என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    காங்கிரஸ் ஆட்சியில் 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு குறைந்தபட்ச மாத வருமானமாக 6 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #Congress #Poorfamily
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாட்டின் பல பகுதிகளில் பிரசாரப் பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஏழை மக்களுக்கான குறைந்தபட்ச உத்தரவாத வருமானமாக அவர்கள் வங்கி கணக்குகளில் அரசின் சார்பில் மாதந்தோறும் பணம் செலுத்தப்படும் என்று தொடர்ந்து கூறி வந்தார். ஆனால், எவ்வளவு தொகை செலுத்தப்படும் என அவர் தெரிவிக்கவில்லை.



    இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருமானமாக ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் (மாதம் 6 ஆயிரம் ரூபாய்) வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம் நாட்டின் மக்கள் தொகையில் 20 சதவீதமாக இருக்கும் ஏழை குடும்பங்களை சேர்ந்த 25 கோடி மக்கள் பலனடைவார்கள் என ராகுல் காந்தி இன்று தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி ‘இந்த வாக்குறுதி நிறைவேற்றக் கூடியது தானா? என பல வகைகளில் ஆய்வு செய்த பின்னர், பல்வேறு பொருளாதார வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு இந்த அறிவிப்பை வெளியிடுவதாக குறிப்பிட்டார். வறுமையை அடியோடு ஒழிக்க இந்த திட்டம் மிகப்பெரிய ஆயுதமாக அமையும்.

    மேலும், உலகில் எந்த நாட்டு அரசும் நிறைவேற்றாத ஏழை மக்களுக்கான குறைந்தபட்ச வருமானத்துக்கு உத்தரவாதம் வழங்கும் மிகப்பெரிய திட்டமாகவும் இது இருக்கும்’ என்று குறிப்பிட்டார். #RahulGandhi #Congress #Poorfamily 
    தேனி மாவட்டம் வளர்ச்சி அடையாததற்கு ஓ.பி.எஸ்.தான் காரணம் என தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். #LSPolls #ThangaTamilselvan #OPS
    ஆண்டிப்பட்டி:

    தேனி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் தேர்தல் பிரசாரத்தின் போது கூறியதாவது:-

    கடந்த 25 ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார். அவரிடம் 10-க்கும் மேற்பட்ட துறைகள் இருந்தன. அவ்வாறு இருந்தபோதும் தேனி மாவட்டத்துக்கு எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வரவில்லை. நான் சட்டமன்றத்தில் மாவட்டத்துக்கான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பல முறை பேசியுள்ளேன். ஆனால் அந்த திட்டங்களை செயல்படுத்த கூடிய இடத்தில் இருந்த பன்னீர் செல்வம் தொடர்ந்து தேனி மாவட்டத்தையும், ஆண்டிப்பட்டி தொகுதியையும் புறக்கணித்து வந்துள்ளார். தேனி மாவட்டம் வளர்ச்சி அடையாததற்கு ஓ.பி.எஸ்.தான் காரணம்.



    இதுவரை தேனி மாவட்டத்துக்கு எவ்வித நன்மையும் செய்யாத ஓ.பி.எஸ். தற்போது தனது மகன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பணத்தை தண்ணீராக வாரி இறைத்து வருகிறார். ஓ.பி.எஸ்.க்கும் அவரது மகனுக்கும் தொகுதி மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.

    எங்களுக்கு சின்னம் கிடைக்காவிட்டாலும் தனித்தனியாக ஒதுக்கப்படும் சின்னத்தில் போட்டியிட்டு மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம்.

    தமிழகத்தில் அ.ம.மு.க.வுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. தற்போது அ.ம.மு.க. பலமான கட்சியாக உருவெடுத்துள்ளது. இன்றைய அரசியல் களத்தில் புதிய தலைமையை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அ.தி.மு.க. தொண்டர்கள் 90 சதவீதம் பேரும் பொது மக்கள் ஆதரவும் எங்களுக்கு உள்ளது.

    மக்களவை தேர்தலில் நான் வெற்றி பெற்றவுடன் இத்தொகுதியில் நிலுவையில் உள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #LSPolls #ThangaTamilselvan #OPS
    சிவகங்கை தொகுதி பிரச்சினை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி சுதர்சனம் நாச்சியப்பனுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். #KSAlagiri #SudarsanaNatchiappan
    சென்னை:

    சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதில் கடும் இழுபறி நிலவியது. கடைசியில் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இதற்கு முன்னாள் மத்திய மந்திரி சுதர்சனம் நாச்சியப்பன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வேட்பாளர் தேர்வு குறித்தும் குற்றம் சாட்டினார்.

    இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எங்கள் கட்சியில் தகுதியான வேட்பாளர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களில் 9 பேருக்குத்தான் வாய்ப்பு வழங்க முடியும். நான் 2 முறை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகளை ஒருவாரம் செய்த பிறகு மாற்றப்பட்டேன். இதுபோன்ற தருணங்களில் யாருக்கும் வருத்தம் ஏற்படத்தான் செய்யும். வருத்தப்படக்கூடாது என்று நாம் சொல்ல முடியாது.



    அவர்கள் தங்கள் கருத்துக்களையும், வருத்தத்தையும் நாகரீகமாக தெரிவிக்க வேண்டும். தங்கள் ஆதங்கத்தை வெளியே சொல்வதற்கு பதிலாக மேலிடத்தில் சொல்லலாம். கார்த்தி சிதம்பரத்துக்கு நிர்ப்பந்தத்தின் பேரில் சீட் வழங்கி இருப்பதாக கூற முடியாது.

    யாரும் கட்சித் தலைமையை நிர்ப்பந்தப்படுத்த முடியாது. எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதெல்லாம் தவறு. நாங்கள் எதிர்பார்த்து கேட்ட தொகுதிகள் கிடைத்திருக்கிறது. எல்லா வேட்பாளர்களுமே தகுதியானவர்கள்தான். தொகுதியை வைத்து அந்த தொகுதிக்கு தகுதியானவர்கள் இல்லை என்று யார் மீதும் குறை சொல்ல முடியாது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநில உரிமைகளை மீட்டெடுப்போம் என்று சொல்லி இருக்கிறார். இது வேடிக்கையாக இருக்கிறது. ஜெயலலிதா கூட மத்தியில் இருந்து மாநில உரிமைகளை கேட்டு பெறுவதில் உறுதியாக இருந்தார்.

    ஆனால் தற்போதைய அரசு மாநில உரிமைகளை மோடியிடம் அடகு வைத்து விட்டது. மோடி தலைமையில் நாடு பாதுகாப்பாக இருப்பதாக முதல்-அமைச்சர் கூறுகிறார். இது ஊனமுற்றவர் மாந்தோப்பு காவல்காரராக இருக்கும் கதை.

    துல்லிய தாக்குதலை நமது விமானப்படை நடத்தியது உண்மை. அதில் பலியானவர்கள் எத்தனை பேர் என்பது இல்லையே. அதை பா.ஜனதா தலைவர் அமித்ஷா அரசியலாக்கி வருகிறார். இதற்கு முன்பும் பலமுறை துல்லிய தாக்குதல் நடந்தது உண்டு. ஆனால் யாரும் அரசியல் ஆக்கியது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது குமரி அனந்தன், தங்கபாலு, கோபண்ணா, செல்வ பெருந்தகை, ரஞ்சன்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். #KSAlagiri #SudarsanaNatchiappan
    மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜியை சந்திப்பதற்காக நடிகர் கமல்ஹாசன் கொல்கத்தா புறப்பட்டு சென்றார். #MamataBanerjee #LSPolls #KamalHaasan

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜியை சந்திப்பதற்காக இன்று காலை கொல்கத்தாவுக்கு புறப்பட்டு சென்றார். இன்று அவர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசுகிறார். அதன்பிறகு உடனே சென்னைக்கு திரும்புவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    மம்தா பானர்ஜியை கமல் சந்திப்பது இது 3வது முறை. முதல் முறை சந்தித்தபோது தன்னை கார் வரை வந்து வழியனுப்பி வைத்த அரசியல் தலைவர் என்று புகழ்ந்து இருந்தார்.


    அடுத்து கட்சி தொடங்காமல் அ.தி.மு.க. அரசை விமர்சித்து வந்த போது 2017-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதி சந்தித்தார். தற்போது பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் மம்தாவை கமல் சந்திப்பது பரபரப்பாகி உள்ளது. #MamataBanerjee #LSPolls #KamalHaasan

    பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொள்ளாச்சி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் மூகாம்பிகை ரத்னம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை முதன்முதலாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர். #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

    கமல்ஹாசன் பெயர் பட்டியலில் இல்லாதது பொது மக்களுக்கு ஆச்சர்யத்தையும் கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. கமல் தென்சென்னை அல்லது ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ராமநாதபுரத்தில் கமலுக்காக பிரசாரமே தொடங்கப்பட்டது.

    ஆனால் கமல் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டார். இதுபற்றி கட்சி நிர்வாகிகளிடம் கேட்ட போது, ‘எங்களை பொறுத்தவரை அவர் முதல் அமைச்சர் வேட்பாளர். எனவே சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவார்.

    அவர் போட்டியிடுவேன் என்றுதான் கூறினார். ஆனால் நாங்கள் தான் வேண்டாம் என்று மறுத்தோம். இந்த தேர்தலில் அவர் எல்லா தொகுதிகளுக்கும் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது. மக்கள் மத்தியில் கட்சி பதிவதுதான் அவசியம்’ என்றனர்.

    கமல் கட்சியில் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரனுக்கு கோயம்புத்தூரில் சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் கோவை மக்களுக்கு பரிச்சயமானவர். டாக்டரான மகேந்திரன் விவசாயத்தில் பல புதுமைகளை புகுத்தி வெற்றி கண்டவர். கோவை பகுதியில் பிரபலமானவர். எனவேதான் அவரை நிறுத்தி இருக்கிறார்.

    கவிஞர் சினேகன் சிவகங்கையில் நிற்கிறார். சினேகனுக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் அருகே உள்ள கரியாபட்டி. ஆனால் சிவகங்கை தொகுதிக்கும் சினேகன் பரிச்சயமானவர். ஒரு அமைப்பு தொடங்கி நடத்திய போது அந்த பகுதிகளில் தான் பிரபலமானார். எனவே சிவகங்கை தொகுதியை கேட்டு வாங்கியுள்ளார்.



    பொள்ளாச்சி தொகுதியில் ஆர்.மூகாம்பிகை ரத்னம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பெண்களுக்கான சமூக செயற்பாட்டாளரான இவர்தான் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை முதன்முதலாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.

    பைக் ரேசரான இவர் பொள்ளாச்சி பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். கோவையில் இருந்து லண்டனுக்கு காரிலேயே பயணம் செய்து சாதனை புரிந்தவர். கடந்த 8-ந்தேதி தான் கட்சியில் இணைந்துள்ளார். கட்சியின் செயலியில் இவர் அளித்த புகார் தான் செய்தியானது. அதன் பிறகே இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
    தெலுங்கு தேசம் ஆட்சியில் ஆந்திர மக்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். #ChandrababuNaidu

    சித்தூர்:

    ஆந்திர மாநிலத்தில் ஏப்ரல் 11-ந்தேதி தேர்தல் நடக்கிறது. சித்தூர் மாவட்டம் பலமநேரில் சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரசாரம் செய்தார்.

    பலமநேர் பஸ் நிலையம் அருகில் திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் தெலுங்கு தேசம் கட்சி அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வாக்குச் சேகரித்தார்.

    தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் பொதுமக்கள் மிகப் பாதுகாப்பாகவும், நலமாகவும் வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலை தொடர வேண்டுமென்றால், தெலுங்கு தேசம் கட்சிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்த நிலையிலும், ஆந்திர மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசு கைவிரித்து விட்ட நிலையிலும், பல்வேறு நலத் திட்டங்களை தெலுங்கு தேசம் கட்சி அரசு செய்துள்ளது.

     


    பலமநேர் சட்டமன்ற தொகுதிக்கு அந்திரி நீவா கால்வாய் அணையில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் திட்டம் மிக விரைவில் நிறைவேற்றப்படும். இதனால் எந்த நேரத்திலும் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராத நிலை உருவாகும். இந்தச் சட்டமன்ற தொகுதியில் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் அமைக்கப்படும்.

    பலமநேர் வனப்பகுதியில் யானைகள் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பலமநேர் சட்டமன்ற தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மந்திரி அமர்நாத்ரெட்டியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வருகையால், பலமநேர் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.  #ChandrababuNaidu

    என்ன நடவடிக்கை எடுத்தாலும் புதிய வழிகளை கண்டுபிடித்து ஓட்டுக்கு பணம் சப்ளை செய்வதாக முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார். #NareshGupta
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக நீண்டகாலம் பணியில் இருந்தவர் நரேஷ் குப்தா. நேர்மையான அதிகாரி என பெயர் எடுத்தவர்.

    தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் காந்தி போதனைகளை பரப்பும் பணியினை செய்து வருகிறார்.

    தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கட்டுப்படுத்த முடியாத நிலை இருப்பது குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக அவ்வப்போது மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. ஆனால் தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் பண பலத்தை பயன்படுத்துவதை இன்னமும் தடுக்க முடியவில்லை.

    வேட்பாளர்கள் செலவை கண்காணிக்க அதிகளவு பார்வையாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். பறக்கும் படைகள் சோதனை செய்கின்றனர்.

    வருமான வரித்துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் துறை மேற்கொள்கிறது. உரிய ஆவணங்கள் இல்லாத பணத்தை பறிமுதல் செய்கிறார்கள்.


    ஆனால் இதையெல்லாம் மீறி பணத்தை சப்ளை செய்ய அரசியல்வாதிகள் பல புதிய வழிகளை கண்டுபிடித்து விடுகிறார்கள்.

    வாக்காளர்களுக்கு மொத்தமாக பணம் கொடுக்காமல் சிறிய அளவிலான பணத்தை அவ்வப்போது கொடுக்கிறார்கள். இதை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஆனால் இப்போது வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தாண்டி வாக்காளர்களே ஓட்டு போட தங்களுக்கு பணம் வேண்டும் என்று கேட்கிறார்கள். பணம் அல்லது பரிசு பொருட்களை கேட்டு பெறுகிறார்கள். அப்படி கொடுக்காவிட்டால் கோபம் அடைகிறார்கள்.

    அந்த காலத்தில் ஓட்டு போட பணம் கொடுத்தால் வாங்கி கொள்வார்கள். பணம் வேண்டும் என்று வற்புறுத்த மாட்டார்கள். இப்போது பணம்- பரிசு பொருட்களை வாக்காளர்களே வாங்குவதால் அவற்றை அவர்களுக்கு அளிப்பதில் அரசியல் கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது.

    அதுவும் இடைத்தேர்தல் நேரத்தில் இப்போது பணம் கொடுப்பது அதிகரிக்கிறது. அதை கட்டுப்படுத்துவது தேர்தல் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது.

    5 ஆண்டுகளில் பாராளுமன்றம், சட்டசபை, உள்ளாட்சி துறை என 3 தேர்தல் வருகின்றன. எனவே தேர்தலை மனதில் வைத்தே அரசியல் கட்சிகளும், அரசும் செயல்படுகின்றன. இதனால் நீண்ட கால வளர்ச்சிக்காக செயல்படாமல் குறுகிய நோக்கத்துடன் செயல்படுகின்றனர். எனவே இலவச திட்டங்களை அறிவிக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

    தமிழ்நாட்டில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றுவது கடினமானது. தேர்தல் ஆணையம் மீது அதிகளவு புகார்களை கூறுவது தமிழகத்தில் வழக்கமாக உள்ளது. மற்ற மாநிலங்களில் இந்தளவு இல்லை. அங்கு தேர்தல் அதிகாரிக்கு அதிக மரியாதை வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #NareshGupta
    டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. #TTVDhinakaran #AMMK #ElectionCommission #PressureCooker
    புதுடெல்லி:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். ஆனால், அவரது கட்சிக்கு பொது சின்னம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது.

    ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரன், தேர்தல் ஆணையம் ஒதுக்கிய குக்கர்  சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், அந்த சின்னத்தையே தனது கட்சிக்கு பொது சின்னமாக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த விஷயத்தில் உயர்நீதிமன்றம் ஏற்கனவே கைவிரித்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து, 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் வாதிட்டது.


    பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டும்தான் பொது சின்னம் கொடுக்க முடியும். அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னத்தை பொது சின்னமாக கொடுக்க முடியாது, என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் தெரிவித்தார்.

    தேர்தல் ஆணையத்தின் இந்த வாதத்திற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடும் அதிருப்தி தெரிவித்தார். அத்துடன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார். #TTVDhinakaran #AMMK #ElectionCommission #PressureCooker
    பேராவூரணி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் தாமரை உருவம் பொறித்த வெள்ளிக்காசுகளை பறிமுதல் செய்தனர். #LSPolls

    பேராவூரணி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதுவரை நடத்திய வாகன சோதனையில் ரூ.2 கோடிக்கும் மேல் பணம் சிக்கியுள்ளது.

    மேலும் முக்கிய இடங்களில் 24 மணி நேரமும் பறக்கும் படையினர் கண்காணித்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை நடத்திய வாகன சோதனையில் தாமரை உருவம் பொறித்த வெள்ளிக்காசுகளை பறிமுதல் செய்தனர்.

    பேராவூரணி அடுத்த காரங்குடி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த வட்ட வழங்கல் அலுவலர் வில்சன் தலைமையில் ஏட்டுகள் பாரதிதாசன், காந்தி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அந்த லாரியின் பின்புறத்தில் பீடி பண்டல்கள் இருந்தது. அதன் நடுவில் ஒரு சிறிய பெட்டி மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த பெட்டியை திறந்து பார்த்தனர். அதில் தாமரை உருவம் பொறித்த 133 வெள்ளிக்காசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுபற்றி டிரைவரிடம் நடத்திய விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் இலங்காபுரி பட்டினத்தை சேர்ந்த சக்திவேல் (33) என்பதும் அவர் பட்டுக்கோட்டையை நோக்கி பீடி பண்டல்களை ஏற்றி வந்ததும் தெரிய வந்தது.

    அவர் கொண்டு வந்த வெள்ளிக்காசுக்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் அதனை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிக்காசுகள் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய கொண்டு வரப்பட்டதா? தாமரை சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளதால் பா.ஜனதாவினருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வருமானம் அதிகரித்ததற்கு கணக்கு சொல்ல வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது. #Congress #RahulGandhi #LSPolls #BJP
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 2004 முதல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வருகிறார்.

    அவர் 2004-ல் போட்டியிடும் போது தனது வருமானம் ரூ.56 லட்சம் என்று கூறி இருந்தார். 2009 தேர்தலில் வருமானம் ரூ.2 கோடி என்றும், 2014 தேர்தலில் ரூ.9 கோடி என்றும் வேட்பு மனுவில் குறிப்பிட்டு உள்ளார். அதாவது 10 ஆண்டுகளில் அவரது வருமானம் ரூ.8½ கோடி அதிகரித்து உள்ளது.

    இது சம்பந்தமாக பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் சாம்பித் பத்ரா கூறியதாவது:-

    ராகுல்காந்தி எம்.பி.ஆக இருப்பதால் அதற்கான சம்பளத்தை பெற்று வருகிறார். இது தவிர அவர் எந்த தொழிலும் செய்யவில்லை. ஆனால் அவரது வருமானம் தொடர்ந்து அதிகரித்து வந்ததாக ஒவ்வொரு தேர்தல் வேட்பு மனுவிலும் குறிப்பிட்டு உள்ளார்.

    அவருக்கு வருமானம் எந்த வகையில் வந்தது. எப்படி இவ்வளவு தொகை அதிகரித்தது என்பதற்கு கணக்கு சொல்ல வேண்டும்.

    ராகுலும், பிரியங்கா காந்தியும் 4.69 ஏக்கர் கொண்ட பண்ணை வீட்டை 6 மாதம் ரூ.6 லட்சத்து 70 ஆயிரத்துக்கு குத்தகைக்கு எடுத்துள்ளனர். நிதி நிறுவனம் ஒன்றுக்கு அந்த பண்ணை வீடு சொந்தமானது.

    அந்த நிறுவனம் மீது வழக்கு விசாரணை இருந்து வருகிறது. ராகுல்காந்திக்கு குத்தகைக்கு விடப்பட்டு இருக்கிறது. குத்தகைக்கு விட்ட பிறகு அப்போதைய காங்கிரஸ் அரசில் அந்த நிறுவனம் மீதான விசாரணை தொடரப்படவில்லை.

    2-ஜி செல்போன் தொடர்புடைய யுனிடெக் நிறுவன சொத்தை ராகுல்காந்தி குடும்பத்தினர் வாங்கி உள்ளனர். இதிலும் ஏதோ தவறு நடந்து இருக்கிறது.

    ராகுல்-சோனியாவுக்கு ரூ.100 கோடி வரி ஏய்ப்பு தொடர்பாக வருமானவரித்துறை நோட்டீசு அனுப்பி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Congress #RahulGandhi #LSPolls #BJP
    தமிழகத்தில் காடுகள், மலைகள் மற்றும் சாலைகளில் பேனர்கள் மற்றும் விளம்பரங்கள் வைக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. #LSPolls #BanOnBanners
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் விளம்பரங்கள் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் பிரசாரம் மற்றும் விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    இந்நிலையில், இயற்கை வளங்களை பாதிக்கும் வகையில் விளம்பரங்கள் செய்வதை தடுக்கக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.



    அவர் தனது மனுவில், “இயற்கை வளங்களான மலைகள், குன்றுகள், பாறைகள், மரங்கள் மற்றும் அரசு சொத்துகளான நெடுஞ்சாலை பாலங்கள், சுவர்கள், ரெயில் பாலங்களில் அரசியல் கட்சியினர், வணிக நிறுவனங்கள், மத அமைப்புகள் தங்களது விளம்பரங்களை செய்கின்றனர். இதனால் அவற்றின் இயற்கை அழகு கெடுவதுடன், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர். நடைபாதைகளை மறைத்தும் சாலையோரங்களிலும் சாலைகளின் நடுவிலும் விளம்பர போர்டுகளை வைக்கின்றனர். தற்போது தேர்தல் நேரம் என்பதால் இதற்கு தடை விதிக்க வேண்டும்.” என கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் பதில் மனு மற்றும் மனுதாரரின் கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

    நீதிபதிகள் தங்கள் உத்தரவில், இயற்கை வளங்களான மலைகள், காடுகள் மற்றும் சாலைகளில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிப்பதாக தெரிவித்தனர். இந்த உத்தரவை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். #LSPolls #BanOnBanners
    பா.ஜனதா ஆதரவில் போட்டியிடும் நடிகை சுமலதாவுக்கு ஆதரவாக செயல்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 7 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். #ActressSumalatha #BJP #Congress
    பெங்களூர்:

    மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவி நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

    காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பி அவர் டிக்கெட் கேட்டார். ஆனால் மாண்டியா தொகுதியை கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒதுக்கியது. அங்கு முதல் - மந்திரி குமாரசாமி மகன் நிகில் போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து சுமலதா களம் இறங்கி உள்ளார். சுயேட்சையாக போட்டியிடும் சுமலதாவுக்கு பா.ஜனதாவும் ஆதரவு தெரிவித்து உள்ளது. மாண்டியா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால் சுமலதா- நிகில் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.



    சுமலதாவுக்கு காங்கிரசாரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சுமலதாவுக்கு ஆதரவாக செயல்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 7 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சச்சி தானந்தா, மாண்டியா மாவட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சசிகுமார், இளைஞர் காங்கிரசை சேர்ந்த அரவிந்தகுமார், விஜய் குமார், மஞ்சுநாத், சந்துரு, கிருஷ்ணகவுடா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

    கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் அவர்கள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்த நீக்கப்பட்டுள்ளதாக மாண்டியா மாவட்ட காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.

    கட்சியினர் யாரும் சுமலதாவுடன் இணைந்து எந்த மேடையிலும் பங்கேற்க கூடாது என்றும், ஆதரவு தெரிவிக்க கூடாது என்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டூராவ் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில் பா.ஜனதா ஆதரவு குறித்து சுமலதா கூறியதாவது:-

    மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் எனக்கு பா.ஜனதா ஆதரவு அளித்துள்ளது. இந்த ஆதரவு எனக்கு யானை பலம் கிடைத்தது போல உள்ளது. இது தொடர்பாக பா.ஜனதா தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவேன்.

    பாராளுமன்ற தேர்தலில் எனது போராட்டத்தை தொடர்வேன். எனது போராட்டத்துக்கு மாண்டியா மக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் உள்ளது.

    இவர்களுடன் மறைந்த எனது கணவர் அம்பரீஷின் ரசிகர்கள் ஆதரவும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். #ActressSumalatha #BJP #Congress
    ×