என் மலர்
திருப்பூர்
- வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள், பூர்த்தி செய்யப்பட்டு வாங்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
- வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பது குறித்து பார்வையிட்டதுடன் ஆலோசனைகள் வழங்கினார்.
அவினாசி:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்து தமிழகத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி அவினாசியில் இன்று ஆய்வு பணியில் ஈடுபட்டார். அவினாசி வாணியர் வீதி, வடக்கு ரத வீதி பகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள், பூர்த்தி செய்யப்பட்டு வாங்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பது குறித்து பார்வையிட்டதுடன் ஆலோசனைகள் வழங்கினார்.
இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தின் பிற தாலுகாக்களில் ஆய்வு செய்ய புறப்பட்டு சென்றார். அவருடன் கலெக்டர் மணிஷ் நாரணவரே , அவினாசி தாசில்தார் சந்திரசேகரன் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள், அவிநாசி போலீஸ் இன்ஸ்பெ க்டர் ராஜபிரபு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் சென்றனர்.
- கரையோர கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
- பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் இன்று காலை 7 மணி நிலவரப்படி 51.16 அடியாக உள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் எந்த நேரத்திலும் திருமூர்த்தி அணை நிரம்பி பாலாற்றில் தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது.
எனவே பாலாற்றின் கரையோரத்தில் உள்ள தேவனூர் புதூர், பொன்னாலம்மன் சோலை, தீபாலப்பட்டி, அர்த்தநாரி பாளையம், ஆண்டியூர் உள்ளிட்ட கரையோர கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என திருமூர்த்தி அணை நீர்வளத்துறை உதவி பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படாமல் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதற்காக மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் முறைகேடுகள் நடைபெறுவதை கண்டித்தும் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம். எஸ்.எம். ஆனந்தன், கே.என்.விஜயகுமார் , முன்னாள் எம்.பி., சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் பொதுமக்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்படுவதை சுட்டிக்காட்டும் வகையில் கவுன்சிலர் தங்கராஜ் மருத்துவமனையில் சுவாச பிரச்சனைக்கு சிகிச்சை பெறுவது போல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
- சிந்திலுப்பு, எல்லப்பநாய்க்கனூர், ஆலமரத்தூர், இலுப்பநகரம்
குடிமங்கலம்:
ஆலமரத்தூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி, ருத்தரப்பநகர், லிங்கமநாயக்கன் புதூர், கொங்கல்நகரம்,
கொங்கல்நகரம் புதூர், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன்புதூர், மூலனூர், விருகல்பட்டிபுதூர், விருகல்பட்டிபழையூர், அணிக்கடவு, ராமச்சந்திராபுரம், மரிக்கந்தை, செங்கோடகவுண்டம்புதூர், சிந்திலுப்பு, எல்லப்பநாய்க்கனூர், ஆலமரத்தூர், இலுப்பநகரம், சிக்கனூத்து, ஆமந்தகடவு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
மேற்கண்ட தகவலை, உடுமலை மின்பகிர்மான செயற்பொறியாளர் ராஜா தெரிவித்து உள்ளார்.
- அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
உடுமலை:
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இங்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.
அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது சுற்றுலாப் பயணிகள் செல்வது தடை விதிக்கப்படுவது நடைமுறை, கடந்த சில நாட்களாக சீரான அளவில் அருவியில் தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்துச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை திருமூர்த்தி மலைப் பகுதியில் கனமழை பெய்தது. மேலும் பஞ்சலிங்க அருவியின் மேற்பகுதியில் மேகமூட்டம் காணப்பட்டது. நீர்வரத்து அதிகரித்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று சீரான அளவில் தண்ணீர் வந்ததை அடுத்து பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது சுற்றுலாப் பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் குளித்து மகிழ்ந்தனர்.
- கலெக்டர் மணிஷ் நாரணவரே, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு தகவல் அளித்தார்.
- அலுவலக அறைகள், கழிவறைகள், வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இது 7 தளங்களை கொண்டது. கலெக்டர், வருவாய் அலுவலர் உள்பட அதிகாரிகளின் அலுவல் அறைகள் மற்றும் பல்வேறு துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாவட்ட கலெக்டரின் அதிகாரபூர்வ மின்னஞ்சலுக்கு, அறிமுகம் இல்லாத முகவரியில் இருந்து இன்று காலை ஒரு மெயில் வந்துள்ளது. அதில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து கலெக்டர் மணிஷ் நாரணவரே, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து மாநகர நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் வெடிகுண்டை கண்டறியும் போலீசார் குழு மோப்பநாய், புல்லட் உதவியுடன் கலெக்டர் அலுவலகத்தின் பல்வேறு தளங்களிலும் ஆய்வு செய்தனர்.
கலெக்டர் அலுவலகத்தின் 7 தளங்களிலும் உள்ள அலுவலக அறைகள், கழிவறைகள் மற்றும் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. மேலும் மின்னஞ்சல் அனுப்பிய முகவரி தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை வெடிகுண்டு செயல் இழக்கும் நிபுணர்கள் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை செய்த சம்பவம் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவைக்கு வருகை தர உள்ளார்.
- அவிநாசி போலீசார் அவர்களை கைது செய்து ரோட்டரி கிளப் மண்டபத்தில் சிறை வைத்தனர்.
அவினாசி:
தென்னிந்திய இயற்கை வேளாண்மை விவசாயிகள் மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவைக்கு வருகை தர உள்ளார்.
இந்தநிலையில் பீகார் தேர்தலின்போது, பீகார் மக்கள் தமிழகத்தில் துன்புறுத்தப்படுவதாக பொய் பிரசாரம் செய்ததாகவும், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் கருப்புக்கொடி காட்ட இணை பொதுச்செயலாளர் விடுதலைச் செல்வம் தலைமையில் சிலர் தயாராகி வந்தனர்.
இதையறிந்த அவிநாசி போலீசார் அவர்களை கைது செய்து ரோட்டரி கிளப் மண்டபத்தில் சிறை வைத்தனர்.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
- அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தை தண்ணீர் சூழ்ந்தது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமாக உள்ளது. மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் மலைமேல் பஞ்சலிங்க அருவி உள்ளது.
இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்ததுடன், வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை நிலவியது.
அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தை தண்ணீர் சூழ்ந்தது. இதையடுத்து அருவி மற்றும் கோவிலுக்கு செல்ல பக்தர்கள்- சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- கர்நாடகா அரசால் நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- ரூ. 57 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் லிட்டர் கலப்பட நெய் பறிமுதல்
கர்நாடக கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினரால் நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தென்னிந்தியாவின் மதிப்புமிக்க பால் பொருட்களின் பிராண்டாக மாறியுள்ள நந்தினி பெயரில் கலப்பட நெய் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கர்நாடக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், சாமராஜ்பேட்டை நஞ்சம்பா அக்ரஹாராவில் உள்ள கிருஷ்ணா எண்டர்பிரைசஸ் என்ற கிடங்கில் போலீஸ் மற்றும் உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்கு கலப்பட நெய் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக கிடங்கின் உரிமையாளர் மகேந்திரா மற்றும் மகன் தீபக், முனிராஜு, மற்றும் அபிஅரசு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.26 கோடி ரொக்கமும், ரூ. 57 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் லிட்டர் கலப்பட நெய், டால்டா, பாமாயில், தேங்காய் எண்ணெய் மற்றும் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 4 சரக்கு வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கலப்பட நெய் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு கர்நாடகாவில் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக, கர்நாடக போலீசார் தமிழ்நாட்டு போலீசுடன் இணைந்து விசாரணை நடத்தியதில் திருப்பூரில் உள்ள ஆலையில் கலப்பட நெய் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
- பசுவமுபண்வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம்,
காங்கயம்:
காடையூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காடையூர், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூர், பசுவமுபண்வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம், மேட்டுப்பாரை,
பொன்னாங்காளி வலசு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. இந்த தகவலை காங்கயம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
- எடப்பாடி பழனிசாமி எக்ஸ்பிரஸ் என்கிற ரெயில் வேகமாக புறப்பட்டு விட்டது.
- கள்ள ஓட்டு போடுவது தி.மு.க.விற்கு கைவந்த கலை.
திருப்பூர்:
திருப்பூரில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-
பீகார் தேர்தலை போல தான் தமிழ்நாட்டில் 2026 தேர்தல் அமையும். அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். தி.மு.க. ஆட்சி கடந்த 4½ ஆண்டு காலமாக தமிழக மக்களுக்கு ஒரு நன்மையும் செய்யவில்லை.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ராகுல் காந்தி மற்றும் மு.க.ஸ்டாலின் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பினார்கள். ஆனால் அதற்கு பாடம் புகட்டும் வகையில் பீகாரில் பா.ஜ.க. கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது.
அதே போல தமிழகத்திலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி மலரும். கூட்டணி கட்சியினரும் வெற்றியடைவார்கள். எடப்பாடி பழனிசாமி எக்ஸ்பிரஸ் என்கிற ரெயில் வேகமாக புறப்பட்டு விட்டது. அதில் பயணித்தவர்கள் அனைவரும் ஜார்ஜ் கோட்டைக்கு செல்வார்கள்.
இதில் ஏறாமல் நின்றவர்கள் காணாமல் போய்விடுவார்கள். மேலும் வாக்காளர் சீர்திருத்தத்தை மக்கள் மிகவும் வரவேற்கின்றனர். கள்ள ஓட்டு போடுவது தி.மு.க.விற்கு கைவந்த கலை. சீர்த்திருத்தம் செய்தால் திருட்டு ஓட்டு போட முடியாது என்பதால் மு.க.ஸ்டாலின் அலறுகிறார் என்றார்.
- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பவர்டேபிள் எனப்படும் தையல் நிறுவனங்கள் உள்ளன.
- இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
திருப்பூரில் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு பவர் டேபிள் நிறுவனங்கள் ஜாப் ஒர்க் முறையில் பின்னலாடைகளை உற்பத்தி செய்து கொடுக்கின்றனர். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பவர் டேபிள் சங்கத்தினர் கூலி உயர்வு ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். அதன்படி கடந்த 2022ம் ஆண்டு 2 சங்கத்தினர் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இதில் பவர் டேபிள் நிறுவனங்களுக்கு முதல் ஆண்டு 17 சதவீத கூலி உயர்வும் , அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதமும் வழங்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. ஆண்டுதோறும் இவை முறையாக பின்பற்றப்பட்டு வரக்கூடிய நிலையில் கடந்த ஜூன் 6-ந்தேதி முதல் உயர்த்தப்பட வேண்டிய 7 சதவீத கூலி உயர்வு சில நிறுவனங்கள் வழங்கினாலும் ஒரு சில நிறுவனங்கள் வழங்காமல் கால நீட்டிப்பு செய்து வருவதால் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும் என கடந்த 7ம் தேதி முதல் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களில் இருந்து ஆர்டர்கள் எடுப்பதையும் , செய்து முடித்த ஆர்டர்களை கொடுப்பதையும் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 15 நாட்களுக்குள் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்கள் கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும். பவர் டேபிள் சங்கம் உற்பத்தி நிறுத்தத்தை செய்வதால் தொழில் பாதிக்கக்கூடும் என சைமா சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பவர் டேபிள் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களுடனான முழு அளவிலான உற்பத்தி நிறுத்தம் இன்று முதல் தொடர உள்ளதாகவும் , கூலி உயர்வை அமல்படுத்தினால் அதற்குள்ளாக போராட்டத்தை கைவிடுவது , இல்லாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்பது என தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று முதல் பவர் டேபிள் உரிமையாளர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் ஆடை உற்பத்தி பணிகள் முடங்கி உள்ளது.






