என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    கறம்பக்குடி ஒன்றியத்துக்குட்பபட்ட பிலா விடுதி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளியில் கட்டிட விரிவாக்கம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்துக்குட்பபட்ட பிலா விடுதி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளியில் கட்டிட விரிவாக்கம் செய்யக்கோரி கடந்த 10 ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் கிராம மக்கள் கறம்பக்குடி-தஞ்சாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகள் மற்றும்  பொதுமக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பள்ளி கட்டிடத்தை விரிவுபடுத்த வேண்டும். மாணவ, மாணவிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும். அரசுக்கு உள்ள ஒரு ஏக்கர் இடத்தை இலவசமாக வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். 

    இதையடுத்து கறம்பக்குடி தாசில்தார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். 
    ரஜினிகாந்த் தனது சூப்பர் ஸ்டார் பதவியை தக்க வைத்து கொள்ள முயற்சி செய்யட்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரஜினிகாந்த் நல்ல நடிகர் என்பதை ஒத்துக்கொள்கிறோம். ஆனால் அதையும் தாண்டி அவரை விட சிறப்பாக நடிப்பதற்கு இளம் நடிகர்கள் வந்து விட்டனர். எனவே ரஜினிகாந்த் தனது சூப்பர் ஸ்டார் பதவியை தக்க வைத்து கொள்ள முயற்சி செய்யட்டும். கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என நடிகர் ரஜினிகாந்த் கூறுவது ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் உள்ளதுதான்.

    ரஜினிகாந்தை யாரோ பின்னால் இருந்து இயக்குகின்றனர். அவரை பற்றிய விவரம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். வெற்று அறிவிப்புகளை மட்டுமே ரஜினிகாந்த் வெளியிட்டு வருகிறார். 30 சதவீதம் பேரை வெளியில் இருந்து சேர்க்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது அவரின் இயலாமையை காட்டுகிறது.

    தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை சீட் வழங்காதது அ.தி.மு.க. செய்த சூழ்ச்சி. அ.தி.மு.க. கூட்டணியில் தொடர வேண்டுமா? இல்லையா? என்பதை தே.மு.தி.க.தான் இனி முடிவு செய்ய வேண்டும். த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் பா.ஜ.க.வில் இணையமாட்டார் என நம்புகிறேன். கோவிட்-19 வைரஸ் பாதிப்பு குறித்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஏப்ரல் 13-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை திருச்சியில் தொடங்கி வேதாரண்யம் வரை சமூக நல்லிணக்க பாத யாத்திரை நடைபெற உள்ளது. பா.ஜ.க.வில் மாநிலத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களை சமாளிக்க முடியாமல் பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவரை தலைவராக அக்கட்சி அறிவித்துள்ளது. அதே சமயம் இதுவரை பட்டியல் இன மக்களுக்காக எந்தஒரு நல்லதையும் பா.ஜ.க. செய்ததில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்த தாண்றீஸ்வரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 27 பேர் காயமடைந்தனர்.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்த தாண்றீஸ்வரத்தில் சத்ரு சம்கார மூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. ஜல்லிக்கட்டை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் சின்னத்தம்பி ஆகியோர் உறுதி மொழியுடன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

    இதில் 180 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அன்னவாசல், சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 800 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்பட மொத்தம் 27 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 3 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் மிக்சி, கிரைண்டர், குத்துவிளக்கு, நாற்காலிகள், வெள்ளி பாத்திரம், வெள்ளி நாணயம், ரொக்கப்பணம் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை காண இலுப்பூர் வட்டாட்சியர் முருகேசன், ஒன்றிய தலைவர் ராமசாமி மற்றும் தாண்றீஸ்வரம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். இலுப்பூர், கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சிகாமணி, பிரான்சிஸ் தலைமையில், அன்னவாசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் தாண்றீஸ்வரம் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை, அறந்தாங்கி அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக அரசு உத்தரவின்படி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 5 சதவீத லைசால், 1 சதவீத ஹைப்போ குளோரைடு கரைசல் கொண்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மூலம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கை கழுவும் முறை பற்றி மாவட்டம் முழுவதும் இதுவரை 2 ஆயிரத்திற்கும் அதிகமான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் நோய் தொற்று பரவாமல் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிக அளவிலான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் கொரோனா குறித்து எவ்வித அச்சமும் அடைய தேவையில்லை என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது மருத்துவத்துறை இணை இயக்குனர் சந்திரசேகரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, நகர் நலஅலுவலர் யாழினி, உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 36 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை பதவி உயர்வு மூலம் தற்காலிக துணை தாசில்தார்களாக கலெக்டர் உமா மகேஸ்வரி 4 மாதங்களுக்கு முன்பு நியமனம் செய்தார். இந்த நியமனத்தை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வரவேற்றது. தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வந்தது. இந்த போராட்டத்தை தொடர்ந்து, துணை தாசில்தார் நியமன உத்தரவை ரத்து செய்யுமாறு கலெக்டருக்கு மாநில வருவாய் நிர்வாக ஆணையரகம் அண்மையில் உத்தரவு வழங்கி உள்ளது. எனினும் அந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.

    இந்நிலையில் ஏற்கனவே வெளியிடப்பட்ட துணை தாசில்தார் நியமன உத்தரவை ரத்து செய்துவிட்டு புதிய பட்டியல் வெளியிட வேண்டும். ஆணையரகத்தின் உத்தரவை பின்பற்றாமல் செயல்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் மேலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அதற்கான விவரத்தை ஆணையரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரிக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கடந்த 3-ந் தேதி உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து, ஆணையரகத்தின் அறிவுரைப்படி ஏற்கனவே வெளியிடப்பட்ட தற்காலிக துணை தாசில்தார் நியமன பட்டியலை ரத்து செய்துவிட்டு 36 பேர் கொண்ட புதிய பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்.

    இந்நிலையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தற்காலிக துணை தாசில்தார் நியமன பட்டியலை ரத்து செய்ததை கண்டித்து கடந்த 7-ந் தேதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் நேற்று மீண்டும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கவியரசு தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ஜபரூல்லா முன்னிலை வகித்தார். காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அலுவலர்கள் அரசு விதிகளை மீறி போடப்பட்ட துணை தாசில்தார் ஆணைகளை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்கள். வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் அலுவலக பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. 
    அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டு உள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குடிநீர் தொடர்பான பணிகளை கலெக்டர் உமா மகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகத்தினை வழங்குவது உள்ளாட்சி அமைப்புகளின் மிக முக்கிய கடமையாகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 497 கிராம ஊராட்சிகளில் குடிநீர் தேவையை கணக்கிட்டு சீரான குடிநீர் வழங்கிடவும், கூடுதலாக குடிநீர் தேவை உள்ள இடங்களுக்கு புதிதாக மாற்று ஆழ்குழாய் அமைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    உள்ளாட்சி அமைப்புகளில் காணப்படும் முறையற்ற குடிநீர் இணைப்புகள் விதிமுறைகளின் படி உடனடியாக அகற்றப்படவும், அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. குடிநீருக்காக வழங்கப்படுகின்ற நீரினை பொதுமக்கள் குடிநீர் உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீரின் முக்கியத்துவத்தினை உணர்ந்து நீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்.

    காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் செயல்படுத்தப்பட்டு வரும் பகுதியில் குழாய்களில் பழுது ஏற்படுவதை உடனுக்குடன் சரிசெய்திட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிநீர் தொடர்பான பணிகளையும் உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்றவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    ஆலங்குடி அருகே பெண் போலீசின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையை சேர்ந்தவர் பழனிகுமார் (வயது 32). சம்பவத்தன்று இவர்   வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    இந்தநிலையில் சம்பட்டி விடுதி சாலை மாங்கோட்டை விளக்குரோடு அருகேயுள்ள இரட்டை போஸ்ட்  தரிசு நிலத்தில் பழனிகுமார் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பட்டிவிடுதி போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர். பழனிகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    பழனிகுமாரின் மனைவி செந்தமிழ்செல்வி போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
    பிராய்லர் கோழிகள் மற்றும் இறைச்சி, முட்டை ஆகியவை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் தாக்காது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வ மாக இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா நோய் இருக்கிறது என்று அறிவித்துள்ளார். ஆனால் தமிழகத்தில் இன்று வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளதால் நோய் இதுவரை வர வில்லை.

    பொதுமக்கள் கொரோனா வைரஸ் குறித்து எந்தவிதமான பதட்டமும், பீதியும் அடைய வேண்டாம். அதேபோல் வீண் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.

    பிராய்லர் கோழிகள்

    பிராய்லர் கோழிகள் மற்றும் இறைச்சி, முட்டை ஆகியவை சாப்பிடுவதால் இந்த நோய் பரவும் என்ற கருத்து தவறானது. சீனாவில் இந்த நோய் தாக்கத்தால் 2 சதவீத இறப்பு தான் என்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவை தவிர்த்து மற்ற இடங்களில் இறப்பு சதவீதம் என்பது 0.2 சதவீதம்தான்.

    கொரோன வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு கறம்பக்குடியில் முஸ்லிம்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
    கறம்பக்குடி:

    மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் முஸ்லிம் அமைப்புகளின் சார்பில், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் குடிமக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், தொடர் தர்ணா போராட்டம் கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கப்பட்டது. 

    இதில் தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் உள்பட திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்திற்கு ஆதரவாக தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களும் வருவதால் போராட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 15-வது நாளாக தர்ணா போராட்டம் நடைபெற்றது. 

    இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோ‌‌ஷம் எழுப்பினர். தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில பேச்சாளர் திருச்சி வேலுசாமி, தேசிய குடிமக்கள் பதிவேட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினார். போராட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 15-வது நாள் போராட்டத்தையொட்டி ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    விராலிமலையில் ஏப்ரல் 4-ந்தேதி மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெறுகிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
    விராலிமலை:

    கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக பா.ஜ.க., மாநில துணைத்தலைவராக இருந்த பி.டி.அரசகுமார் அக்கட்சியில் இருந்து விலகி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தார். இந்த நிலையில் அவரது சொந்த ஊரான விராலிமலையில் பா.ஜ.க. மற்றும் மாற்றுக்கட்சியில் உள்ள அவரது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி தி.மு.க.வில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த இணைப்பு விழா வருகிற ஏப்ரல் மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. இதில் தி.மு.க . தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்கான திடல் விராலிமலை மதுரை நான்கு வழிச்சாலை விராலூர் அருகே சுமார் 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு பொதுக்கூட்ட மேடைக்கு பந்தல் கால் நடும் பணி நடைபெற்றது. 

    இதில் பி.டி.அரசகுமார், புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ரகுபதி (தெற்கு), கே.கே.செல்லபாண்டியன் (வடக்கு), முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவிதைபித்தன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகர், மாவட்ட இலக் கிய அணி துணை செயலர் பழனியப்பன், ஒன்றிய செயலர் இளங்குமரன் (மேற்கு), சத்தியசீலன் (கிழக்கு), ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி முருகேசன் (பூதகுடி), ஜெயலட்சுமிகுமார் (வடுகபட்டி), எம்.ரவி (விராலிமலை), பாலசுப்பிரமணியன் (தென்னம்பாடி), பழனியாண்டி (விராலூர்), ஆனந்தன் (கொடும்பாளூர்) செல்வி சுப்பிரமணி (மேல பச்சக்குடி), ஒன்றியக்குழு உறுப்பினர் அன்பழகன், விராலிமலை நகரசெயலர் சண்முகசுந்தரம், பி.டி.கே. சுரேஷ், பிரபாகர், பிரபு. சக்திவேல் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் பங்கேற்றனர்.
    சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலக புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வி‌ஷக்கடி போன்றவைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தஞ்சையில் ரூ.5 கோடி மதிப்பில் ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளது. சென்னையை அடுத்து மதுரையில் கல்லீரல் சிகிச்சைக்கான ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளது. காஞ்சிபுரத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கான ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளது.

    தமிழகத்தில் எலி பேஸ்ட்டால் பலர் பாதிக்கப்படும் நிலையில், மற்ற துறையுடன் கலந்து பேசி அதை தடை செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை. இதுகுறித்து தினமும் கேட்டறிந்து வருகிறோம்.

    கொரோனா வைரஸ் புதிதாக பாதித்த நாடுகளில் இருந்து வருபவர்களையும் பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுமதித்து வருகிறோம்.

    சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் போதிய அளவில் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் தரக் குறைவாக பேசும் காவலர்கள் உள்ளிட்ட ஒப்பந்த பணியாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுக்கோட்டை நகரில் 2½ டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை நகரில் உள்ள நகராட்சிக்கு வரி பாக்கி, வாடகை பாக்கி மற்றும் கடையின் ஏலத்தொகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் நகராட்சிக்கு ஏலத்தொகை செலுத்தாத 3 கடைகளுக்கு நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவின்படி, புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையோர கடைகளில் வைத்திருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் பார்களையும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது 3 டாஸ்மாக் பாரில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஒவ்வொரு டாஸ்மாக் பாருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து, வசூல் செய்தனர். நேற்று ஒரு நாள் மட்டும் புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் டாஸ்மாக் பாரில் இருந்து 2½ டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, நகராட்சி அதிகாரிகள் அழித்தனர். இந்த ஆய்வின்போது நகரமைப்பு அலுவலர் ரமே‌‌ஷ், வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
    ×