என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆணவக் கொலை"

    • சாதி மாறி திருமணம் செய்துகொண்ட முருகேசன்-கண்ணகி தம்பதி 2003ல் கொலை செய்யப்பட்டனர்.
    • கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசன், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் பி.இ பட்டதாரி ஆவார்.

    இவர் அதே பகுதியில் வசித்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகள் கண்ணகி என்ற பெண்ணை காதலித்து கடந்த 2003-ம் ஆண்டு மே 5-ந்தேதி பதிவு திருமணம் செய்து கொண்டார்.

    இந்த காதல் திருமணம் குறித்து கண்ணகியின் பெற்றோருக்கு தெரியவர, கண்ணகியை மூங்கில் துறைப்பட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டில் முருகேசன் மறைத்து வைத்தார். ஆனால், பெண்ணின் செயலால் கவுரவம் கெட்டு விட்டது என்று 2003-ம் ஆண்டு ஜூலை 8-ந்தேதி காதல் திருமணம் செய்து கொண்ட கண்ணகி மற்றும் முருகேசனை விருத்தாசலம் வண்ணாங் குடிகாட்டில் உள்ள மயானத்திற்கு இழுத்து சென்று காது மற்றும் மூக்கில் விஷம் ஊற்றி கொலை செய்து, பின்னர் இருவரின் உடலையும் தனி தனியாக எரித்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் முருகேசனின் உறவினர்கள் விருத்தாச்சலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். முதலில் வழக்கை பதிவு செய்ய காலம் தாழ்த்திய போலீசார் பின்னர் இரு குடும்பத்தினரும் சாதி மறுப்பு திருமணம் செய்த தங்களது பிள்ளைகளை கொலை செய்ததாக கொலை வழக்கு பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டு 2004-ம் ஆண்டு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது.

    கடந்த 2004-ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்த நிலையில், 2003-ல் முருகேசனின் உறவினர்கள் புகார் அளித்த போது விருத்தாச்சலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை சி.பி.ஐ. குற்றவாளிகளாக சேர்த்தது. இந்த வழக்கில் 81 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் 36 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர்.

    பின்னர் பல ஆண்டு களாக கடலூர் கோர்ட்டில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கண்ணகியின் தந்தை துரைசாமி, கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டி, அய்யாச்சாமி ரங்கசாமி, கந்தவேலு ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாப்புலி, ராமதாஸ், சின்னதுரை, அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டராக இருந்த தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரில் 13 பேர் குற்றவாளி கள் என்று தீர்ப்பு வழங்கப் பட்டது.

    இதில் அய்யாச்சாமியும், குணசேகரனும் குற்றவாளி இல்லை என்று வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

    கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மற்ற அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கை சரியாக விசாரிக்காத போலீசாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கப் பட்டது.

    ஆனால் கடலூர் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தண்டனை பெற்றவர்கள் மேல்முறை யீட்டு மனுவை தாக்கல் செய்தனர். சென்னை ஐகோர்ட்டு விசாரணை நடத்தி, 2022-ல் தீர்ப்பு வழங்கியது. அதில், கண்ணகியின் அண்ணன் மருது பாண்டிக்கு வழங்கப் பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

    கண்ணகியின் தந்தை துரைசாமி உட்பட 12 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

    இதில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட கண்ணகியின் உறவினரான கோ.கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சுதான்சு துலியா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இதில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 12 பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. மேலும் குற்றவாளிகள் கந்தவேல், ஜோதி, மணி ஆகியோரின் மேல் முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    • ஆணவக் கொலையைத் தடுக்க தமிழகத்தில் சட்டம் இயற்றுங்கள்.
    • தமிழ்நாடு அரசு சட்டத்தை வகுத்தால், அதை மற்ற மாநிலங்கள் பின்பற்றும்.

    அண்ணல் அம்பேத்கர் 135-வது பிறந்த நாளான இன்று சமத்துவ நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது.

    சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள் விழாவில் அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் கலந்துகொண்டார்.

    அந்நிகழ்வில் பேசிய பிரகாஷ் அம்பேத்கர், "ஆணவக் கொலையைத் தடுக்க தமிழகத்தில் சட்டம் இயற்றுங்கள். தமிழ்நாடு அரசு சட்டத்தை வகுத்தால், அதை மற்ற மாநிலங்கள் பின்பற்றும்.

    நாடு முழுவதும் சாதி ரீதியாக ஆணவக் கொலை நடக்கிறது; பல உயிர்களை இழந்துள்ளோம்; அனைத்து சமூகமும் ஆணவக் கொலையை தவறாகக் கருதாதது வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்தார்.

    • கடந்த 30-ந் தேதி வித்யா என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
    • தங்கையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்று நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பருவாய் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகள் வித்யா (வயது 22). இவர் கோவையில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 30-ந்தேதி வீட்டில் உள்ள பீரோ சரிந்து விழுந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் வித்யா பிணமாக கிடந்தார். இதையடுத்து உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை அப்பகுதியில் உள்ள மயானத்தில் புதைத்தனர்.

    இந்த நிலையில் வித்யாவின் காதலன் திருப்பூரை சேர்ந்த வெண்மணி (22), காதலி மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காம நாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வித்யாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். இதில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. வேறு சமூகத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான வெண்மணியை, வித்யா காதலித்து வந்ததால் அவரது சகோதரர் சரவணகுமார்(24) தங்கையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்று நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து சரவணகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    எனது தங்கை வித்யா கோவையில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அந்த கல்லூரியில் படிக்கும் திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்பவரை காதலித்து வந்துள்ளார். இது எங்களுக்கு தெரியவரவே நாங்கள் வித்யாவை கண்டித்தோம். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினோம்.

    இருப்பினும் காதலை கைவிடாமல் வெண்மணியுடன் பேசி வந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே வெண்மணியின் வீட்டினர் எனது தங்கையை பெண் கேட்டு எங்களது வீட்டிற்கு வந்தனர். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வது பற்றி பேசிக்கொள்வோம் என்று எச்சரித்து அனுப்பினோம். இந்த சம்பவத்திற்கு பிறகு வித்யாவை கடுமையாக எச்சரித்தேன். ஒழுங்காக படிக்க வேண்டுமென்றால் கல்லூரிக்கு செல்... இல்லையென்றால் வீட்டிலேயே இருக்குமாறு மிகவும் கண்டிப்புடன் கூறினேன்.

    இதனால் கடந்த 2 மாதங்களாக என்னிடம் எனது தங்கை பேசாமல் இருந்து வந்தார். கடந்த 30-ந்தேதி எனது பெற்றோர் கோவிலுக்கு சென்று விட்டனர். வித்யா மட்டும் தனியாக இருந்தார். அவருடன் பேச முயற்சித்த போது அவள் பேசமறுத்து விட்டாள். இது எனக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வித்யாவின் தலையில் சரமாரியாக தாக்கினேன். இதில் அவள் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தாள். சிறிது நேரத்தில் இறந்து விட்டாள். இதனால் என்னசெய்தென்று தெரியாமல் தவித்தேன்.

    கொலையை மறைக்க வீட்டில் இருந்த பீரோவை இறந்து கிடந்த வித்யா உடலின் மீது தள்ளி, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்தேன்.அவர்களிடம் வித்யா மீது பீரோ சரிந்து விழுந்ததில் இறந்து விட்டாள் என்று நாடகமாடினேன். வெளியில் சென்றிருந்த எனது பெற்றோரும் வந்தனர். அவர்களிடம் நடந்த விவரத்தை கூறினேன்.

    பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் மயானத்தில் உடலை புதைத்து விட்டோம். இனிமேல் யாருக்கும் சந்தேகம் வராது என்று எண்ணியிருந்தேன். இந்த நிலையில் போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு சரவணகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    தொடர்ந்து வித்யாவின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் பிரச்சினையில் தங்கையை கொன்று சகோதரர் நாடக மாடிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கடந்த 30-ந் தேதி வித்யா என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
    • மர்ம மரணம் குறித்து காவல் நிலையத்தில் பெண்ணின் காதலன் புகார் செய்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் என்ற கிராமத்தில் கடந்த மார்ச் 30-ந் தேதி தூங்கி கொண்டிருந்த வித்யா என்ற பெண் தலையில் பீரோ விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் உதவியை நாடியுள்ளனர். அதில் இருந்த மருத்துவர்கள் அவரை சோதித்து பார்த்ததில் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதனையடுத்து போலீசாருக்கு எந்த தகவலும் அளிக்காமல் அந்த பெண்ணை உறவினர்களே அடக்கம் செய்துள்ளனர்.

    முன்னதாக மரணமடைந்த வித்யா என்ற பெண்ணும் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இளைஞர் பெண் கேட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வெவ்வேறு ஜாதி காரணங்களாலோ, அல்லது தனிப்பட்ட காரணங்களாலோ திருமணம் முடித்து கொடுக்க பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் பெண் வீட்டில் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. அந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று அந்த பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார்.காதல் விவகாரம் தொடர்பாக பிரச்சனை இருந்த நிலையில் காதலி பலியானதால் காதலனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மர்ம மரணம் குறித்து காவல் நிலையத்தில் பெண்ணின் காதலன் புகார் செய்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை தோண்டும் பணியில் காவல் துறை ஈடுப்பட்டுள்ளது. மேலும் ஆணவக்கொலையா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இவர்களின் காதல் திருமணத்தை பெண்ணின் குடும்பத்தினர் ஏற்கவில்லை.
    • ஜெகனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (வயது 28). இவர் சரண்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் திருமணத்தை பெண்ணின் குடும்பத்தினர் ஏற்கவில்லை.

    இந்த நிலையில் இன்று மதியம் கே.ஆர்.பி. அணை அருகே ஜெகன் பைக்கில் சென்றபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. ஜெகனின் உறவினர்கள் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆணவக் கொலையில் தொடர்புடைய பெண்ணின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை அப்பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே பெண்ணின் தந்தை சங்கர், கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அப்போது, தனது மகளுக்கு வசதியான இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்த நிலையில், தன் மகளை காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் ஜெகனை கொன்றதாக நீதிபதி முன் வாக்குமூலம் அளித்துள்ளார். 

    • விசாரணையில் காதல் ஜோடியை சிவானியின் தந்தையே துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
    • 2 பேரது உடல்களை இரவோடு இரவாக ஒருபெரிய கல்லில் கட்டி சம்பல் ஆற்றில் வீசிவிட்டனர்.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் மோரினா மாவட்டம் பாலுபுரா அருகே உள்ள ரத்தன் பசாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்பால் சிங். இவரது மகள் சிவானி (வயது18). இவருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ராதேஷ்யம் (21) என்ற வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் இந்த காதலுக்கு 2 வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. அதுவும் சிவானி குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்தனர். காதலனை மறந்து விடும் படி கூறினார்கள். இதனால் காதல் ஜோடியினர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர்கள் திடீரென மாயமானார்கள். இதுபற்றி ராதேஷ்யம் தந்தை போலீசில் புகார் செய்தார். தனது மகன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் புகாரில் தெரிவித்து இருந்தார். போலீசார் காதல் ஜோடியை தேடி வந்தனர். ஆனாலும் அவர்களை பற்றிய துப்பு எதுவும் கிடைக்கவில்லை.

    இதனால் போலீசாரின் சந்தேக பார்வை சிவானி குடும்பத்தினர் மீது திரும்பியது. போலீசார் அவரது தந்தை மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காதல் ஜோடியை சிவானியின் தந்தையே துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. மேலும் 2 பேரது உடல்களை இரவோடு இரவாக ஒருபெரிய கல்லில் கட்டி சம்பல் ஆற்றில் வீசிவிட்டனர். அந்த ஆறு அதிகம் முதலைகள் நிறைந்தது ஆகும். இதையடுத்து போலீ சார் காதல் ஜோடியின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களின் உடல்களை முதலைகள் கடித்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

    • காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலனும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கீர்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

    திருப்பதி:

    சித்தூர் மாவட்டம், பங்காருபேட்டை, போட குர்கியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் கீர்த்தி.

    இவர் அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார்.

    இவர்களது காதல் விவகாரம் கீர்த்தியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் ஊரில் உள்ள பெரியவர்கள் இவர்களது காதலை கண்டித்தனர். இருப்பினும் காதலர்கள் இருவரும் ரகசியமாக சந்தித்து வந்தனர். வேறு சாதியை சேர்ந்த வாலிபரை மகள் காதலிப்பதை கீர்த்தியின் தந்தை அவமானமாக கருதினார்.

    எவ்வளவு கண்டித்தும் இருவரும் ரகசியமாக சந்திப்பதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி ஆத்திரம் அடைந்தார்.

    இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

    கீர்த்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கிராமத்தில் பரவியது.

    காதலி இறந்த தகவல் அறிந்த கங்காதரன், பங்காருபேட்டை ரெயில் நிலையத்திற்கு சென்றார்.

    அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கீர்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

    காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலனும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கடந்த 2014ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட பெண் கொலை.
    • கணவர், அவரது தாயார், சகோதரி, சகோதரியின் கணவர் என 4 பேர் மீது வழக்கு.

    கடலூர் மாவட்டம் ஆதிவராக நத்தம் ஆணவக் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2014ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட சீதா என்ற பெண்ணை கொலை செய்து உடலையும் எரித்தனர்.

    கொலை தொடர்பாக சீதாவின் கணவர் சரவணன், கணவரின் தாயார், சகோதரி, சகோதரியின் கணவர் என 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

    கடலூர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் கைதான 4 பேருக்கும் இரட்டை ஆயுள் விதிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெரியார், அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்த தகுதியில்லாத கூட்டம் என்று பத்திரிகையாளர்களும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
    • கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றப்படுவாரா?

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. அதன்படி தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

    இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளராக சூரியமூர்த்தி (51) அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

    இந்நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூரியமூர்த்தி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ஆணவப்படுகொலை செய்வேன் என்றும், தாயோடு சேர்த்து குழந்தையையும் கருவறுப்போம் என்றும், வருகின்ற காலத்தில் கொங்கு நாட்டில் பல்வேறு கொலைகள் விழும் என்று உளவுத்துறைக்கே சவால் விட்டார். பழைய வீடியோ தான் என்றாலும் கூட, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது மீண்டும் பரவுவதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


    ஈரோடு அருகே கவுண்டர் சாதிப் பெண்ணை திருமணம் செய்த பட்டியிலினப் பையனை கொலை செய்ய அந்தப் பெண்ணின் தந்தை செய்த முயற்சியில் அந்தப் பையனின் 15 வயது சகோதரி கொல்லப்பட்டாள். சூரியமூர்த்தியின் சாதி வெறியால் அந்த கொலை நடந்தேறியதாகவும், அத்தகைய நபரை நாமக்கல் தொகுதி வேட்பாளராக எப்படி ஏற்றுக் கொள்ளலாம் என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. சமூக நீதி குறித்து பேசும் தி.மு.க.வுக்கு இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாதா என்றும், அரசியலில் வெற்றி பெற எதையும் கண்டு கொள்ளமாட்டீர்கள் என்றால், தி.மு.க.-வுக்கும், பா.ஜ.க.-வுக்கும் என்ன வேறுபாடு? பெரியார், அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்த தகுதியில்லாத கூட்டம் என்று பத்திரிகையாளர்களும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

    எனவே, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றப்படுவாரா, அதற்கு தி.மு.க.-வும் அழுத்தம் கொடுக்குமா என்று கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

    • மனமுடைந்த ஷர்மிளா கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஷர்மிளா இன்று சிகிச்சை பலனின்றி பலியானார்.

    சென்னை பள்ளிக்கரணை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடை அருகே கடந்த பிப்ரவரி மாதம் 25 - ந்தேதி வாலிபர் ஒருவரை மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடினர்.

    ரத்த காயங்களுடன் கிடந்த அந்த வாலிபரை அக்கம்பத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.




    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். பலியான வாலிபர் பள்ளிக்கரணையை சேர்ந்த பிரவீன் (26) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜல்லடையன் பேட்டையை சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தது தெரியவந்தது.

    மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் பெண் வீட்டில் கடும் கோபம் அடைந்தனர். இதனால் பள்ளிக்கரணை டாஸ்மாக் அருகில் வைத்து பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் 3 பேர் பிரவீனை ஆணவக் கொலை செய்தது தெரியவந்தது




    தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து தாம்பரம் அருகே தலைமறைவாக இருந்த ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும் அவரது நண்பர்களான ஸ்டீபன், ஸ்ரீவிஷ்ணு, ஜோதிலிங்கம் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் கடந்த நவம்பர் மாதம் தினேஷின் தங்கை ஷர்மி வீட்டின் எதிர்ப்பை மீறி பிரவீனை திருமணம் செய்து கொண்ட சம்பவத்தில் பழி வாங்குவதற்காக கொலை செய்தது தெரியவந்தது.

    இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணையில் காதல் கணவன் பிரவீன் வெட்டி கொல்லப்பட்டதால் அவரது மனைவி ஷர்மிளா மிகுந்த மன வேதனையடைந்தார்.



    கடந்த சில நாட்களுக்கு முன் மனமுடைந்த ஷர்மிளா கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஷர்மிளா இன்று காலை சிகிச்சை பலனின்றி பலியானார்.

    கணவன் ஆணவக் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த மனைவியும் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×