என் மலர்
சேலம்
- கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களின் போதும், கன்னியாகுமரியில் இருந்து தான் பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டங்களை தொடங்கினார்.
- பிரதமர் மோடி வருகிற 18-ந் தேதி கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
சேலம்:
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே பாராளுமன்ற தேர்தல் களம் நாடு முழுவதும் களை கட்டி உள்ளது. பிரதமர் மோடி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பேசி வருகிறார்.
இந்த முறை தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது. அதன் அடிப்படையில் பிரதமர் மோடி கடந்த ஒரு மாத காலத்தில் 2 முறை தமிழகத்துக்கு வந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
கடந்த மாதம் 27-ந் தேதி கொங்கு மண்டலமான திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். பின்னர் மதுரைக்கு புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இரவில் மதுரையில் தங்கிய அவர் மறுநாள் (28-ந்தேதி) தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்த விழாவில் குலசேகர பட்டணம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் கடந்த 4-ந் தேதி 2-வது முறையாக தமிழகம் வந்த பிரதமர் மோடி சென்னை கல்பாக்கம் அனல்மின் நிலையத்தில் ஈனுலை திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அன்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
தற்போது 3-வது முறையாக பிரதமர் மோடி வருகிற 15-ந்தேதி தமிழகம் வருகிறார். சேலத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட உள்ளது.
இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சேலம், நாமக்கல், கரூர் பாராளுமன்ற தொகுதி வாக்காளர்களிடம் பிரதமர் மோடி பேச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வருகிறார். பின்னர் காலை 11 மணி அளவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்காளர்கள் மத்தியில் பேசுகிறார்.
இதையொட்டி அங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை திரட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளில் கட்சியினர் தீவிரமாக இறங்கி உள்ளனர். பிரதமர் மோடிக்கு பல்லாயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க.வினர் செய்து வருகிறார்கள்.
பிரதமர் மோடி சேலம் வருகையையொட்டி பா.ஜ.க. தொண்டர்கள், நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் தொண்டர்கள் அமருவதற்கான இடமும், வாகனம் நிறுத்தும் வசதியும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சேலம் கூட்டத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கோவைக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி பேச உள்ள மேடை அமையும் இடத்தில் நேற்று பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே நேற்று சேலம் பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தில் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பாளரும், மாநில துணை செயலாளருமான கே.பி.ராமலிங்கம், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு, மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்முருகன், சேலம் தொகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை, கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன், நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் சத்யமூர்த்தி, திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ரவி, வீரபாண்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். அவர்கள் சேலத்திற்கு வருகை தரும் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பது குறித்தும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதித்தனர்.
சேலம் கூட்டத்துக்கு பிறகு பிரதமர் மோடி 16-ந்தேதி கன்னியாகுமரி செல்கிறார். அவர் அங்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
அவர் அந்த கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் போட்டியிடும் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து, அவர்களுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.
அப்போது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய 5 தொகுதி வேட்பாளர்களும் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.
பிரதமர் மோடி பேசுவதற்காக கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி மைதானம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களின் போதும், கன்னியாகுமரியில் இருந்து தான் பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டங்களை தொடங்கினார்.
இந்த முறை பாராளுமன்ற தேர்தலோடு விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்த வாய்ப்பு உள்ளது. கடந்த முறை இந்த தொகுதியில் பா.ஜனதா, அ.தி.மு.க.வுடன் இணைந்து களம் இறங்கியது. தற்போது இந்த கட்சிகள் தனித்து களம் இறங்க உள்ளன.
இந்த தொகுதிக்கான பா.ஜனதா வேட்பாளரையும் 16-ந்தேதி கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்து ஆதரவு திரட்ட உள்ளார்.
பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. அது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பிரதமர் மோடி வருகிற 18-ந் தேதி கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ள பா.ஜ.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் கோவையில் பிரசாரம் செய்ய இருக்கிறார்.
இந்த 4 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் மைய பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். கோவையில் ஏற்கனவே கொடிசியா மைதானத்தில் பிரதமர் மோடி பேசி இருக்கிறார். அங்கு ஒரே இடத்தில் லட்சக்கணக்கானோர் குவியும் வகையில் இட வசதி உள்ளன. இதனால் அந்த இடத்திலேயே இந்த முறையும் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
கோவை பாராளுமன்ற தொகுதியை வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக பா.ஜ.க. பார்க்கிறது. இதனால் இந்த தொகுதியில் வெற்றி பெறும் வகையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பிரசார கூட்டத்தில் லட்சக்கணக்கானோரை திரட்ட பா.ஜ.க.வினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும் நீலகிரி, பொள்ளாச்சி தொகுதிகளில் இருந்தும் திரளான பொதுமக்களை பங்கேற்க செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது பிரதமர் வருகை தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் வந்தவுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடங்குவோம். பிரதமர் கேரளாவில் இருந்து கோவை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
- சுமார் இரண்டு மணி நேரமாக அலசி ஆராய்ந்தபோது குப்பையில் தங்க காப்பை தூய்மை பணியாளர் மணிவேல் கண்டுடெடுத்தார்.
- மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கருணை உள்ளத்தோடு கண்டுபிடித்து கொடுத்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
சேலம்:
சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் உள்ள சினிமா தியேட்டர் வளாகத்தில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது. குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு குப்பை சேகரிக்கும் இடத்தில் ஊழியர்கள் வாகனத்தில் கொண்டு சென்றனர்.
அப்போது சூரமங்கலம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேஸ்திரி குமரேசனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஒருவர் பேசினர். அப்போது உழவர் சந்தை அருகில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க வந்தபோது தனது குழந்தையின் கையில் இருந்த தங்க காப்பு கீழே விழுந்து விட்டதாகவும் தியேட்டரில் எங்கும் தேடி பார்த்து கிடைக்கவில்லை.
எனவே அங்கு வரும் குப்பையில் உள்ளதா? என்று பார்க்குமாறு கூறினார். இதனையடுத்து குப்பை எடுத்து செல்லப்பட்ட வண்டியை ஓரங்கட்டிய மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உடனடியாக வண்டியில் இருந்த குப்பைகளை தரம் பிரிக்க தொடங்கினர். சுமார் இரண்டு மணி நேரமாக அலசி ஆராய்ந்தபோது குப்பையில் தங்க காப்பை தூய்மை பணியாளர் மணிவேல் கண்டுடெடுத்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு காணாமல் போன தங்க காப்பு கிடைத்துவிட்டதாக தகவல் தரப்பட்டது.
இதையடுத்து அவர்கள் நேரடியாக தியேட்டருக்கு வந்து தங்க காப்பை பெற்றுச் மகிழ்ச்சியுடன் சென்றனர். தியேட்டரில் தவறவிட்ட தங்க காப்பை குப்பைக்கு சென்ற போது மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கருணை உள்ளத்தோடு கண்டுபிடித்து கொடுத்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
- மாசி அமாவாசையையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.
- பக்தர்கள் ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
சேலம்:
சேலத்தில் மாசி அமாவாசையையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ஆடு, கோழிகளை கடித்தபடி பக்தர்கள் ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழாவிற்கு அடுத்து வரும் மாசி அமாவாசை அன்று நடக்கும் மயான கொள்ளை நிகழ்ச்சி சேலத்தில் மிகவும் பிரபலமானது. பல 100 ஆண்டுகளாக இந்த மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்து வருகிறது.
அதன்படி மாசி மாத அமாவாசையான இன்று சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
குறிப்பாக சேலம் டவுன் தேர்வீதி, ஜான்சன்பேட்டை, வின்சென்ட், கிச்சிப்பாளையம் நாராயண நகர் ஏரிக்கரை மற்றும் ஆண்டிப்பட்டியில் உள்ள அங்காளம்மன் கோவில்கள் உள்பட பல்வேறு அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோவில்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கோவில்களில் இருந்து சாமி சிலைகளை அலங்கரித்து பக்தர்கள் மேளதாளங்களுடன் ஆங்காங்கே உள்ள சுடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, அங்காள பரமேஸ்வரி உள்பட பல்வேறு அம்மன்கள் வேடம் அணிந்து ஆடியவாறு சென்றனர். அப்போது, வழிநெடுக திரளான பக்தர்கள் நின்று தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி, சாமியாடியவாறு வந்தவர்களிடம் ஆடு, கோழிகளையும், முட்டைகளையும் கொடுத்து வேண்டிக்கொண்டனர்.

மேலும் ஆட்டுகுட்டிகளை வாங்கிய பக்தர்கள், அதை தங்கள் கழுத்து மேல் தூக்கி போட்டு ஆடியதோடு, ஆட்டின் குரல்வளையை கடித்து ரத்தம் குடித்ததையும் காண முடிந்தது. இது ஒருபுறம் இருக்க, சில பக்தர்கள் கோழியை வாயில் கவ்வியபடி அதன் ரத்தத்தை குடித்தவாறு ஆடிக்கொண்டு சுடுகாட்டை நோக்கி சென்றனர்.
மேலும், சில பக்தர்கள் சுடுகாட்டின் புதைக்குழியில் கிடந்த இறந்த மனிதர்களின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் ஆகியவற்றுடன் ஆடு, கோழிகளை வாயில் கவ்வியபடி ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக சென்றனர்.
இந்த காட்சிகள் சாலையில் நின்றிருந்த பொதுமக்களை மெய்சிலிர்க்க வைத்தது. சேலம் ஜான்சன்பேட்டை பிள்ளையார் நகர் பகுதியில் உள்ள காக்காயன் சுடுகாட்டில் நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சியை யொட்டி ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
அப்போது பல்வேறு இடங்களில் இருந்து ஆக்ரோஷத்துடன் சாமியாடி வந்த பக்தர்கள் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு விபூதி கொடுத்து ஆசி வழங்கினர். மேலும், தீராத நோய்கள் குணமாகவும், திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் தரையில் படுத்திருந்த பக்தர்கள் மீது சாமி வேடம் அணிந்திருந்தவர்கள் தாண்டி ஆக்ரோஷமாக சென்றனர்.
- இனி வரும் நாட்களில் மாங்காய் வரத்து படிப்படியாக அதிகரித்து மார்ச் மாத இறுதியில் அதிக அளவில் மாங்காய்கள் வரத்து இருக்கும்
- பூக்கள் குறைவாகவே பூத்துள்ளது. இதனால் மாம்பழ வரத்து கடந்த ஆண்டை விட குறைவாகவே இருக்கும்.
சேலம்:
சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது தித்திக்கும் சுவையுடய மாம்பழங்கள் தான், அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உற்பத்தி யாகும் மாம்ப ழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.
குறிப்பாக சேலம் மாவ ட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர், குப்பனூர், காரிப்பட்டி அயோத்தியாப்பட்டனம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, எடப்பாடி பகுதிகளில் அதிக அளவில் மாமரங்கள் உள்ளன. இந்த மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படும்,
மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கு விளையும் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் உலகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் அதனை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.
சேலம் மார்க்கெட்டுகளுக்கு வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் மாம்பழ சீசன் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை மாம்பழங்கள் வரத்து இருக்கும், இந்தாண்டு பருவம் தவறிய மழை பெய்ததால் மாம்பழம் வரத்து 20 நாட்கள் காலதாமதமாகி உள்ளது.
தற்போது தான் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழ வரத்து தொடங்கி உள்ளது. குறிப்பாக இமாம்பசந்த், சேலம்-பெங்களூரா, சேலம் குண்டு, கிளிமூக்கு பழங்கள் மா ர்க்கெட்டுகளுக்கு வரதொடங்கி உள்ளன. தற்போது நாள் ஒன்றுக்கு 2 டன் வரை மாங்காய்கள் சேலம் மார்க்கெட்களுக்கு வரத்தொடங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் மாங்காய் வரத்து படிப்படியாக அதிகரித்து மார்ச் மாத இறுதியில் அதிக அளவில் மாங்காய்கள் வரத்து இருக்கும், அப்போது குறிப்பாக சேலம் சின்ன கடை வீதி, பெரிய கடை வீதி, ஏற்காடு ரோடு, செவ்வாய்ப்பேட்டை, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை உள்பட பல பகுதி களில் மாம்பழங்கள் கடைகளிலும் தள்ளுவண்டிகளிலும் வைத்து விற்கப்படும். இதனால் எங்கு பார்த்தலும் மாம்பழ மனம் வீசும்.
தற்போது கடை வீதி மற்றும் சேலத்தில் உள்ள மார்க்கெட்டுகள், உழவர் சந்தைகள், பழக்கடைகள், தள்ளுவண்டி கடைகளில் மாங்காய்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த மாம்பழங்கள் ஒரு கிலோ 100 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இனி வரும் நாட்களில் மாம்பழ வரத்து படிப்படியாக அதிகரிக்கும்.
இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், நடப்பாண்டில் காலம் கடந்து பெய்த மழையால் 20 நாட்கள் காலதாமதமாக மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. இன்னும் 20 நாட்களில் மாம்பழ சீசன் உச்சம் பெறும். ஆனாலும் வழக்கத்தை விட இந்தாண்டு மாந்தளிர் தான் அதிகம் உள்ளது. பூக்கள் குறைவாகவே பூத்துள்ளது. இதனால் மாம்பழ வரத்து கடந்த ஆண்டை விட குறைவாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
- கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று கூறினர்.
- 5-வது நாளாக இன்றும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
சேலம்:
தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதியான இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் 5-வது நாளாக இன்று ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் இல்லாவிட்டால் பணியை புறக்கணித்து, கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று கூறினர்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சேலம் கோட்டை மெயின் ரோட்டில் 5-வது நாளாக இன்று சாலையோரம் அமர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர். தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயன்றதால் சுமார் 180-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை 5-வது நாளாக இன்றும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
- பலியான மாதையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் வீராணம் சுக்கம்பட்டியை அடுத்த கோனூர் பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 42). விவசாயி. இவருக்கு ஏற்காடு அடிவாரத்தில் விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வளர்த்து வருகிறார். இதனால் மாதையன் தினமும் காலையில் தோட்டத்திற்கு செல்வது வழக்கம்.
வழக்கம்போல் இன்று காலை 7 மணிக்கு அவர் தோட்டத்திற்கு சென்றார். அப்போது கால்நடைகளுக்கு தண்ணீர் வைப்பதற்கு குடத்தை எடுத்துக்கொண்டு அங்குள்ள வாழை தோட்டத்தில் உள்ள கிணறு பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த காட்டெருமை மாதையனை முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் தொடை, கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து காட்டெருமையை விரட்டி விட்டு படுகாயம் அடைந்த மாதையனை மீட்டனர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்தனர். அதன் ஊழியர்கள் பரிசோதித்து பார்த்து மாதையன் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வீராணம் போலீசுக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையிலான போலீசார், சேர்வராயன் வனச்சரகர் பழனிவேல் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பலியான மாதையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே காட்டெருமை முட்டி பலியான மாதையன் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் ரூபாய் நிவாரணம் தொகை வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது. பலியான மாதையனுக்கு சரஸ்வதி (40) என்ற மனைவியும் புவனேஸ்வரன் (13), நவனேஸ்வரன் (5) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
- இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமான தற்போதே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
- மழை பெய்யாவிட்டால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட நடப்பாண்டில் 6 சதவீதம் அளவுக்கு குறைவாக பெய்திருந்தது. இதனால் தற்போதே மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு வருகின்றன. இதனால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சேலம் மாவட்டத்தில் வழக்கமாக மார்ச் மாதம் 15-ந் தேதிக்கு மேல் கோடை வெயில் அதிக அளவில் இருக்கும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் உச்சத்தை அடையும், அப்போது மதிய நேரங்களில் அனல் பறக்கும், இதனால் பொது மக்கள் சாலைகளில் நடமாட்டம் குறைந்து வீட்டில் முடங்குவார்கள்.
ஆனால் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமான தற்போதே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக சேலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக சேலத்தில் 96.8 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. படிப்படியாக வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து வருகிறது.
இதனால் பொது மக்கள் குடை பிடித்த படியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கிறார்கள். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். நேற்று வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. மாலை 5.30 மணி வரை வெயில் வாட்டி வதைத்ததால் பொது மக்கள் வீடுகளில் முடங்கினர்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கம்பங்கூழ், மோர், தர்பூசனி, இளநீர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி பருகி பொது மக்கள் வெப்பத்தை தணித்து வருகிறார்கள். இதனால் குளிர்பான கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.
சேலம் சத்திரம் உள்பட பல பகுதிகளில் திண்டிவனம் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் தர்பூசனி பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்களும், வியாபாரிகளும் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.
இது குறித்து வானிலை அதிகாரிகளிடம் கேட்ட போது, வழக்கத்தை விட இந்தாண்டு முன்கூட்டியே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது பனிப்பொழிவு இருப்பதால் சற்று வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தாலும் இனி வரும் நாட்களில் வெயிலின் உக்கிரம் மேலும் அதிகரிக்கும், மழை வந்தால் மட்டுமே வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. மழை பெய்யாவிட்டால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
- சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மயில்சாமி, சேது, தனுஷ், ஹரீஸ் ஆகிய 4 இளைஞர்கள் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
- போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டூர்:
மேட்டூர் அருகே கொளத்தூர் கோட்டை மடுவு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீடு சென்ற சிறுமிகளை ஒரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளி மாணவியின் பெற்றோர், உறவினர்கள் நேற்று அந்த இளைஞர்களை அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மயில்சாமி (வயது 22) சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், சேது (20) தனுஷ் (24) ஆகிய 2 பேர் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து இளைஞர்கள் கொடுத்த புகாரின் பேரில் கொளத்தூர் போலீசார் 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் குமார், ரத்தினகுமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து மேட்டூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மயில்சாமி, சேது, தனுஷ், ஹரீஸ் ஆகிய 4 இளைஞர்கள் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கருங்கல்லூர், காவேரிபுரத்தில் போலீசார் பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
- தேசியக் கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று முடிவெடுத்தது தான் எடப்பாடி பழனிசாமியின் தைரியம்.
- சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். அ.தி.மு.க. அண்ணா பெயரை தாங்கி நிற்கின்ற கட்சி. உங்களுக்கு நாங்கள் அடிமை அல்ல.

நாங்கள் ஒரு தாம்பாளத்தில் 2 கோடி தொண்டர்களை வைத்துள்ளோம். உங்களிடம் போய் அடிமை சாசனம் வாசிக்க தேவையில்லை. தேசியக் கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று முடிவெடுத்தது தான் எடப்பாடி பழனிசாமியின் தைரியம். சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் அமித்ஷா தமிழகம் வந்தாராம் பத்து தொகுதி எங்களிடம் கொடுத்து விடுங்கள். 10 தொகுதி மற்றவர்களுக்கு பிரித்துக் கொடுக்கிறோம் என தெரிவித்தாராம்.
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி என பிரித்துக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்வது இ.பி.எஸ். மட்டுமே அமித்ஷா இல்லை. எதிரி மற்றும் துரோகிகளை சமாளித்து மத்தியில் இருக்க கூடியவர்களின் மிரட்டல்களை சமாளித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் வீறுகொண்டு எழுந்து வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- முதலில் கோவில் மாடு அவிழ்த்து வாடிவாசல் வழியாக விடப்பட்டது.
- சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.5 லட்சம், ரூ. 1 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவினை சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி உறுதிமொழி வாசித்து கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் ஆத்தூர், கடம்பூர், கூடமலை, கெங்கவல்லி, உலிபுரம், தலைவாசல், மங்கபட்டி, கடம்பூர், ஏத்தாப்பூர், புதுக்கோட்டை, பெத்தநாயக்கன்பாளையம், கோனேரிப்பட்டி, நடுவலூர், கீரிப்பட்டி, கொண்டையம்பள்ளி, மல்லியகரை, திம்மநாயக்கன்பட்டி, மங்களபுரம், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், நாமக்கல், சேலம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 600 காளைகள் கலந்து கொண்டன. 400 மாடுபிடி வீரர்கள் 4 சுற்றாக பிரிக்கப்பட்டு மாடுபிடிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
முதலில் கோவில் மாடு அவிழ்த்து வாடிவாசல் வழியாக விடப்பட்டது. கோவில் மாடு என்பதால் அதை யாரும் பிடிக்கவில்லை. இதையடுத்து வரிசையாக ஒவ்வொரு மாடுகளாக அவிழ்த்து மைதானத்தில் விடப்பட்டது. இந்த மாடுகள் வாடி வாசல் வழியாக சீறி பாய்ந்து மைதானத்தில் துள்ளிக்குதித்து ஓடியது. வாடிவாசல் முன்பு திரண்டிருந்த வீரர்கள் இந்த காளைகளின் திமிலை பிடித்து அடக்க முயன்றனர். வீரர்கள் காளைகளின் திமிலை பிடித்து தொங்கியபடி வாடிவாசல் முகப்பில் இருந்து சில அடி தூரம் வரை சென்று அடக்கி பிடித்தனர். பெரும்பாலான காளைகள் வீரர்களிடம் பிடிப்படாமல் எகிறி குதித்து ஓடியது. காளைகளின் திமிலை பிடித்து அடக்க முயன்றபோது வீரர்களை காளைகள் முட்டி தூக்கி எறிந்தது.
இந்த போட்டியை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர். கரகோஷம் எழுப்பி வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். அதுபோல் வீரர்களிடம் இருந்து எகிறி குதித்து ஓடிய காளைகளுக்கும் கரகோஷம் எழுப்பினார்கள்.
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.5 லட்சம், ரூ. 1 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது. விழா குழு சார்பாக டிரஸ்ங் டேபிள், பட்டு புடவை, வெள்ளி நாணயம், மின்விசிறி, தென்னங்கன்று போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கால்நடை டாக்டர்களுடன் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. டாக்டர்கள் மற்றும் மருந்துகள், 108 ஆம்புலன்ஸ் வசதி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் இதர சம்பந்தப்பட்ட துறையினர் கண்காணித்தனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
- தன்னை சொந்த ஊருக்கு மீட்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
- உறவினர்களுடன் சேலம் வந்து அங்கு டி.ஐ.ஜி. உமாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
சேலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 45). இவரை திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது அலி, சென்னையை சேர்ந்த முத்து ஆகியோர் மலேசியாவில் நல்ல வேலை இருப்பதாக கூறி அங்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சரியான வேலை கிடைக்காத நிலையில் வீட்டு வேலை செய்ய சொல்லி மகேஸ்வரியை அடித்து கொடுமைப்படுத்தினர். ரூ.1.26 லட்சத்திற்கு தன்னை விற்றுள்ளது மகேஸ்வரிக்கு தெரியவந்தது.
இது பற்றி தனது உறவினர்களிடம் தெரிவித்து அவர் கதறினார். மேலும் தன்னை சொந்த ஊருக்கு மீட்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து அவரை மீட்பதற்காக உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்தை அணுகினார்கள். மேலும் சேலம் சரக டி.ஐ.ஜி. உமாவிடம் புகார் மனு கொடுத்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மகேஸ்வரியை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில் அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் மகேஸ்வரி மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். காலையில் விமானம் சென்னை வந்தடைந்தது. பின்னர் மகேஸ்வரி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் அவரை உறவினர்கள் வரவேற்றனர். அப்போது மகேஸ்வரி உறவினர்களை பார்த்து நெகிழ்ச்சியுடன் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
பின்னர் அவர் தனது உறவினர்களுடன் சேலம் வந்து அங்கு டி.ஐ.ஜி. உமாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
முன்னதாக மகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், தனக்கு மலேசியாவில் நல்ல வேலை இருப்பதாக அழைத்து சென்று கழிவறையை கழுவ சொன்னதுடன் அங்கு அடித்து கொடுமைப்படுத்தினர். இதனால் எனக்கு தற்போது வரை காது சரியாக கேட்காத நிலை உள்ளது. எனவே இதற்கு காரணமான முகமது அலி, முத்து, அருள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
- விழாவில் மாலை 4 மணி அளவில் வெற்றி நமதே என்ற கலைநிகழ்ச்சி நடக்கிறது.
- கலைப்பிரிவு செயலாளர் ரவிச்சந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் சேசரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
சேலம்:
சேலம் மாநகர் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதி, சேலம் தெற்கு சட்டசபை தொகுதி சார்பில் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் விழா, அ.தி.மு.க. பொதுக்கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சேலம் தாதகாப்பட்டி கேட்டில் மாலை 5 மணிக்கு நடக்கிறது. கொண்டலாம்பட்டி பகுதி-2 செயலாளர் கே.பி.பாண்டியன் தலைமை தாங்குகிறார்.
மாவட்ட பொருளாளர் பங்க் எஸ்.வெங்கடாசலம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முத்து, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கனகராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலசுப்பிரமணியம் எம்.எல்.ஏ., கொண்டலாம்பட்டி பகுதி-1 செயலாளர் சண்முகம் ஆகியோர் வரவேற்று பேசுகின்றனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அப்போது 5 ஆயிரத்து 176 பேருக்கு நல உதவிகள் வழங்குகிறார்.
விழாவில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம், மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.கே.செல்வராஜூ, மாநகர் மாவட்ட துணை செயலாளர் எஸ்.சவுண்டப்பன், மாணவர் அணி செயலாளர் சக்திவேல், கலைப்பிரிவு செயலாளர் ரவிச்சந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் சேசரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
விழாவில் மாலை 4 மணி அளவில் வெற்றி நமதே என்ற கலைநிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக பொதுக்கூட்டத்துக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் மாநகர் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க., சேலம் தெற்கு சட்டசபை தொகுதி சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






