என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • மக்களின் செல்வாக்கையும், கட்சியின் செல்வாக்கையும் திமுக இழந்துவிட்டது.
    • திமுக என்ற கட்சி இன்று நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டிருக்கிறது.

    ராணிப்பேட்டையில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தை ஒரு குடும்பம் சுரண்டுவதை தடுத்து நிறுத்துவதற்கான தேர்தல் 2026ல் நடைபெறுகிறது.

    மக்களின் செல்வாக்கையும், கட்சியின் செல்வாக்கையும் திமுக இழந்துவிட்டது.

    திமுக என்ற கட்சி இன்று நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டிருக்கிறது.

    உதயநிதியை துணை முதலமைச்சராக்கியது தான் திமுக செய்த சாதனை.

    திமுக ஆட்சியில் மக்கள் கனவில் தான் வீடு கட்ட முடியும். திமுக ஆட்சியில் விவசாயி, நெசவாளர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இச்சிப்புத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • ஈசலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூர் துணை மின் நிலையத்தில் ஆகஸ்டு 19-ந் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    அதன்படி இச்சிப்புத்தூர், வடமாம்பாக்கம், எம்ஆர்எப், தணிகைபோளூர், வாணியம் பேட்டை, தண்டலம், உளியம் பாக்கம், வளர்புரம், ஈசலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    • உதயநிதி ஸ்டாலின் பேசும்போது பிரச்சினை ஆக்குகின்றனர்.
    • சங்பரிவார் தமிழகத்தில் காலுன்றிவிடக்கூடாது என கவலைபடுகின்ற கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி

    ராணிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்து மதத்தை மட்டும் நீங்கள் விமர்சிப்பதாக கேட்கிறார்கள். அது சகோதரத்துவமாக இல்லை என்பதுதான் பிரச்சனை. பாஜக, ஆர்எஸ்எஸ் இதை ஏன் சுய விமர்சனமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் நம் கேள்வி. திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக என அனைவரும் மதச்சார்பின்மை கொள்கையில் உள்ளோம்.

    காங்கிரசோடு நமக்கு வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மதசார்பின்மை கொள்கையில் உறுதியோடு இருக்கிறோம். சனாதானத்தை பற்றி திருமாவளவன் பேசியபோது பிரச்சனை ஆகவில்லை. உதயநிதி ஸ்டாலின் பேசும்போது பிரச்சினை ஆக்குகின்றனர். எங்கள் கருத்து இந்து சமூகத்திற்கு எதிரான கருத்து இல்லை. கருத்தியலுக்கு எதிரானதுதான்.

    எடப்பாடி.பழனிசாமி, பாஜக வை உடன் வைத்துக்கொண்டு தமிழகத்தை காப்போம் மக்களை மீட்போம் என்கிறார். நாம் மதச்சார்பின்மை காப்போம் என்கிறோம்.

    தற்போது நடைபயணம் கிளம்பியுள்ளவர்கள் எல்லாம் பா.ஜ.க.வை ஆதரிப்பவர்கள். தி.மு.க. தனியாகவே எதிரிகளை சந்திக்கும் அவர்களுக்கு திருமாவளவன் போன்றவர்கள் தேவை இல்லை.

    ஆர்எஸ்எஸ் உள்பட இயக்கங்களை எதிர்க்க கொள்கை உள்ள நாங்கள் உடன் இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி அழைத்ததாக நான் கூறினேனா? துணை முதல்வர் பதவி தருவதாக அழைக்கின்றனர்.

    நான் முதல் அமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவனா? நானும் ரவுடிதான் என யார் யாரோ கிளம்புகின்றனர். முதல்-அமைச்சர் ஆக்குங்கள் என்கின்றனர்.

    நானும் 35 ஆண்டுகளாக அரசியல் பொது வாழ்க்கையில் உள்ளேன். கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின், ராகுல் என அனைவரோடும் அரசியலில் பயணித்துள்ளேன். துணை முதல் அமைச்சர் என ஆசை காட்டினால் நான் சென்று விடுவேன் என நினைக்கின்றனர்.

    கொள்கை அரசியலில் செயல்படும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. சங்பரிவார் தமிழகத்தில் காலுன்றிவிடக்கூடாது என கவலைபடுகின்ற கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதனால் தி.மு.க.வுடன் உறுதியாக நிற்கிறோம் பயணிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், விசிக தலைவர் பேச்சு.

    ராணிப்பேட்டையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதச்சார்பின்மை காப்போம் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    அப்போது பேசிய திருமாளவன், " தமிழகத்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்கள் எல்லாம் மதசார்பின்மைக்கு எதிரானவர்கள்" என்று கூறினார்.

    தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், தமிழகத்தில் சுற்றுப்யணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், விசிக தலைவர் திருமாவளவன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • சிக்னல்கள் இயங்க தடைபட்டதால் அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
    • தொடர்ந்து ரெயில்வே துறை அதிகாரிகள் மின் சாதன கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கும் புளியமங்கலம் ரெயில் நிலையம் இடையே மின்சாதன கோளாறு ஏற்பட்டது .

    இதனால் சிக்னல்கள் இயங்க தடைபட்டதால் அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    தொடர்ந்து ரெயில்வே துறை அதிகாரிகள் மின் சாதன கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    சுமார் 30 நிமிடங்கள் காலதாமதமாக அரக்கோணம் ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றன.

    குறிப்பாக கோவையில் இருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில், கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை சுமார் 30 நிமிடங்கள் காலதாமதமாக அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

    இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். குறித்த நேரத்திற்கு பணியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறுகையில்:-

    மின்சார துண்டிப்பு, தண்டவாளம் பழுது, மின்சார கோளாறு என பல்வேறு காரணங்களால் அரக்கோணத்தில் ரெயில்கள் இயக்கம் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கடும் அவதி அடைந்து வருகிறோம். அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகளை மேற்பார்வையிட்டு இது போன்ற தவறை இனி நடக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வருகிற 19-ந்தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    சோளிங்கர் ஆஞ்சநேய சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவினை ஒட்டி திங்கட்கிழமை உள்ளூர் விடுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

    மேலும், உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வருகிற 19-ந்தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • பணியில் இருக்க வேண்டிய 5 டாக்டர்கள் மற்றும் 4 நர்சுகள், 6 ஊழியர்கள் என யாரும் சுகாதார நிலையத்தில் இல்லை.
    • சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

    ராணிப்பேட்டை:

    வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் பல்நோக்கு அரசு ஆஸ்பத்திரி திறப்பு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராணிப்பேட்டை அடுத்த ஆற்காடு வழியாக சென்றார்.

    அப்போது மேல்விஷாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது பெண் ஒருவர் மருத்துவ பரிசோதனைக்காக காத்திருந்த படியும், பல்வேறு பகுதியிலிருந்து வருகை தந்த பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தில் வெளியே காத்திருந்ததை பார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடம் சென்று இது குறித்து கேட்டார்.

    காத்திருக்கும் இடத்தில் அடிப்படை வசதிகள் மின்விசிறி, இருக்கை, குடிநீர் என எதுவும் இல்லை என குற்றம் சாட்டினர். காத்திருக்கும் அறையை கூட திறக்காமல் இருப்பது தெரிந்தது.

    அதனை தொடர்ந்து பணியில் இருக்க வேண்டிய 5 டாக்டர்கள் மற்றும் 4 நர்சுகள், 6 ஊழியர்கள் என யாரும் சுகாதார நிலையத்தில் இல்லை. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

    பணியில் இருக்க வேண்டிய டாக்டர் மற்றும் நர்சுகளுக்கு காலதாமதத்திற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்க வேண்டும், அதேபோல் விளக்கம் கொடுத்த பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வழக்கறிஞர் சக்கரவர்த்தி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பா.ம.க. இளைஞரணி தலைவராக சக்கரவர்த்தி செயல்பட்டு வந்தார்.
    • தலையில் காயத்துடன் சக்கரவர்த்தி உடல் மீட்கப்பட்டது.

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை சேர்ந்த வழக்கறிஞர் சக்கரவர்த்தி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பா.ம.க. இளைஞரணி தலைவராக செயல்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் வழக்கறிஞர் சக்கரவர்த்தி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

    தலையில் காயத்துடன் அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில் சக்ரவர்த்தி இறப்பு கொலையா, விபத்தா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தி.மு.க. இதுவரை எந்த திட்டத்தை கொண்டு வந்தது.
    • அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளீனிக் திட்டத்தை தி.மு.க முடக்கியது.

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் நடந்த திருமண விழாவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

    அதிமுக ஆட்சிக்காலத்தில் 11 மருத்துவமனைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 6 சட்டக் கல்லூரிகள் கொண்டுவந்தோம்.

    ஏராளமான கலைக் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகளை ஏழை எளிய மக்களுக்காக கொண்டு வந்தோம். தி.மு.க. இதுவரை எந்த திட்டத்தை கொண்டு வந்தது.

    தி.மு.க ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வருவார்கள். அந்த திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டு விடுகிறார்கள். ஏற்கனவே அறிவித்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி தி.மு.க செயல்பட்டு வருகிறது.

    ஏழை எளிய விவசாயிகளுக்காக குடிமராமத்து பணி திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளீனிக் திட்டத்தை தி.மு.க முடக்கியது.

    தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியின் போது தடுப்பணைகள் ஏராளமாக கட்டப்பட்டன. தி.மு.க. ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டது.

    தி.மு.க.வின் குடும்ப அரசியலாக குடும்ப ஆட்சியாக ஸ்டாலின் அமைத்திருக்கிறார். எதில் எடுத்தாலும் கரெக்ஷன் கரப்ஷன்என தமிழகம் முழுவதும் இருந்து வருகிறது.

    காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க தான்.

    2010-ம் ஆண்டு தி.மு.க கூட்டணியில் இருந்த பொழுது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.

    நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருவது அ.தி.மு.க.

    41 சதவீதம் ஏழை மாணவர்கள் அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.

    7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் அதிகம் பயனடைந்துள்ளனர்.

    அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழகம் முழுவதும் சிறப்பான சாலைகள், மற்றும் மேம்பாலங்கள் கட்டப்பட்டன.

    ஆரம்ப சுகாதார நிலையங்கள் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அதிக அளவு தொடங்கப்பட்டது.

    அ.தி.மு.க.வினர் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்ற 2026 தேர்தலில் உங்களுடைய தேர்தலாக நினைத்து பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தினகரன் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
    • சித்தேரி பகுதியில் ரெயில் முன் பாய்ந்து தினகரன் தற்கொலை செய்து கொண்டார்.

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த கல்லூரி பேராசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அரக்கோணம் அருகே கல்லூரி பேராசிரியர் தினகரன் (42) ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சத்தை இழந்துள்ளார். ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தினகரன் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் சித்தேரி பகுதியில் ரெயில் முன் பாய்ந்து தினகரன் தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தினகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விடுமுறை என்பதால் ஜனனி புலிவலம் கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்திருந்தார்.
    • வீட்டுக்கு வெளியே கத்தி வெட்டு காயங்களுடன் லக்சயா அலறி கூச்சலிட்டார்.

    ராணிப்பேட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பத்தை சேர்ந்தவர் ஜெகத்குமார். தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதியின் மகள் ஜனனி (வயது 15) மற்றும் ஒரு மகன் உள்ளார்.

    ஜெகத்குமார், பிரியா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனையடுத்து ஜெகத்குமார் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள புலிவலம் கிராமத்தில் தனியாக வசித்து வந்தார்.

    பிரியா தனது மகள் மகனுடன் திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி. கண்டிகையில் வசித்து வந்தார். அங்குள்ள தனியார் பள்ளியில் ஜனனி 10-ம் வகுப்பு முடித்துவிட்டு பிளஸ்-1 செல்ல தயாராக இருந்தார்.

    விடுமுறை என்பதால் ஜனனி புலிவலம் கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்திருந்தார். அவருடைய உறவினர்கள் லக்சயா, சரண்யா ஆகியோரும் சென்னையில் இருந்து விடுமுறைக்காக வந்திருந்தனர்.

    நேற்று காலை ஜெகத்குமார் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் ஜனனி லக்சயா ஆகியோர் இருந்தனர். அப்போது யாருக்கும் தெரியாமல் கே.ஜி கண்டிகையை சேர்ந்த சுப்பிரமணி (21)என்பவர் திடீரென அங்கு வந்தார். அவர் வீட்டுக்குள் சென்று கதவை உட்புறமாக பூட்டினார்.

    இதனை லக்சயா தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த வாலிபர் லக்சயாவை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு அவரை வீட்டுக்கு வெளியே தள்ளினார். வீட்டுக்குள் இருந்த ஜனனியை கத்தியால் வெட்டி சாய்த்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஜனனி துடிதுடித்து இறந்தார்.

    வீட்டுக்கு வெளியே கத்தி வெட்டு காயங்களுடன் லக்சயா அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் லக்சயாவை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து ஜெகத்குமார் வீட்டு முன்பாக திரண்ட மக்கள் இரும்பு கம்பியால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஜனனி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அங்கு பதுங்கி இருந்த வாலிபர் சுப்பிரமணியை சரமாரியாக அடித்தனர்

    கொண்ட பாளையம் போலீசார் வாலிபர் சுப்பிரமணியை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுப்பிரமணி மற்றும் கத்தி வெட்டுப்பட்ட லக்சயா ஆகியோர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நேற்று சுயநினைவு இல்லாமல் இருந்த சுப்பிரமணிக்கு நினைவு திரும்பியது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவியை கொலை செய்தது ஏன் என்பது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் .

    மேலும் வீட்டுக்குள் என்ன நடந்தது என்பது குறித்து லக்சயாவிடமும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கொலை செய்யப்பட்ட மாணவி படித்து வரும் பள்ளி அருகிலேயே வாலிபர் சுப்பிரமணியின் வீடு உள்ளதாக கூறப்படுகிறது. அவர் மாணவியை ஒருதலையாக காதலித்துள்ளார். காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை- பெங்களூரு வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை- பெங்களூரு செல்லும் ஹூப்ளி ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு அரக்கோணம் வழியாக சென்ற சரக்கு ரெயில் நார்த் கேபில் என்ற இடத்தில் தடம் புரண்டது.

    சரக்கு ரெயில் தடம் புரண்டதை அடுத்து, சென்னை- பெங்களூரு வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை- திருத்தணி மின்சார ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து, தடம் புரண்ட 3 பெட்டிகளை சரி செய்யும் பணியில் பணியாள்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பயணிகள் கடும் அவதியடைந்து உள்ளனர்.

    இதனால், சென்னை- பெங்களூரு செல்லும் ஹூப்ளி ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    ×