என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    வாக்களிக்காததன் மூலம் பெரிய பாவம் செய்துவிட்டீர்கள் என திக்விஜய் சிங்கை பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
    மத்திய பிரதேச மாநிலம், போபால் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், வழக்கமாக தனது சொந்த தொகுதியான ராஜ்காரில் ஓட்டு போடுவது வழக்கம். போபாலில் நேற்று அவர் வாக்குப்பதிவை பார்வையிட வேண்டி இருந்ததால், அங்கிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள ராஜ்காருக்கு ஓட்டு போட போகவில்லை. இதை அவரே ஒப்புக்கொண்டு, வருத்தம் தெரிவித்தார். அவர் ஓட்டு போடாதது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    திக்விஜய் சிங் நேற்று நடைபெற்ற தேர்தலில் ஓட்டுபோடாதது தொடர்பாக பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். மத்திய பிரதேசத்தில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, திக்விஜய் சிங் ஜனநாயக திருவிழாவில் நீங்கள் பெரிய பாவம் செய்துவிட்டீர்கள். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோர் கூட வரிசையில் நின்று வாக்களித்தனர். ஆனால் நீங்கள் ஓட்டுபோடவில்லை. அவரது கர்வம் போபாலில் வெளிப்பட்டது. மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். ஏன் நான் கூட ஆமதாபாத்தில் எனது கடமையை செய்தேன். திக்விஜய் சிங்குக்கு ஜனநாயகம் பற்றியும் கவலையில்லை, மக்களை பற்றியும் கவலையில்லை.

    நீங்கள் உங்களை காப்பாற்றுவதற்காக மக்களை ஓட்டுபோட சொல்வதிலேயே தீவிரமாக இருந்தீர்கள். உங்கள் வேலையை செய்ய தவறும் அளவுக்கு அவ்வளவு பயம் ஏன்? நீங்கள் கடந்த வருடம் மேற்கொண்ட நர்மதா ஆன்மிக யாத்திரைகூட இந்த தேர்தலில் உங்களை காப்பாற்றாது எனக் கூறினார். 
    தெலுங்கானா முதல் மந்திரியுடனான முக ஸ்டாலின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தி.மு.க. தலைமை தெரிவித்து உள்ளது.
    சென்னை

    தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ளார்.  அவர் திருச்சியில் தான் தங்கியிருந்த அறையிலிருந்து கிளம்பி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்தார்.

    கோபுர வாயிலில் அறநிலையத்துறை சார்பில் மாலை அணிவித்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பேட்டரி கார் மூலம் கோவிலுக்குள் சென்ற அவர், அதன் பின்னர் சிறிது தூரம் நடந்து சென்று, சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்ரீரங்கம் வரவேண்டும் என்ற தனது நெடுநாள் கனவு நிறைவேறியதாக தெரிவித்தார்.

    இதன்பின்னர் சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை, தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் சந்தித்தார். சந்திப்பின் போது துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.


    இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்றது. தெலுங்கானா முதல் மந்திரியுடனான ஸ்டாலின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சென்னையில் இன்று மாலை திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் 6-வது கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ளது. கடைசி கட்ட தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.

    23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பா.ஜனதா மீண்டும் ஆட்சி கட்டிலில் அமருமா? இல்லை அதற்கு மாற்றாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆட்சி அமையுமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

    இந்த தேர்தலில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மாநில கட்சிகள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் வகையில் தனித்து போட்டியிட்டுள்ளன. அந்த வகையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 3-வது அணியை அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி உள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பே சந்திரசேகர ராவ் மு.க.ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததால் சந்திப்பு நடைபெறவில்லை.

    இந்நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். அவர்களுடன் துரைமுருகன் முன்னாள் மத்திய மந்திரி டிஆர் பாலு ஆகியோர் உடன் இருந்தார்கள்.
    வருகிற 23-ந் தேதிக்கு பிறகு மோடி நினைத்தால் கூட தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நீடிக்காது என்று தினகரன் பேசியுள்ளார்.

    சூலூர்:

    சூலூர் தொகுதியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட சின்னியம்பாளையம், நீலாம்பூர், குரும்பபாளையம், கருமத்தம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சுற்றி வருகிறேன் என்று சிலர் கூறுகிறார்கள். எனக்கு ஆசை இருந்தால் எனது சித்தி (சசிகலா) சிறைக்கு செல்லும்போதே நான் முதல்-அமைச்சர் ஆகி இருக்கலாம். இல்லை என்றால் ஜெயலலிதா இறந்த அன்றே ஆகி இருக்கலாம்.

    எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களிடம் ஓட்டு வாங்கியா முதல்-அமைச்சரானார். அவருடன் இருக்கும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் அணி மாற முயற்சித்தனர். இது கூவத்தூரில் இருந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் தெரியும்.

    சசிகலாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக்கியது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைவரும்தான். அதுபோன்று முதல்-அமைச்சராக இருப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் தகுதியற்றவர், சசிகலாவை முதல்-அமைச்சராக மாற்ற வேண்டும் என்று சொன்னவர்களே அவர்கள்தான். 2 நாட்கள் எங்களுடன் இருந்த ஓ.பன்னீர்செல்வம், பா.ஜனதா சொன்னதும், ஜெயலலிதா சமாதிக்கு சென்ற அவர், அங்கு அமர்ந்து தர்மயுத்தம் தொடங்குகிறேன் என்று நாடகம் ஆடினார்.

    ஓ.பன்னீர்செல்வம் சரியில்லை என்பதால்தான், கொங்கு மண்டலத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக வைத்தோம். அடுத்த நாளே அவர் துரோகம் செய்துவிட்டார்.

    இந்த கட்சியை காப்பாற்ற டி.டி.வி.தினகரன் வந்து உள்ளார் என்று ஜெயலலிதாவே கூறிவிட்டு சென்றார் என செயல்வீரர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினாரே?. ஆனால் இப்போது தினகரனுக்கு எந்த ஊர் என்று கூறுகிறார். இதுதான் கலிகாலம். எந்த ஒரு துரோகத்துக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் நம்பிக்கை துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது. 7 ஜென்மத்துக்கும் அதை அனுபவித்து ஆக வேண்டும்.

    18 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்தார்கள். அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்துவிடக்கூடாது என்று மோடியை சந்தித்தார்கள். ஆனால் மோடியாலும் முடியவில்லை. அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்து உள்ளது. அதில் ஒரு தொகுதியில்கூட அ.தி.மு.க. வெற்றி பெற முடியாது என்று உளவுத்துறை கூறி இருக்கிறது. இதனால்தான் 3 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய முடிவு செய்து உள்ளனர். அதற்கும் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. எனவே வருகிற 23-ந் தேதி நீங்கள் வீட்டிற்கு செல்வது உறுதி.

    இவர்களுக்கு ஆதரவாக ஓட்டுப்போட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறித்துவிட்டு, தி.மு.க.வுடன் சேர்ந்து எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுத்தார்கள். அதற்கு காரணம் மோடிதான். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர அவர்தான் காரணம்.

    வருகிற 23-ந் தேதிக்கு பிறகு மோடி நினைத்தால் கூட தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நீடிக்காது. அவரால் காப்பாற்றவும் முடியாது.

    துரோகத்தை வேரறுக்க, துரோகம் என்பதை இனி அரசியல்வாதிகள் பதவிக்காக நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு நீங்கள் தீர்ப்பு வழங்க வேண்டும். தன்னை முதல்-அமைச்சராக்கியவருக்கு துரோகம் செய்தவர்கள், மக்களுக்கு எப்படி நன்மை செய்வார்கள். நீங்கள் அனைவரும் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவுக்குத்தான் ஓட்டுப்போட்டீர்கள். பா.ஜனதாவுக்கு வாக்களிக்கவில்லை. தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. தயவு செய்து நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    தமிழ்நாடு தலைநிமிரவும், தமிழக மக்கள் வாழ்வு மலரவும், யாரிடமும் மண்டியிடாத, தமிழக மக்களுக்காக ஜெயலலிதா எப்படி செயல் பட்டாரோ அதுபோன்று இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் ஒருபோதும் முதல்வராக முடியாது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளார்.

    ஒட்டப்பிடாரம்:

    ஒட்டப்பிடாரம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ. மோகனை ஆதரித்து அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கடந்த 18 நாட்களாக ஒட்டப்பிடாரம் தொகுதியில் தங்கி தேர்தல் பணியாற்றி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றார்.

    ஒட்டப்பிடாரம் தொகுதியில் வி.வெங்கடாசலபுரம், வாலசமுத்திரம் உட்பட 32 கிராமங்களில் மோகனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

    அவர்கள் சாலையோர டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தனர். அப்போது பெண்கள் திரண்டு வந்து வரவேற்றனர். அங்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசும்போது, தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகின்றனர்.

    எடப்பாடியார் அரசிற்கு வலு சேர்க்கும் விதமாக கிராம மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். தி.மு.க. வேட்பாளருக்கு நீங்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். தி.மு.க. மக்கள் விரோத கட்சி. மு.க.ஸ்டாலினால் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது.

    அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தர்ராஜ் ரூ.22 கோடியை வாங்கிக்கொண்டு ஓடி விட்டார். உங்களுக்கு துரோகம் செய்த அவருக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

    எடப்பாடியார் அரசுக்கு வலு சேர்க்கும் விதமாக கிராம மக்கள் இரட்டை இலை சின்னத்திற்குவாக்களிக்க வேண்டும் என்றார்.

    காங்கிரஸ் கட்சிக்கு 272க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி கிடைக்காதபட்சத்தில் ஆட்சி அமைக்க ராகுல் உரிமை கோர மாட்டார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால், பாராளுமன்றத்தில் உள்ள 543 இடங்களில் 272 இடங்கள் வேண்டும்

    2014-ம் ஆண்டு 282 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தது. இந்த தடவை அந்த கட்சிக்கு 200 இடங்களுக்குள்தான் வெற்றி கிடைக்கும் என்று அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

    அதுபோல கடந்த தேர்தலில் 44 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சிக்கு இந்த தடவை சுமார் 100 இடங்களே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 272க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி கிடைக்காதபட்சத்தில் ஆட்சி அமைக்க ராகுல் உரிமை கோர மாட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். 2004, 2009-ம் ஆண்டுகளில் காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் சில கட்சிகள் ஆதரவுடன் மன்மோகன்சிங் பிரதமராகி ஆட்சி நடத்தினார்.

    அப்படி பிரதமர் ஆக ராகுல் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 272 இடங்களுக்கு மேல் கிடைக்காவிட்டால், ராகுல் காங்கிரஸ் சார்பில் எந்த முயற்சியையும் செய்ய மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.

    நேரு, இந்திரா, ராஜீவ் போன்று பெரும்பான்மை பலத்துடன் மட்டுமே ஆட்சியில் அமர ராகுல் விரும்புவதாக கூறப்படுகிறது.


    அதே சமயத்தில் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பதை தடுக்கும் நடவடிக்கைகளில் ராகுல் ஈடுபடுவார் என்பது உறுதியாகி உள்ளது. அதற்காக மாநில கட்சித் தலைவர்கள் யாராவது ஒருவர் ஒருமித்த முடிவுடன் பிரதமராக முன் வந்தால் அவரை ராகுல் ஏற்றுக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

    கர்நாடகாவில் நிறைய எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையிலும் 32 எம்.எல்ஏ.க்கள் மட்டுமே வைத்துள்ள குமாரசாமியை முதல்-மந்திரியாக ஏற்றுக் கொண்டது போல 30 எம்.பி.க்களே வைத்திருந்தாலும் மாநில கட்சித் தலைவரை பிரதமராக ஏற்க ராகுல் தயாராகி வருகிறார்.

    272 இடங்களில் வெற்றி கிடைக்காது என்பதை ராகுல் உணர்ந்து இருப்பதால் 3-வது அணி அமைக்கும் முயற்சியை சிலர் மேற்கொண்டிருப்பதை அவர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். அதோடு பாரதிய ஜனதாவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளிலும் ராகுல் ஓசையின்றி ஈடுபட்டுள்ளார்.

    இதற்காக அவர் ஏ.கே. அந்தோணி, அசோக் கெலாட், ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி இருக்கிறார். அவர்கள் மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், நவீன்பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருடன் இப்போதே தொடர்பை ஏற்படுத்தி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    பா.ஜனதா ஆட்சி அமைவதைத் தடுக்க எந்த தியாகத்துக்கும் தயாராக இருக்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவர்களை ராகுல் கேட்டுக் கொண்டுள்ளார்.

    21-ந் தேதி காங்கிரஸ் சார்பில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுக்கு பிறகே எதிர்க் கட்சிகள் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    விஜயவாடா:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிந்து விட்டது.

    7-வது மற்றும் இறுதி கட்ட வாக்குபதிவு 59 தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மே 23-ந்தேதி நடக்கிறது.

    இதற்கிடையே ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பு வருகிற 21-ந்தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை ஆந்திர பிரதேச முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மேற் கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் 21-ந் தேதி காங்கிரஸ் சார்பில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுக்கு பிறகே எதிர்க் கட்சிகள் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பு நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாபானர்ஜி, பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் புறக்கணிக்க திட்டமிட்டு இருந்தனர். இந்த மூன்று கட்சிகளும் முக்கிய எதிர்க்கட்சிகளாகும்.

    இந்த புறக்கணிப்பு திட்டம் காரணமாகவே 21-ந்தேதி நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் மம்தாவுடன் சந்திரபாபு நாயுடு பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது தேர்தல் முடிவு வருவதற்கு முன்பு எந்த ஒரு கூட்டமும் தேவையில்லை என்று எதிர்மறையான பதிலை தெரிவித்து உள்ளார். இதன் காரணமாகவே எதிர்க்கட்சிகள் கூட்டம் தேர்தல் முடிவுக்கு பிறகு நடத்தப்படுகிறது.

    தேர்தல் முடிவுக்கு பிறகே எந்த கட்சிக்கு எவ்வளவு இடம் கிடைக்கும் என்பது தெரியவரும். அதற்கு பிறகு கூட்டம் நடத்தினால் தான் பயனாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாகவே எதிர்க்கட்சி கள் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டு தேர்தல் முடிவுக்கு பிறகு நடக்கிறது.

    சுட்டெரிக்கும் கோடைக்காலம், முஸ்லிம்களின் நோன்பு காலம் என்பதால் பாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலில் அதிகாலை 5.30 மணியில் இருந்து வாக்குப்பதிவு நடத்தக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. நேற்றுடன் ஆறுகட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் பொதுவாக வாக்குப்பதிவு நேரமானது காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 வரை என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் எதிர்வரும் அனைத்து தேர்தல்களும் வாக்குப்பதிவு நேரத்தை அதிகாலை 5.30 மணியில் இருந்து தொடங்குமாறு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் நிஜாமுதீன் பாட்ஷா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.



    இஸ்லாமியர்களுக்கான நோன்பு திறப்பது காரணமாகவும், தற்போதைய காலக்கட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளதாலும் வாக்குப்பதிவின் நேரத்தை மக்களின் நலன்கருதி மாற்றி அமைக்க வேண்டும்’ என தனது மனுவில் நிஜாமுதீன் பாட்ஷா குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா ஆகியோரை கொண்ட சுப்ரீம் கோர்ட்டின் விடுமுறைக்கால அமர்வின் முன்னர் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    வாக்குப்பதிவுக்கான நேரத்தை முன்கூட்டியே அதிகாலை என்று மாற்றினால் தேர்தல் அலுவலர்களின் போக்குவரத்து தொடர்பான சிரமங்கள் நேரிடும் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், காலை 7 மணி என்பது வெயில் குறைவாக உள்ள நேரம். அதேபோல் மாலை 6 மணிவரை வாக்களிக்க வாய்ப்புள்ளது என்பதை குறிப்பிட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.

    சட்டசபை இடைத்தேர்தலில் தினகரன் கட்சி திமுக வெற்றிக்காக போட்டியிடுகிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    சென்னை:

    ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட வசவப்புரம், வல்ல நாடு ஆகிய இடங்களில் அ.திமு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வை தொடங்கினார். அந்த இயக்கத்திற்கு வழங்கப்பட்ட வெற்றிச் சின்னம் தான், இரட்டை இலை சின்னம். அந்த சின்னத்தை முடக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றம் வரை சென்று போராடியவர் தான் டி.டி.வி. தினகரன்.

    இந்த ஆட்சியை கலைக்க வேண்டும். கட்சியை உடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. தற்போது தி.மு.க.வுடன் சேர்ந்து கொண்டு அம்மாவின் ஆட்சியை கலைக்க வேண்டும் என முயற்சி எடுத்து வருகிறார். அது ஒரு போதும் பலிக்காது.

    டி.டி.வி.தினகரனை வாழ வைத்தது இந்த இயக்கம். அடையாளம் காட்டியது இந்த இயக்கம், விலாசம் கொடுத்ததும் இந்த இயக்கம், அவருக்கு அரசியல் முகவரி தந்து புரட்சித் தலைவி அம்மாவால் வாய்ப்பளிக்கப்பட்டு அ.தி.மு.க. சார்பாக போட்டியிட்டு, வெற்றி பெறச் செய்து, பாராளுமன்றத்தில் அமர வைத்ததும் இந்த இயக்கம் தான். ஆனால் இன்றைக்கு அந்த கட்சிக்கே துரோகம் இழைத்து வருகிறார்.

     


     

    மறைமுகமாக தி.மு.க.வை வெற்றி பெற வைக்க வேண்டும். என்பதற்காக இவர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். எம்.ஜி.ஆர் கட்சியை உருவாக்கும் போது தி.மு.கவால் எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தார் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

    அவரது மறைவுக்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா தலைமை பொறுப்பை ஏற்கும் போது தி.மு.கவால் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பதும் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். புரட்சித் தலைவி அம்மாக்கு தி.மு.க. பல்வேறு வகையில் இன்னல்களையும், இடர்பாடுகளையும் அளித்து வந்தது. அம்மா மீது பல்வேறு பொய் வழக்குகளை போட்டு, அம்மாவை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்படைய செய்ததின் காரணமாகவே, அவரது உடல்நிலை நலி வுற்று, இந்த மண்ணை விட்டு மறைந்தார்.

    அம்மாவை யார், யார் எல்லாம் இந்த நிலைக்கு ஆளாக்கினார்களோ, பழி வாங்கினார்களோ அவர்களுடன் தினகரன் தற்போது கூட்டணி சேர்ந்து கொண்டு. இந்த ஆட்சியையும், கட்சியையும் அழிக்கப்பார்க்கிறார். அழிக்க நினைப்பவர்களுக்கு இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

    நான் கிராமத்தில் விவசாய குடும்பத்திலே பிறந்தவன். விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்களை நன்கு உணர்ந்தவன். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலையொட்டி 26 நாட்கள் தொடர்ந்து கடும் வெயிலிலும் பிரசாரம் செய்து மக்களை சந்தித்து வந்துள்ளேன். அனுபவ ரீதியாக கிராம மக்களின் இன்னல்களையும், துன்பங்களையும் நான் நன்கு அறிந்தவன்.

    ஆனால், ஸ்டாலின் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர். அவரால் வெயிலில் பிரசாரம் செய்ய முடியவில்லை. 4 நாட்கள் கூட வெயிலை தாங்க முடியாதவர் ஸ்டாலின். இவர் மக்களின் கஷ்ட, நஷ்டங்களை தெரியாதவர். இவர் எப்படி மக்களுக்கு சேவை செய்வார். இவர் பிரச்சரக் கூட்டத்தில் பேசும் போது, நான் சிவப்பாக இருக்கிறேன், கவர்ச்சியாக இருக்கிறேன். தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் தற்போது கறுத்துள்ளேன் என பேசியிருக்கிறார். ஒரு தலைவர் இது போன்ற கருத்தை மக்களிடத்திலே தெரிவிக்கலாமா என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

    இவர் பிரசாரத்திற்கு செல்லும் போது, பேண்ட், டிசர்ட் அணிந்து இருபது வயது இளைஞர் என்ற எண்ணத்துடன் சென்று கொண்டிருக்கிறார். எனவே, வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    புரட்சித்தலைவி அம்மா மக்களுக்காக செயல்படுத்திய அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் தற்போது முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மழைகாலங்களில் பெய்கின்ற மழைநீரை தடுத்திடும் வகையில் தடுப்பணைகள் கட்டும் திட்டமும் செயல் படுத்தப்படுகிறது.

    அதே போன்று குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகள், குளங்கள் அனைத்தும் தூர்வாரப்படுகிறது. இது வரை 3000க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் அண்மையில் ஏற்றப்பட்ட சூறைக் காற்றால் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட வாழை மரங்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஏழை, எளிய மக்களும் முறையான மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட முதல்- அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    தற்போது நான் தான் முதல்-அமைச்சராக இருக்கிறேன். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராகத்தான் இருக்கிறார். அவர் எப்படி தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்ற முடியும். பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வாக்குகளை பெற வேண்டும் என்பது தான் தி.மு.க.வின் திட்டமாகும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    பிரதமர் நரேந்திர மோடி தன்னை அறிவுறுத்தவும் எச்சரிக்கவும் கூடிய ஒரே பாஜக தலைவர் யார்? என்பதை முதன்முறையாக அடையாளம் காட்டியதுடன் அவருக்கு புகழாரமும் சூட்டியுள்ளார்.
    போபால்:

    மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியில் இருந்து 8 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் அவர் இந்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு இருந்தது.

    ஆனால் அவருக்கு 76 வயது ஆவதால் இந்த முறை தொகுதி ஒதுக்குவது சந்தேகம் என்று பரவலாக பேசப்பட்டது. அதேசமயம் இந்தூர் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பும் தாமதம் ஆனது.

    இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த சுமித்ரா மகாஜன், வரும் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்தார்.

    இதையடுத்து, இந்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஷங்கர் லால்வானியை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்று பேசினார்.



    அப்போது பாராளுமன்ற சபாநாயகரும் அந்த தொகுதியின் எம்.பி.யுமான சுமித்ரா மகாஜனை அவர் வெகுவாக புகழ்ந்துப் பேசினார். ஒரு சபாநாயகராக தனது பணியை திறமையாகவும், கட்டுப்பாட்டுடனும் நிறைவேற்றியதால் நாட்டு மக்களின் எண்ணங்களில் நீங்காத இடத்தை சுமித்ரா பிடித்துள்ளதாக மோடி குறிப்பிட்டார்.

    இந்த நாட்டின் பிரதமராக என்னை உங்களுக்கு எல்லாம் மிக நன்றாக தெரியும். ஆனால், என்னை அறிவுறுத்தவும் எச்சரிக்கவும் எங்கள் கட்சியில் உள்ள ஒரேநபர் யாராவது உண்டு என்றால் அது இவராகத்தான் இருக்கும்.

     பாஜகவில் நானும் அவரும் இணைந்து பலகாலம் பணியாற்றி இருக்கிறோம். பணியின்மீது அவர் காட்டும் அர்ப்பணிப்புணர்வு அலாதியானது. இந்தூர் நகரின் மேம்பாட்டுக்காக சுமித்ரா மகாஜன் முன்னெடுத்த அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்படும் என இங்குள்ள மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்’ என்றும் மோடி தெரிவித்தார்.
    உத்தரபிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் நடத்தும் ரோடு-ஷோவிற்கு சுமார் 2 லட்சம் பேரை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    அந்த தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய்ராய் நிறுத்தப்பட்டுள்ளார். சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஷாலினி யாதவ் போட்டியிடுகிறார்.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் மோடி மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தடவை அதை விட 2 மடங்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக வாரணாசி தொகுதியில் பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மோடி கடந்த மாத இறுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது சுமார் 3 லட்சம் பேர் ரோடு ஷோவில் கலந்து கொண்டனர். மீண்டும் ஒரு தடவை அவர் வாரணாசி தொகுதிக்கு வந்து தீவிர பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    17-ந்தேதி வாரணாசி தொகுதியில் பிரசாரம் ஓய்கிறது. எனவே 17-ந்தேதி பிற்பகல் அவர் வாரணாசி தொகுதியில் பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது வாரணாசியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த தடவை அவரை 2-வது இடத்துக்கு கொண்டு வர பிரியங்கா விரும்புகிறார். இதற்காக அஜய்ராயை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரியங்கா முடிவு செய்துள்ளார்.

    நாளை மறுநாள் (புதன்கிழமை) பிரியங்கா வாரணாசி தொகுதிக்கு செல்ல உள்ளார். அங்கு அவர் பிரமாண்டமான ரோடு-ஷோ நடத்துகிறார். இந்த ரோடு-ஷோவில் சுமார் 2 லட்சம் பேரை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே மாயாவதியும் அகிலேஷ் யாதவும் இணைந்து வாரணாசியில் பிரமாண்ட பேரணி நடத்தி பிரசாரம் செய்ய உள்ளனர். மறுநாள் மோடி பிரசாரம் செய்கிறார்.



    16-ந்தேதி மேற்கு வங்க மாநிலத்தில் மோடி பிரசாரம் செய்கிறார். அன்றிரவு அவர் வாரணாசி வந்து தங்கி இருந்து மறுநாள் பிரசாரம் செய்ய உள்ளார்.
    அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சே இந்துதான் என குறிப்பிட்டார்.
    கரூர்:

    தமிழ்நாட்டில் 19-ம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று அங்கு பிரசாரம் செய்தார்.

    நேற்றிரவு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் ‘நமது நாட்டு தேசியக்கொடியில் உள்ள மூன்று நிறங்களும் பல்வேறு நம்பிக்கைகளை குறிக்கின்றன. இந்த சமநிலையால் பெருமைப்படும் இந்தியர்களில் நானும் ஒருவன்.

    இந்த மூன்று நிறங்களும் சரியாக இருக்க வேண்டும். சமநிலையோடு இங்குள்ள மக்கள் வாழ வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் விருப்பமாக இருக்கும். நான் ஒரு நல்ல இந்தியன் என பெருமையுடன் அறிவிக்க விரும்புகிறேன்.

    இந்த இடம் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதால் நான் இதை சொல்லவில்லை. ஆனால், மகாத்மா காந்தியின் சிலைக்கு முன்னால் நின்று இதை சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அது (தீவிரவாதம்) இங்கே தொடங்கியது.



    அந்த கொலைக்கான (1948-ம் ஆண்டு காந்தியை கோட்சே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது) விடையை தேடித்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்’ என குறிப்பிட்டார்.

    முன்னதாக, கடந்த 2017-ம் ஆண்டில் பிரபல தமிழ் வார இதழில் தொடர் கட்டுரை எழுதிய கமல்ஹாசன் இதேபோல், ‘இந்து தீவிரவாதம்’ தொடர்பான ஒரு கருத்தை குறிப்பிட்டிருந்தார். இதற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பல்வேறு இந்து அமைப்பினரிடம் இருந்து கண்டனம் எழுந்தது.

    தனது தமிழ் கட்டுரை ஆங்கிலம் மற்றும் இந்தியில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு விட்டதாக அப்போது கமல்ஹாசன் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
    ×