search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திராவின் வறுமையை ஒழிப்பேன் முழக்கம் என்ன ஆனது? - காங்கிரசுக்கு பாஜக கேள்வி
    X

    இந்திராவின் வறுமையை ஒழிப்பேன் முழக்கம் என்ன ஆனது? - காங்கிரசுக்கு பாஜக கேள்வி

    ஏழைகளின் வங்கி கணக்குகளில் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் போடப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி எந்த காலத்திலும் நிறைவேறாது என பாஜக தெரிவித்துள்ளது. #Congressrecord #antipoor #RaviShankarPrasad
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் நாட்டில் உள்ள 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருமானமாக ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் (மாதம் 6 ஆயிரம் ரூபாய்) வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம் நாட்டின் மக்கள் தொகையில் 20 சதவீதமாக இருக்கும் ஏழை குடும்பங்களை சேர்ந்த 25 கோடி மக்கள் பலனடைவார்கள் என தெரிவித்துள்ளார்.

    இந்த பலனைப்பெற அதிகபட்ச குடும்ப வருமானத்துக்கான உச்சவரம்பு மாதம் 12 ஆயிரமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், ராகுல் காந்தி அளித்துள்ள இந்த வாக்குறுதி எந்த காலத்திலும் நிறைவேறாது என பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ‘அரசியல் ஆதாயத்துக்காக வறுமையை மையக்கருவாக காங்கிரஸ் பலமுறை பயன்படுத்தி வந்துள்ளது. இந்தியாவில் இருந்து வறுமையை விரட்டுவோம் என்ற முழக்கத்துடன் 1971-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வறுமையை ஒழிக்க ஒன்றுமே செய்யவில்லை. 

    உற்பத்தியை பெருக்க வேண்டும். பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற கோட்பாட்டில் அவருக்கும் நம்பிக்கை இல்லை. வறுமையை மீண்டும் பகிர்ந்தளிப்பதை மட்டுமே அவர் நம்பி இருந்தார். 

    இப்படி கடந்த 50 ஆண்டுகளாக இந்த நாட்டை காங்கிரஸ் கட்சி தவறான பாதையில் வழிநடத்தியது. வறுமையை விரட்டுவோம் என்று வாக்குறுதி அளித்து 50 ஆண்டுகளாகியும் இன்னும் நாட்டில் 20 சதவீதம் மக்கள் 12 ஆயிரம் ரூபாய் வருமானம்கூட கிடைக்காமல் வாழ்கிறார்கள் என்றால், அந்த அளவுக்கு இந்த நாட்டின் ஏழை மக்கள் வஞ்சிக்கப்பட்டதற்கான பழியையும், பொறுப்பையும் காங்கிரஸ் கட்சிதான் ஏற்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ’கடந்த 55 ஆண்டுகளாகவே காங்கிரஸ் ஆட்சி ஏழை மக்களுக்கு விரோதமான ஆட்சியாகவே இருந்து வந்துள்ளது. 1971-ம் ஆண்டு வறுமையை விரட்டுவோம் என்று இந்திரா காந்தி வாக்குறுதி அளித்தபோது நாட்டில் இனி வறுமையே இருக்காது என்று நாங்கள் எல்லாம் நினைத்தோம். ஆனால், என்ன நடந்தது. வறுமை ஒழிந்து விட்டதா?

    நான் டெல்லியில் இருந்து ஒரு ரூபாய் அனுப்பினால் விவசாயிகள் கையில் 15 பைசாதான் போய் சேருகிறது என முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறியதுபோல் தான் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எப்போதுமே நிறைவேறியதில்லை. இனிமேல் நிறைவேறப் போவதுமில்லை’என்று குறிப்பிட்டார். #Congressrecord #antipoor #RaviShankarPrasad
    Next Story
    ×