என் மலர்
தேர்தல் செய்திகள்






பாராளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அடையாறு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரியிடம் மனுதாக்கல் செய்தார்.
அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம் மனுதாக்கல் செய்தார். வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் கலெக்டர் ராமனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திருச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் திருச்சி கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சிவராசுவிடம் மனுதாக்கல் செய்தார். தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான அன்பழகனிடம் மனுதாக்கல் செய்தார்.

தூத்துக்குடி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்தார். சிவகங்கை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜா மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார்.
தென்காசி தொகுதி புதியதமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி தேர்தல் அதிகாரி முத்துராமலிங்கத்திடம் மனுதாக்கல் செய்தார். திருச்சி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன் கலெக்டர் சிவராசுவிடம் மனுதாக்கல் செய்தார்.
சிதம்பரம் (தனி) தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன் அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனுதாக்கல் செய்தார்.
ஈரோடு தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார்.
கோவை தொகுதி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் நடராஜன் மனுதாக்கல் செய்தார்.
பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் பெரம்பலூர் கலெக்டர் சாந்தாவிடம் மனுதாக்கல் செய்தார்.
திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார்.
அரூர் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ண குமார், மானாமதுரை சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் இலக்கியதாசன் ஆகியோர் தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தனர்.
ஓசூர் சட்டசபை தொகுதியில் அ.திமு.க. வேட்பாளராக பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி போட்டியிடுகிறார். அவர் இன்று தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார். #LSPolls #ADMK #DMK #congress #BJP
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சி தலைவர்களும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரம், செய்தியாளர் சந்திப்பு என தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான முக்தார் அப்பாஸ் நக்வி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டின் வளம், பாதுகாப்பு, வளர்ச்சி என அனைத்திலும் சிறப்பாக செயலாற்றும் பிரதமர் மோடி தான் அந்த சரியான நிரந்தர பிரதமர் என நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பிரியங்கா அரசியல் சுற்றுலா மேற்கொள்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி திட்டப்பணிகளை செய்வது குறித்து தவறான வசைப்பாடும் கும்பலாக காங்கிரஸ் கட்சியினர் மாறி விட்டனர்.
மேலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான மோடியின் நடவடிக்கைகளை காங்கிரசால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. இந்த செயல்களை கண்டு மனசோர்வடைந்த காங்கிரஸ் கட்சியினர் மோடிக்கு எதிரான மோசமான பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #MukhtarAbbasNaqvi #Congress
சென்னை:
தென்சென்னை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் தீவிர பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
அ.தி.மு.க. கூட்டணி கட்சியான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் ஜெயவர்தன் சந்தித்து வாழ்த்து பெற்றார். பிரேமலதா விஜயகாந்த்தும் ஜெயவர்தன் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் வேட்பாளர் ஜெயவர்தன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்சென்னை தொகுதி மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் கடந்த 5 ஆண்டுகளில் செய்து கொடுத்துள்ளேன். தொகுதி மேம்பாடு நிதியிலும் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துள்ளேன்.
விருகம்பாக்கம் மற்றும் தி.நகர் தொகுதிக்கு உட்பட்ட வடபழனி பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பொருட்டு நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.80 லட்சம் மூலம் வெள்ளத் தடுப்புபணிகள், உயர் கோபுர மின் விளக்கு, கழிப்பறை மற்றும் பயணியர்களுக்கு இருக்கை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.
ஒட்டியம்பாக்கம் ஊராட்சியை மேம்படுத்தும் விதமாக 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள் மேம்படுத்துதல், தெரு மின் விளக்கு போன்ற வளர்ச்சி திட்டங்கள் செயல் படுத்தப்பட்டது.
சோழிங்கநல்லூர் தொகுதியிலுள்ள கண்ணகி நகரில் கழிவுநீர் அடைப்பு அகற்றும் இயந்திரம் அமைப்பதற்கு ரூ.51.86 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது.
தொகுதி மக்களுக்காக அயராது பாடுபட்டு வரும் என்னை இந்த முறையும் அதிக வாக்கு வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேட்பாளர் ஜெயவர்தனுடன் மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சென்று இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினர். #vijayakanth #admk #Jayavardhan
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு மாநில கட்சிகளுடன் சுமூகமான கூட்டணி அமையவில்லை. காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளை கேட்டதுதான் கூட்டணி உடன்பாடு ஏற்படாமல் போனதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. அங்கு ஆளுங் கட்சியாக உள்ள ஆம்ஆத்மி கட்சியுடன் கூட்டணி சேர காங்கிரஸ் விரும்பியது. ஆனால் காங்கிரஸ் 4 தொகுதிகளை கேட்டதால் ஆம்ஆத்மி கூட்டணிக்கு சம்மதிக்க வில்லை.
இதனால் தனித்து போட்டியிடும் நடவடிக்கைகளில் ஆம்ஆத்மி ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே ஆம் ஆத்மியுடன் சேர காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.
இதுபற்றி இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் ஆலோசனை நடத்தினார். டெல்லி காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகளுடன் அவர் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பது பற்றி விவாதித்தார்.

டெல்லி காங்கிரஸ் தலைவர்களில் ஒருசாரார் ஆம் ஆத்மிக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் ஆம்ஆத்மிக்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவித்தனர். எனவே டெல்லியில் ஆம்ஆத்மியுடன் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி உடன்பாடு ஏற்படுமா? என்பது தொடர்ந்து இழுபறியிலே உள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுமைக்குமான பொதுவான தேர்தல் அறிக்கை வெளியிட திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்காக தனி குழு அமைக்கப்பட்டு இருந்தது.
அவர்கள் அறிக்கை தயாரித்து கொடுத்துள்ளனர். வருகிற 2-ந்தேதி இந்த தேர்தல் அறிக்கை வெளியிடுவது பற்றியும் இன்று ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியை போட்டியிட செய்ய முயற்சி நடந்து வருகிறது. கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் இது தொடர்பாக ராகுல்காந்தியை வலியுறுத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாகவும் இன்று ராகுல்காந்தி காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் விவாதித்தார். எனவே ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிடுவாரா? என்பது இன்று மாலை தெரிந்து விடும். #rahulgandhi #parliamentelection #aap
சென்னை:
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே சாமி கும்பிட்டு விட்டு தனது பிரசார பயணத்தை தொடங்கினார். திறந்த ஜீப்பில் நின்றபடி வீதிவீதியாக சென்று அவர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்காளர்களை பார்த்து கும்பிட்டபடி இரட்டை இலை சின்னத்துக்கு அவர் ஓட்டு கேட்டார்.
வேட்பாளர் ஜெயவர்தனுடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ. பா.ம.க. மாவட்ட செயலாளர் சிவகுமார், தே.மு.தி.க. ஆனந்தன், பா.ஜ.க டால்பின் ஸ்ரீதர், த.மா.கா கொட்டிவாக்கம் முருகன், அ.தி.மு.க. பகுதி செயலாளர் டி.ஜெயசந்தின், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கந்தன், அசோக், வட்ட செயலாளர் தங்கதுரை என்கிற பாபு உள்பட அ.தி.மு.க, பா.ம.க., தே.மு.தி.க, பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
பிரசாரத்தின் போது வழி நெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மாடியில் நின்று பூக்கள் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே தொடங்கிய பிரசாரம் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக சென்று கலங்கரை விளக்கம் அருகே முடிவடைந்தது. பிரசாரத்தின் இடையே ஜெயவர்தன் மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது :-
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்களுக்கு நன்மை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டணி. மயிலாப்பூர் தொகுதி மட்டுமல்ல 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது நிச்சயம்.
ஜெயலலிதா ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த பொன்னான நலத்திட்டங்கள் இன்றும் நினைவு கூறத்தக்கவையாக உள்ளது. தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்களும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எண்ணற்றவை நிறைவேற்றப்பட்டுள்ளன.
எம்.பி. மேம்பாட்டு நிதி மூலம் தென்சென்னை தொகுதியில் ஏராளமான நலத்திட்டங்களை வளர்ச்சி பணிகளை நிறைவேற்றி உள்ளேன். ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லி நாங்கள் மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகிறோம். நிச்சயம் இந்த பாராளுமுன்ற தேர்தலில் வெற்றி பெற்று மாநில உரிமையை நிலைநாட்டுவோம்.
இவ்வாறு வேட்பாளர் ஜெயவர்தன் கூறினார். #ADMK
தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று மனுத்தாக்கல் செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேனி மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளை அறிந்து அதனை நிறைவேற்ற பாடுபடுவேன். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக மதுரை-போடி அகல ரெயில் பாதை திட்டப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை மேற்கொண்ட 4 காண்டிராக்டர்கள் ஓடி விட்டனர்.
கடைசியாக பணி செய்த ஆந்திராவைச் சேர்ந்த காண்டிராக்டர் ஒருவர் தன்னிடம் அதிக அளவு கமிஷன் கேட்பதாக என்னிடம் கூறினார். தேனி மாவட்ட மக்களின் நீண்ட கால பிரச்சனையை கருத்தில் கொண்டு நான் வெற்றி பெற்ற 6 மாதத்தில் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த பாடுபடுவேன்.

இந்த தொகுதிக்கு புது முகம் என்று என்னை கூறுகின்றனர். நடிகர் நடிகைகளில்தான் புதுமுகம் உண்டு. நான் அரசியலில் பல ஆண்டுகளாக பணி செய்துள்ளேன். நான் வெற்றி பெற்றால் தேனி மாவட்டத்தை சுற்றுலா தலமாக்குவேன். அதோடு மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Congress #EVKSElangovan






