என் மலர்
திருப்பூர்
- அனைவரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
- 2 நாட்களில் 5 காதல்ஜோடிகள் தஞ்சமடைந்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2 நாட்களில் 5 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். திருப்பூர் ஆத்துப்பாளையத்தை சேர்ந்த மஞ்சுளா-அஜித்குமார், உசிலம்பட்டி கீர்த்தனா-திருப்பூர் பார்த்தசாரதி, ஈரோடு புளியம்பட்டி தாஜிதா பானு- பாலகிருஷ்ணன், திருவண்ணாமலை அஸ்வினி- திருப்பூர் நெருப்பெரிச்சல் மணிகண்டன், திருப்பூர் அருள்ஜோதிபுரம் இளம்பெண்- வாலிபர் ஆகிய 5 காதல்ஜோடிகள் தஞ்சமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அப்போது ஏற்பட்ட பழக்கம் மூலம் காதலிக்க தொடங்கினர். வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் பொங்கல் விடுமுறையில் ஊருக்கு சென்று விட்டு வந்ததும், நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் பாதுகாப்பு கேட்டு திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். 2 நாட்களில் 5 காதல்ஜோடிகள் தஞ்சமடைந்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து காதல்ஜோடிகளின் பெற்றோர்களை வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது சில பெற்றோர்கள், காதல் திருமணம் வேண்டாம். எங்களுடன் வந்து விடு என்று கண்ணீர் விட்டு கதறி அழுது மகள்களை அழைத்தனர். ஆனால் அவர்கள் பிடிவாதமாக கரம்பிடித்த காதலன்களுடன்தான் செல்வோம் என்று கூறினர். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த பெற்றோர்கள் கடைசியில் காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டதுடன், எந்தவித பிரச்சனையுமின்றி வாழுமாறு வாழ்த்தினர்.
ஒரு காதல் ஜோடியின் பெற்றோர் திருமணத்தை ஏற்க மறுத்தனர். அவர்கள் தனது மகளிடம், உன்னை நன்றாக படிக்க வைத்து வேலைக்கு அனுப்பினோம். நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க எண்ணினோம். ஆனால் இப்படி காதல் திருமணம் செய்து வந்து நிற்கிறாயே...எங்களுடன் வந்து விடு.. உனக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என்று கதறி அழுதனர்.
ஆனால் அவர்களது மகள் காதலனுடன்தான் செல்வேன் என்று கூறியதுடன்தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி பெற்றோரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து காதலனுடன் சென்றார். அப்போது அவரது பெற்றோரின் பாசப்போராட்டம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
- கோபம் அடைந்த முத்துலட்சுமி, அஜித்துடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்தை வலைவீசி தேடி வருகின்றனர்.
பல்லடம்:
நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்தவர் சிவரஞ்சித் (வயது27).
இவரது மனைவி முத்துலட்சுமி (23). இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இவர்கள் தற்போது திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த சோழியப்பகவுண்டன் புதூர் என்ற பகுதியில் குடியிருந்து வேலைக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் முத்துலட்சுமிக்கு திசையன்விளை பகுதியைச் சேர்ந்த அஜித் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து அஜித் முத்துலட்சுமியை போனில் அழைத்து தன்னுடன் வாழ வருமாறு வற்புறுத்தி உள்ளார்.
இதனால் கோபம் அடைந்த முத்துலட்சுமி, அஜித்துடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அஜித் மீண்டும் முத்துலட்சுமிக்கு போன் செய்து தன்னுடன் வாழ வரவில்லை என்றால் நாம் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை உனது கணவருக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார்.
அதன்பின் இருவரும் இருக்கும் போட்டோவை முத்துலட்சுமியின் கணவருக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதனால் அவர்களது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதில் மனமுடைந்த முத்துலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அறிந்ததும் அவினாசிபாளையம் போலீசார் அங்கு சென்று, முத்துலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்தை வலைவீசி தேடி வருகின்றனர்.
- நடைமுறையின் படி சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும்.
- காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் அமல்படுத்த வேண்டும்.
திருப்பூர்:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை சமூகநீதி கொள்கைகளுக்கு எதிராகவும் பெண்கள் நலனுக்கு எதிராகவும் 3,000 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
ஏற்கனவே நடைமுறையின் படி சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுகின்ற வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவதைப் போல அகவிலைபடியுடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியம் 6750 ரூபாய் குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் பெண் சத்துணவு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சந்திர கலா, முன்னாள் மாவட்ட பொருளாளர் மகேந்திர பூபதி , மாவட்ட செயலாளர் மோகன சுந்தரராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
+2
- திருப்பூர் ரெயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்ததால் திருப்பூரில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்திருந்தது.
திருப்பூர்:
பனியன் தொழில் நகரமான திருப்பூரில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது தொழிலாளர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பொங்கல் பண்டிகையையொட்டி பனியன் நிறுவனங்களுக்கு 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இதையடுத்து திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்த மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்ட ங்களை சேர்ந்தவர்களும், கரூர் திருச்சி, தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சேர்ந்தவர்களும் என தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
இந்தநிலையில் பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில் பஸ்கள், ரெயில்களில் சிரமமின்றி செல்ல நேற்று முன்தினம் முதல் தொழிலாளர்கள் திருப்பூர் திரும்ப ஆரம்பித்தனர். இன்று காலை பல்வேறு மாவட்டங்களில் இருந்து சாரை சாரையாக வந்தனர். அவர்கள் திருப்பூர் திரும்புவதற்கு வசதியாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதனால் இன்று காலை திருப்பூர் ரெயில் நிலையம், கோவில்வழி பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையங்களில் தொழிலாளர்கள், பயணிகள் கூட்டம் அலைமோதியது. ரெயில்களிலும் தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக வந்து இறங்கினார்கள். இதனால் திருப்பூர் ரெயில் நிலையத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர்கள் திருப்பூரில் இருந்து அவினாசி, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்ததால் திருப்பூரில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்திருந்தது. தொழிற்சாலைகள், கடைகள் திறக்கப்பட்டதால் இன்று அதிகாலை முதல் திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள சாலைகள் மீண்டும் பரபரப்பான இயக்கத்துக்கு திரும்பின.
- பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
- ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் பனியின் தாக்கமும், பகலில் வெயிலின் தாக்கமும் இருந்து வந்தது. சில நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் இன்று காலை திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை, திருமூர்த்திமலை உள்பட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். குளிக்க தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- மத்திய அரசின் அனுமதி இல்லாமல் எண்ணெய் குழாய்களை பதித்து வருகின்றனர்.
- விவசாய நிலங்களின் வழியே மீண்டும் பதிக்கத் திட்டமிட்டு செயல்படுகின்றனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம், கோடங்கி பாளையம் கிராமங்களில் ஐ.டி.பி.எல். எரிவாயு குழாய் திட்டத்தை விவசாய நிலங்களில் அமைக்காமல் சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் இன்று 60-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
ஐ.டி.பி.எல்.நிறுவனம் கோவை முதல் கர்நாட காவின் தேவனகொந்தி வரை எரிவாயு குழாய் கொண்டு செல்லும் திட்டத்தை அமைத்து கொண்டிருக்கிறது. இதற்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பாரத் பெட்ரோலிய நிறுவனம் பெறவில்லை.
சட்டவிரோதமாக ஒரு அறிவிப்பை மட்டும் வழங்கி கோவை மாவட்டத்தில் கடந்த 1999-ம் ஆண்டு பெட்ரோநெட் சி.சி.கே. திட்டத்திற்கு அனுபவ உரிமை எடுப்பு செய்ததை குறிப்பிட்டு , அதே இடத்தில் எண்ணெய் குழாய்களை பதித்து வருகிறது. பழைய திட்டத்திற்கு பெறப்பட்ட அனுமதியை வைத்து கொண்டு புதுத்திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி இல்லாமல் எண்ணெய் குழாய்களை பதித்து வருகின்றனர்.
அனைத்து வகையான எரிவாயு மற்றும் பெட்ரோலிய குழாய் பதிப்பு என்பது சாலையோரமாக மட்டுமே அமைக்க வேண்டும் என மத்திய அரசின் கொள்கை முடிவாக இருக்கிறது.
ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன் கோவை முதல் கரூர் வரை பதிக்கப்பட்ட குழாயின் அருகிலேயே மீண்டும் 70 கிலோ மீட்டர் அளவிற்கு மற்றொரு பெட்ரோலிய குழாய் அமைக்க வேலை செய்து வருகின்றனர்.
கோவை முதல் கர்நாடகாவின் தேவனகொந்தி வரை பெட்ரோலிய குழாய் கொண்டு செல்லும் திட்டத்தில் பெருமளவில் சாலையோரமாக பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் கோவையில் இருந்து முத்தூர் வரை உள்ள 70 கிலோமீட்டரில் ஏற்கனவே குழாய் பதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களின் வழியே மீண்டும் பதிக்கத் திட்டமிட்டு செயல்படுகின்றனர். இதனை கண்டித்தும், எரிவாயு குழாய் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் இன்று 60-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- கடந்த சில மாதங்களில் இப்பகுதியில் ஏராளமான திருட்டு மற்றும் திருட்டு முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன.
- போலீசார் கூடுதல் ரோந்து மேற்கொண்டு திருட்டு ஆசாமிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ராயர்பாளையம் பகுதியில் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. சம்பவத்தன்று இரவு இங்குள்ள செல்வ விநாயகர் கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் உண்டியலை திருடிச் சென்றுள்ளனர். அதில் பணம் இல்லாமல் சில்லரை காசுகள் மட்டுமே இருந்ததால் உண்டியலை அருகில் உள்ள புதரில் வீசி சென்றுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,
கடந்த சில மாதங்களில் இப்பகுதியில் ஏராளமான திருட்டு மற்றும் திருட்டு முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் பெரும்பாலானோர் சொந்த ஊர் மற்றும் வெளியூர் சென்றுள்ளனர்.
இதனை சாதகமாக பயன்படுத்திய திருட்டு ஆசாமிகள் தங்களது கைவரிசையை காட்ட முயன்றுள்ளனர். முதலில் இங்குள்ள காட்டு பெருமாள் கோவிலில் பூட்டை உடைக்க முயன்றனர். முடியாததால் அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவில் உண்டியலை உடைத்துள்ளனர்.
சமீபத்தில்தான் இக்கோவில் உண்டியல் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதனால், சில்லரை காசுகள் மட்டுமே இருந்த நிலையில் ஏமாற்றம் அடைந்த திருடர்கள் உண்டியலை காட்டுக்குள் வீசி சென்றனர். அதன்பின் கோவில் அருகில் உள்ள வீட்டின் கதவை உடைக்க முயன்று அதுவும் தோல்வியடைந்ததால், திரும்பிச் சென்றுள்ளனர்.
வீடுகள் அதிகமுள்ள இப்பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வருவது எங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே போலீசார் கூடுதல் ரோந்து மேற்கொண்டு திருட்டு ஆசாமிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று கார்களில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
- கார்களில் தீப்பற்றியது எப்படி என்பது தெரியவில்லை.
திருப்பூர்:
திருப்பூர் கோல்டன் நகர் தொட்டி மண்ணரை பகுதியை சேர்ந்தவர் கோகுல கண்ணன் (வயது 28). இவர் அப்பகுதியில் கார் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இதற்காக கார்களை அவரது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைத்தி ருந்தார். நேற்றிரவு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தீப்பிடித்து எரிந்தன.
உடனே இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று கார்களில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் 3 கார்கள் முற்றிலும் தீப்பிடித்து எரிந்து சேதமாகின. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும்.
கார்களில் தீப்பற்றியது எப்படி என்பது தெரியவில்லை. தொழில் போட்டி காரணமாக யாராவது கார்களை தீ வைத்து எரித்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
- திரைத்துறையில் ஜொலித்துக்கொண்டு இருந்த ஜெயமுருகன் சினிமாவை விட்டு விலகி திருப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
- ஜெயமுருகனின் திடீர் மறைவு திரைத்துறை மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:
பிரபல சினிமா டைரக்டரும், மனிதன் சினி ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்த ஜெயமுருகன் திருப்பூரில் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
1995-ம் ஆண்டு மன்சூர் அலிகானை கதாநாயகனாக வைத்து சிந்துபாத் திரைப்படத்தை ஜெயமுருகன் தயாரித்தார். அந்த படத்தை தொடர்ந்து, பாண்டிய ராஜன், கனகா நடித்த புருசன் எனக்கு அரசன் படத்தை தயாரித்தார். இந்த படங்கள் வெற்றி பெற ரோஜா மலரே, அடடா என்ன அழகு, தீ இவன் ஆகிய படங்களை தயாரித்தார்.

அதுவரை தயாரிப்பாளராக இருந்த ஜெயமுருகன், முரளி, அருண் பாண்டியன் மற்றும் ஆனந்த் பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த 'ரோஜா மலரே' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் வெளியாகி விமர்சகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்றது.
அடடா என்ன அழகு, தீ இவன் படத்தை தயாரித்த இவர் அந்த படத்திற்கு இசையும் அமைத்து இருந்தார். மேலும், லிவிங்ஸ்டன், உதயா மற்றும் விந்தியா நடித்த 'பூங்குயிலே' என்ற படத்தை தயாரித்தார். ஆனால் அந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் ஜொலித்துக்கொண்டு இருந்த ஜெயமுருகன் சினிமாவை விட்டு விலகி திருப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திருப்பூர் தெற்கு மின் மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளது. ஜெயமுருகனின் திடீர் மறைவு திரைத்துறை மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வனப்பகுதியில் பல்வேறு வழிகளில் ஓடிவருகின்ற ஆறுகள் இறுதியில் பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேர்ந்து விடுகின்றது.
- திருமூர்த்தி அணை, அருவி மற்றும் கோவில் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல்குருமலை, கீழ்குருமலை, குலிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் நீராதாரமாக உள்ளது. வனப்பகுதியில் பல்வேறு வழிகளில் ஓடிவருகின்ற ஆறுகள் இறுதியில் பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேர்ந்து விடுகின்றது.
இந்த அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
அதைத் தொடர்ந்து கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலையில் குவிந்து வருகின்றனர். அவர்கள் பஞ்சலிங்க அருவிக்கு சென்று இதமான கால நிலையை அனுபவித்தும் அருவியில் குளித்து புத்துணர்வும் அடைகின்றனர்.
அதுமட்டுமின்றி அருவி பகுதியில் குடும்பத்துடனும், தனியாக அமர்ந்தும் செல்பி, புகைப்படம் எடுத்து உறவினர்களுக்கு அனுப்பியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்கின்றனர்.
இதனால் திருமூர்த்தி அணை, அருவி மற்றும் கோவில் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
- தமிழர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு இக்கோவிலில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.
- களிமண்ணால் செய்யப்பட்ட உருவார பொம்மைகளை வைத்து வழிபாடு செய்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் சோமவாரப்பட்டியில் ஆதி காலத்தில் அடர்ந்த காடுகளில் விஷப் பாம்புகள் வாழும் ஆலமரத்தின் கீழ் சிவலிங்க வடிவில் ஒரு புற்று இருந்தது. இந்தப் பகுதியில் மேய்ந்த பசுக்கள் புற்றில் நிலையாக பாலை சுரந்து வந்தன.
சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ள எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்த பசுவானது பாம்பினால் தீண்டப்பட்டு பாதிக்கப்பட்டபோது அந்தப் பசுவின் உடம்பின் மீது ஏறிய ஆலகால விஷத்தினை மாயவன் உண்டு பசுவினை காப்பாற்றியதால் ஆல்கொண்டமால் எனவும் ஆலம் உண்ட சிவனை குறிக்கும் வகையில் சிவலிங்க வடிவ புற்றில் கண்ணன் குடி கொண்டதால் ஆல்கொண்டமால் எனவும் இக்கோவில் விளங்கி வருகிறது.
தமிழர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு இக்கோவிலில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. கிராமப்புறங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தங்களது கால்நடைகளின் கறவை பாலைகொண்டு வந்து ஆல்கொண்டமாலுக்கு அபிஷேகம் செய்து திருநீறும் தீர்த்தமும் பெற்று சென்றனர். மேலும் களிமண்ணால் செய்யப்பட்ட உருவார பொம்மைகளை வைத்து வழிபாடு செய்தனர்.
- பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி தொழிலாளர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
- தொழிலாளர்கள் அனைவரும் வருகிற 20-ந்தேதிதான் திருப்பூர் திரும்ப வாய்ப்புள்ளது.
திருப்பூர்:
பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி தொழிலாளர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் வருகிற 20-ந்தேதிதான் திருப்பூர் திரும்ப வாய்ப்புள்ளது. அதன்பிறகே பெரும்பாலான பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் திறக்கப்படும் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் திருப்பூரில் இன்று பிரதான சாலைகள், கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. வெளியூர் சென்ற தொழிலாளர்கள் திரும்பிய பிறகே, திருப்பூர் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்தனர்.






