என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • பொது அமைதியை சீர்குலைத்தல், கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு.
    • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார்.

    நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரசார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார்.

    தமிழக அரசையும் தரக்குறைவாக விமர்சித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.

    இதைதொரட்ந்து, சாட்டை துரைமுருகன் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    அதன்படி, பொது அமைதியை சீர்குலைத்தல், கலவரத்தை தூண்டுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் சாட்டை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால், சாட்டை துரைமுருகனை திருச்சி நீதிமன்ற முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாட்டை துரைமுருகன் நீதிமன்ற காவலில் செல்ல தேவையில்லை எனக் கூறி விடுவித்தனர்.

    • கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்க கட்டி, தங்க நகைகள் இருந்தது.
    • நகை மற்றும் பணத்தை அவர் சென்னையில் இருந்து மதுரைக்கு கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார்.

    திருச்சி:

    திருச்சி ரெயில்வே கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் அபிசேக், பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெபாஸ்டின் ஆகியோர் இன்று ஜங்சன் ரெயில் நிலையத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சென்னையிலிருந்து மங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தது. பின்னர் பயணிகள் அந்த ரெயிலில் ஏறி இறங்கினர். அப்போது முன்பதிவு பெட்டியில் இருந்து இறங்கிய ஒரு நபர் கையில் பெரிய பையுடன் வேக வேகமாக புறப்பட்டுச் சென்றார்.

    இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த நபரை மடக்கி பையை சோதனை செய்தனர். அப்போது அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்க கட்டி, தங்க நகைகள் இருந்தது. ஆனால் அந்த நபரிடம் அதற்கான ரசீது எதுவும் இல்லை.

    அதை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவரை பிடித்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்டவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த லட்சுமணன்( வயது 25) என்பது தெரியவந்தது.

    நகை மற்றும் பணத்தை அவர் சென்னையில் இருந்து மதுரைக்கு கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரனை நடந்து வருகிறது.

    அதன் பின்னர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வருமான வரித்துறை மற்றும் வணிகவரித் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து சென்று பணம் மற்றும் நகையை மதிப்பிட்டு வருகின்றனர்.

    இதில் ரொக்க பணம் ரூ. 15 லட்சமும், ரூ.1 கோடியே 89 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பிலான 2.45 கிலோ தங்க நகைகளும் இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரம் ஆகும். கைப்பற்றப்பட்ட நகை, பணம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதா? அல்லது ஹவாலா பணமா என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

    இதன் பின்னணியில் இருப்பது யார் என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.

    திருச்சி ரெயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க நகை மற்றும் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குகிறது.
    • வெண்கல மணி 113 சென்டி மீட்டர் உயரமும், 287 சென்டிமீட்டர் சுற்றளவும் கொண்டதாக உள்ளது.

    திருச்சி:

    திருச்சி திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக இக்கோவில் விளங்குகிறது.

    இக்கோவில் சாமி சன்னதி வாயிலில் மணி மண்டபம் உள்ளது. ஆனால் அந்த மணிமண்டபத்தில் இருந்த மணி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 30 ஆண்டுகளாக இக்கோவிலில் மணியோசை கேட்காத நிலை இருந்து வந்தது.

    இந்நிலையில் உபயதாரர்கள் மூலம் ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய வெண்கல மணி இக்கோவிலுக்காக புதிதாக செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் சீனிவாசன் ஸ்தபதி மூலம் செய்யப்பட்டுள்ள இந்த வெண்கல மணி 520 கிலோ எடை கொண்டது.

    அழகிய வடிவ மைப்புடன் செய்யப்பட்டு உள்ள இந்த வெண்கல மணி 113 சென்டி மீட்டர் உயரமும், 287 சென்டிமீட்டர் சுற்றளவும் கொண்டதாக உள்ளது.

    நேற்று இரவு மாணிக்க வாசகரின் திரு நட்சத்திரத்தை முன்னிட்டு நடைபெறும் மாணிக்க வாசகரின் புறப்பாட்டு ஊர்வலத்துடன் மங்கள வாத்தியங்கள் முழங்க இந்த வெண்கல மணி எடுத்து வரப்பட்டது. இன்று புதன் கிழமை இந்த வெண்கல மணி பொருத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

    வருகிற 12-ந்தேதி வெள்ளிக்கிழமை முதல் உச்சிகால பூஜையின் போது புதியதாக பொருத்தப்பட்ட வெண்கல மணியோசை கோவில் முழுவதும் ஒலிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜேஇஇ தேர்வெழுதி 73.8 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றேன்.
    • தமிழக அரசு எனது அனைத்து கட்டணங்களையும் செலுத்த முன்வந்துள்ளது.

    திருச்சி:

    2024 ஜேஇஇ (JEE) தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ரோகிணி, சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்ஐடி-ல் (NIT) சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.

    ஜேஇஇ (JEE) தேர்வில் மாணவி ரோகிணி 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பிடித்துள்ளார். திருச்சி என்ஐடி-ல் (NIT) மாணவி ரோகிணி வேதிப் பொறியியலும், சுகன்யா உற்பத்தி பொறியியலும் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் ரோகிணி கூறுகையில்,

    பழங்குடியின சமூகத்தை சேர்ந்த நான் பழங்குடியினர் அரசு பள்ளியில் படித்தேன். ஜேஇஇ (JEE) தேர்வெழுதி 73.8 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றேன்.

    திருச்சி என்ஐடியில் (NIT) சீட் பெற்று, கெமிக்கல் பாடத்தை தேர்வு செய்துள்ளேன். தமிழக அரசு எனது அனைத்து கட்டணங்களையும் செலுத்த முன்வந்துள்ளது. எனக்கு உதவிய முதலமைச்சருக்கு நன்றி. எனது பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஊழியர்களால் நான் சிறப்பாக செயல்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

    • JEE தேர்வில் பழங்குடியின மாணவிகள் ரோஹிணி, சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை.
    • திருச்சி NIT-ல் சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.

    2024 JEE தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ரோஹிணி, சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.

    இதன்மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி NIT-ல் சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.

    JEE தேர்வில் மாணவி ரோஹிணி 73.8% மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பிடித்துள்ளார்.

    திருச்சி NIT-ல் மாணவி ரோஹிணி வேதிப் பொறியியலும், சுகன்யா உற்பத்தி பொறியியலும் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

    • பாலச்சந்திரன் அரிவாளால் கீதாவை சரமாரியாக வெட்டினார்.
    • கொலை நடந்த பகுதியில் பாதுகப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி அந்தரப்பட்டி குடோன் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கீதா(வயது46). முருகேசன் வளையல் வியாபாரம் செய்து வருகிறார். கீதா கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கீதாவுக்கும் முசிறியை அடுத்த வாழவந்தியை சேர்ந்த பாலசந்திரன்(64) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. பாலச்சந்திரன் அடிக்கடி கீதாவை சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை பாலச்சந்திரன் வழக்கம்போல கீதாவின் வீட்டுக்கு வந்தார். அங்கு கீதாமட்டும் தனியாக இருந்தார். அப்போது கீதாவுக்கும், பாலசந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பாலச்சந்திரன் அரிவாளால் கீதாவை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கீதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார். பின்னர் அங்கிருந்து ஆவேசமாக பாலச்சந்திரன் வாழ்வந்திக்கு சென்றார்.

    அங்கு தனது வீட்டு அருகே வசித்த ரமேஷ்(55) என்பவர் அங்குள்ள டீக்கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இவர் வாழவந்தி தி.மு.க. கிளை செயலாளராக இருந்தார். திடீரென ரமேசையும் பாலச்சந்திரன் அரிவாளால் வெட்டினார்.

    தலை மற்றும் கைகால்காளில் வெட்டுக்காயம் அடைந்த ரமேஷ் உயிருக்கு போராடிக் கண்டிருந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எனினும் சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். அடுத்தடுத்த கொலைகளால் அந்த பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. கொலையாளி பலச்சந்திரன் ஜம்பு நாதபுரம் காவல் நிலையத்தில் அரிவாளுடன் சென்று போலீசாரிடம் நடந்த விவரத்தை கூறி சரண் அடைந்தார்.

    இதை தொடர்ந்து பாலச்சந்திரனிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். கள்ளக்காதலியை கொலை செய்த சம்பவத்துக்கும் ரமேஷ் கொலைக்கும் வேறு வேறு காரணங்கள் இருப்பதாக போலீசாரிடம் பாலச்சந்திரன் கூறியுள்ளார். எனினும் கள்ளக்காதல் விவகாரத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் கொலை செய்யப்பட்ட ரமேசுக்கும் பாலசந்திரனுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக அவரை பாலசந்திரன் கொலை செய்ததாக தெரிகிறது. கள்ளக்காதலி கீதாவை கொலை செய்ததற்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முசிறி பகுதியில் இன்று அதிகாலை நடந்த இந்த இரட்டைக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கொலை நடந்த பகுதியில் பாதுகப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • அண்ணாதுரை தனது வீட்டு மாட்டு கொட்டகையில் வந்து உட்கார்ந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டை அன்னை நகரை சேர்ந்தவர் ஜெயா (60). இவரது கணவர் அண்ணாதுரை (70). இவர் பாத்திரம் அடைக்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயா தங்கை மகள் பூங்கொடி தங்கள் தெருவில் உள்ள பைப்பிற்கு தண்ணீர் பிடிக்க சென்ற போது, அருகில் இருந்த புளிய மரத்தின் அடியில் டப்பாவுடன் கூடிய பிராந்தி பாட்டில் ஒன்று கிடந்துள்ளது.

    அதனை பூங்கொடி எடுத்து வந்து பெரியப்பா அண்ணாதுரையிடம் கொடுத்ததாகவும் அதை வாங்கி கொண்டு அண்ணாதுரை சென்று விட்டதாகவும் சிறிது நேரம் கழித்து அண்ணாதுரை தனது வீட்டு மாட்டு கொட்டகையில் வந்து உட்கார்ந்தவர் சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

    உடனே அண்ணாதுரை குடும்பத்தினர் என்னவென்று சென்று பார்த்த போது அண்ணாதுரை இடுப்பில் மது பாட்டில் பாதி குடித்துவிட்டு வைத்திருந்து உள்ளார். அதை எடுத்து பார்த்த போது அது ஊதா நிறத்தில் இருந்து உள்ளது.

    உடனே அண்ணாதுரை மகன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அண்ணாதுரையை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக அறிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஜெயா திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கீழே கிடந்த மது பாட்டிலில் விஷம் கலந்து இருந்ததா? அல்லது அவரின் சாவுக்கு வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
    • சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தனர்.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த விமானங்களில் வரும் பயணிகள் மறைத்து கடத்தி வரப்பட தங்கம் பிடிபட்டது. இதுபோன்ற செய்திகள் நாளும் பத்திரிகைகளில் தவறாமல் இடம்பெறுகிறது.

    கட்டிங் பிளேயர் கம்பிகளுக்குள் மறைத்து, தலை முடிக்குள் மறைத்து வைத்து, பேஸ்ட் வடிவில், பேரிச்சம்பழக் கொட்டைகளை நீக்கிவிட்டு அதற்குப்பதில் தங்கத்தை வைத்து, ஊட்டச்சத்து பவுடருக்குள் தூளாக்கி, பிரவுன் டேப்புக்குள் பவுடர்களாக தூவி என நூதன முறையில் கடத்தல்காரர்கள் தங்கம் கடத்தி வருவது சுவாரசியம் தரக்கூடிய செய்தியாக மாறி உள்ளது.

    இப்படி தங்கம் கடத்தி வருபவர்களை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பது தொடர்கதையாகவே உள்ளது.

    இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் தனது காலில் அணிந்திருந்த மூட்டு வலி பட்டையில் ரூ. 1.16 கோடி மதிப்பிலான1605 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.

    இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆனி மாதத்தில் பெரிய திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.
    • திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை மாலை நடைபெறுகிறது.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெ ருமாள் ஜேஷ்டா பிஷேகம் கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதியும், ஸ்ரீரெங்க நாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் கடந்த 28-ந் தேதியும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு ஜேஷ்டாபிஷேகம் இன்று நடைபெற்றது. ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 12 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது.

    அங்கிருந்து காலை 7.15 மணியளவில் புனித நீர் யானை மீது வைத்தும், திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் 11 வெள்ளிக்குடங்களை தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனித நீர் வடக்குவாசல் வழியாக சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு காலை 7.30 மணிக்கு எடுத்து வரப்பட்டது.

    பின்னர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. பின்னர் சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன.

    பின்னர் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மங்களஹாரத்தி நடைபெற்றது. திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை மாலை நடைபெறுகிறது.

    இதேபோன்று ரெங்கநாத ர் கோவிலின் உபகோ விலான திருவானைக் காவல் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலிலும் இன்று ஜேஷ்டாபிஷேகம் நடை பெற்றது.

    ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 12 வெள்ளிக் குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது.

    அங்கிருந்து காலை 8 மணியளவில் புனித நீர் யானை மீது வைத்தும், 11 வெள்ளிக்குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனித நீர் வடக்குவாசல், சித்திரை வீதிகள், கீழவாசல் வழியாக கோவிலுக்கு காலை 9.30 மணிக்கு எடுத்து வரப்பட்டது.

    பின்னர் சிங்கப்பெருமாள் சன்னதியில் மூலவர்கள் லட்சுமிநரசிம்மன், மகாலெஷ்மி தாயார், உற்சவர் லெஷ்மிநரசிம்மர் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. பின்னர் சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்ட ப்பட்டன.

    பின்னர் மூலவர்கள் லட்சுமி நரசிம்மன், மகாலெஷ்மி தாயார், உற்சவர் லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு மங்களஹாரத்தி நடைபெற்றது. பின்னர் திருப்பாவாடை எனப்படும் பெரிய தளிகை நடைபெற்றது. 

    • சுதாகரின் உறவினர்கள், உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.
    • ஏற்கனவே மணப்பாறை போலீசாரால் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 44). இவர் அப்பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு கடந்த 1-ந் தேதி சென்ற மர்ம நபர்கள் தங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் எனக் கூறி அறிமுகம் செய்து கொண்டு, உங்களது கடையில் சட்டவிரோதமாக மருத்துவம் பார்ப்பதாக புகார் வந்துள்ளதாக கூறி கடையை சோதனை இட்டுள்ளனர்.

    பின்னர் சுதாகரை விசாரணைக்கு வாருங்கள் என கூறி அழைத்து சென்றனர். தொடர்ந்து சுதாகரின் உறவினருக்கு போன் செய்த மர்ம நபர்கள், அவரை விடுவிக்க ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாகரின் உறவினர்கள், உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.

    இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மணப்பாறை போலீசார் பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர்களை மணப்பாறை-திருச்சி பைபாஸ் சாலையில் வைத்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்த நவ்ஷாத் (45), துறையூர் அருகே உள்ள வைரி செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த சேகர் (42), வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (44), மதுரையை சேர்ந்த மாரிமுத்து (53), சென்னையை சேர்ந்த வினோத் (37), தொப்பம்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (37) என்பது தெரியவந்தது.

    இந்த 6 பேரும் பேரும் ஒரே குழுவாக சேர்ந்து, இதுபோன்று பல்வேறு இடங்களில் தங்களை பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அதிகாரிகள் எனக்கூறி கைவரிசை காட்டியதும் தெரிய வந்தது. இவர்களிடம் மேலும் விசாரணை செய்ததில், இந்தக் குழுவில் உள்ள வினோத், நவ்ஷத், கார்த்திக், மாரிமுத்து ஆகிய நான்கு நபர்கள், மணப்பாறையை சேர்ந்த சக்திவேல் (30), திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (29) ஆகியோருடன் கூட்டு சேர்ந்து, துறையூர் சௌடாம்பிகை அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் ஜவுளி வியாபாரியான மதுரை வீரன் (60) என்பவரின் வீட்டிற்கு கடந்த மாதம் 17-ந் தேதி சென்று, அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி, அவரது வீட்டில் 5 லட்சம் பணம், தங்க நகை 5 பவுன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது.

    மணப்பாறை வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சக்திவேல், மணிகண்டன் ஆகிய இருவரையும் துறையூர் போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இருவரையும் கைது செய்த துறையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் இச்சம்பவத்தில் கொள்ளை போன நகை, பணம் மற்றும் குற்ற செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை ஏற்கனவே மணப்பாறை போலீசாரால் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • திமுக சார்ந்த அரசியலை விஜய் முன்னெடுத்தால் பாஜகவின் அரசியல் தனித்துவமாக இருக்கும்.
    • உருது பள்ளிகளை அதிகம் திறப்பது உருது திணிப்பு இல்லையா?

    திருச்சி:

    திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * திமுக சார்ந்த அரசியலை விஜய் கையிலெடுத்தாலும் பாஜகவுக்கு சந்தோஷம் தான்.

    * மத்திய அரசை திமுக பாணியில் ஒன்றிய அரசு என நடிகர் விஜய் கூறுகிறார். திமுக சார்ந்த அரசியலை நடிகர் விஜய் முன்னெடுப்பது போல் உள்ளது.

    * 2021க்கு முன்பு வரை மத்திய அரசு என்று தானே அனைவரும் கூறி வந்தனர்.

    * திமுக சார்ந்த அரசியலை விஜய் முன்னெடுத்தால் பாஜகவின் அரசியல் தனித்துவமாக இருக்கும்.

    * விஜய் திமுக ஆதரவு அரசியலை முன்னெடுப்பது பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும்.

    * தமிழகத்தில் உருது பள்ளிகளை அதிகம் கொண்டு வர வேண்டும் என்பது மாநிலக்கல்விக்கொள்கை. உருது பள்ளிகளை அதிகம் திறப்பது உருது திணிப்பு இல்லையா?

    * கடலோர பள்ளிகளில் மாணவர்களுக்கு மீனவர்கள் சார்ந்து பாடம் கற்பிப்பது குலக்கல்வி இல்லையா?

    * தமிழக அரசு கற்பிப்பது குலக்கல்வி இல்லை, மத்திய அரசு கொண்டு வந்தால் குலக்கல்வியா? என்று கேள்வி எழுப்பினார்.

    • திமுகவிற்கு உதவும் வகையில் விக்கிரவாண்டியில் அதிமுக போட்டியிடவில்லை.
    • நீட் விவகாரத்தில் விஜய் கருத்தை கூறுவதற்கு அவருக்கு கருத்துரிமை உள்ளது.

    திருச்சி:

    திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஆளுங்கட்சியின் அத்துமீறல்களையும் மீறி விக்கிரவாண்டி தேர்தலில் பாமக வெல்லும்.

    * விக்கிரவாண்டியில் போட்டியிடும் துணிச்சல் அதிமுகவிற்கு இல்லை.

    * 3வது, 4வது இடத்திற்கு செல்ல நேரிடும் என்பதால்தான் அதிமுக போட்டியிடவில்லை.

    * திமுகவிற்கு உதவும் வகையில் விக்கிரவாண்டியில் அதிமுக போட்டியிடவில்லை.

    * பாமகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என அதிமுக கூறி உள்ளது திமுகவிற்கு உதவும்.

    * விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றி பெற வைக்க அதிமுக மறைமுக உதவி செய்துள்ளது.

    * நீட் தேர்வு தொடர்பாக திமுக அரசு ஏன் வெள்ளை அறிக்கை வழங்க தயங்குகிறது? நீட் தேர்வுக்கு முன் - பின் மருத்துவ சேர்க்கை எப்படி நடைபெற்றது என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    * நீட் விவகாரத்தில் விஜய் கருத்தை கூறுவதற்கு அவருக்கு கருத்துரிமை உள்ளது.

    * நீட் தேர்வு வந்த பிறகு அதிக அரசுப்பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

    * பாஜக எதிர்ப்பு அரசியல் என்கிற ஒன்றுக்காக நீட் தேர்வை தற்போது எதிர்க்கிறார்கள் என்று கூறினார்.

    ×