கடந்த ஏப்ரலில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகையே அதிர்ச்ச்யில் ஆழ்த்தியது என வேதனையுடன் தெரிவித்தார் சுதர்சன்.

    அவர் கூறியதன் சாராம்சம் இதுதான்:

    ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

    ஏப்ரல் 22-ம் தேதி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 பேரும் ஆண்களே ஆவர்.

    இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றது.


    இந்தக் கொடிய தாக்குதலுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மந்திரிகள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அமெரிக்கா, சீனா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இரு வாரங்களுக்குப் பிறகு மே 7 அன்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்மூலம் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது என தெரிவித்தார்.


    இதைக் கேட்ட கேசவன், யார் ஆட்சியில் இருந்தாலும் குடிமக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார் கேசவன்.

    அப்போது ரெயில் புறப்படுவதற்கான சிக்னல் விழுந்ததால் கேசவன் தனது சீட்டில் சென்று அமர்ந்தார். ரெயில் புறப்பட்டுச் சென்றதும் கேசவனை வழியனுப்பிய சந்தோஷத்தில் வீட்டுக்கு திரும்பினார் சுதர்சன்.

    • கடந்த ஆகஸ்டில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டார்
    • எங்களுக்கும் தூக்கம் வேணும்ல என சாம் ஆல்ட்மேனே கோரிக்கை விடுத்தார்.

    'நாட்டு மக்களுக்கு ஓர் முக்கியச்செய்தி' எனக்கூறி முக்கிய அறிவிப்புகளை மேளம் அடித்து பொதுமக்களிடம் தெரிவிப்பர் அரண்மனை ஊழியர்கள். அதுபோல கடந்த ஆகஸ்டில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிடுகிறார். அவர் தினம் ஒரு பதிவிடுவார். நீங்கள் எதை சொல்கிறீர்கள்? என கேட்பீர்கள்.

    நான் சொல்வது 2025ஐயே திரும்பி பார்க்க வைத்த ஒரு பதிவை. அதாவது 3 வாழைப்பழங்களின் இமோஜை பகிர்கிறார். இதற்கு என்ன அர்த்தம், கூகுள் ஏதாவது புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தப்போகிறதா என காரசார விவாதம் நடைபெறுகிறது. ஏனெனில் அப்போது மற்றொரு நிறுவனத்தின் தொழில்நுட்பம் டிரெண்டிங்கில் இருந்தது.

    "கருவாடு ஒருநாள் சந்தைக்கு வந்துதான் ஆகவேண்டும்" என்னும் நம் பழமொழிக்கு ஏற்ப அடுத்த மாதம் முழுவதும் இணையத்தை ஆட்டிப் படைத்தது கூகுளின் 'நானோ பனானா'. அதாவது இந்த நானோ பனானாவில் நமது புகைப்படத்தை பதிவிட்டு, என்ன ப்ராம்ட் வேண்டுமோ அதை உள்ளிட்டால், நாம் கேட்டதுபோல நம் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு, 3டி லுக்கில் கிடைக்கும்.

    இதனால் ட்விட்டர், இன்ஸ்டா, ஃபேஸ்புக் என எந்தப் பக்கம் திரும்பினாலும் NANO BANANA-ன் ஆதிக்கம்தான். சமூக ஊடகங்கள் முழுவதும் ஒரே ஏஐ இமேஜ்கள். 'என்னடா என்னைத் தவிர எல்லாரும் அப்டேட்டா இருக்கீங்க' என்ற அளவு நாம் அதனை பார்த்து வியந்திருப்போம்.


    நடிகை சோனாக்ஷி சின்ஹா

    பெண்கள் புடவை அணிந்துகொண்டு தலையில் பூ வைத்திருக்குமாறும், ஆண்கள் கையில் ரோஜாப்பூ வைத்திருக்குமாறும் மாறி மாறி புகைப்படங்களை பதிவிட்டு வந்திருப்பர். இதில் பல பெண்களும் இதற்கு முன்பு புடவை கட்டிக்கூட இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் புடவை கட்டியிருப்பது போலவும், மாடலிங் ஃபோட்டோஷுட் எடுத்திருந்தது போலவும் புகைப்படங்கள். 'போதும்டா சாமி என்னை விட்ருங்க' என்ற அளவிற்கு இணையம் முழுவதும் இந்த டிரெண்ட். 

    ஒரு கட்டத்தில் குதிச்சர கைப்புள்ள என்பதுபோல, பொங்கியெழுந்தனர் மீம்ஸ் கிரியேட்டர்கள். நாங்களும் எவ்வளவுதான் தாங்குவது என, ஆண்கள் கையில் ரோஜாப்பூ வைத்திருப்பது போல பதிவிட்ட ஃபோட்டோக்களை குறிப்பிட்டு, 'பெரிய நேரு பரம்பரை, சட்டையில் ரோசாப்பூ குத்தாம வெளிய வரவேமாட்டாரு' என்னும் கவுண்டமணி, செந்தில் காமெடி டயலாக்கும், நாம் சொன்னவாறு எடிட்டிங்கில் வரவில்லை என்றால், "படிக்க தெரிஞ்சா படி, தப்பு தப்பா படிச்சி அடிவாங்கி சாகாத சொல்லிட்டேன்" என ஏஐ-ஐ திட்டுமாறு மானஸ்தன் பட சரத்குமார், வடிவேலு பட காமெடியும், "பாஸ் பொங்கலுக்கு வெள்ளையடிச்ச மாதிரி பளபளனு இருக்கீங்க" என தலைநகரம் படத்தின் வடிவேலு காமெடி என மறுபக்கம் இணையத்தை தெறிக்கவிட்டனர் மீம்ஸ் கிரியேட்டர்கள். 



    இதற்கெல்லாம் காரணம் ஒரே ஒருவன்தான். அவன் வேற யாரும் இல்லை நானோ பனானாவிற்கு முன்பு டிரெண்டான கிப்லி ஆர்ட். சாட்ஜிபிடியிடம் நம் புகைப்படத்தை கொடுத்தால் அனிமேஷன் வடிவில் கிடைக்கும். இதனை உலகம் முழுவதும் பயன்படுத்த தூக்கம் இல்லாமல் தவித்தது ஜாட்ஜிபிடி. ஆம் அனைவரும் தங்களுக்கு அனிமேஷன் புகைப்படம் வேண்டும் என முயற்சிக்க இணையதளமே முடங்கியது. எங்களுக்கும் தூக்கம் வேணும்ல என சாம் ஆல்ட்மேனே கோரிக்கை விடுத்தார். அந்தளவிற்கு இரவு, பகல் என பாராமல் புகைப்படத்தை பதிவேற்றி, எடிட் செய்து வந்தனர் பயனர்கள். ஒருவழியாக இப்போது பெருமூச்சு விட்டு இந்த டிரெண்ட்கள் நார்மலாகி விட்டன. 

    ஆமா, சம்மந்தமே இல்லாமா இப்போ ஏ இத சொல்லிக்கிட்டு இருக்க என பலரும் கேட்கலாம். அது ஒன்றும் இல்லை. புத்தாண்டு வரவிருக்கிறது இல்லையா. அந்த ஒளிமயமான எதிர்காலத்தை பார்ப்பதற்கு முன் 2025-ஐ ஒரு ரீவைண்ட் பார்ப்போம். அதற்காகத்தான்.

    • பரிசுத் தொகையாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.10.3 கோடி வழங்கப்படும்.
    • அழிவை நோக்கிய உலகின் அபோகாலிப்டிக் பயங்கரத்தின் மத்தியில், கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் அவரது தொலைநோக்குப் பார்வைக்காக வழங்கப்பட்டது.

    டைனமைட் வெடிபொருளை கண்டுபிடித்த ஸ்வீடன் நாட்டு ஆய்வாளர் ஆல்ஃபிரட் நோபல் தனது கண்டுபிடிப்பு மனிதர்களை கொல்ல பயன்படுத்துவது குறித்து வருத்தமடைந்து தான் ஈட்டிய பெரும் செல்வத்தை கொண்டு 1895-இல் நிறுவியதே நோபல் பரிசு. 1896 இல் அவரது மறைவுக்கு பின் அவரின் உயிலின்படி 1901 தொடங்கி வருடந்தோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது உலகின் உயரிய அங்கீகாரமாகக் உருவெடுத்துள்ள நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பரிசுத் தொகையாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.10.3 கோடி வழங்கப்படும். 

    அந்த வகையில் இந்த ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. 

    அந்த வகையில், இந்த ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டது. 

    மனித உடலில் உள்ள புறநோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 

    இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட், ஜான் எம். மார்டினிஸ் ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டது. 

    குவாண்டம் கணினிக்கான சிப் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    வேதியியலுக்கான நோபல் பரிசு, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்காவை சேர்ந்த, சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம். யாகி ஆகிய ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டது.

    உலோக-கரிம கட்டமைப்புகளின் வளர்ச்சி கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

    இலக்கியத்திற்கான நோபல் பரிசு, 71 வயதான ஹங்கேரி எழுத்தாளர் 'லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை' ( László Krasznahorkai) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    அழிவை நோக்கிய உலகின் அபோகாலிப்டிக் பயங்கரத்தின் மத்தியில், கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட பணிக்காக இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்தது.

    László Krasznahorkai

    2024 இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங் அவர்களுக்கு வழங்கப்ட்டது குறிப்பிடத்தக்கது.

    பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, ஜோயல் மோய்கிர் (நெதர்லாந்து வம்சாவளி அமெரிக்க- இஸ்ரேல் பொருளாதார வரலாற்றாசிரியர், பிலிப் அகியோன் (பிரான்ஸ் பொருளாதார நிபுணர்), பீட்டர் ஹோவிட் (கனடா பொருளாதார நிபுணர்) ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.   

    தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான முன் தேவைகள் என்ன என்பது தொடர்பாக ஆய்வுவாக்கவும், காலாவதியான செயல்முறைகளுக்கு மாற்றாக புதிய கண்டுபிடிப்புகளுக்காகவும் அவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டது.

    இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ -வுக்கு வழங்கப்பட்டது. வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.

    வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை வழங்குவதாக நோபல் கமிட்டி தெரிவித்தது.

    முன்னதாக  இந்த வருடம் 8 போர்களை நிறுத்தியதற்காக தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி வந்தபோதும் அவருக்கு வழங்கப்படாதது குறிப்பிடத்தக்கது. 

    • திரை பிரபலங்கள் இந்த ஆண்டில் தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினர்.
    • இந்த வருடத்தை, ரசிகர்கள் "ஸ்டார் வெட்டிங்ஸ்" ஆண்டாகவே கொண்டாடியுள்ளனர்.

    2025ஆம் ஆண்டு திரையுலகம் முழுவதும் திருமணச் சந்தோஷத்தில் மலர்ந்த வருடமாக அமைந்தது. தமிழ் சினிமாவை சேர்ந்த திரை பிரபலங்கள் இந்த ஆண்டில் தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினர். சினிமா ரசிகர்கள் பெரிதும் நேசிக்கும் நடிகர்கள், பாடகர்கள் மற்றும் ரியாலிட்டி ஸ்டார்கள் வரை—பலரும் இந்தாண்டு மணமக்கள் பட்டியலில் இணைந்துள்ளனர்.

    பிரபலங்களின் காதல் கதைகள் திருமண மேடையில் நிறைவு பெற்ற இந்த வருடத்தை, ரசிகர்கள் "ஸ்டார் வெட்டிங்ஸ்" ஆண்டாகவே கொண்டாடியுள்ளனர். இவ்வாண்டு திருமணம் செய்து கொண்ட முக்கிய திரை நட்சத்திரங்கள் யார் யார் என்பதை தொகுத்து பார்ப்போம்.

    1.சாக்ஷி அகர்வால்:

    மாடல் அழகியாக தனது பயணத்தை தொடங்கிய நடிகை சாக்ஷி அகர்வால், ராஜா ராணி, காலா மற்றும் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பலரின் மனதில் பதிந்து தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

    இந்தாண்டு தொடக்கத்தில் நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு திருமணம் நடைப்பெற்றது. குழந்தை பருவத்தில் இருந்தே நண்பராக இருந்து வந்த நவனீத் மிஸ்ரா என்பவரை சாக்ஷி தற்போது காதலித்து கரம்பிடித்தார். கோவாவில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருவருக்கும் திருமணம் நடைப்பெற்றுள்ளது.

    2. 'தெருக்குரல்' அறிவு:

    தமிழ் சினிமாவின் முன்னணி ராப் பாடகர்களுள் ஒருவர் அறிவு. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான எஞ்சாய் என்சாமி என்ற பாடலின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். 

    இந்தாண்டு தொடக்கத்தில் தெருக்குரல் அறிவு அவரது நீண்ட நாள் காதலியான கல்ப்பனாவை இன்று கரம் பிடித்தார். இத்திருமணத்திற்கு சிறப்பு விருந்தினராக தொல்.திருமாவளவன் மற்றும் இளையராஜா கலந்துக் கொண்டனர். 

     3. கிஷன் தாஸ்:

    முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் அறிமுகமான கிஷன் தான் அவரது நீண்ட நாள் காதலியான சுச்சிதிரா குமாரை இந்தாண்டு துவக்கத்தில் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. 

    4. பார்வதி நாயர்:

    மலையாள நடிகையான பார்வதி நாயர் தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய்யின் 'தி கோட்' படத்திலும் நடித்திருந்தார்.

    இந்நிலையில், நடிகை பார்வதி நாயருக்கும், தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இதனையடுத்து இருவரும் சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். 

    5. டி.வி. தொகுப்பாளினி பிரியங்கா

    பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான ஒரு சில வருடங்களிலேயே பிரியங்கா மற்றும் பிரவீன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு பிரிந்தனர்.

    இந்நிலையில், இந்தாண்டு வசி என்பவரை பிரியங்காவுக்கு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகின்றன.

    6. அபிநயா

    நாடோடிகள், சீதம்மா வகிட்லோ சிரிமல்லி சேத்து, மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை அபிநயா.

    நடிகை அபிநயா அவரது நீண்ட நாள் காதலனான கார்த்திகை இந்தாடினு திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. அவர்களது திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அபிநயா அவரது சமூக வலைத்தளத்தில் வைரலானது.

    7. லியோ ஹம்சவிர்தன்

    'புன்னகை தேசம்', 'ஜூனியர் சீனியர்', 'மந்திரன்', 'பிறகு' உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஹம்சவிர்தன், தனது பெயரை லியோ ஹம்சவிர்தன் என மாற்றிக் கொண்டுள்ளார்.

    லியோ ஹம்சவிர்தன் கேரளாவை சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷாவை சமீபத்தில் புதுச்சேரியில் மணந்தார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது.

    8. 'பசங்க' ஸ்ரீராம்

    பசங்க' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீராம் . இவர் அதற்கு அடுத்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதற்கு பிறகு சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். இவர் கடைசியாக மணிரத்னம் உருவாக்கிய நவரசா இணைய தொடரில் நடித்து இருந்தார்.

    ஸ்ரீராம் தற்பொழுது ஒரு பயோ டெக் ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் நீண்ட நாள் காதலியான நிகில் பிரியாவை இந்தாண்டு திருமணம் செய்தார். 

    9. மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா

    மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல சமையல் துறை நிபுணர் ஆவார். தமிழ் திரையுலகில் நடக்கும் பிரபலங்களில் திருமண பண்டிகைகளுக்கு கேட்ரிங் சேவையை செய்வது மாதம்பட்டி ரங்கராஜின் நிறுவனம் தான்.

    அவருடைய முதல் படம் 'மெஹந்தி சர்கஸ்'. ஆனால் அவரை மக்கள் அதிகமாக அறிந்தது 'Cook with Comali' நிகழ்ச்சியின் மூலமாக தான்.

    இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டதாக பேஷன் டிசைனரான ஜாய் கிரிஸ்ல்டா புகைப்படம் வெளியிட்டார். இந்த விவகாரம் பெரும் பேசுபொருளானது.

    10. TTF வாசன் திருமணம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப். வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுமட்டுமல்லாமல் இவர் அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார்.

    இந்நிலையில், டி.டி.எப் வாசன் 5 வருடமாக காதலித்து வந்த தனது மாமன் மகளை திருமணம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

    11. சமந்தா

    தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்த சமந்தா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்தார்.

    இந்த நிலையில் தி பேமிலி மேன் 2' மற்றும் 'சிட்டாடெல்: ஹனி பன்னி திரைப்படத்தில் நடித்த சமந்தா அந்த சமயத்தில் அந்த படங்களின் இயக்குநரான ராஜ் நிடிமொருவுடன் காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், நடிகை சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிடிமொருவும் திருமணம் செய்து கொண்டனர். ஈஷா யோகா மையத்தில் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்தாண்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட திருமணம் சமந்தாவின் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்தது.
    • பிரஜ்வல் ரேவண்ணாவிற்காக பிரதமர் மோடி நேரில் வந்து பிரசாரம் மேற்கொண்டார்.

    பிரஜ்வல் ரேவண்ணா யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது பெயர். அரசியல் பின்புலத்தை வைத்து, பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய முன்னாள் மக்களவை எம்பி.

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். 2024 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்தது. 

    இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா பாஜக கூட்டணியின் ஹாசன் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவிற்காக பிரதமர் மோடி நேரில் வந்து பிரசாரம் மேற்கொண்டார்.

    ஆனால், கடந்த வருடம் மக்களவை தேர்தல் நெருங்கிய சமயத்தில் பல்வேறு பெண்களுக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் அளித்த 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா மீது வீட்டு பணிப்பெண் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 

    இதன் பிறகு, ஜெர்மனிக்கு தப்பிச் சென்ற அவர், தாத்தா தேவகவுடா அறிவுரையை ஏற்று மே 31 தேதி நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 14 மாதங்களாக அவர் சிறையில் உள்ளார்.

    இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா வழக்கில் 26 சாட்சிகளை விசாரித்த பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பை அறிவித்தது.

    அதன்படி, பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    குற்றவாளி என தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது பிரஜ்வால் கண்ணீர் விட்டார். அவர் அழுது கொண்டே நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்ததாகத் தெரிகிறது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிரஜ்வாலுக்கான தண்டனை தீர்ப்பு வழங்கிய மறுநாளே அறிவிக்கப்பட்டது. 

    அதன்படி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(2)(n)-ன் கீழ் (பாலியல் வன்கொடுமை) குற்றத்திற்காக பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

    மேலும் ரேவண்ணாவுக்கு நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது. மொத்த அபராதத் தொகையான ரூ.10 லட்சத்தில், ரூ.7 லட்சத்தை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • டிக்டாக்கில் 67 என்ற ஹேஷ்டேக் 2 மில்லியன் பதிவுகளை தாண்டியது
    • இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தையாக இருக்கக்கூடும்

    "உனக்கு ஆற தெரியுமா? ஆறு(ம்) தெரியாது, ஏழு தெரியாது. 8 தெரியும், 9 தெரியும், 10 தெரியும்" என்பது வடிவேலு காமெடி. ஆனால் இப்போது அது காமெடி இல்லை. அதுதான் உண்மை. உங்களுக்கு புரியுமாறு சொன்னால், கஜென் ஆல்பா தலைமுறையினர் உங்களிடம் வந்து ஆறு, ஏழு என்று சொன்னால் உங்களுக்கு புரியாது. ஏன் எனக்கும் தெரியாது, புரியாது. 2013 மற்றும் 2024 வரையிலான காலகட்டத்திற்குள் பிறந்தவர்கள்தான் ஜென் ஆல்பா. ஆமாம் இப்போது எதற்கு இந்த ஆராய்ச்சி. இருக்கு, காரணம் இருக்கு. 

    2025ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக Dictionary.com, '67' என்ற எண்ணை தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால் எண்ணாக அல்ல. குறியீடாக. காரணம் இந்த ஆண்டு இந்த எழுத்துதான் இணையத்தில் அதிகம் டிரெண்டானது. டிக்டாக்கில் 67 என்ற ஹேஷ்டேக் 2 மில்லியன் பதிவுகளை தாண்டியது. ஆனால் இது இந்த அளவு டிரெண்டானது எப்படி?

    கஜென் ஆல்பா தலைமுறையினரால் பயன்படுத்தப்படும் கோட்-வேர்ட் ஆக கூட இந்த 67 என்ற நம்பர் இருக்கலாம். அல்லது ரகசிய குறியீடாகவும் இருக்கலாம். உண்மை அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதில் குறிப்பிடவேண்டிய மற்றொரு விஷயம் இதனை 'அறுபத்தி ஏழு' என உச்சரிக்கக்கூடாது. மாறாக 'சிக்ஸ்-செவன்' என்றுதான் கூறவேண்டும். 


    'அறுபத்தி ஏழு' என உச்சரிக்கக்கூடாது. மாறாக 'சிக்ஸ்-செவன்' என்றுதான் கூறவேண்டும்

    ஆனால் எப்படி புழக்கத்தில் வந்தது?

    இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க ராப் பாடகர் ஸ்க்ரில்லாவின் பாடலிலிருந்து தொடங்குகிறது. அதாவது ஸ்க்ரில்லாவின் "டூட் டூட் (6 7)" என்ற பாடலில் இருந்து இந்த நம்பர் பயன்பாடு தொடங்கியதாக நம்பப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ஸ்கிரில்லாவிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு எந்த உள்நோக்கத்தோடும், அர்த்தம் கொண்டதாக நான் அதை வைக்கவில்லை என கூறுகிறார். எதற்கு டிரெண்ட் செய்யப்படுகிறது என எனக்கும் தெரியவில்லை எனக்கூறுகிறார்.

    ஜூன் 2025 முதல் 67க்கான தேடல்கள் ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், மற்ற இரண்டு இலக்க எண்களின் தேடல்களை விட இந்த எண்களின் தேடல்தான் அதிகமாக இருப்பதாகவும் Dictionary.com குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா முழுவதும் உள்ள கல்வியாளர்கள் "67" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தடை செய்யவே தொடங்கியுள்ளனர். காரணம் அதை எதற்காக இளைய தலைமுறையினர் பயன்படுத்துகின்றனர் என தெரியவில்லை. மேலும் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தையாக இருக்கக்கூடும் எனவும் அஞ்சுகின்றனர். 

    ஜென் ஆல்பா தலைமுறையினரின் இந்த வார்த்தை பயன்பாடு ஆசிரியர்களுக்கு புரியவில்லை, பெற்றோர்களுக்கும் புரியவில்லை. இந்த மோகம் ஒரு பெரிய கவனச்சிதறலாக மாறிவிட்டதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். சில பள்ளிகள், வகுப்பறையில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியாக சிக்கிய மாணவர்களுக்கு மதிப்பெண் குறைப்பு முதல் எழுத்துப்பூர்வ பணிகள் என தண்டனைகளும் கொடுத்துள்ளனர். நிலைமை இப்படி இருக்க இதனை இந்தாண்டின் சிறந்த வார்த்தையாக Dictionary.com தேர்ந்தெடுத்துள்ளது.


    "67" - அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்

    காரணம் என்ன?

    "67" என்பது அதன் அர்த்தத்திற்காக அல்ல, மாறாக அதன் அர்த்தமற்ற தன்மைக்காகவே தனித்து நின்றது. இணையம் என்னவாக மாறிவிட்டது என்பதற்கான சரியான ஒரு உதாரணம் இது. இருப்பினும் அதன் பயன்பாட்டர்களுக்கு இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. 

    இறுதியாக, இவ்வளவு பேசியும் அதன் அர்த்தம் என்னவென்று சொல்லவில்லை என நீங்கள் நினைக்கலாம். "ஏ சார் இதை மொதலயே சொல்லக்கூடாதா? சொல்லிருந்தா, அப்படியே தெரியாதுனு சொல்லிருப்பல நானு" என்ற வடிவேலுவின் விடைதான் எனது பதிலும். இருப்பினும் உங்களுக்காக ஒரு பதில் மட்டும் இருக்கிறது.

    குறுகிய பதில்: உண்மையில் யாருக்கும் தெரியாது. - அதுதான் இதில் மிக முக்கியமானது. (அதுல ஒன்னும் இல்ல கீழ போட்ரு)

    • 2025-ல் டென்னிஸ் போட்டிகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன.
    • ஜோகோவிச், மெட்வதெவ் மற்றும் ரூப்லெவ் ஆகியோர் போட்டிகளின் போது விரக்தியால் தங்கள் ராக்கெட்டுகளை உடைத்துள்ளனர்

    2025-ல் டென்னிஸ் போட்டிகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. இதில் முக்கியமாக ஜோகோவிச், டேனியல் மெட்வதெவ் மற்றும் ஆண்ட்ரே ரூப்லெவ் ஆகியோர் போட்டிகளின் போது விரக்தியால் தங்கள் ராக்கெட்டுகளை உடைத்துள்ளனர். அந்த சம்பவம் இந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவங்களை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.

    யுஎஸ் ஓபன் 2025:

    இந்த தொடரின் யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், ரஷ்ய வீரர் டேனியல் மெட்வதெவ் (Daniil Medvedev) பிரெஞ்ச் வீரர் பெஞ்சமின் போன்சி (Benjamin Bonzi) ஆகியோ மோதினார். இந்த போட்டி லூயிஸ் ஆர்ம்ஸ்ட்ராங் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 25-ந் தேதி நடைபெற்றது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் போன்சி 6-3, 7-5, 6-7(5), 0-6, 6-4 என்ற கணக்கில் வென்றார்.

    இந்த போட்டியின் மூன்றாவது செட்டில், போன்சி போட்டியை வெல்லும் நிலையில் (5-4, 40-30 – match point) சர்வ் செய்யும் போது, அவரது முதல் சர்வ் ஃபால்ட் (fault) ஆனது. அப்போது, ஒரு போட்டோகிராஃபர் தவறுதலாக கோர்ட்டில் நடந்து போட்டோகிராஃபர் பிட் (pit) இல் சென்றார், இது போட்டியை சிறிது நேரம் தடை செய்தது.

    நடுவர் கிரெக் ஆலன்ஸ்வொர்த் (Greg Allensworth), வெளியாளர் தலையீடு (outside interference) காரணமாக போன்சிக்கு மீண்டும் முதல் சர்வ் (second first serve) அளித்தார், இது USTA விதிகளின்படி சரியான முடிவு.

    இந்த முடிவால் கோபமடைந்த மெட்வெடெவ், நடுவருண்டன் வாக்குவாதம் செய்தார். அவர் நடுவரை "நீங்கள் ஒரு ஆணா?" என்று கேட்டு கிண்டல் செய்தார். மற்றும் ரசிகர்களை தூண்டி boo செய்ய வைக்க கை சைகைகள் செய்தார். மைக்ரோஃபோனில் பேசி, "அவர் வீட்டுக்கு செல்ல விரும்புகிறார், நண்பர்களே. அவர் இங்கு இருக்க விரும்பவில்லை. அவர் போட்டிக்கு பணம் பெறுகிறார் என்று நடுவரை குற்றம்சாட்டினார்.

    இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது, அவர்கள் boo, விசில், மற்றும் சத்தமிட்டனர், இது சுமார் 5-6 நிமிடங்கள் தாமதத்தை ஏற்படுத்தியது. போன்சி பல முறை சர்வ் செய்ய முயன்றார், ஆனால் சத்தம் காரணமாக முடியவில்லை.

    மெட்வெடெவ் பின்னர் ரசிகர்களை அமைதிப்படுத்த முயன்றார், அவர்களுக்கு ஹார்ட் சிம்பல் காட்டினார். போன்சி இந்த சத்தத்தை "மிக அதிகமானது" என்று விவரித்தார், மேலும் இது போட்டியில் கவனம் செலுத்துவதை கடினமாக்கியது என்று கூறினார்.

    போட்டோகிராஃபரின் கிரெடென்ஷியல் ரத்து செய்யப்பட்டது. மெட்வெடெவ் ரசிகர்களின் ஆக்ரோஷமான சத்தத்தால் போட்டியை விட்டு வெளியேறவில்லை (walk out) அல்லது முன்கூட்டியே விட்டு செல்லவில்லை. அவர் இந்த சம்பவத்துக்குப் பிறகு போட்டியைத் தொடர்ந்து விளையாடினார், மூன்றாவது மற்றும் நான்காவது செட்களை வென்றார், ஆனால் ஐந்தாவது செட்டில் தோற்றார்.

    போட்டி முடிந்த பிறகு, கோபத்தில் தனது ராக்கெட்டை அடித்து உடைத்தார். இந்த நடத்தைக்காக அவருக்கு மொத்தம் $42,500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் டென்னிஸ் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

    தாய்லாந்தின் காசிடிட் சாம்ரெஜுக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தின் போது மெட்வெடேவ் தனது ராக்கெட்டால் நெட் கேமராவை அடித்து நொறுக்கினார். இந்தச் சம்பவத்திற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    ஜெனீவா ஓபன் 2025:

    2025 ஜெனீவா ஓபன் (Geneva Open) டென்னிஸ் போட்டியில், உலகின் முன்னாள் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (Novak Djokovic) தனது 38வது பிறந்தநாளான மே 22 அன்று, இத்தாலிய வீரர் மேட்டியோ அர்னால்டி (Matteo Arnaldi) உடன் நடந்த இரண்டாவது சுற்று போட்டியில் கோபத்தில் தனது ராக்கெட்டை உடைத்தார். இது டென்னிஸ் உலகில் பெரும் கவனத்தை ஈர்த்தது, ஏனெனில் ஜோகோவிச் பொதுவாக அமைதியான வீரராக அறியப்படுகிறார், ஆனால் அவ்வப்போது கோப தருணங்கள் காட்டியுள்ளார்.

    அந்த வகையில் ஜெனீவா ஓபன் ஒரு ATP 250 தொடர் போட்டி, களிமண் (clay) மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் செட்டை 6-7(6) என்று இழந்த பிறகு, இரண்டாவது செட்டின் மூன்றாவது கேமில் அர்னால்டி ஜோகோவிச்சின் சர்வை பிரேக் செய்தார். இதனால் கோபமடைந்த ஜோகோவிச், கோர்ட்டில் தனது ராக்கெட்டை தரையில் வீசி உடைத்தார். இது ரசிகர்களிடம் பூ (boo) சத்தத்தை ஏற்படுத்தியது, மற்றும் ஜோகோவிச் அம்பயரிடம் வாக்குவாதம் செய்தார்.

    போட்டியின் போது ஜோகோவிச் ஒரு சிறிய காயத்தையும் சந்தித்தார் ஆனால் அதை சமாளித்து விளையாடினார். ஜோகோவிச் இந்த சம்பவத்துக்குப் பிறகு திரும்பி வந்து, போட்டியை 6-7(6), 6-3, 7-6(2) என்ற கணக்கில் வென்றார். போட்டிக்குப் பிறகு, ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார். பின்னர் ராக்கெட்டை உடைத்தது எனக்கு உதவியது போல் தோன்றுகிறது, ஏனெனில் அதன்பிறகு நான் சிறப்பாக விளையாடினேன் எனவும் கூறினார்.

    இந்தியன் வெல்ஸ் 2025:

    2025 இந்தியன் வெல்ஸ் (BNP Paribas Open) போட்டிக்கு தயாராகும் போது, ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ் (Andrey Rublev) தனது பயிற்சி அமர்வில் கோபத்தில் ராக்கெட்டை உடைத்தார். இது மார்ச் 8, 2025 அன்று நடந்தது, அவர் அர்ஜென்டினா வீரர் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோ (Francisco Cerundolo) உடன் பயிற்சி செய்து கொண்டிருந்த போது ரூப்லெவ் ஒரு தவறுக்குப் பிறகு கோபமடைந்து ராக்கெட்டை தரையில் வீசி உடைத்தார், இது அவரது கோப பிரச்சினைகளின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

    இதற்கு முன்பு, செருண்டோலோவுடன் போட்டியில் ராக்கெட்டை முழங்காலில் அடித்து ரத்தம் வரவழைத்த சம்பவம் உண்டு, இது இந்த பயிற்சியுடன் தொடர்புடையது. இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் வைரலானது.

    • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் மாநிலத்தின் முதன்மை அதிகார அமைப்பாக இருக்க முடியும்.
    • இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிப்பது அரசியல் சாசனத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு எதிரானது.

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு இருந்தார்.

    முக்கியமாக, மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வகை செய்யும் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்பட மொத்தம் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி அறிவித்தார்.

     

    இதனால் அந்த மசோதாக்களை தமிழக அரசு, 2023-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அவற்றை அவர் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினார்.

    எனவே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியது. நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்தது.

     இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீண்ட கால விசாரணைக்குப்பின் கடந்த ஏப்ரல் 8-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

     

    அப்போது தமிழ்நாடு சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது என நீதிபதிகள் அறிவித்தனர்.

    மேலும் மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும் அமைச்சரவையின் ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள், 10 மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

    பின்னர் சுப்ரீம் கோர்ட்டுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி, ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அத்துடன் சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வரவேற்றன.

     

    அதேநேரம் இந்த தீர்ப்பு தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி சுப்ரீம் கோர்ட்டின் விளக்கம் கேட்டிருந்தார்.

    இந்த கேள்விகள் தொடர்பாக 5 நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டின் அரசியல்சாசன அமர்வு விசாரித்தது. தலைமை நீதிபதி கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், நரசிம்மா, சுந்துர்கர் அடங்கிய இந்த அமர்வில் நடந்த விசாரணை நிறைவடைந்து கடந்த செப்டம்பர் 11-ந்தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த வழக்கில் கடந்த மாதம் 20-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜனாதிபதி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    அதன்படி மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஜனாதிபதி மற்றும் மாநில ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பு அளித்தனர்.

    5 நீதிபதிகளும் ஒருமித்த வகையில் வழங்கிய தீர்ப்பில் அவர்கள் கூறியதாவது:-

    மாநில சட்டசபைகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை, ஆளுநர்கள் அரசியல் சட்டப்பிரிவு 200-ன் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அதிகாரத்தை மீறி நீண்ட காலம் கிடப்பில் போட முடியாது.

    அந்தவகையில், மாநில அரசில் 2 நிர்வாக அதிகார மையங்கள் இருக்க முடியாது என பஞ்சாப் அரசுக்கு எதிராக ராம் கபூர் என்பவர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அளித்த தீர்ப்பில் உடன்படுகிறோம்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் மாநிலத்தின் முதன்மை அதிகார அமைப்பாக இருக்க முடியும்.

    மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட அனுமதிப்பது என்பது சட்டசபை அதிகாரத்தை மதிப்பிழக்கச்செய்வதாகவும், கூட்டாட்சி கொள்கைக்கு எதிராகவும் அமையும் என கருதுகிறோம்.

    அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் கீழ் மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர்களுக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. அதாவது ஒப்புதல் அளிப்பது, ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது அல்லது ஒப்புதலை நிறுத்தி வைப்பது, தனது கருத்துடன் சட்டசபைக்கு திருப்பி அனுப்புவது ஆகியவை.

    இதில் ஒன்றை தேர்வு செய்தாக வேண்டும். இதில் மத்திய அரசு கூறுவது போல 4-வது வாய்ப்பு இல்லை. இதில் அமைச்சரவையின் ஆலோசனை இல்லாமல் தன் விருப்புரிமையுடன் செயல்பட முடியும்.

    நிதி மசோதாவாக இல்லாத பட்சத்தில் அந்த மசோதாவுக்கான ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியும் அல்லது கருத்துகளுடன் சட்டமன்றத்துக்கு மீண்டும் அனுப்பி வைக்கலாம்.

    அதேநேரம் இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிப்பது அரசியல் சாசனத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு எதிரானது.

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் அரசியல் சாசனத்தில் ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்காத நிலையில், சுப்ரீம் கோர்ட்டு கெடு விதிப்பது பொருத்தமாக இருக்காது.

    மசோதாக்கள் சட்டமாகி நடைமுறைக்கு வராத நிலையில், அவை குறித்த ஆளுநர்கள், ஜனாதிபதியின் முடிவுகளை கோர்ட்டு விசாரணைக்கு உட்படுத்த முடியாது. சட்டமாகாத மசோதாக்களின் பொருளடக்கம் குறித்து கோர்ட்டு விசாரிக்க முடியாது.

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கோர்ட்டு விசாரணைக்கு உட்பட்டதல்ல. எனவே, ஆளுநர்களின் முடிவுகளை கோர்ட்டுகள் ஆய்வு செய்ய முடியாது. இது மசோதாக்கள் மீது ஜனாதிபதி எடுக்கும் முடிவுகளுக்கும் பொருந்தும்.

     

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் அரசியல் சாசனத்தில் ஜனாதிபதிக்கு கெடு விதிக்காத நிலையில், சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு ஜனாதிபதியையும் கட்டுப்படுத்தாது.

    இருப்பினும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களின் காலதாமதம், விளக்கமற்ற நிலை நிலவும்போது குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்புதல் அளிக்கும் வகையில், ஆளுநர்களின் விருப்புரிமை குறித்து கருத்து தெரிவிக்காமல் முடிவுகளை எடுக்க அளவான உத்தரவுகளை கோர்ட்டு பிறப்பிக்க முடியும்.

    ஆளுநர்களுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர முடியாத வகையில் அரசியல் சாசனத்தின் 361-வது பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது. இருப்பினும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களின் காலதாமதம், விளக்கமற்ற நிலை நிலவும்போது கோர்ட்டு அளவாக தலையிட முடியும்.

    ஆளுநர்கள் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும் ஒவ்வொரு மசோதாவுக்கும் ஒப்புதல் அளிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை ஜனாதிபதி பெற தேவையில்லை.

    அதேநேரம் மசோதா குறித்த தெளிவில்லாதபோது அல்லது சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனை தேவைப்படும்போது, ஜனாதிபதி அரசியலமைப்பு சாசனத்தின் 143-வது பிரிவின் கீழ் சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை கேட்டுப்பெறலாம்.

    ஆளுநர்களின் அரசியலமைப்பு அதிகாரங்களையும், அவர்களின் உத்தரவுகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்புப்பிரிவு 142-ன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியாது.

    அந்தவகையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும் என்ற கோட்பாட்டை சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு அதிகாரம் அனுமதிக்கவில்லை.

    ஆளுநர்களின் ஒப்புதல் இல்லாமல் ஒரு மசோதா சட்டமாகுமா என்ற கேள்விக்கே இடமில்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் சட்டமியற்றும் பணியை ஐகோர்ட்டுகளோ, சுப்ரீம் கோர்ட்டோ பறித்துக்கொள்ள முடியாது.

    அரசியல்சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்ற விதி தொடர்பான கேள்வி நடைமுறைக்கு பொருத்தமற்றதாக இருப்பதால் பதில் அளிக்கவில்லை.

    சுப்ரீம் கோர்ட்டின் சிறப்பு அதிகாரம் குறித்து ஏற்கனவே விரிவாக பதில் அளித்து விட்டதால், குறிப்பிட்ட பாணியில் பதில் அளிப்பது சாத்தியமில்லை.

    மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நிலவும் தாவாக்களை தீர்வுகாணும் சுப்ரீம் கோர்ட்டின் வரம்பு எல்லை குறித்த கேள்வியும் நடைமுறைக்கு பொருத்தமற்றதாக இருப்பதால் பதில் அளிக்கவில்லை என்று தீர்ப்பில் விளக்கம் அளித்துள்ளது.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    • பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அஜித் குமாரின் உடலில் சிகரெட்டால் சூடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பது தெரியவந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • அஜித் குமாரின் சகோதரருக்கு அரசு வேலை மற்றும் வீட்டுமனை வழங்கப்பட்டது.

    சினிமாவில் தான் நம்ப முடியாத சம்பவங்கள் நடைபெறும். இதெல்லாம் எப்படி சாத்தியம்? என்று கேட்பவர்களுக்கு தற்போது அவை நிகழ்வது அதிர்ச்சியை அளிக்கிறது. காவல் நிலையங்களில் நடைபெறும் மரணம் தொடர்பான தகவல்கள் நம்மை நடுங்க வைக்கும் அளவிற்கு உள்ளது என்றால் அது மிகையல்ல...

    அப்படி ஒரு சம்பவம் தான் மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு. அஜித்குமார் என்றால் நடிகர் என்று தான் நினைத்தது போய் தற்போது மடப்புரம் அஜித்குமார் சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது. அந்தஅளவுக்கு அந்த வழக்கு நம்மில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து பார்ப்போம்.,

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலில் தற்காலிக காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித்குமார் (29). இவர் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். ஒருநாள் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு வந்த நிகிதா என்பவர் தனது காரை பார்க்கிங் செய்யுமாறு அஜித்குமாரிடம் காரின் சாவியை கொடுத்துவிட்டு கோவிலுக்குள் சென்றுவிட்டார். சில மணி நேரம் கழித்து வெளியே வந்த நிகிதாவிடம் அஜித்குமார் காரையும், சாவியையும் ஒப்படைத்தார்.

    காரை பார்க்கிங் செய்தது ஒரு குற்றமா? என்பது போல் நிகிதா, காரில் இருந்த நகைகள் மற்றும் பணம் காணாமல் போனதாக அஜித்குமார் மீது புகார் கூறினார். இதுதொடர்பாக திருப்புவனம் தனிப்படை போலீசார், அஜித் குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் அஜித் குமார் உயிரிழந்தார்.

    இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அஜித் குமாரின் உடலில் சிகரெட்டால் சூடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பது தெரியவந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

     

    நிகிதா அளித்த புகாரில் முறையாக வழக்கு பதிவு செய்யாததும், இதில் பெரிய அரசியல் புள்ளி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் அஜித் குமாரை போலீசார் விசாரணை என்ற பெயரில் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு அழைத்து சென்று தாக்கும் வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    விசாரணை தொடர்பாக ஆரம்பத்தில் மாநில சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இவ்வழக்கு, பின்னர் தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 5 தனிப்படை காவலர்கள் மற்றும் ஒரு காவல்துறை வாகன ஓட்டுநர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    மதுரை உயர் நீதிமன்றக் கிளை இந்த வழக்கை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அஜித் குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ.7.5 லட்சம் இழப்பீடு போதுமானது அல்ல எனக் கூறி, மேலும் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அஜித் குமாரின் சகோதரருக்கு அரசு வேலை மற்றும் வீட்டுமனை வழங்கப்பட்டது.

    வழக்கின் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ தனது விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. டெல்லி தடயவியல் ஆய்வக அறிக்கைக்காக சிபிஐ காத்திருக்கிறது.

    இந்த வழக்கு காவல் நிலைய மரணங்களுக்கு எதிரான ஒரு முக்கிய வழக்காகப் பார்க்கப்படுகிறது. மேலும் சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 5 ஆண்டுகள் ஆகியும் விசாரணை நிறைவடையாத நிலையில், சில மாதங்கள் பரபரப்பாக பேசப்பட்ட அஜித் குமார் மரண வழக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?

    புகார் அளித்ததும் விசாரணை நடத்த மட்டுமே காவலர்களுக்கு அனுமதி உள்ள நிலையில், நீதி வழங்க நீதிமன்றங்கள் உள்ளது. ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் வரை தமிழ்நாட்டில் 27 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் காவல் நிலைய மரணங்கள் தொடர்பாக இதுவரை தமிழ்நாட்டில் எந்தவொரு காவல் அதிகாரியும் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    எது இப்படியோ அடுத்த காவல் மரணம் நிகழ்வதற்கு முன்பாகவாவது சாத்தான்குளம் தந்தை மகன் மற்றும் மடப்புரம் அஜித் குமார் வழக்குகளில் முறையாக விசாரணை நடத்தப்பட்டு விரைவில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

    ×