என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • வடகிழக்கு பருவமழை காரணமாக மொத்தம் 22.96 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை தற்போது நிரம்பிவிட்டது.
    • பாசன நிலங்கள் முழுமைக்கும் சுழற்சி முறையில் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை வட்டம் கோட்டைக்கருங்குளம் கிராமத்தில் நம்பியாற்றின் குறுக்காக அமைந்துள்ள 7 மற்றும் 8-வது அணைக்கட்டுகளுக்கு இடையில் நம்பியாறு அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் இடது மற்றும் வலது பிரதான கால்வாய்கள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு அதன் மூலம் 40 குளங்கள் வாயிலாக சுமார் 1,744 ஏக்கர் நிலங்கள் பயனடைந்து வருகின்றனர்.

    வடகிழக்கு பருவமழை காரணமாக மொத்தம் 22.96 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை தற்போது நிரம்பிவிட்டது. அதில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி இன்று நம்பியாற்றின் வலது மற்றும் இடது மதகுகளின் பிரதான கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு அணையில் இருந்து நீரை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அர்பித் ஜெயின், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1,744 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறும். இந்த தண்ணீரானது வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதி வரை நாள் ஒன்றுக்கு 60 கனஅடிக்கு மிகாமல் 68 நாட்களுக்கு நீர் இருப்பை பொறுத்து திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை பாசன நிலங்கள் முழுமைக்கும் சுழற்சி முறையில் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இந்த தண்ணீரின் மூலமாக ராதாபுரம் வட்டாரத்தில் கோட்டைக் கருங்குளம், கஸ்தூரி ரெங்கபுரம், குமாரபுரம், திசையன்விளை, உறுமன்குளம், முதுமொத்தன்மொழி, கரைசுத்துபுதூர் ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறும். 

    • வளைவில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்தது.
    • லாரியில் கொண்டு வரப்பட்ட தேங்காய்கள் சாலைகளில் உருண்டு ஓடின.

    நெல்லை:

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஈரோட்டில் இருந்து லாரியில் தேங்காய் ஏற்றிக் கொண்டு வந்து நெல்லையில் இறக்கிவிட்டு செல்வது வழக்கம்.

    அதன்படி நேற்றிரவு ஈரோட்டில் இருந்து தேங்காய் ஏற்றிக்கொண்டு அவர் புறப்பட்டார். இன்று அதிகாலை நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் நான்கு வழிச்சாலையில் போலீஸ் சோதனை சாவடி அருகே லாரி வந்து கொண்டிருந்தது.

    அப்போது அங்குள்ள வளைவில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக தங்கராஜ் சிராய்ப்பு காயங்களுடன் உயிர் தப்பினார்.

    நடு சாலையில் லாரி கவிழ்ந்ததால் அந்த வழியாக வந்த வாகனங்கள் ஒருவழிப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டு திருப்பி விடப்பட்டன. இதில் லாரியில் கொண்டு வரப்பட்ட தேங்காய்கள் சாலைகளில் உருண்டு ஓடின.

    இந்த காட்சிகள் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் அங்கு விரைந்து சென்று சாலையின் நடுவே கவிழ்ந்த லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
    • பாதயாத்திரையாக பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தரிசனம்.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது.

    அந்த வகையில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இ்ந்த ஆண்டு கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இதற்கிடையே, சுவாமி சண்முகரை கடலில் கண்டெடுத்த 369-ம் ஆண்டு தினமான இன்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

    காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி, தீபாராதனை நடைபெற்றது. மாலையில் 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையாகி, 4.30 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் கோவிலில் இருந்து புறப்பட்டு வீதி உலா வந்து சேர்கிறார்.

    தைப்பூசத்தை முன்னிட்டு நாளை கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், உச்சிகால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு சென்று, அங்கு சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு கோவில் சேர்கிறார்.

     தைப்பூச திருவிழாவிற்கு தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் தரிசனம் செய்து செல்கின்றனர்.

    நாளை நடக்கும் தைப்பூசம் திருவிழாவிற்கு இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இதனால் கோவில் வளாகம், கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    • கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.
    • கரடியின் கால்தடங்கள் உள்ளிட்டவற்றையும் வயல்வெளிகளில் சேகரித்து வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம், அப்பர்குளம், பெருமாள்குளம், தேவநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள இந்த கிராமங்களுக்கு அடிக்கடி மலையில் இருந்து வனவிலங்குகள் புகுந்துவிடுகின்றன. அவ்வாறு புகும் வனவிலங்குகள் விளை நிலங்களை சேதப்படுத்தவதோடு, கிராமங்களில் குடியிருப்புகளுக்குள்ளும் அவ்வப்போது புகுந்து விடுகிறது.

    அந்த வகையில் நேற்று களக்காடு அருகே உள்ள தேவநல்லூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.

    இந்தநிலையில், நேற்று தேவநல்லூர் பாறை பகுதியில் சிலர் சென்றபோது, அந்த வழியாக கரடி ஓடியது. உடனே அவர்கள் அந்த கரடியை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். தொடர்ந்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தில் கடந்த ஆண்டு இதேபோல் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. பின்னர் வனத்துறையினர் அதனை கூண்டு வைத்து பிடித்து சென்றனர். இதேபோல் கடந்த ஆண்டு பெருமாள்குளம் பகுதியில் புதருக்குள் புகுந்த கரடியை கூண்டு வைத்து பிடித்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் தேவநல்லூர் பகுதியில் கரடி நடமாட்டம் இருக்கிறது. இதனால் விவசாயிகள் வயலுக்கு செல்ல அச்சப்படுகின்றனர். எனவே ஊருக்குள் புகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதற்கிடையே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வனத்துறையினர் அங்கு சென்று கரடி நடமாட்டம் இருக்கிறதா என்பதை அறிவதற்காக முகாமிட்டுள்ளனர். மேலும் கரடியின் கால்தடங்கள் உள்ளிட்டவற்றையும் வயல்வெளிகளில் சேகரித்து வருகின்றனர். கரடி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதனை பிடிக்க கூண்டு வைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    • ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடத்தப்பட்டது.

    நெல்லை:

    ராமஜென்ம பூமியான அயோத்தியில் பால ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதனையொட்டி அயோத்தி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நெல்லை மாவட்டத்தில் உள்ள ராமர் கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தது. அதன் ஒரு பகுதியாக சுத்தமல்லி விலக்கு வ.உ.சி. நகரில் உள்ள ஸ்ரீ ஜெய் மாருதி ஞான தர்ம பீடத்தில் சிறப்பு அபிஷேக தீபாராதனையுடன் நாம ஜெபம் நடைபெற்றது. மேலச்சேவல் நவநீதகிருஷ்ணன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    மேலும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், பெண்களுக்கு கோலப் போட்டி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் ஒன்றான நெல்லையை அடுத்த அருகன்குளம் காட்டு ராமர் கோவிலில் இன்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் மற்றும் கோவில் புகைப்படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு சீதா பிராட்டி சமேத ஸ்ரீ ராமபிரான், லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • ராணுவத்தில் பணியாற்றும் வாலிபர்கள் விமானத்தில் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர்.
    • ஊர்மக்கள் அனைவரும் பணத்தை சிறுக சிறுக சேமித்து விமானத்தில் பறக்க திட்டமிட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த வி.கே.புரம் அருகே தாட்டான்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்திலும், பெண்கள் பீடி சுற்றும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட அரசு துறைகளிலும் வாலிபர்கள் சேவை புரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இப்பகுதியை சேர்ந்த ராணுவத்தில் பணியாற்றும் வாலிபர்கள் விமானத்தில் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். இதனால் தாட்டான்பட்டியில் வசிக்கும் பெண்களுக்கும் எப்படியாவது ஒரு முறையாவது விமானத்தில் நாமும் பறந்து செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டனர். ஆனால் அந்த ஆசை நீண்ட ஆண்டுகளாக கனவாகவே இருந்துள்ளது. அந்த கனவை நிறைவேற்றும் விதமாக ஊர்மக்கள் அனைவரும் பணத்தை சிறுக சிறுக சேமித்து விமானத்தில் பறக்க திட்டமிட்டனர்.

    அதன்படி கனவு நிறைவேறும் விதமாக பணத்தை சேமித்து வந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு புனித சுற்றுலாவாக விமானம் மூலமாக கோவா புறப்பட்டனர். தொடர்ந்து அங்குள்ள சவேரியாரை இன்று காலை பார்வையிட்டனர். இதற்காக அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 134 பேர் விமானத்தில் பறந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அருளகம் பங்கு தந்தை எட்வர்ட் ராயன் தலைமையில் அருள்பால்துரை, அருளானந்தம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    முன்னதாக அவர்கள் ஊரில் இருந்து புறப்பட்டபோது, அங்குள்ள புனித அருளானந்தர் ஆலயம் முன்பு அருளகம் பங்கு தந்தை எட்வர்ட் ராயன் தலைமையில் கிராம மக்கள் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அனைவருக்கும் தனியாக அடையாள அட்டை, உடைமைகள் தொலைந்து விடாமல் இருக்க அனைவரது உடைகளிலும் சிவப்பு நிற துணி உள்ளிட்டவை அடையாளமாக வைத்து பல்வேறு திட்டமிடுதலுடன் சென்றனர்.

    இதுகுறித்து பங்கு தந்தை எட்வர்ட் ராயன் கூறுகையில், சிறு சிறு சேமிப்பு மூலமாக புனித பயணமாக சவேரியாரை தரிசனம் செய்ய உள்ளோம். எங்கள் கிராமத்தினர் நீண்ட ஆண்டுகளாக விமானத்தில் செல்ல வேண்டும் என கூறினர். அதனால் இந்த புனித சுற்றுலாவிற்கு விமானத்தில் சென்றுவிட்டு, ரெயிலில் ஊருக்கு திரும்ப உள்ளோம். சுமார் 10 ஆண்டுகளாக சிறு சிறு சேமிப்பு மூலமாக எங்கள் பணத்தில் செல்கிறோம். இதனால் எங்களது நீண்ட நாள் கனவு நிறைவேறி இருக்கிறது. இன்றும், நாளையும் என 2 நாட்கள் கோவாவில் தங்கி புனித சவேரியார் ஆலயத்தை சுற்றி பார்க்க உள்ளோம் என்றார்.

    • பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு 883 கனஅடியாக அதிகரித்தது.
    • மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று காலையில் தொடங்கி இரவு வரையிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.

    நெல்லையில் நேற்று மாலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. அங்கு 5 மில்லி மீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

    இதனால் பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு 883 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1,054 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 140.50 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணையில் 11 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    118 அடி கொண்ட மணி முத்தாறு அணை பகுதியில் நேற்று 14.50 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக அணை இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் 3-வது முறையாக நிரம்பியது.

    தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் 720 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் சாரல்மழை தொடர்ந்து பெய்து வந்தது. அங்கு 8.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. களக்காட்டில் 9.2 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் நாங்குநேரி, அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. நாங்குநேரியில் அதிகபட்சமாக 12 மில்லி மீட்டரும், அம்பையில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. ராதாபுரத்தில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஊத்து, நாலுமுக்கு, மாஞ்சோலை, காக்காச்சி உள்ளிட்ட எஸ்டேட்டுகளிலும் தொடர்ந்து 2-வது நாளாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 12 மில்லி மீட்டரும், நாலுமுக்கில் 8 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 7 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் ராமநதி, கடனா நதி மற்றும் குண்டாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை நீடிக்கிறது. அதிகபட்சமாக கடனா நதியில் 7 மில்லி மீட்டரும், ராமநதியில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை அடைந்து நிரம்பி வழிந்த வண்ணம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இன்று விடுமுறை தினத்தையொட்டி மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் தென்காசி மற்றும் சிவகிரியில் லேசான சாரல் அடித்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன் பட்டினம், சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தலா 13 மில்லிமீட்டர் மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருச்செந்தூரில் 1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    • வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார்.
    • இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு தைப்பூச திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. 4-ம் நாள் திருவிழாவான இன்று சுவாமி சன்னதியில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னொரு காலத்தில் சிவ பக்தரான வேதபட்டர் வேணுவனம் (நெல்லை) சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார்.

    இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்கு சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார். ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லை காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார்.

    அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காக காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே என பதறியபடி நெல் நனைந்து விடக்கூடாது என சுவாமியிடம் வேண்டிய நிலையில் கோவிலுக்கு வந்தார். அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது.


    இதைப்பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னன் நின்ற சீா் நெடுமாறனிடம் தெரிவித்தார். மன்னரும் இந்த அதிசயத்தை கண்டு வியந்தார். இறைவன் நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் வேணுவனம் என்று அழைக்கப்பட்ட இவ்வூா் நெல்வேலி என்றும் திரு அடைமொழியுடன் திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.

    இந்த திருவிளையாடலை நினைவுபடுத்தும் வகையில் இன்று நண்பகலில் சுவாமி சன்னதியில் மண்டபத்தின் அருகில் நெல்மணிகள் காய வைக்கப்பட்டது போலவும், மழை பெய்தது போலவும் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த திருவிளையாடல் நிகழ்ச்சி ஓதுவாமூா்த்திகள் பதிகமாக பாடல் பாடினா்.

    தொடா்ந்து சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கும் வேதபட்டர் மற்றும் பாண்டிய மன்னருக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இன்று இரவு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் ரதவீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தனா்.

    • நம்பியாறு, கொடுமுடியாறு அணைக் கட்டுகளில் என தற்போது 96.69 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது.
    • மழை வெள்ளத்தால் 685 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களில் மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 572.90 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இது வளமான மழை அளவான 111.6 மில்லி மீட்டர் விட 413.4 சதவீதம் கூடுதல் ஆகும். நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வாலாறு, மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணைக் கட்டுகளில் என தற்போது 96.69 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது.

    கடந்த ஆண்டு இதே சமயத்தில் 47.11 சதவீதம் தண்ணீர் இருந்தது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 255 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளன.

    விற்பனை மையத்தில் உள்ள 1,456 விதை மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் போது விற்பனைக்கு வைக்கப்பட்ட தரம் குறைந்த விதைகள் 36.58 மெட்ரிக் டன் கண்டறியப்பட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.41.56 லட்சம் ஆகும்.

    நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் மாதம் பெய்த அதிக கனமழையில் 19 ஆயிரத்து 306.76 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தால் 685 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களில் மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் 192 குளங்களும், 142 கால்வாய்களும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளால் உடைப்பு ஏற்பட்ட குளங்களை ரூ.19 கோடி மதிப்பீட்டில் தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த 14-ந்தேதி தோட்டத்திற்கு பூப்பறிக்க சென்ற அனிதா, அங்குள்ள பள்ளமடை குளத்தின் மறுகால் தண்ணீர் செல்லும் ஊருணியில் பிணமாக மிதந்தார்.
    • சிறுமி அனிதா வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு ஊருணியில் மூழ்கி இறந்ததாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள பள்ளமடை கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 41).

    இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் திருவாளி முத்து(14) என்ற மகனும், அனிதா(13) என்ற மகளும் உள்ளனர். அனிதா அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 14-ந்தேதி தோட்டத்திற்கு பூப்பறிக்க சென்ற அனிதா, அங்குள்ள பள்ளமடை குளத்தின் மறுகால் தண்ணீர் செல்லும் ஊருணியில் பிணமாக மிதந்தார். இதையடுத்து மானூர் போலீசார் அவரது உடலை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் குளத்தில் அதிக தண்ணீர் தேக்கி வைப்பதற்காக, அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் தண்ணீர் அதிக அளவு வெளியேறி சிறுமி அனிதா வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு ஊருணியில் மூழ்கி இறந்ததாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மணல் மூட்டைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமியின் குடும்பத்திற்கு வெள்ள நிவாரண தொகை வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 4-வது நாளாக அனிதாவின் உறவினர்கள் பள்ளமடை கிராமத்தில் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் மானூர் தாசில்தார் முருகன், இன்ஸ்பெக்டர் சபாபதி ஆகியோர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • கும்பல் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் என்பதை போலீசார் அறிந்தனர்.
    • போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற நிலையில் ஒருவர் மட்டுமே சிக்கினார்.

    நெல்லை:

    பொங்கலையொட்டி நெல்லை மாநகர பகுதியில் சந்திப்பு உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் தலைமையில் போலீசார் கடந்த 13-ந் தேதி நள்ளிரவில் ரோந்து சென்றனர்.

    அப்போது தச்சநல்லூர் பாலபாக்யா நகர் பகுதியில் 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பதை அறிந்த உதவி கமிஷனர், அதனை பின் தொடருமாறு ஜீப் டிரைவரான ஏட்டு சரவண பிரகாஷிடம் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கும்பலை பின்னால் மோட்டார் சைக்கிளில் ரோந்து வந்த பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணணும் பின்தொடர்ந்துள்ளார்.

    போலீசார் பின் தொடர்வதை அறிந்த அந்த கும்பலை சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர் பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த கும்பல் போலீசார் 2 பேரையும் இரும்பு கம்பி மற்றும் கல்லால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றது. அந்த கும்பலை பிடிக்க கமிஷனர் மூர்த்தி உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது, 3 பேரில் 2 பேரின் உருவங்கள் தெளிவாக தெரிந்தது. அந்த கும்பல் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் என்பதை போலீசார் அறிந்தனர்.

    அந்த புகைப்படங்களை தமிழகம் முழுவதும் உள்ள போலீசாருக்கு அனுப்பி வைத்து தேடி வந்தனர். தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருந்தனர்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் தூத்துக்குடி 2-ம் கேட் சத்திரம் தெருவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக்கில் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் ஊழியர்கள் கடையை பூட்டி சென்ற நிலையில் அந்த கடையில் நேற்று அதிகாலை கடை முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டு பணம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது இதில் 5 பேர் கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நேற்று இரவு வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி பழைய பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற 5 வடமாநில வாலிபர்களை பிடிக்க முயன்றபோது அந்த கும்பல் போலீசாரை தள்ளிவிட்டு தப்பியோட முயன்றது.

    உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற நிலையில் ஒருவர் மட்டுமே சிக்கினார். மற்ற 4 பேரும் தப்பி ஓடி விட்டனர். தொடர்ந்து பிடிபட்டவர் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராய்சிங்(வயது 30) என்பதும், தூத்துக்குடியில் நேற்று முன்தினம் இரவு நடந்த டாஸ்மாக் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலில் ஒருவர் என்பதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து கொண்டிருந்தனர்.

    இதற்கிடையே நெல்லை சந்திப்பு போலீசாரை தாக்கிவிட்டு சென்றதாக நெல்லை மாநகர போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட 3 பேர் கும்பலின் புகைப் படங்களை தூத்துக்குடி போலீசார் பார்த்தபோது அதில் ஒருவரின் புகைப்படம், டாஸ்மாக் கொள்ளையில் வடபாகம் போலீசார் கைது செய்த ராய்சிங்கின் புகைப்படமாக இருந்தது.

    அவர்கள் நெல்லை மாநகர போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் கைதான ராய்சிங் போலீசாரிடம் கூறுகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் நான் நெல்லைக்கு வந்தேன். என்னை எனது நண்பர் பரத் அழைத்து வந்தார்.

    தமிழகத்தில் ஏராளமான இடங்களில் கொள்ளையடிக்கலாம். அதனை வைத்து சொகுசாக வாழலாம் என்று கூறி அழைத்து வந்தார். இதையடுத்து நாங்கள் நேற்று முன்தினம் ரெயிலில் நெல்லை வந்துவிட்டு அங்கிருந்து திருட்டு மோட்டார் சைக்கிளில் சென்றபோது சந்திப்பு போலீசார் எங்களை பிடிக்க முயன்றதால் அவர்களை தாக்கிவிட்டு தூத்துக்குடிக்கு வந்துவிட்டோம்.

    பின்னர் இங்குள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த நிலையில், தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்குள் போலீசார் என்னை கைது செய்துவிட்டனர் என்றார். இதையடுத்து அவரிடம் சக கூட்டாளிகள் யார்? யார் ? என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே தூத்துக்குடி பழைய பஸ்நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய மற்ற 4 பேர் சென்னைக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

    • நள்ளிரவு நேரத்தில் 3 பேரும் காரில் பாபநாசத்தில் இருந்து செட்டிகுளத்துக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.
    • விபத்து குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் ரமேஷ் (வயது 30). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று பொங்கல் விடுமுறையை கொண்டாடும் வகையில் தனது நண்பர்கள் 2 பேருடன் ஒரு காரில் பாபநாசத்திற்கு குளிக்க சென்றுள்ளார்.

    பின்னர் நள்ளிரவு நேரத்தில் 3 பேரும் காரில் பாபநாசத்தில் இருந்து செட்டிகுளத்துக்கு புறப்பட்டு வந்துள்ளனர். காரை ரமேஷ் ஓட்டி வந்துள்ளார்.

    பாபநாசத்தை அடுத்த வடமலை சமுத்திரம் பகுதியில் இருந்து கருத்தப்பிள்ளையூர் கிராமம் வழியாக அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்தது.

    தொடர்ந்து அந்த கார் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் 2 ஆக உடைந்தது. அதன் பின்னரும் கட்டுக்குள் வராத அந்த கார் அடுத்ததாக இருந்த மரத்தில் மோதி நின்றது. இதில் காரின் முன்பக்க பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ரமேஷ் படுகாயம் அடைந்தார். மற்ற 2 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டது.

    இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை ரமேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×